வேதகால பார்ப்பன ஒடுக்குமுறை கலாச் சாரத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க பார்ப் பனர்கள் தீவிரமாகக் களத்தில் இறங்கியிருக் கிறார்கள். அந்த முயற்சிகளில் ஒன்றுதான் தாமிரபரணி மகா புஷ்கரம். ஏற்கனவே கொலை வழக்கில் கைதாகி, பிறகு விடுதலையான இறந்துபோன காஞ்சிபுரம் ஜெயேந்திரன், காவிரி புஷ்கரத்தை நடத்தினார். இப்போது தமிழ்நாட்டில் உற்பத்தியாகி தமிழ்நாட்டுக்குள்ளே கடலில் கலக்கும் ஒரே நதியான தமிழர் பண்பாட்டோடு இணைந்து நிற்கும் தாமிர பரணிக்கு வேத முலாம் பூசி புஷ்கரம் நடத்துகிறார்கள்.

அது என்ன புஷ்கரம்? குருபகவான் ஒரு இராசியிலிருந்து மற்றொரு இராசியான விருச்சிக இராசிக்கு ‘வீடு’ மாற்றுகிறானாம். முன்பணம் வாடகை இல்லாமல் வீடுகளை மாற்றிக் கொள்ளும் உரிமை இந்த இராசி பகவான்களுக்கு மட்டுமே உண்டு. தாமிரபரணி விருச்சிகராசிக்கான நதியாம். 144 ஆண்டு களுக்குப் பிறது இந்த விழா கொண்டாடப் படுவதால் இது மகாபுஷ்கரமாம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது புஷ்கரமாம்.இந்த ‘மகா புஷ்கரத்’துக்கு தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறை ஏற்பு வழங்கவில்லை. ‘கர்ப்பகிரகத்துக்குள் இருக்கும் பகவானை’ ஆற்றங்கரைக்கு அழைக்க வேதசடங்குகள் நடத்துவது ‘ஆகமவிதி’களுக்கு எதிரானது என்று அறநிலையத் துறை கூறுகிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதை ஆகம விதிகள் ஒருபோதும் அனுமதிக்காது என்று அலறி உச்சநீதிமன்றம் வரைச் சென்று வழக்காடும் பார்ப்பனர்கள், தாமிரபரணி மகாபுஷ்கரம் ஆகமத்துக்கு எதிரானது என்றால் அதைக் கொண்டாடியே தீரவேண்டும் என்கிறார்கள்.

‘இராசிபலன்’ குரு பெயர்ச்சிகளின் அடிப்படையில் மனிதர்களின் ‘எதிர்காலத்தை ‘, ‘கடந்தகால பாவங்களை’த் தீர்ப்பதற்கான ‘பரிகாரங்கள், தோஷக் கழிப்பு’களைக் கூறிவந்த கூட்டம் இப்போது நதியையும் விட்டு வைக்கவில்லை. தாமிரபரணிக்கு ‘விருச்சிக இராசி’ என்று எந்த சோதிடன் குறித்து வைத்துள்ளான்? நதிகளுக்கான ‘இராசி’, விலங்குகளுக்கும் உண்டா? தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டிலேயே கடலில் கலக்கும் நதிக்கு எப்படி வடமொழிப் பெயர் சூட்டி, ‘புஷ்கரம்’ கொண்டாடுகிறார்கள்?

நதியின் தூய்மையைக் கெடுப்பதே இந்த சடங்குகள்தான் என்பதை மறுக்க முடியுமா? நதியில் மூழ்கி உடுத்திய ஆடையை அப்படியே நதிக்குள் போடும் சடங்குகளால் தாமிரபரணி நதி நீர் எவ்வளவு பாழாகியது என்பதை இவர்கள் யோசித்தார்களா? கடலுக்குள் விநாயகன் சிலைகளைக் கரைப்பதும் செத்த பிணங்களை பாதி எரியூட்டப்பட்ட நிலையிலேயே கங்கை யில் தள்ளி விட்டால் ‘மோட்சம்’ என்பதும் மதத்தின் அடிப்படையில் நதிநீரின் தூய்மையை யும் சுற்றுச் சூழலையும் பாழாக்குவது அல்லவா?

இந்த மகாபுஷ்கரம் இப்போது அரசியலாக்கப் படுகிறது என்பதையும் குறிப்பிட வேண்டும். பாரதிய ஜனதாவும் விசுவ இந்து பரிஷத்தும் இதற்கு விழிப்புணர்வு யாத்திரைப் பயணம் நடத்துகிறது. பா.ஜ.க.வின் இல. கணேசனும் தமிழிசையும், காஞ்சிபுரம் மடத்தின் புதிய பார்ப்பன சங்கராச்சாரி விஜயேந்திரன் ஆசியுடன் தொடங்கி வைக்கிறார்கள். புஷ்கரத்துக்கு எதற்கு விழிப்புணர்வுப் பயணம்? அதுவும் விசுவஇந்து பரிஷத் கொடிகளை மோட்டர் சைக்கிளில் கட்டிக் கொண்டு ரத ஊர்வலம் நடத்துகிறார்களாம். மதத்தின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் நடத்துகிறார்கள். ‘புஷ்கரம்’ இரதயாத்திரைத் தொடக்க விழாவுக்கு வந்த இல கணேசன், தமிழ்நாட்டு அரசியல் இடைத்தேர்தல் தள்ளி வைப்புக் குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கிறார். அறநிலையத் துறை பங்கேற்காத இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். தமிழகத்தில் காலூன்ற பா.ஜ.க. ‘புஷ்கரங்களை’க் கையில் எடுத்து, அதன் உண்மையான பார்ப்பன முகத்தை வெளிகாட்டியிருக்கிறது.

144 ஆண்டுகளுக்கு முன்பு புஷ்கரம் நடந்தது என்பது உண்மையா?

144 ஆண்டுக்குப் பின்னால் தாமிரபரணி புஷ்கரம் நடப்பதாகச் செய்திகளில் சொல்கிறார்கள். ஆனால் அப்படி ஒரு நிகழ்வே அப்போது நடந்ததாக விபரம் இல்லை என்கிறது நீதிமன்றத்தில் அரசு தரப்பு. வற்றாத தாமிரபரணி நதி இதுவரை இரண்டு முறை பொதிகை முதல் புன்னக்காயல் வரை வற்றியிருக்கிறது. அது முற்றிலுமாக வற்றிய வருடம் 144 ஆண்டுகளுக்கு முன்பு தான்.

இந்தியாவையே புரட்டிப்போட்டப் பஞ்சம் ஏற்பட்ட 1876 தான். 1872 ல் தாமிரபரணி முற்றிலுமாக வற்றி மீண்டும் அது இயல்புக்கு வந்தது 1892 ல் தான். அதன் பிறகு மீண்டும் 1885 மற்றும் 1889இல் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. 1872 பஞ்சத்தை ஒட்டித் தான் தென் மாவட்டத்தினர் பஞ்சம் பிழைக்க மாட்டுவண்டிகள் கட்டிக்கொண்டு மும்பை போய்ச் சேர்ந்தனர். அவர்கள் போய் தங்கிய இடம் தான் இன்றைய தாராவி. 1872 முதல் 1890 வரை பஞ்சத்தால் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுமையும் கொத்துக்கொத்தாக செத்து மடிந்தனர். 144 வருடங்களுக்கு முன்னால் தண்ணீரே ஓடாத தாமிரபரணியில் புஷ்கர விழா எப்படி நடத்தப்பட்டது?

மேலும் இந்த குறிப்பிட்ட ஆண்டுகளில் தமிழகத்தில் பெரும் ஆலய நுழைவுப் போராட்டங்களை நாடார்கள் நடத்திய வருடங்களும் கூட. 1872 ல் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள்ளும், 1874 ல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள்ளும், 1876 ல் திருத்தங்கல் கோவிலிலும், 1897 ல் கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும், 1899 ல் சிவகாசி காசி விஸ்வநாதர் கோவிலிலும் ஆலயப் பிரவேசப் பெரும் போராட்டங்களை நாடார்கள் நடத்தினர்.

நாடார்கள் ஆலயம் நுழைவதால்தான் பெரும் பஞ்சங்கள் ஏற்படுகிறது என சனாதனவாதிகள் பிரச்சாரம் செய்த காலமும் இதுதான். இதையொட்டியே வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள 1899 சிவகாசி கலவரம் நடந்தது. இந்தக் கலவரத்தையொட்டி அங்கிருந்து வெளியேறிய நாடார்கள் தாங்கள் புதிதாகச் சென்று குடியேறிய ஊர்களில் சிவகாசி நாடார் உறவின்முறை என்று பெயர் வைத்திருப்பார்கள். பார்ப்பனிய அடக்குதலுக்கு எதிராகப் போராடியது சமூகம் நாடார் சமூகம்.

 ‘தாமிரபரணியை காவிகளிடமிருந்து காப்போம்!’

Pin It