மக்கள் கவிஞர் இன்குலாப்பின் கவிதை நூலுக்கு நடுவண் அரசு ‘சாகித்ய அகாடமி’ விருது வழங்க முன் வந்ததை, அவரது குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர். இது குறித்து குடும்பத்தினர் தந்துள்ள விளக்கம்:

இன்குலாப் விருதுகள் பற்றிக் கூறியது:

“எனக்கு விருதுகள் வரும் என்று எதிர்பார்த்து எழுதுவதில்லை. ஆனால் எதிர்ப்பும், கண்டனமும், தாக்குதலும் வரலாம் என்பதை எதிர்பார்த்தே உள்ளேன்.’’

“அவ்வப்பொழுது விசாரணைக் காக இந்த அரசாங்கம் என்னை அழைப்பதே எனக்கான பரிசுகளின் தொடக்கமாகும்.

அதற்கும் மேலே

என் பேனா அழுந்துகையில்

எழுத்தாளன் எவனுக்கும்

கிடைக்காத பரிசு

இந்திய மண்ணில்

எனக்கு நிச்சயம். ‘’

இவ்வாறு விசாரணைகளை வாழும் காலத்திலும் இறந்த பின்னும் நேர்கொண்ட இன்குலாபுக்கு அரசினால் அளிக்கப்படும் இவ்விருது ஓர் அங்கீகாரமாகலாம்.ஆனால் இன்குலாப் அரசினால் தரப்படும் எவ்விருதையும் வாழும்காலத்திலேயே ஏற்க முடியாது என மறுத்துள்ளார்.

அரசு முகங்கள் மாறலாம். ஆனால் அவை அணிந்திருக்கும் முகமூடி ஒன்றே. அடக்குமுறையும், இனவாத மும், வர்க்கபேதமும், வன்முறையும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. விமர்சிப்பவர்கள், எதிர்ப்பவர்களை யெல்லாம் படுகொலை செய்யும் இந் நேரத்தில் இவ்விருதை ஏற்றுக் கொள் வது என்பது இன்குலாப் வாழ்ந்த வாழ்க்கைக்கும், எழுதிய எழுத்துக் களுக்கும் துரோகம் இழைப்ப தாகும்.இன்குலாபுக்கு அனைத்து இருட்டடிப்புகளையும் தாண்டி பரவலான மக்கள் வாசக வட்டம் உண்டு. அதுவே அவருக்கு ஒப்புகை யாகவும் அங்கீகாரமாகவும் இருக்கும். இன்குலாப் அவர்களின் விருப்பப்படி இவ்விருதை நாங்கள் ஏற்கவில்லை.

இறுதியாக இன்குலாபின் வரிகளில்

“விருதுகள் கௌவரவப்படுத்தும்

பிணமாக வாழ்ந்தால்

என் போன்றோரை…’’ - என்று

இன்குலாப் குடும்பத்தினரான

கமருன்னிஸா (துணைவியார்)

சா.செல்வம் (மகன்)

சா.இன்குலாப் (மகன்)

சா.அமினா பர்வின் (மகள்)

- ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Pin It