அய்.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை சர்வதேச தமிழர் அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் வரவேற்றுள்ளன. மயிலாடுதுறையில் 29.3.2014 அன்று கூடிய திராவிடர் விடுதலைக் கழக செயலவை, இத் தீர்மானம் கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைவிட மேலும் முன்னேற்றம் கண்டிருப்பதை சுட்டிக்காட்டி, வரவேற்றுள்ளது.

2012-2013 ஆண்டுகளில், அய்.நா. வலியுறுத்திய ‘நம்பகத் தன்மையான விசாரணை’யை நடத்தும் தீர்மானத்தை ராஜபக்சே ஆட்சி முற்றிலும் புறந்தள்ளிய நிலையில் இப்போது அய்.நா. மனித உரிமை ஆணையரின் நேரடி கண்காணிப்பு வளையத்துக்குள் இலங்கை கொண்டு வரப்பட்டிருப்பது ஒரு முக்கிய திருப்பம். இதில் இந்தியா மேற்கொண்டுள்ள நிலைப்பாடு தமிழினத்துக்கு இழைத்த துரோகமாகும். மனித உரிமைக் குழுவில் இடம் பெற்றுள்ள 47 நாடுகளில் 23 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தும், கியூபா, ரஷ்யா, சீனா, வெனிசுலா, மாலத்தீவு, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்துள்ளன. ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் ஒதுங்கிய 12 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உண்மையில் இந்தியா நடுநிலை என்ற நாடகத்தை நடத்தினாலும் தீர்மானத்தை எதிர்க்கும் அணியில்தான் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. அய்.நா.வின் மனித உரிமைக் குழுவில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக உள்ள திலிப் சின்கா, கூட்டத்தில் வெளிப்படுத்திய கருத்துக்களே இதற்குச் சாட்சியமாகும்.

அய்.நா. உள்ளிட்ட எந்த ஒரு நாடோ அமைப்போ இலங்கையில் தலையிடக் கூடாது என்றும், இத்தகைய தலையீடுகள் இலங்கை அரசு மேற்கொண்டு வரும் ஆக்கபூர்வமான செயல்பாடுகளைக் குலைத்து விடும் என்றும் கூறியுள்ளதோடு, இலங்கை அரசு, போர் முடிவுக்கு வந்த பிறகு பல நல்ல செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது என்றும், அவர் பாராட்டு சான்றிதழை வழங்கியுள்ளார். இலங்கை அரசு தனக்குத் தானே நியமித்துக் கொண்ட “கற்ற பாடம்; இணக்கத்தை உருவாக்கும்” (எல்.எல்.ஆர்.சி.) ஆணையப் பரிந்துரைகள் அரசியல் தீர்வை உருவாக்குவதற்கான ஒரு வாயிற்கதவு என்றும் பெருமையுடன் கூறியிருக்கிறார். இந்தியாவின் இந்த முடிவை இலங்கை அதிபர் ராஜபக்சே மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார். அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்களையும் விடுதலை செய்துள்ளார். உடனே இந்தியாவின் அயல் உறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங், தமிழக மீனவர்களைக் காப்பாற்றவே இந்தியா இப்படி ஒரு நிலை எடுத்ததாக கடைந்தெடுத்த ‘அரசியல்வாதி’யைப் போல் தமிழக மக்களின் ‘காதில் பூ சுற்றும்’ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அய்.நா. தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்பே தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து தந்து வரும் அழுத்தத்தினால் இரு நாட்டு பிரதிநிதிகளிடையே பேச்சு வார்த்தை தொடங்கி மீனவர் விடுதலை படிப்படியாக நடந்து வருவதை மக்கள் அனைவரும் நன்றாகவே அறிவார்கள். தமிழகத்தில் அரசியல் கட்சிகளே வெவ்வேறான கருத்துகளை முன் வைத்து வருவதால்தான் இந்தியா இப்படி ஒரு நிலை எடுக்க வேண்டியிருப்பதாக தனது ‘வழக்கறிஞர் வாதத் திறமை’யைப் பயன்படுத்தி மக்கள் சிந்திக்கவே தெரியாதவர்கள் என்ற ஆணவத்தில் ப. சிதம்பரம் பேசியிருக்கிறார். தேர்தலில் ஓட்டு வாங்கும் நேரத்தில் இப்படி நடந்து விட்டதே என்ற மனப்புழுக்கத்தில் அமைச்சர் ஜி.கே. வாசன் போன்றவர்கள், சொந்த கட்சி ஆட்சியின் ‘துரோகத்தை’ வெளிப்படையாக விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் ‘கரை சேரும்’ வாய்ப்புகள் இருந்த காலத்திலேயே துரோகத்தை வெளிப்படுத்த தயங்காத மத்திய ஆளும் காங்கிரஸ் ஆட்சி இப்போது ‘அனாதையாக’ தனித்துவிடப்பட்ட காலத்தில் துரோகத்தை வெளிப்படுத்திட தயங்கிடவா, போகிறது? இவர்களின் இந்த ‘சப்பைக் கட்டு’ சமாதானங்கள் எல்லாமே கலப்படமற்ற பொய் என்பதற்கு அய்.நா.வில் இந்திய பிரதிநிதி பேசிய பேச்சே உறுதியான சாட்சியமாகும்.

அமெரிக்க தீர்மானம் நிறைவேறுவதற்கு முன்பு அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் தலையீட்டைக் கோரும் தீர்மானத்தின் 10 ஆவது பகுதியை முழுவதுமாக நீக்கிட வேண்டும் என்று பாகிஸ்தான், ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர, அதன் மீதும் வாக்கெடுப்பு நடந்தது. அந்தத் தீர்மானமும் 23 நாடுகளால் தோற்கடிக்கப்பட்டது. இந்தியா நடுநிலை நாடகம் நடத்தியது. பாகிஸ்தான் தீர்மானத்தில் வலியுறுத்திய அதே குரலைத்தான் இந்தியாவும் சேர்ந்து ஒலிக்கிறது.

பிரித்தானியா தமிழ்ப் பேரவை (பி.டி.எஃப்), சர்வதேச விசாரணைக்காக லண்டனில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற கட்டிடத்திலேயே அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உலகத் தமிழர் அமைப்பின் பிரதிநிதிகளையும் அழைத்து சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலாக முன்னெடுத்ததைத் தொடர்ந்து, உலகத் தமிழர்களின் ஒருமித்த கோரிக்கையாக இது வடிவமெடுத்தது. இப்போது உலகத் தமிழர் மன்றம் (ஜி.டி.எஃப்) கனேடியன் தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டணியின் வடக்கு மாகாண கவுன்சில், ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் பலவும் தீர்மானத்தை வரவேற்றுள்ளன. ராஜபக்சே இத்தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்துவிட்டார். இந்தநிலையில் மனித உரிமை ஆணையம், தனது கண்காணிப்புப் பணியை எந்தப் புள்ளியிலிருந்து தொடங்கப் போகிறது என்பதும் ஒத்துழைக்க மறுக்கும் சிங்கள பேரினவாத ஆட்சியை வழிக்குக் கொண்டுவர அழுத்தங்கள் தரக்கூடிய நடவடிக்கைகள் என்ன என்பதும் இப்போது விவாதத்துக்கும் முன்னெடுப்புக்கும் உள்ள பிரச்சினையாகும்.

ஆணையத்தின் முன் சாட்சியமளிக்க முன்வரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே இந்த விசாரணைக்கான முன் நிபந்தனையாக இருக்க முடியும். அதற்கு தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள ராணுவம் அகற்றப்பட வேண்டியது அவசியமாகும். (இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங், மியான்மார் நகரில் நடந்த சர்வதேச மாநாட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்தித்தபோது தமிழர் பகுதியில் ராணுவக் குவிப்புக் குறித்து கவலை தெரிவித்ததாக செய்திகள் வந்தன. அது பற்றி எல்லாம் இந்தியா இந்த தீர்மானத்தின்போது கவலை எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை.) ஈழத் தமிழர் பிரச்சினை சர்வதேச அரங்கில் விவாதங்களுக்கு வந்துள்ள நிலையில் அய்ரோப்பிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் எழும் முரண்பாடுகளை கூர்மையடையச் செய்ய வேண்டிய முன் நகர்த்தல்களும் அவசியமாகிறது.

மற்றொரு ஆபத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும். ஈழத் தமிழர் பிரச்சினையை சர்வதேச அரசியல் தளத்திலிருந்து வெளியே இழுத்துப் போடும் சில முயற்சிகளும் நடப்பதாக நாம் அறிகிறோம். உண்மையில் இலங்கைப் பேரினவாத ஆட்சி இத்தகைய செயல்பாடுகள் தீவிரமடையுமானால் தன்னைக் காப்பாற்றிக் கொண்டு விடலாம் என்று திட்டமிடுகிறது. அந்த நோக்கத்துடனேயே இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்துக்கு தயாராகி வருகிறார்கள் என்ற கருத்துகளை கசியவிடத் தொடங்கியிருக்கிறது. “பயங்கரவாதம்” முற்றாக ஒழித்துவிடவில்லை என்ற செய்தியை சர்வதேசத்தின் முன் வைக்க இலங்கை திட்டமிடுகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் தொடங்கிடும் முயற்சிகளில் ஈடுபட்டதாக பாலேந்திர ஜெயக்குமாரி, ரூக்கி பெர்ணான்டோ, அருட்தந்தை பிரவின் முகேஷ் ஆகியோரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இலங்கை கைது செய்தது. உலக நாடுகளின் எதிர்ப்பால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ‘காணாமல் போனவர்களுக்காக’ தொடர்ந்து அச்சமின்றி போராடி வருபவர் பாலேந்திரன் ஜெயகுமாரி. அவரையும் அவரது 13 வயது மகளையும் கைது செய்த ‘பயங்காரவாத புலனாய்வுப் பிரிவு’ அவர்களை சித்திரவதை செய்த கொடுமைகளை ‘சர்வதேச மனித உரிமை அமைப்பு’ அம்பலமாக்கியிருக்கிறது. அந்தப் பெண்ணின் 13 வயது மகள் இன்னும் ராணுவத்தின் பிடியிலேயே உள்ளார். இப்படி மீண்டும் ‘புலிகளின் ஆயுதப் போராட்டம் தொடங்கப் போகிறது’ என்று இலங்கை பேசத் தொடங்கியுள்ளதற்குப் பின்னால் உள்ள அரசியல் சதியை உலகத் தமிழர்கள் புரிந்து கொண்டு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்.

‘அமெரிக்க தீர்மானத்தை எதிர்க்கிறோம்; அமெரிக்க நாட்டை எப்படி நம்புவது?’ என்ற குரல், சில முகாம்களிலிருந்து கேட்கிறது. நார்வே நாட்டிலிருந்து செயல்படும் ‘தமிழ் நெட்’ என்ற இணைய தளம், கடுமையாக எழுதுகிறது. அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கும் பார்ப்பன ஊடகங்களோடு ‘அசல் திராவிடர்’ அமைப்புகளும் கைகோர்த்து நிற்பதாக கேலி கிண்டலோடு எழுதுவது மட்டுமல்ல; தீர்மானத்தை எதிர்ப்பதில் என்ன பயன் கிடைத்திடப் போகிறது? என்ற கேள்வி எழுப்புகிற இயக்கங்கள் மீது மிக இழிவான சொற்களைப் பயன்படுத்துகிறது. தீர்மானத்தின் மீது கருத்து தெரிவிக்கும் உரிமை ‘தமிழ் நெட்’டுக்கு உண்டு. அதில் நாம் குறுக்கிடவில்லை. என்றாலும் மாற்றுக் கருத்து கொண்டோர் மீது எல்லை மீறும் ‘நாகரிகமில்லாத’ விமர்சனங்களை முன் வைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இதேபோன்று தமிழ்நாட்டிலும் ஒரு சில குழுக்கள் இளைஞர்களைக் குழப்பி விடுகிறார்கள். இவை அனைத்தும் ராஜபக்சே விரும்பும் அரசியலுக்கு வலு சேர்க்கும் முயற்சியாகவே நாம் கருத வேண்டியிருக்கிறது. தேவை ஏற்படும்போது ஈழத் தமிழர் உரிமைகளுக்கு எதிரானஇந்த சதிகளை நாம் அம்பலப்படுத்தியே தீருவோம்.

அமெரிக்காவின் தீர்மானம் சர்வதேச கண்காணிப்பு வளையத்துக்குள் இலங்கையையும் கொண்டு வந்திருப்பது ஒரு சிறு முன்னேற்றம் தான். இன்னும் கடந்து செல்ல வேண்டிய தூரம் அதிகம். ஒருமித்த தெளிவான அரசியல் புரிதலோடு சர்வதேச அரங்கில் முன்னெடுக்கும் கடமையை தொடர்ச்சியாக மேற்கொள்ள உறுதியேற்று செயல்படுவோம்!க்