(கடந்த மூன்று இதழ்களில் வெளிவந்த பேராசிரியர் ராமு. மணிவண்ணன் பேட்டி இந்த இதழுடன் முற்றுப் பெறுகிறது)

பர்மாவில் நிலவும் பண்பாட்டு முரணை எப்படி தீர்ப்பது?

இத்தகைய அணுகுமுறையை மாற்றுவதற்காக கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகள், அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் என இவை அனைத்திலும் இவர்களுடைய பார்வை செலுத்தப்பட்டு வருகிறது. இவற்றை எவ்வாறு மாற்றியமைக்க வேண்டும், கல்வியில் எத்தகைய அடிப்படை மாற்றங்களை செய்ய வேண்டும், அரசியலமைப்பில் எந்தவித மாற்றங்கள் ஏற்பட வேண்டும், பணி நியமனத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் என்ன என்பன போன்றவை இவர்களுடைய கலந்துரையாடலில் இடம் பெறுகின்றன. புறநிலை அரசின் கீழ் தாய்லாந்து, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய பகுதிகளிலும் பல கருத்துகளைப் பரிமாறிக் கொண்டிருக்கின்றனர். மாற்றங்கள் ஏற்படக்கூடிய தருணத்தில் நிச்சயமாக ஒரு தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பாக இவர்கள் அமையக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

ஜனநாயக ரீதியான போராட்டத்தை ஆங் சாங் சூகியி வலிமையாக மேற்கொண்டு வருகிறார். அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் ஜனநாயகப் போராட்டத்தை தற்பொழுது மிகச் சிறந்த முறையில் அவர் வழிநடத்தி வருகிறார். ஆங் சாங் சூகியி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் இந்திய அரசாங்கத்திடம் கேட்பது என்னவெனில், எங்களுக்கு நீங்கள் எந்த உதவியையும் செய்யாவிட்டாலும் தாழ்வில்லை; குறைந்தபட்சம் எங்கள் போராட்டத்திற்கான அங்கீகாரத்தையாவது தர வேண்டும் என்பதே. உங்களுக்கு இவ்வளவு அருகில் ராணுவ ஆட்சியை எதிர்த்து ஜனநாயக ரீதியில் போராடி வரும் நாங்கள் இருக்கிறோம்.

பண்பாட்டு ரீதியாக இந்தியாவுடனும், மொழி ரீதியாக வடகிழக்கு மாநிலங்களுடனும் எங்களுக்கு நல்ல தொடர்பு இருக்கிறது. நாங்கள் பின்பற்றும் புத்தமதம் இந்தியாவில் தோன்றிய ஒரு பண்பாடு. இந்தியா எங்களுக்கு ஒரு முக்கியமான நாடு. பண்பாட்டு ரீதியிலான தாய் வீடு. இத்தகைய ஒரு நாடு 50 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவ ஒடுக்குமுறைக்கு ஆட்பட்டுள்ள மக்களுக்கு உதவாமல், ராணுவத்திற்கு உதவி செய்யும் நிலையையே மேற்கொண்டு வருகிறது. ஆயுத உதவிகளையும் வழங்குகிறது. இதுவரை அகிம்சை வழியில்தான் போராடி வருகிறோம். இந்தியா எங்கள் போராட்டத்திற்கு உதவி செய்யவில்லை என்றாலும், போராட்டத்திற்கான அங்கீகாரத்தையாவது வழங்க வேண்டும் என்றே இவர்கள் கோருகிறார்கள்.

திபெத் பிரச்சினை பற்றி சற்று விரிவாகச் சொல்லுங்கள்...

திபெத்தில் ஒரு தேசிய இனம் தன்னுடைய சொந்த மண்ணை இழந்து, மற்றொரு அண்டை நாட்டால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள திபெத் பகுதியிலிருந்து கடந்த அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள். இப்பொழுது சீனா திபெத்தைத் தன் பகுதிக்கு உட்பட்ட இடமாகக் கூறி, ஏறக்குறைய அதற்கான அங்கீகாரங்கள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, திபெத்தின் அண்டை நாடுகளுள் ஒன்றான இந்தியாவும் "திபெத் சீனாவின் உள்நாட்டுப் பிரச்சனை' என்று அவ்வப்போது கூறி வருகிறது. இது மிகவும் வருந்தத்தக்கது. திபெத்திய மக்கள் அவர்களுடைய சொந்த மண்ணில் சுதந்திரமாகவும், பண்பாட்டு ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒரு தேசிய இனமாக வாழ்ந்ததற்கான அடையாளங்களைத் தேடிச் செல்வதற்கு, நாம் வெகுகாலம் செல்ல வேண்டியதில்லை. ஓர் அய்ம்பது ஆண்டு காலத்திற்கு முன்னதாக ஏறக்குறைய இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் அதற்கான வரலாற்றுப்பூர்வமான ஆதாரங்கள் அனைத்துமே இருக்கின்றன.

நாம் தற்பொழுது திபெத்திற்கான எல்லா உறவுகளையும் சீனா வழியாகவே செய்து வருகிறோம். திபெத் மக்களுக்கும் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் வடமேற்கு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி மக்களுக்கும் வரலாற்றுப்பூர்வமாக, பண்பாட்டு ரீதியாக ஓர் உறவு இருக்கிறது. எப்படி தமிழக மக்கள் ஈழ மக்களை தம்முடைய தொப்புள் கொடி உறவாகப் பார்க்கிறார்களோ, அதே போலத்தான் காஷ்மீர் பகுதி மக்களும் திபெத்தைத் தங்களுக்கு மிக நெருக்கமான மண்ணாகப் பார்க்கின்றனர். 1945 முதல் சீனா திபெத்தை படிப்படியாக ஆக்கிரமித்தது. இந்தியாவும் சீனாவும் சகோதர நாடுகள் என்று நாம் உரக்கக் கூறிக் கொண்டிருக்கும் போதே, சீனா திபெத்தை நரித்தனமான திட்டத்துடன் ஆக்கிரமித்துக் கொண்டது. திபெத் விஷயத்தில் அரசியல் மற்றும் ராணுவ ரீதியான நெருக்கடியை கொடுக்க முடியாத சூழலில் இந்தியாவும் சீனாவின் நிலையை ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆக்கிரமிப்புக் கட்டாயத்துக்குள்ளாக்கப்பட்ட சூழலில், திபெத் மக்களுள் பெரும்பாலானோர் தலாய் லாமா தலைமையில் திபெத்தை விட்டு வெளியேறி இந்தியா வந்தனர். இன்று சுமார் ஒன்றரை லட்சம் திபெத் மக்கள் இந்தியாவில் இருக்கின்றனர். இவர்கள் இந்தியா வந்த பிறகு பிற நாடுகளுக்கும் சென்றிருக்கின்றனர். அவர்களுடைய மதம் பவுத்தம். அவர்களுடைய கல்வி அமைப்பு, பண்பாடு என்பவை பவுத்தத்தைத் தழுவியே அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய இந்தப் பண்பாட்டு நிலைக்கு எதிரான நிலை அங்கு உருவானபோது, அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவானது. சொந்த மண்ணை, சொந்த அடையாளங்களை இழந்த, விரட்டியடிக்கப்பட்ட அந்த மக்களுக்காக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

சீனா படிப்படியாக திபெத் பகுதியை ஆக்கிரமிப்பதற்கு முன்பு இருந்த அந்நிலப்பரப்பின் வரலாறு என்னவாக இருந்தது?

1950 வரையில் திபெத் ஒரு தனி நாடாக, ஒரு சுதந்திர நாடாகத்தான் திகழ்ந்தது. ஆனால் அதனுடைய அமைப்பானது நிழற்குடை சாசனப்படி, 1914 ஆம் ஆண்டிற்குப் பின் "ஸ்வீதர் கீ சைனீஸ் வீதர்கீ' என்ற அமைப்பிற்கு வந்தது. அதாவது, சீனாவின் ஆளுகைக்குள் அந்நிலப்பரப்பு கொண்டு வரப்பட்டது. அதற்குக் காரணம், திபெத் மக்கள் சீனாவின் இறையாண்மையை ஏற்றுக் கொண்டதால் அல்ல. அதற்கான உண்மை யான காரணம், அப்போது இந்தியாவில் நிலவி வந்த பிரித்தானிய ஆட்சி, தெற்காசிய பிராந்தியத்தை ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலிருந்து தடுப்பதற்காக சீனாவுடன் ஓர் ஒப்பந்தத்தைப் போட்டுக் கொண்டது.

ரஷ்யாவை தென்னாசியப் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் திபெத்தை சீனாவின் ஆளுகைக்கு உட்படுத்தி விட்டார்கள். இதுதான் சீனாவின் ஆளுகைக்குள் திபெத் வந்ததற்கான உண்மையான காரணமே தவிர, திபெத் மக்கள் சீனாவின் இறையாண்மையை ஏற்றுக் கொண்டு விட்டனர் என்பதில் எந்த உண்மையும் கிடையாது.

சீனாவின் ஆளுகைக்குள் திபெத் உட்பட்டதற்குச் சரியான அரசியல் தலைமை இல்லாததுதான் காரணமா?

அரசியல் தலைமை இல்லை; ஆனால், மத ரீதியான தலைமை அமைப்புகள் இருந்தன. அரசியல் குழப்பங்கள் நிலவிய சந்தர்ப்பமும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். கடந்த அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக "அன்சைனீஸ்' என்று அழைக்கப்படுகின்ற மக்கள் அங்கு சீனாவால் குடியேற்றப்பட்டு வருகின்றனர். இன்னும் பத்திருபது ஆண்டுகளில் "அன்சைனீஸ்' மக்கள் திபெத்தியர்களைவிட எண்ணிக்கையில் மிகுந்திருப்பார்கள். திபெத்திய பண்பாட்டு அடையாளங்கள், வாழ்வியல் அடையாளங்கள் எல்லாம் வேகமாக மாற்றப்பட்டு வருகின்றன. இன்னும் சொல்லப்போனால், வட அமெரிக்கப் பகுதிகளில் அங்கு பூர்வீகக் குடிகளாக இருந்த மக்கள் "நேட்டீவ் அமெரிக்கன்ஸ்' என்று அழைக்கப்படுகின்ற மக்கள் வாழும் பகுதிகளில், சூதாட்டமும் இரவு நேர கேளிக்கை விடுதிகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் பிற பகுதிகளில் இவற்றிற்கான அங்கீகாரம் வழங்குவது என்பது, மிகுந்த கட்டுப்பாட்டுடனே உள்ளது. எங்கு பூர்வீகக் குடிகள் இருக்கிறார்களோ, அங்கு இவற்றிற்கான அங்கீகாரம் என்பது எளிதில் வழங்கப்படுகிறது. பூர்வீகக் குடிகள் வாழும் பகுதிகளில் இவ்வகை சூதாட்டங்களையும் கேளிக்கை விடுதிகளையும் அதிகரிக்க வைப்பதன் மூலம் அவர்களுடைய பண்பாட்டு அடையாளங்கள் மெல்ல மெல்ல அழிக்கப்படுகின்றன என்பதே உண்மை. சட்ட அமைப்பைச் சாதகமாகப் பயன்படுத்தும் இந்த அமைப்பைப் போலவே, சீனாவும் திபெத் பிரதேசங்களில் இத்தகைய சூதாட்ட கேளிக்கை விடுதிகளையும், மதுபானக் கடைகளையும் ஏராளமாகத் திறந்து வருகின்றன.

மேலும் அப்பகுதிகளில் ஏழு ராணுவத் தளங்களையும் சீனா அமைத்துள்ளது. இதன் மூலம் திபெத் மக்கள் தனித்து இயங்காத வண்ணம் மீண்டும் அது ஒரு தனி நாடாக செயல்படாதவாறு எல்லா வழிகளையும் அடைத்து வருகின்றனர். இதே நிலையைத்தான் இலங்கை அரசும் ஈழப் பகுதியில் செயல்படுத்தி வருகிறது. இதே வகையிலான ஒடுக்குமுறை பர்மாவிலும் செயல்படுத்தப்படுகிறது. சுதந்திரத்திற்காகப் போராடுகிற மக்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்பது மட்டுமில்லாமல், இந்த மக்களின் துன்பங்களுக்குப் பின்னால் ஏதோ ஒரு பொதுவான அடையாளம் தெரிகிறது. நாம் அதை வெளிக் கொண்டுவர வேண்டும்.

மதத்தை முன்னிறுத்திய திபெத் விடுதலைப் போராட்டம், பிற்போக்கான ஒன்றாகப் பார்க்கப்படுகிறதே?

திபெத் மக்களை ஒரு தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கு பவுத்தமே உதவுகிறது. பண்பாட்டு ரீதியாகவும் வரலாற்று ரீதியாக வும் பவுத்தமே அவர்களை அரவணைத் துள்ளது. மேலும் பவுத்தத்தை ஒரு மதமாகக் கொள்வதைவிட, அதை ஒரு வாழ்க்கை நெறியாகக் கொள்வதுதான் பொருத்தமானது. அந்த அடிப்படையில் பவுத்தத்தை முன்னிறுத்திய அவர்களுடைய விடுதலைப் போராட்டத்தை மதத்தை முன்னிறுத்தியதாக நாம் குறுக்கிவிட வேண்டாம். மேலும், இலங்கையில் பின்பற்றப்படும் பவுத்தத்திற்கும் உலகின் பிற பகுதிகளில் பின்பற்றப்படும் பவுத்தத்திற்கும் அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

இலங்கையில் பின்பற்றக்கூடிய பவுத்த மத தத்துவம், புத்த மதத்திற்கே ஒரு சவாலாகும். பவுத்தத்திற்கு அடிப்படையான தம்மம், கருணை, அமைதி போன்ற எந்த கருத்துகளும் இலங்கையில் உள்ள பவுத்தத்தோடு சற்றும் பொருந்துவதில்லை. தன்னுடைய சொந்த மக்களைக் கொல்லும் ராணுவத்தை இலங்கையில் உள்ள பவுத்தத் துறவிகளால் மட்டுமே ஆசிர்வதிக்க முடிகிறது.

ஒருமுறை திபெத்தைச் சேர்ந்த ஒரு பவுத்த பிக்கு என்னிடம் கூறினார் : "நாங்கள் இலங்கை பவுத்த பிக்குகளைக் கண்டால் பயப்படுவோம். ஏனெனில், இவர்கள் பவுத்தத்தை வெகு விரைவில் சீரழித்து விடுவார்கள். மற்ற நாடுகளுக்கு அவர்களுடைய பவுத்தம் பரவினால் வன்முறை கலாச்சாரமும் இனவெறியும் அந்நாடுகளுக்குப் பரவிவிடும்.'' மாறாக, திபெத் பவுத்தம் என்பது ஒரு மிகப் பெரிய பண்பாடாகப் போற்றப்பட வேண்டியதாயிருக்கிறது. ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் இடையே உள்ள பவுத்தத்திற்கிடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன.

சீனாவின் திபெத்திய ஆக்கிரமிப்பால் இந்தியத் துணைக் கண்டத்திற்கு பாதிப்புகள் ஏற்படுமா?

இந்த விஷயத்தில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், சீனாவின் ஆக்கிரமிப்பில் திபெத் வந்ததால், இந்தியாவிற்குதான் மிகப்பெரிய இழப்பு. பூகோள ராணுவ அமைப்பு ரீதியாக நமக்கு மூன்றாம் நிலையிலிருந்த சீனா, தன்னுடைய பூகோள ராணுவ அமைப்பை முதல் நிலைக்கு எடுத்து வந்து இன்று நமக்கு நேரடி அண்டை நாடாக மாறியுள்ளது. காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் நம்மிடமிருந்து ஆக்கிரமித்த சில பகுதிகளை சீனா வசம் ஒப்படைத்துள்ளது. கரோக்கிராம் பாஸ் மற்றும் சீனாவின் வசமுள்ள லடாக் பகுதிகளையும் சேர்த்துப் பார்த்தீர்களென்றால், இந்தியாவிற்கு எதிரான மலைப்பாதைகளை அமைப்பதற்கு ஏதுவாக இருக்கிறது. இது, இந்தியாவுக்குதான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்தியா 1962 போருக்குப் பிறகு ஏற்பட்ட போர் ஒப்பந்தத்தின்படி, இன்னமும் நம்முடைய பிரச்சனைகளை சீனாவுடன் தீர்த்துக் கொள்ளாமலேயே இருக்கிறது.

சீனாவிற்கு பிரச்சனைகள் குறித்து ஒரு வித்தியாசமான அணுகுமுறை உண்டு. "பென்ஜிஓபிங் லைன்' என்று அதைக் குறிப்பிடுவார்கள் அதாவது "பிரச்சனைகள் இருக்கும்; அது தீரும் வரை நாம் பேசிக் கொண்டிருக்க வேண்டும்; அதைத் தீர்க்க வேண்டும் என்று நாம் முற்பட்டால் அந்தப் பிரச்சனைகள் தீராது; அது எப்போது தீர்வதற்கான வாய்ப்புகள் உருவாகுமோ, அந்த சமயத்தில் பிரச்சனைகளுக்குத் தானே தீர்வுகள் வரும்; அதற்காக நாம் இப்பொழுது முரண்பட்டுக் கொள்ள வேண்டியதில்லை.' இத்தகைய ஒரு கருத்து மூலம் பென்ஜிஓபிங் எல்லா பிரச்சனைகளையும் காலம் தாழ்த்தியே வந்தார். இந்த நடைமுறையையே திபெத்திய தலைவர்களுடனும் இந்தியத் தலைவர்களுடனும் சீன அரசு கடைப்பிடித்தது. சொல்லப்போனால், சீனா தனக்குப் பிரச்சனைகள் உள்ள எந்த நாட்டுடனும் "பென்ஜிஓபிங் லைன்' அடிப்படையிலேயே அணுகியது. உண்மையிலேயே பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான நெறிமுறைகளை அவர்கள் உருவாக்குவதே இல்லை.

இன்றைய நிலையில் இந்தியாவைச் சுற்றி வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் சீனா தன்னுடைய ராணுவத் தளங்களை அமைத்துள்ளது. வடக்கில் பாகிஸ்தானின் கராச்சி மற்றும் குவாடர் பகுதிகளிலும், கிழக் கில் சிட்வே என்று அழைக்கப்படுகின்ற பர்மா பகுதியிலும், தெற்கில் இலங்கையின் அம்பன் தோட்டா பகுதியிலும் குறிப்பாக துறைமுகப் பகுதிகளில் தங்களுடைய ராணுவத் தளங்களை அமைத்துள்ளது. மற்றொரு விஷயம், நமது வடகிழக்குப் பகுதிகளில் இன்றைக்கு குறைந்தபட்சம் அய்ந்தாயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு, சீனா ஆக்கிரமித்துள்ள பகுதியாக உள்ளது.

சீனா மிகப் பெரிய ராணுவ ரீதியான சவாலாகவே இருந்து வருகிறது. இதே சீனாதான் திபெத், பர்மா, இலங்கை ஆகிய மூன்று இடங்களிலும் நடைபெறும் மக்கள் விடுதலைப் போராட்டங்களை ஒடுக்குவதற்கான பின்னணியாகவும் செயல்பட்டு வருகிறது. இதுவும் குறிப்பாக நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. திபெத் சீனாவின் ஆளுகைக்குள் சிக்குண்டுள்ளது. பர்மாவைப் பொருத்த மட்டில் அங்கு நடைபெறும் ராணுவ ஆட்சிக்கு வெளிப்படையாகவே சீனா எல்லா உதவிகளையும் செய்து வருகிறது. ஈழப் போராட்டத்தைப் பொருத்தவரை, அதனை ஒடுக்குவதற்கான சகல ராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலான உதவிகளையும் சீனா செய்து வருகிறது. சீனாவின் இன்றைய அரசியல் நிலைப்பாடுகள் மனித உரிமைகளுக்கு எதிராக உள்ளன.

இவ்வாறு நான் கூறினாலும் உண்மையில் சீனப் போராட்டத்தின் மீதும், சீனப் புரட்சியின் மீதும் நான் பெரிதும் மரியாதை கொண்டிருக்கிறேன். அதே சமயம் அவர்களது பொதுவுடைமைப் புரட்சியானது, ஒரு பரந்த அளவில் செல்லாமல் ஒரு பரந்த நோக்குடன் உலகளாவிய முதலாளித்துவத்திற்கு எதிரானதாக அமையாமல், ஓர் உலகம் தழுவிய கம்யூனிசத்தை வளர்க்காமல் குறுகிவிட்டது. சீனாவே தற்பொழுது ஒரு ஏகாதிபத்திய மனப்போக்குக்கு மாறிவிட்டது. சீனா தன்னுடைய ஏகாதிபத்திய அரசமைப்பை தெற்காசியப் பிராந்தியத்தில், சொல்லப் போனால் ஆப்பிரிக்க கண்டத்தின் பல பகுதிகளிலும் பரவ விட்டிருக்கிறது. ஆப்பிரிக்க கண்டத்தில் சீனா முதலீடு செய்து, அங்குள்ள பொருளாதாரக் கட்டமைப்புப் பணிகளில் அமர்ந்து, நிலச்சுரங்கம் மற்றும் கனிம வளங்களைச் சுரண்டி தன்னுடைய தேசிய சுயநலத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

பர்மா, திபெத், ஈழம் இந்த மூன்று இடங்களிலும் நடைபெறும் மக்கள் போராட்டங்களுக்கு எதிராக சீனா இருக்கிறது என்கிறீர்கள். ஆனால் இந்தியாவின் நிலைப்பாடு என்பது, ஈழத்திற்கும் பர்மாவிற்கும் ஒன்றாகவும், திபெத் திற்கு மற்றொன்றாகவும் இருப்பது ஏன்?

உண்மைதான். பர்மா, திபெத், ஈழம் இந்த மூன்று விஷயங்களிலும் இந்தியாவின் நிலைப்பாட்டில் வேறுபாடு இருக்கிறது. திபெத்தை பொருத்தளவில், திபெத்திற்காக சீனாவுடன் எந்தவித ராணுவ நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இந்தியா தயாராக இல்லை. திபெத்தில் சீனாவின் நிலையை ஏறக்குறைய இந்தியா ஏற்றுக் கொண்டு விட்டதாகவே சொல்ல முடியும். எனினும் திபெத்திய தலைவர்கள் இங்கு தங்குவதற்கும் மக்கள் அகதிகளாக இருப்பதற்கும், அவர்கள் தங்களுக்கான புறநிலை அரசை அமைத்துக் கொள்வதற்கும் போதிய வாய்ப்புகள் இந்தியாவில் உள்ளன. முக்கியமாக, அவர்களுடைய பண்பாட்டு அடையாளங்கள் காப்பாற்றப்படுவதற்கு இந்தியா துணை நிற்கிறது.

பர்மிய ஜனநாயகப் போராட்டத்தைப் பொருத்தளவில், அப்போராட்டத்திற்கும் அம்மக்களுக்கும் எந்தவித உதவியையும் இந்தியா செய்யவில்லை. 1995 ஆம் ஆண்டிற்கு முன்பாக குறிப்பாக 1988இல் ஜனநாயகப் போராட்டத்திற்கான ஆதரவு மனநிலை ஓரளவிற்கு இந்தியாவிற்கு இருந்ததும் உண்மை. ஆனால் தற்பொழுது அங்கு நடைபெறும் ராணுவ ஆட்சிக்கு உதவவில்லையென்றால், பர்மிய ராணுவ ஆட்சி நமக்கு எதிராகத் திரும்பி, நமக்கு எதிரான சக்திகளுடன் இணைந்து அவர்களுக்கு உதவக்கூடிய வாய்ப்புகள் அதிகரித்துவிடும் என்ற எண்ணத்தில், அவ்வாட்சிக்கு உதவும் போக்கையே இந்தியா கடைப்பிடிக்கிறது.

உண்மை என்னவெனில், பர்மிய ராணுவ ஆட்சி நமக்கு எதிராக நம்மைக் கட்டுப்படுத்தக்கூடிய சக்தி அல்ல. இந்திய பர்மிய எல்லைப் பகுதி முழுவதிலும் உள்ள மக்கள் திரள், பர்மிய ராணுவ ஆட்சிக்கு எதிரான நிலையில் தீவிரமாக உள்ளனர். இவ்வெல்லைப் பகுதி மக்களைக் கடந்து பர்மிய ராணுவம் இந்தியப் பகுதிக்குள் ஒன்றும் செய்துவிட முடியாது. ஆனால் நம்முடைய வெளியுறவு சிந்தனை தான் மக்கள் விரோதமாக உள்ளது.

ஈழத்தைப் பொருத்தளவிலும் இந்தியாவினுடைய நிலைப்பாட்டில் ஒரு தெளிவு இருப்பதாகக் கூறுவதற்கில்லை. சீனாவின் ஆளுகை இலங்கையில் மேலோங்கிவிடும் என்ற காரணத்திற்காகவும், இலங்கை இந்தியாவின் பிடியிலிருந்து விலகிப் போய் விடும் என்ற எண்ணத்திலும், இந்திய அரசு இலங்கையின் இன அழிப்புப் போருக்கு எல்லாவித மனிதநேய சிந்தனைகளையும் புறந்தள்ளிவிட்டு துணை போயுள்ளது. மாறாக, இந்திய அரசு இலங்கைக்கு இத்தனை உதவிகளைச் செய்தும் இலங்கையில் சீன ஆதிக்கத்தை இந்தியாவால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஒரு தெளிவான நிலையில் இல்லாததால்தான் திபெத், பர்மா, ஈழம் உள்ளிட்ட விஷயங்களில் இந்தியாவால் ஒரு நிலையான, மக்கள் விரோதமில்லாத நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வகுக்கும் அதிகாரிகளின் பிழையால் இந்திய தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பது உண்மையா?

நீங்கள் சொல்வது பெரும்பாலும் சரி. இந்திய வெளியுறவுக் கொள்கையில் குறிப்பாக ஈழத்தில் மேற்கொண்ட நிலைப்பாட்டால், இந்தியாவால் சீனாவின் ஆளுகையை இலங்கையில் தடுத்து நிறுத்த முடியவில்லை. இன்று இந்தியா, சீனாவின் ராணுவத் தளங்களால் நான்குபுறமும் சூழப்பட்ட ஒரு பகுதியாக மாறியுள்ளது. இந்திய வெளி யுறவுக் கொள்கையில் ஒரு சீர்திருத்தம் வேண்டும். ஒரு தன்னிச்சையான, சுயநலமான பாதையில் நாம் சென்று கொண்டிருக்கிறோம். நமமுடைய பார்வை ஒரு குறுகிய பார்வையாக மாறிவிட்டது. பர்மாவில் போய் எண்ணெய்க் கிணறுகளைப் போராடிப் பெறுவதும், அதற்காக ராணுவ ஆட்சியை அங்கீகரிப்பதும்; அதுபோலவே இலங்கையில் உள்ள எண்ணெய்க் கிணறுகளுக்காக இலங்கை அரசுக்கு எந்தவித நிர்பந்தமும் இல்லாமல் ஒத்துழைப்பதும், ஆயுதங்களைக் கொடுப்பதும் என பொருளாதார, வியாபார விஷயங்களை மய்யமிட்டே நமது கொள்கைகள் வகுக்கப்படுகின்றன.

ஆனால் 1940களில் இந்தோனேசிய சுதந்திரப் போராட்டக் காலத்தில் அதன் சுதந்திரத்திற்காக பிஜு பட்நாயக், இங்கிருந்து விமானத்தை ஓட்டிக் கொண்டு போய் அங்கிருந்த தலைவரை பாதுகாப்பாக கூட்டிக் கொண்டு வந்தார். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தபோது அதனை அங்கீகரித்து ஆதரித்த ஒரே நாடு இந்தியா. இத்தகைய வரலாறுகள் பலவற்றைக் கொண்ட நாடு உயர்ந்த வரலாற்றுப்பூர்வமான கொள்கைகளை விட்டுவிட்டு பொருளாதாரம், சில தனிப்பட்ட நபர்களின் சுயலாபம் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியாவின் வரலாற்றையே மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் வேண்டும் என்ற உரையாடல் மேலெழும்போது, மக்கள் இயக்கங்கள் எத்தகைய அழுத்தங்களைத் தர வேண்டும்?

ராணுவம் மற்றும் வெளியுறவுக் கொள்கை பற்றிப் பேசும்போது, ஏதோ சட்டத்திற்கு அப்பாற்பட்ட விஷயமாக அது பார்க்கப்படுகிறது. முன்பு, 40 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் அளவிலான மணிப்பூர் பகு தியை நேரு பர்மாவிற்குத் தானமாக வழங்கி விட்டார். அதே போல, இந்திரா காந்தி அம்மையார் 1970களில் கச்சத் தீவுப் பகுதியை இலங்கைக்குக் கொடுத்துவிட்டார். இது போன்ற சமயங்களில் அந்த நிலப்பரப்பைச் சார்ந்து அல்லது அருகில் வாழும் மக்களிடம் எந்தவிதக் கருத்தும் கேட்கப்படவில்லை. இத்தகைய வெளியுறவுக் கொள்கைகளால் மக்கள் நேரடியாகப் பாதிப்பிற்குள்ளாகி யுள்ளனர். வெளியுறவுத் துறையின் கருத்துகள், கொள்கைகள் மக்களுடன் விவாதிக்கப்பட வேண்டும். இந்த விஷயங்களில் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற பொறுப்பு, சமூக அமைப்புகளுக்கும் சமூக சிந்தனையாளர்களுக்கும் இருக்கிறது.

இலங்கையுடனான இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட நிலையற்ற தன்மை யினால், தமிழகக் கடலோர மீனவர்கள் எண்ணற்ற பாதிப்புகளை சந்திக்கிறார்கள். மக்களுக்கு பிரச்சனை தரக்கூடிய வெளியுறவுக் கொள்கைகளை மக்கள் விவாதிக்க வேண்டும். இன்றைக்கு கச்சத் தீவை எடுத்துக் கொண்டால், நம்முடைய வெளியுறவுத் துறை அமைச்சர் சொல்கிறார் : “அந்தத் தீவில் மீன் பிடிப்பதற்கும் இறங்குவதற்கும் உள்ள உரி மைøயத்தான் நாம் பேச முடியுமே தவிர, அந்தத் தீவை திரும்பப் பெறுவதற்கான பேச்சுக்கே இடமில்லை'' என்கிறார். பேச்சுக்கே இடமில்லாத விஷயம் என்று எதுவும் கிடையாது. மக்கள் இதைப்பற்றி என்ன நினைக் கிறார்கள்? விஷயம் வெளியே வர வேண்டும் என்றால், விவாதம் தேவை. அத்தகைய விவா தங்களை முன்னெடுக்கின்ற பொறுப்பு, சமூக அமைப்புகளையும் சமூக ஆர்வலர்களை யும் ஊடகங்களையும் சார்ந்தது.

சந்திப்பு : அ. செந்தில் நாராயணன்