குப்தர் ஆட்சிக் காலத்திலிருந்து ஜாதி கலப்பு திருமணங்கள் தடைபடுத்தப்பட்டன

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னதாக ஜாதிக் கலப்புத் தடுக்கப்பட்டு உயர்ஜாதியினரின் ஆதிக்கத் திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது என மரபணு தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் தேசிய பயோ மெடிக்கல் ஜெனோமிக்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வு கூறுகிறது.

இனக் குழுக்களாக இருந்த சமூகங்கள் எப்போது சாதி அடையாளம் உள்ளவையாக மாறின?

சுமார் 70 தலைமுறைகளுக்கு முன்னதாக அதாவது 1500 ஆண்டுகளுக்கு முன்னதாக சாதிக் கலப்பு தடுக்கப் பட்டு ஒவ்வொரு ஜாதிக்குள்ளேயே திருமணம் மேற்கொள்ளப்பட்டு (அகமண முறை) ஜாதி அமைப்பு ஒருங்கிணைக்கப்பட்டு வலுப்பெற்றதாக மாறியது என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாய்வுக்காக 20 இனங்களைச் சேர்ந்த பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த 367 தனி நபர்களின் மரபணுக்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆய்வுக் கான மாதிரிகள் ஜாதிவாரியாகவும் மொழிவாரியாகவும் நிலவியல் வேறுபாடுகளை கவனத்தில் கொண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டன.

குஜராத், மணிப்பூர், மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த பார்ப்பனர்களும் மராத்தியர்களும் திராவிடச் சமூகங்களைச் சேர்ந்த பள்ளர், இருளர் உள்ளிட்ட சமூகங்களும், மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியினர்களான ஹோ இனத்தினர், சாந்தால் மற்றும் பிர்ஹோர் பழங்குடியினரும், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளிலிருந்தும் ஜாரவா மற்றும் ஓங்கே பழங்குடியினரும் ஆய்வுக் கான மாதிரிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

ஆய்வை நிறுவனத்தின் இயக்குநர் பி.மஜூம்தார் அனலாபா மற்றும் நீத்தா சர்க்கார் ராய் ஆகியோர் மேற்கொண்டனர்.

உயர்ஜாதி சமூகங்களுக்கிடையே ஜாதிக் குள்ளேயே மணம் முடிப்பது சுமார் 1575 ஆண்டு களுக்கு முன்னர்தான் தொடங்கியது. குப்தர் காலத்தில் வெவ்வேறு ஜாதிகளுக்கு இடையிலான திருமணங் களுக்கு தடைவிதிக்கப்பட்டன என்று ஆய்வு கூறுகிறது. இது, குப்தர் கால தர்மசா°திரங்களில் பதிவாகியுள்ளது. இவை மரபணுக்களில் பதிவாகி யிருக்கிறது.

முன்னோர்களின் மரபணுக்களை ஆய்வு செய்தபோது ஜாதிக் கலப்பு, குறிப்பாக மேற்கு வங்க பார்ப்பனர்களிடம் எப்போது நிறுத்தப்பட்டது என்பது ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 8ஆவது நூற்றாண்டு வரை வடகிழக்கு மாநிலங் களிலுள்ள ஜாதிகளிடையே கலப்பு மணங்கள் நிகழ்ந்து வந்தன. பால வம்சத்தின் ஆட்சி தொடங்கிய வுடன் நிறுத்தப்பட்டன.

மராத்தி பகுதியில் சாளுக்கிய மற்றும் ராஷ்டிர கூடர்களின் ஆட்சியின் போது போர்வீரர்களாக சத்திரியர்களை விவசாயப் பிரிவினரிலிருந்து நியமிப்பது நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பழங்குடியினர் மற்றும் திராவிட சமூகங்களுடன் கலப்பு மணங்கள் மேற் கொள்ளப்பட்டதும் தடுக்கப்பட்டது. இதன் விளை வாக வெவ்வேறு பழங்குடியினர் ஒன்று கலப்பதும் இக்கால கட்டத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது.

மரபணுவை வைத்து ஜாதியமைப்பைக் கண்டறியும் இந்த முக்கிய ஆய்வை அமெரிக்காவின் அறிவியல் ஆய்வு இதழ் ‘‘PNAS’ இப்போது வெளியிட்டுள்ளது.

ஜாதிக் கலப்பு உறவுகள் நிகழ்ந்துள்ள முறைகளைக் குறித்து ஆய்வுகளில் கண்டறியப்பட்ட தகவல்கள் -  “மனு சாஸ்திரத்தின்” விதிகளை உறுதிப் படுத்துவதாகவே இருக்கிறது. தமக்குக் கீழாக உள்ள சத்திரிய, வைசிய, சூத்திரப் பிரிவினரைச் சார்ந்த பெண்களிடம் உறவு கொள்ள பார்ப்பனர்களை மனு சாஸ்திரம் அனுமதிக்கிறது. ஒரே நிபந்தனை முதலில் உறவு கொள்ளும் பெண், பார்ப்பனப் பெண்ணாக இருக்க வேண்டும்.

இதே போன்ற ‘அனுமதி’யை சத்திரிய, வைசிய, சூத்திரப் பிரிவினருக்கும் முதல் பெண் உறவு மட்டும் அதே வர்ணப் பிரிவினராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு அனுமதிக்கப்படுகிறது. ஆனால், ‘சூத்திரனுக்கு’ மட்டும் இந்த உரிமை மறுக்கப்படுகிறது.

மனு சாஸ்திரம் கூறுகிறது: “சூத்திரன் மனைவி சூத்திரச்சியாகவே இருத்தல் வேண்டும். வைசியனுக்கு வைசிய, சூத்திரப் பெண் (பிராமணப் பெண் கூடாது). சத்திரியன், வைசிய, சூத்திரப் பெண்களை மட்டுமே உறவு கொள்ளலாம் (பிராமணப் பெண்ணிடம் உறவுகொள்ள உரிமை இல்லை).

சூத்திர ஆண்கள், சூத்திரப் பெண்களிடம் மட்டுமே உறவு கொள்ள முடியும் (பிராமண, வைசிய, சத்திரிய பெண்களிடம் உறவு கொள்ள முடியாது). ஆனால், ‘பிராமண’ ஆண்கள், ‘பிராமண’ப் பெண்களை மட்டுமின்றி அனைத்து வர்ணப் பிரிவுகளிடமும் உறவு கொள்ளலாம் என்கிறது மனு சாஸ்திரம். (அத்யாயம் 3 - சுலோகம் 13)

‘மனு’வின் இந்த சமூக ‘விதி’களை ஆழமாக ஆய்வுக்குட்படுத்திய அம்பேத்கர், தெளிவான விளக்கத்தை முன் வைக்கிறார். சமூகத்தில் அடிமைத் தனத்தக்கான விதிகளை உருவாக்கிய மனு அந்த விதிகளை அதன் இயல்பான போக்கில் செயல்பட அனுமதிக்கவில்லை என்று கூறும் அம்பேத்கர், ‘அதன் போக்கில் - இந்த அடிமை விதிகளை செயல்பட அனுமதித்திருந்தால் - ஒரு கட்டத்தில் அடிமைகளுக்கிடையிலான ஏற்றத் தாழ்வுகளை சமப்படுத்தும் சக்தியாகக்கூட இது மாற வாய்ப்புகள் இருந்திருக்கலாம்.

ஒரு ‘பிராமணன்’ தீண்டப்படாதவனின் அடிமையாகவோ, அல்லது ஒரு தீண்டப்படாதவன், ‘பிராமணனின்’ எஜமானனாகவோகூட மாறியிருக்கக்கூடும். இப்படி ஒரு நிலை வந்துவிடக் கூடாது என்பதால்தான் “வர்ண சமூக அமைப்பில் அடிமைத்தனம் மேலிருந்து கீழ் நோக்கி நகரலாமே தவிர கீழிருந்து மேல் நோக்கி நகரவே முடியாது” என்பதை கட்டளையாக்கிவிட்டார்கள் என்கிறார் அம்பேத்கர்.

“ஒரு ‘பிராமணன்’ தனக்குக் கீழே உள்ள எந்த வகுப்பையும் அடிமையாக்கிக் கொள்ளலாம். ஆனால், சூத்திர, வைசிய வகுப்பினர் தங்களுக்கு மேலான பிரிவினரை அடிமையாக்க முடியாது என்று அம்பேத்கர் விளக்குகிறார்.

வர்ணாஸ்ரம சமூக அமைப்பின் வழியாக  பின்பற்றப்பட்டு வந்த அடிமை விதிகள், குப்தர் காலத்தில் அரசு அதிகாரத்துடன்  கடுமையாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

சூத்திர ஜாதி இழிவுகளோடு பெண்ணடிமையும் கைகோர்த்துக் கொண்டு சமுதாயத்தில் காலம் காலமாக சீரழிவை நிலைநாட்டி வந்திருக்கின்றன. இதற்கான மூலம் பார்ப்பனர்களிடமிருந்தும் அவர்கள் உருவாக்கிய வர்ணாஸ்ரம அமைப்பிலிருந்தும் தொடங்கி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த சமூக வரலாற்று உண்மைகளை இப்போது மரபணு வழியாக நிகழ்த்தப்பட்ட இந்த அறிவியல் ஆய்வு உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.