இனப்படுகொலைக் குற்றவாளியான இராசபட்சேக்குப் பன்னாட்டு அரங்கில் புகழ் மகுடம் சூட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அரசு பொதுநல நாடுகள் மன்ற (காமன் வெல்த்) மாநாட்டை இலங்கையில் நடத்த முழு முயற்சி எடுத்துக் கொண்டது. இனப்படு கொலை, மனித உரிமைப்பறிப்பு, பெண்களைப் பாலியல் வன்முறை செய்து கொல்வது, சிறுவர்களைப் பிடித்து வைத்துக் கொல்வது முதலான குற்றங்கள் செய்த இலங்கை அரசு பொதுநல நாடுகள் மன்ற விதிகளின்படி அந்த அமைப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் மேற்படிக் குற்றங்கள் அனைத் தையும் தமிழினத்திற்கு எதிராக இழைத்த இலங்கை அதிபர் இராசபட்சேக்கு சிறப்பு சேர்க்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட் டிருப்பது தமிழகத் தமிழர்களிடையே சினத்தை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் சிலர் இந்திய அரசு இலங்கையில் நடைபெறும் பொதுநலநாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி சென்னையிலும் சேலத்திலும் இந்திய அரசு அலுவலகங்களில் தீயைப் பயன்படுத்திப் போராட்டம் நடத்தியதாகத் தளைப்படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில், சென்னையில் 4 பேர் மீதும், சேலத்தில் 3 பேர் மீதும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டுள்ளது தமிழக அரசு.

அது மட்டுமின்றி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களையும் இவ்வழக்கில் இணைத்து, 01.11.2013 அன்று நள்ளிரவு அவரை வீடுதேடிச் சென்றுக் கைது செய்துள்ளது காவல்துறை.

கைது செய்ததோடு மட்டுமின்றி, சிறையில் இருந்த தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மீது தமிழக அரசு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புதிதாக வழக்குப் போட்டுள்ளது முற்றிலும் சனநாயக விரோதமானது; சட்ட நெறிகளுக்குப் புறம்பானது; கண்டனத்திற்குரியது.

கைது செய்யப்பட்டுள்ள தோழர்கள் மட்டுமின்றி, சென்னை - சேலம் பகுதி தி.வி.க. பொறுப்பாளர்களையும் இவ்வழக்கில் இணைத்துக் கைது செய்யத் திட்டமிட்டுள்ள காவல்துறையினர், அவர்களது வீடுகளுக்குச் சென்று குடும்பத்தினரிடம் அச்சுறுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடு பட்டுள்ளனர்.

தி.வி.க. தோழர்களின் போராட்ட வடிவம் தமது கட்சி ஏற்றுக் கொண்ட வடிவம் அல்ல என்று ஏற்கெனவே தோழர் கொளத்தூர் மணி அறிவித்து விட்டார். அத்துடன் 5.11.2013 அன்று சேலத்தில் நடந்த தி.வி.க. தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் மேற்படி போராட்ட வடிவங்களைத் தங்கள் அமைப்பு ஆதரிக்கவில்லை என்றும் அந்த ஏழுத் தோழர்களையும் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்திருப்பதாகவும் அவ்வமைப் பின் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் அறிவித்தார்.

அமைப்புத் தலைமையின் ஒட்டு மொத்தக் கருத்து இவ்வாறு இருக்கும் போது, அதன் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை அவ் வழக்கில் சேர்த்ததும் அவர்மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவியதும் ஏன் என்ற கேள்வி நடு நிலையாளர் நெஞ்சத்தில் எழுகிறது. காவல்துறை கூறுவது போல் தோழர் கொளத்தூர் மணி மேற்படி நிகழ்வுகளுக்குத் திட்டம் தீட்டிக் கொடுத்தார் என்பது நம்பத் தகுந்ததாக இல்லை.

முதல்வர் செயலலிதா அவர்கள் தலைமையில் உள்ள தமிழக அரசு தேசியப் பாதுகாப்புச் சட்டம், குண்டர் தடுப்புச் சட்டம் போன்ற சனநாயக மறுப்புத் தடுப்புக் காவல் சட்டங்களை மிகத் தாராளமாகப் பயன்படுத்தி வருகிறது. ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றம், பொருத்தமற்ற முறையில் விருப்பு வெறுப்பு அடிப்படையில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டம் ஆகியவை போடப்பட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்து ஆணை யிட்டுள்ளது என்பதைக் கவனத் தில் கொள்ள வேண்டும். இப்போக்கு சனநாயக மறுப்பும் எதேச் சாதிகார விருப்பும் கொண்டதாகும்.

எனவே மேற்படி நிகழ்வுகளுக்காகத் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மீது போட்டுள்ள தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட வழக்குகளைக் கைவிட்டு தமிழக அரசு அவரை உடனே விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோருகிறது.

Pin It