குழப்பவாதிகளுக்கு கொளத்தூர் மணி விளக்கம் (7)

“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.

அம்பேத்கரின் 15ஆவது தொகுதியில், 95ஆவது பக்கத்தில் உள்ள ஒரு செய்தியை இங்கே குறிப்பிடுகிறேன். ”தமிழ்மொழி முதலில் தமிதா என்று உச்சரிக்கப்பட்டது. பின்னர் தமிழாகி, திராவிட என்று உரு திரிந்தது. தமிழ் அல்லது திராவிடம் என்பதுதான் ஆரியர்கள் வருவதற்கு முன்னால் இந்தியா முழுவதும் பேசப்படுகிற மொழியாக இருந்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப்பட்டு வந்தது தமிழ் ஆகும். வட இந்தியாவிலிருந்த நாகர்கள் தங்களது தாய் மொழியான தமிழை கைவிட்டுவிட்டு சமஸ் கிருதத்தை கற்றுக்கொண்டனர். ஆனால் தென்னிந் தியாவில் இருந்த நாகர்கள் அவ்வாறு செய்யவில்லை. தமிழையே தங்களது தாய்மொழியாகப் பேணிக் காத்து வந்தனர். இந்த வேறுபாட்டை மனதில் கொண்டால் திராவிட என்ற பெயரை ஏன் தென்னிந்திய மக்களுக்கு மட்டும் பயன்படுத்தும்படி நேர்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். திராவிடர்கள் என்பதும், நாகர்கள் என்பதும் தாசர்கள் என்பதும் ஒன்றுதான்” என்று கூறுகிறார் அம்பேத்கர்.

ஆனால் ஏதோ பெரியாரும், பெரியார் இயக்கமும்தான் திராவிடர் என்ற சொல்லை கொண்டுவந்தது என்பதுபோல சொல்லுகிறார்கள். இங்கிருக்கிற தெலுங்கர்களுக்கு ஆதிக்கம் கொடுப்பதற்காக திராவிடர் என்ற சொல்லை கொண்டு வந்தார்கள் என்பதுபோல சொல்லு கிறார்கள். பெரியாரைத் தெலுங்கர் என்று சிலரும், கன்னடர் என்று சிலரும் சொல்கின்றனர். ஆனால் இவர்கள் இதையெல்லாம் எப்படி கண்டு பிடித்தார்கள் என்றால் எதையுமே இவர்கள் கண்டு பிடிக்கவில்லை என்பதுதான் பதில். அவரேதான் எழுதியிருக்கிறார்.

1926ஆம் ஆண்டில் ‘விதவா விவாக விளக்கம்’ என்ற புத்தகம் ஒன்று வந்தது. அந்த புத்தகத்திற்கு பெரியார் குடிஅரசில் மதிப்புரை எழுதினார். அதில் 5 வயதுக்குட்பட்ட விதவைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள், 1 வயதுக்குட்பட்ட விதவைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள், 10 வயதுக்குட்பட்ட விதவைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை மக்கள் தொகை கணக்கீட்டிலிருந்து புள்ளி விவரங்களை எடுத்து  விதவை மறுமணத்தைப் பற்றி பெரியார் எழுதினார்.

மாடு தினவெடுத்தால் தேய்த்துக் கொள்வதற்கு சொறிக்கல் நடுவது எங்கள் தமிழர்கள் மரபில் ஒன்று என சொல்கின்றீர்களே, குழந்தைப் பருவத்திலேயே விதவைகளாகும் இந்தப் பெண்களின் உணர்வுகளுக்கு என்ன பதில் சொல்வீர்கள் என்றெல்லாம் அதில் கேட்டார். மேலும் அதில் தன் குடும்பத்தில் நடந்த நிகழ்வையும் குறிப்பிட்டுள்ளார் பெரியார். “நான் கன்னட பலிஜா நாயுடு ஜாதியைச் சார்ந்தவன். என் குடும்பத்தில் மறுமணம் செய்யும் வழக்கம் இல்லை. ஆனால் 9 வயதுள்ள என்னுடைய தங்கை மகளுக்கு 12 வயதுள்ள மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். திருமணம் ஆன 2 மாதத்தில் மாப்பிள்ளை இறந்துவிட்டான். நான் வெளியூரி லிருந்து வந்தவுடன் எனக்கு திருமணம் வேண்டு மென்று நான் எப்போதாவது கேட்டேனா என்று என் காலை பிடித்துக் கொண்டு என் தங்கை மகள் அழுதாள்.

மறுமணம் செய்யும் பழக்கம் இல்லாத எங்கள் வீட்டில் என் தங்கை மகளைக் காலிலிருந்து தூக்கும் போதே மறுமணம் செய்து வைப்பேன் என்ற எண்ணத்தோடுதான் தூக்கினேன். அதன்பிறகு சிதம்பரத்தில் வைத்து என் தங்கை மகளுக்கு மறுமணமும் செய்து வைத்தேன். அங்கிருந்து வந்தபிறகு என்னை ஜாதியிலிருந்து தள்ளி வைத்து விட்டனர். ஆனால் நான் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னால் 4 கொப்பரை சர்பத் கலக்கி வைத்தும்கூட போதவில்லை. அப்போது ஜாதிக்காரன் எல்லாம் வந்துவிட்டான்” என்று எழுதியுள்ளார். இதை முழுவதும் படிக்காமல் தன்னுடைய ஜாதிப் பெயரை சொன்னதை மட்டும் வைத்துக்கொண்டு பெரியார் தன்னுடைய ஜாதிப் பெயரை பெருமையாகச் சொன்னார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவரே அதை சொல்ல வில்லை என்றாலோ அல்லது மாற்றி தமிழ் நாயக்கர் என்று சொல்லி இருந்தாலோ, அப்படி யொரு ஜாதி இருக்கிறது என்று இவர்கள் நம்பியும் இருப்பார்கள்.

மொழிவழி மாநிலங்கள் பிரிவினைக்கு ம.பொ.சி.தான் போராடினார் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அது முதலில் பொய்யானது. நம்முடைய வரலாறுகள் சரியாக பதிவு செய்யப்படவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சித்தூர் மாவட்ட குழு இதற்காகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது. இவர்கள் கடையடைப்பு, ரயில் மறியல் போராட்டங்கள் செய்ததெல்லாம் பதிவு செய்யப்படவில்லை.

அதேபோல சங்கரலிங்க நாடார் உண்ணாவிரதம் இருந்துதான் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தார்கள் என்றும் சொல்கிறார்கள். 1954ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி, தனது பிறந்தநாளில் மொழிவழி மாநிலங்கள் பிரிவினையைப் பற்றி பெரியார் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதன்பிறகு  11.10.1955-இல் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். ”அதுதான் திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டை விட்டு மலையாளிகள், ஆந்திரர்கள், மலையாளிகள், கன்னடர்கள் பிரிந்தபோன பின்பும் கூட தமிழகத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் கூட இருக்கக்கூடாது என்றும் பார்ப்பானும், வட நாட்டானும் சூழ்ச்சி செய்து இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்து சென்னை நாடு என்று பெயர் கொடுக்க இருப்பதாகத் தெரிய வருகிறது.

தமிழ், தமிழ்நாடு என்ற பெயர் இந்த நாட்டுக்கு இல்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விட்டார்கள் என்ற நிலைமை ஏற்பட்டு விடுமானால் பிறகு என்னுடைய வாழ்வோ, என்னை பின்பற்றும் கழகத்தினருடைய வாழ்வோ எதற்காக இருக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை” என்று எழுதினார். இதற்குப் பிறகு ஒரு வருடம் கழித்து 1956ஆம் ஆண்டில்தான் சங்கரலிங்கம் உண்ணா விரதம் இருந்தார்.

சங்கரலிங்கம் என்ன கருத்தை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தார் என்பதையும் பார்க்க வேண்டும். அவர் மொழிவழி மாநிலம் அமைத்தல் வேண்டும் என்று முதல் கோரிக்கையாக வைத்தார். மொழிவழி மாநிலம் அமைந்து கன்னடன், மலையாளி, தெலுங்கன் தனித்தனியாக சென்று விட்டார்கள் என்று 1955ஆம் ஆண்டிலேயே பெரியார் எழுதுகிறார். அடுத்து, சென்னை ராஜ்யம் என்பதை மாற்றி தமிழ்நாடு எனப் பெயர் வைத்தல் வேண்டும் என்கிறார் சங்கரலிங்கம். அதுமட்டுமல்ல, ரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் பயணம் செய்தல் வேண்டும், வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை விலக்கி சைவ உணவு மட்டுமே அளிக்க வேண்டும், அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் அணிதல் வேண்டும், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சாதாரண மனிதர்களைப் போல அரசியல்வாதிகளும் வாழ வேண்டும், தேர்தல் முறையில் மாறுதல் செய்ய வேண்டும் (என்ன மாறுதல் என்று சொல்லவில்லை), தொழிற்கல்வி அளிக்கப்பட வேண்டும், இந்தியா முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும், விவசாயிகளுக்கு விளைச்சலில் 60 விழுக்காடு வாரமளித்தல் வேண்டும், மத்திய அரசு இந்தியை மட்டும் பயன்படுத்தக்கூடாது, பொது இடங்களில் ஆபாசமாக நடந்துகொள்வதைத் தடுக்க வேண்டும் என 12 கோரிக்கைகளை வைத்து உண்ணாவிரதம் இருந்தார்.

இவரைக் குறைத்து சொல்ல வேண்டும் என்ற எண்ணம் நமக்கு இல்லை. ஆனால் பெரியார் முன்பே சொன்னவற்றை மறைக்க வேண்டுமென்பதற்காக அவர்கள் பேசும்போது, நம்முடைய வரலாறுகளைப் பதிவு செய்ய நாம் தவறுகிறோம் என்பதற்காக இதைச் சொல்கிறேன். 11.10.1955 அன்று பெரியார் வெளியிட்ட அந்த அறிக்கையைத் தொடர்ந்து, 25ஆம் தேதியில் மீண்டும் ஒரு அறிக்கையைப் பெரியார் வெளி யிட்டார். “பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலையில்லாமல் போய்விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் சீக்கிரம் பிரிந்தால் நல்லது என்கிறது எண்ணம் எனக்குத் தோன்றிவிட்டது. கன்னடியர்களுக்கும், மலையாளிகளுக்கும் இனப்பற்றோ, சுயமரி யாதையோ இல்லை (பெரியாரை கன்னடர் என்று சொல்கிறார்கள், ஆனால் பெரியார் கன்னடர்களை யும் சேர்த்தே சுயமரியாதை இல்லாதவர்கள் என்று எழுதியுள்ளார்). மத்திய ஆட்சிக்கு அடிமையாய் இருப்பதைப் பற்றி அவர்களுக்கு சிறிதும் கவலை இல்லை.

மேலும் சென்னை மாகாணத்தில் 7இல் ஒரு பாகஸ்தர்களாகவும், 14இல் இரண்டு பாகஸ்தர்களாகவும் இருந்துகொண்டு  தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதாரம், உத்தியோகம் ஆகியவற்றில் 3இல் 2 பாகத்தை அடைந்துகொண்டு, இவர்கள் நம்மோடு கலந்திருப்பதால் நம் நாட்டை தமிழ்நாடு என்றுகூட சொல்வதற்கு இடமில்லாமல் தடுத்து ஆட்கொண்டு இருந்தார்கள். இவர்கள் சீக்கிரம் பிரியட்டும் என்றே கருதி வந்தேன். அந்தப்படியே பிரிய நேர்ந்துவிட்டது. அதனால் இந்தப் பிரிவினையை வரவேற்கிறேன்” என்று எழுதினார் பெரியார்.

எல்லைப் போராட்டத்தில் பெரியாரின் பங்கு எதுவுமே இல்லை, நேசமணிதான் போராடினார் என்று பெரியார் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கிறார்கள். 1998ஆம் ஆண்டில் நடந்த 42ஆவது குமரி மாவட்ட விடுதலை விழாவில் நேசமணியின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளிவந்தது. சட்டமன்ற உறுப்பினராக இருந்த அப்துல் ரசாக் என்பவர் அந்த நூலை எழுதினார். அதில் குமரி எல்லைப் போராட்டத்தில் பெரியாரின் பங்கு என்னவென்பதையும் அவர் எழுதியிருக்கிறார். அதற்கு முன்னுரையை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.சாமிதாசு எழுதியிருந்தார். அதில் ”கண்ணில் கண்டவர்களைக் கண்டால் அறியாம் பள்ளி என்றுகூறி கைதுசெய்தனர். நான் போலிசுக்கு பிடிகொடுக்காமல் வாழ்ந்தேன். திருவிதாங்கூரில் நடந்த தமிழகப் போராட்டத்தில் போலிசு அத்துமீறி செயல்பட்டது. பலரைத் துப்பாக்கிக்கு இரையாக்கி, பலரை சித்திரவதை செய்தும், பலரை துன்புறுத்தியும் கைது செய்தனர். தமிழ் கூட்டங்களில் சொற்பொழி வாற்ற வந்த ம.பொ.சி. சொற்பொழிவு ஆற்றாமலேயே அரசுக்கு பயந்து ஓடிவிட்டார்” என்று  எழுதி யிருந்தார்.

ஆனால் இந்த ம.பொ.சி.யைத்தான் எல்லைப் போராட்டத்துக்கு போராடினார் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். கன்னியாகுமரியை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டுமென்று போராடிய போராட்டத்தில் நேசமணியோடு இணைந்து போராடிய ஒருவர் இந்த சாமிதாசு. “ஆனால் பெரியார் ஈ.வே.ரா மட்டும் திருவிதாங்கூர் நிலைமையை மார்சல் நேசமணியை சந்தித்தும், மக்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். இதன் பின்னணியாக சென்னை மெரீனா கடற்கரையில் ஒரு கூட்டத்தைப் போட்டு திருவிதாங்கூரில் போலிசு அடக்குமுறையை உடனடியாக நிறுத்தாவிட்டால் தமிழகத்தில் வாழும் மலையாளிகளை இங்கிருந்து அடித்துத் துரத்துவோம் என்று பொதுக்கூட்டத்தில் அறிக்கை விட்டார். மலையாள அரசு தமிழர்களை துன்புறுத்தியதை நிறுத்திக்கொண்டது” என்றும் அவர் எழுதியுள்ளார். 

“மார்சல் நேசமணி தன் வாழ்க்கை முழுவதும், தன் கையால் மாலை அணிவித்த ஒரே தலைவர் பெரியார் மட்டும்தான்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதோ ஏதோ பெரியாரிடம் நல்ல பெயர் வாங்கு வதற்காக எழுதப்பட்டதல்ல. தெற்கு எல்லைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கி நடத்திய நேசமணி தன் கையால் பெரியாருக்கு மட்டும்தான் மாலையிட்டார், வேறுயாருக்கு அவர் மாலையிட்டதே இல்லை என்பதை பெரியார் இறந்து 25 வருடங்களுக்குப் பிறகு 1998ஆம் ஆண்டில் இவர் எழுதியிருக்கிறார். ஆனால் பயந்து ஓடிய ம.பொ.சி.யைத்தான் இன்றைக்கு சில தமிழ் தேசியவாதிகள் தூக்கிப்பிடிக்கின்றனர்.

தொடரும்