Election violence in Tamilnadu
(அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின்போது நடைபெற்ற வன்முறை: சென்னை வியாசர்பாடியில் வாக்குச்சீட்டுகள் கிழித்தெறியப்பட்டன)
.
கூத்துகள் முடிந்து
இறைந்து கிடந்தன
ஒருநாள் மீசைகள்

ரத்த முத்திரைகளோடு
ஆயுதங்களுக்குப் பின்
மிரண்டு தவிக்கிறது
மக்கள் ஜனநாயகம்

‘விலை' மதிக்கப்பட்ட
உரிமையின் குரல்வளைகள்
மிதிக்கப்பட்டு
துடித்துக் கொண்டிருந்தன
துண்டிக்கப்பட்ட நாவுகளைப் போல

வன்முறையின் உச்சியில் பறந்த
கட்சிக் கொடிகளில்
ஒட்டியிருந்தன
நைந்துபோன தேசியக் கொடியின்
துண்டுகள்

கரிந்து இருண்ட ஜனநாயகம்
தூக்கியெறியப்பட்டது
பெருங்கலவரத்தில் தொலைக்கப்பட்ட
ஒற்றைச் செருப்பென