சில நாட்களுக்கு முன்னர், தனது துறைத் தலைவரின் ஜாதி, மத வெறுப்புப் பாகுபாட்டு நடவடிக்கைகளால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட சென்னை கவின்கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷின் இல்லத்துக்கு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, எவிடென்ஸ் கதிர், வேலூர் ஆவணப்பட இயக்குநர் பாலா, குடியாத்தம் சிவா, கழகத்  தோழர்கள் ஆகியோருடன் சென்று, மாணவரின் குடும்பத்தினரை சந்தித்தார்.

கல்லூரியில் துறைத் தலைவராய் இருந்த இரவிக்குமார் என்பவர், சிறந்த கலைஞனாயும், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாய் சிறந்த மாணவருக்கான விருதினைப் பெற்றுவந்த மாணவர் பிரகாஷை, அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்பதையும், பிறப்பால் இந்துவான மாணவர் கிருத்துவ மாதா கோவிலுக்கு சென்று வழிபடுகிறார் என்பதையும் அறிந்தவுடன் தொடர்ச்சியாக கேவலமாக வகுப்பறையில் மிகவும் இழிவுபடுத்தி வந்துள்ளார்.

இதனைப் பலமுறை கல்லூரி முதலவரிடம் தனியேயும், மாணவர்களுடனும், பெற்றோரை உடன் அழைத்துச் சென்றும் புகார் கூறியும் கல்லூரி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொடுமைப்படுத்துதல் தான் அதிகரித்துள்ளது. அதனால் மனமுடைந்த மாணவர் பிரகாஷ், வீடியோவிலும், கடிதத்திலும், வாட்ஸ் அப் செய்தியாகவும், கவின் கல்லூரியின் துறைத் தலைவர் இரவிக்குமாரின் இந்துமத ஜாதிவெறியின் காரணமாகவும், பேராசிரியர் சிவராஜ், கல்லூரி முதல்வர் ஆகியோரின் அலட்சியப் போக்காலுமே தான் தற்கொலை செய்து கொள்ளுவதாக மரண வாக்குமூலம் அளித்துவிட்டே இறந்திருக்கிறார். ஆனால் காவல்துறையோ, சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவுசெய்து குற்றவாளிகளைக் காப்பாற்றிக் கொண்டுள்ளது.

இச்செய்திகளை அவரது குடும்பத்தாரிடம் கேட்டறிந்த கழகத் தலைவர், தோழர் எவிடென்ஸ் கதிர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.