ரிலையன்ஸ் நிறுவனம், பிரான்ஸ் அரசிடம் ரூ. 1,124 கோடி வரித் தள்ளுபடி பெற்றிருப்பதன் மூலம், ரபேல் பேரத்தில், அனில் அம்பானிக்கு பிரதமர் மோடி, இடைத்தரகராக செயல்பட்டிருப்பது நிரூபணமாகி இருப்பதாக காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார். இதுதொடர்பான விவரம் வருமாறு:

இந்தியாவின் பெருமுதலாளிகளில் ஒருவரான அனில் அம்பானி, ‘ரிலையன்ஸ் அட்லாண்டில் பிளாக் பிரான்ஸ்’ எனும் பெயரில் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றை, பிரான்சில் நடத்தி வருகிறார். ஆனால், பிரான்ஸ் அரசுக்கு செலுத்த வேண்டிய 151 மில்லியன் யூரோ (சுமார் ரூ. 1182 கோடி) அளவிற்கான வரியை, கடந்த 2007 முதல் 2012ஆம் ஆண்டு வரை அம்பானி செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில், பிரான்ஸ் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், முதற்கட்டமாக 7.3 மில்லியன் யூரோவை (ரூ. 57 கோடி) செலுத்த, ரிலையன்ஸ் நிறுவனம் சம்மதித்துள்ளது. 2014 கால கட்டத்தில் இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன.

இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுக்குப் பயணம் செய்த இந்தியப் பிரதமர் மோடி, அங்கு பிரான்ஸ் நாட்டின் ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்திடம் இருந்து பறக்கும் நிலையில், 36 ரபேல் ரக போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக, அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ சேர்த்துக் கொள்ளப்பட்டது.

பிரான்ஸ் நாட்டிற்கு ரூ. 1182 கோடி வரி பாக்கி வைத்திருந்த, ‘ரிலையன்ஸ் அட்லாண்டில் பிளாக் பிரான்ஸ்’ நிறுவனத்தைத்தான், ‘டஸ்ஸால்ட்’ நிறுவனம் கூட்டு நிறுவனமாக சேர்த்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, பிரதமர் மோடி பிரான்சிற்கு வந்து சென்றதற்குப் பிறகு, ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய வரிப் பாக்கி ரூ. 1182 கோடியில், ரூ. 57 கோடியை (73 இலட்சம் யூரோ) மட்டும் செலுத்தினால் போதும் என்று கூறிவிட்டு, ரூ. 1,124 கோடியை பிரான்ஸ் அரசு தள்ளுபடி செய்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் ‘லீ மாண்டே’ என்ற நாளேடு இந்த உண்மையைத் தற்போது வெளிக் கொண்டு வந்துள்ளது. இது இந்தியாவில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “ரபேல் பேரத்தில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு இடைத்தரகராக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டார் என்பது இப்போது தெளிவாகி விட்டது” என கூறியுள்ளார்.

“இதேபோல வேறு எந்தெந்த நிறுவனங்களெல்லாம் வரித் தள்ளுபடி பெற்றனவோ?” என்றும் சந்தேகம் எழுப்பியுள்ள சுர்ஜேவாலா, “காவலாளி திருடனாகி விட்டார்” என்பது உண்மையாகி இருப்பதாகவும், மோடியின் ஆசி உள்ளவர்கள் எதையும் அடைய முடியும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்த செய்திகளை, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் மட்டுமன்றி, மோடி அரசும் வழக்கம்போல மறுத்து மழுப்பியுள்ளன.