தடையை மீறி மாட்டுக்கறி உண்ணும் போராட்டம்: சேலத்தில் கழகத்தினர் கைது

மாட்டுக் கறியை உண்ணத் தடைபோடும் பார்ப்பன மதவாத சக்திகளுக்கு ஆதரவாகவே தமிழக காவல்துறையும் செயல்பட்டு வருகிறது. மாட்டுக்கறி உணவு - உழைக்கின்ற மக்களின் உணவு; புரதச் சத்து மிக்க உணவு; ஆடு மற்றும் கோழிக் கறியைச் சாப்பிடும் உரிமை இருக்கும்போது, உலகம் முழுதும் மக்களால் உண்ணப்படும் மாட்டுக்கறி உண்பதை மதத்தைக் காரணம் காட்டி, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தடை போட்டுள்ளதோடு, கண்காணிப்புக் குழுக்கள் என்ற பெயரில் காலித்தனத்திலும்  இறங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் மே 12ஆம் தேதி சேலம் நகரில் மாட்டுக்கறி அரசியல் கருத்தரங்கம் ஒன்றுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா. டேவிட் தலைமையில் மாநகரத் தலைவர் த.பரமேசு முன்னிலையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வழக்கறிஞர் பொ.இரத்தினம் ஆகியோர் உரையாற்ற இருந்தனர். மதியம் ரூ.50 கட்டணத்தில் மாட்டுக்கறி உணவு வழங்க ஏற்பாடாகியிருந்தது. ‘லால் மஜித் மண்டபம்’ என்ற தனியார் அரங்கில் நடந்த இந்த கருத்தரங்குக்கு காவல்துறை தடை விதித்தது.

இதைக் கண்டித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை வெளியிட்டார். “கருத்துரிமை - உணவு உரிமையை மறுக்கும் காவல்துறையைக் கண்டித்து தடையை மீறி சட்ட உரிமைகளை நிலைநாட்டுவோம்” என்று அறிவித்தார். (அறிக்கை முதல் பக்கத்தில் வெளியிடப்பட் டுள்ளது)

meatகழகத் தோழர்கள் கருத்துரிமை - உணவு உரிமைக்கான தடையை எதிர்த்து,  சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் 12.5.2017 பகல் 11 மணி அளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி முன்னிலையில் திரண்டார்கள்.

ஈரோடு, திருப்பூர், சேலம், கிருட்டிணகிரி, கோவை, நாமக்கல் மாவட்டங்களிலிருந்து 150க்கும் மேற்பட்ட தோழர்கள் திரண்டு, மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தை நடத்தி கைதானார்கள்.

மேட்டூர் சக்திவேல் (சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர்), கோவிந்தராசு (சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்), டைகர் பாலன் (மாவட்ட அமைப்பாளர்), நாமக்கல் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் வைரவேல், சரவணன், முத்துப்பாண்டி; திருப்பூர் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் முகில்ராசு, மாதவன், மணி, தனபால்; கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் நேருதாசு, நிர்மல் குமார், கிருட்டிண கிரி மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் குமார், பிரபு உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட தோழர்கள், “உணவு உரிமையை பறிக்காதே; கருத்துரிமையை பறிக்காதே” என்ற முழக்கத்தோடு மாட்டுக்கறி உண்ணத் தொடங்கினர். காவல்துறை அனைவரையும் கைது செய்தது.