நீட் தேர்வை நத்திய ‘மனுநீதி’ பார்ப்பன ஆணையமான மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) மதுரை உயர்நீதி மன்றம் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது.

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்ணாக 196 மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் கருணை மதிப்பெண்கள் சேர்க்கப் பட்டு புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

madurai High Court 560தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவி களுக்கு, தவறான மொழி பெயர்ப்புக்காக கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “நாடு முழுவதும் கடந்த மே 6-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் இருந்து 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் அளிக்கப்பட்டு, அதில் சரியான பதிலைத் தேர்வு செய்ய வேண்டும்.

இந்த நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதனால் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு 49 வினாக்களுக்கும் தலா 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண் வழங்கவும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும்” என்றும் மனுவில் கூறப்பட் டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே சிபிஎஸ்இ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “நாடு முழுவதும் தேசிய தமிழ் வினாத்தாளில் தவறு இருப்பதாக மனுதாரர் கூறுவது சரியல்ல. தேர்வு நடத்துவது, தேர்வு முடிவெடுப்பது மட்டுமே சிபிஎஸ்இ வேலை. வினாத்தாள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யும்போது தமிழ் வார்த்தைகள் சரியானதா என்பதை சிபிஎஸ்இயால் உறுதி செய்ய முடியாது.

தமிழில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடத்தை கற்பிக்கும் அனுபவமிக்க ஆசிரியர்களை வைத்தே ஆங்கில வினாத்தாள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்வதற்கு இந்த நடைமுறை பின்பற்றப் பட்டது. மாநில மொழியில் உள்ள அகராதியை அடிப்படையாக வைத்தே மொழி பெயர்ப்புப் பணிகளை ஆசிரியர்கள் மேற்கொண்டனர்” எனக் கூறப்பட்டிருந்தது.

அப்போது நீதிபதிகள், “தமிழக மாணவர்கள் பால் பாக்கெட், பேப்பர்ப் போட்டு படிக்கின்றனர். இதுபோன்ற தவறு காரணமாக அவர்களின் மருத்துவக் கனவு பாழாகிறது. வருங்கால சமுதாயத்தை நல்ல முறையில் கொண்டு செல்வது நமது கடமை. பீகார் மாநிலத்தில் தேர்வு எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக மனுதாரர் வழக்கறிஞர் குற்றம்சாட்டி யுள்ளார். இதற்கு சிபிஎஸ்இ என்ன பதில் சொல்லப்போகிறது?

தமிழில் மொழி பெயர்ப்பில் அதிக பிழைகள் உள்ளன. இந்த வினாத்தாள் எப்படி ஏற்கப்பட்டது? மேலும் இந்த வழக்கு தாக்கல் செய்த மறுநாளே தேர்வு முடிவு வெளியிட்டது ஏன்? இது தவறான முன்னுதாரணமாகும். நீட் தேர்வில் சிபிஎஸ்இ யாருடைய கருத்தையும் கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறது” என அதிருப்தியை வெளிப் படுத்தினர். பின்னர், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், ஜூலை 10, 2018 அன்று இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியது. அப்போது, நீதிபதிகள், “ஆங்கிலத்தி லிருந்து தமிழில் கேள்விகள் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது பல்வேறு தவறுகள் நிகழ்ந்துள்ளன. இது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு தவறாக இருந்த 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். மதிப்பெண்கள் 2 வாரத்திற்குள் வழங்கப்பட்டு புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட வேண்டும்” என சிபிஎஸ்இக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீட் உருவாக்கும் அநீதிகள்தான் என்ன?

சென்ற ஆண்டு அனிதா என்றால் இந்த ஆண்டு பிரதீபா.தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலும் நீட் தேர்வு முடிவுகளை யொட்டி, தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. நீட் தேர்வு என்பது உண்மையில் தகுதியை உறுதிசெய்கிறதா, தாழ்வு மனப்பான்மையையும் ஏற்றத்தாழ்வையும் அதிகரிக்கிறதா?

இந்த ஆண்டு, நாடு முழுவதும் 12,69,922 மாணவர்கள் நீட் தேர்வெழுதினார்கள். 7,14,562 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தமிழகத்தில் தேர்வெழுதிய 1,14,602 பேரில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றவர்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,337 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தமிழ் வழியில் தேர்வு எழுதிய 24,720 பேரில் தேர்ச்சி பெற்றவர்கள் 460 பேர்.

நீட் தேர்வைப் பொறுத்தவரை தேர்ச்சி பெற்ற எல்லோருக்கும் இடம் கிடைக்கப் போவதில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,900 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 455 இடங்கள் மத்தியத் தொகுப்புக்குத் தரப்பட்டுவிடும். மீதமிருக்கும் 2445 இடங்களும் தமிழக மாணவர்களுக்காகும்.

இங்குள்ள 10 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 1300 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 783 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும். மீதமிருக்கும் 517 இடங்களை நிர்வாகம் நிரப்பிக்கொள்ளும். அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 இடங்களில் 85 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு; 15 இடங்கள் மத்தியத் தொகுப்புக்கு. இவைதவிர, 8 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் உள்ளன. சித்தா, யுனானி உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளும் நீட் தேர்வின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. எல்லாம் சேர்த்து தமிழகத்தில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் 9,451. ஆனால், இங்கு, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கை 45,336. இவர்களில் சிலர் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம்பெறமுடியும். அதிக மதிப்பெண் பெற்ற சிலர், வெளிமாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம். எல்லாம் கழித்தாலும் சுமார் 30 ஆயிரம் பேரின் நிலை என்ன, எதிர்காலம் என்னவாகும்? - விடை தெரியாத கேள்விகள் இவை.

தேர்ச்சி பெற்றுள்ள 45,336 பேரில் சரிபாதிப் பேர், ஓராண்டோ, இரு ஆண்டுகளோ நீட் தேர்வுக்காகத் தனிப்பயிற்சி பெற்றவர்கள் என்கின்றன ஆய்வுகள். தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட நீட் பயிற்சி மையங்கள் முளைத்திருக் கின்றன. ஆண்டுக்கு 70 ஆயிரம் முதல் 4 லட்சம் வரை பயிற்சிக் கட்டணம் பெறப்படுகிறது. நீட் தேர்வுக்கான பயிற்சி என்பது வளம் கொழிக்கும் தொழிலாக மாறியிருக்கிறது.

2017-ல் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் 400 பேர் மட்டுமே 400-க்கும் மேல் மதிப்பெண் பெற்றார்கள். இந்த ஆண்டு 800 பேர் பெற்றுள்ளார்கள். அதேநேரம், கேரளாவில் 6,000 பேர் இந்த ஆண்டு 400 மதிப்பெண் களுக்கு மேல் பெற்றுள்ளனர். இப்படி அதிக மதிப்பெண்கள் பெற்ற அண்டை மாநிலத்தவர்கள் தான் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அகில இந்திய மருத்துவ இடங்களை நிரப்புகிறவர்கள்.

இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. காமராஜர் தொடங்கி கலைஞர், ஜெயலலிதா வரை தமிழகத்தை ஆட்சிசெய்த அத்தனை தலைவர்களும், நம் மாணவர்களுக்காக திட்டமிட்டு மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினார்கள். அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் அரசு சுகாதாரத்துறைக்குள்ளாகவே இருந்தார்கள். அதனால் தான், சுகாதாரத்துறையில், இந்தியாவிலேயே சிறந்த நிலையில் இருக்கிறது தமிழகம். 50 சதவிகிதம் தொற்றுநோய்களைத் தமிழகத்தில் இருந்து விரட்டி விட்டோம். 10 கிராமங்களுக்கு ஒன்று என்ற அடிப்படையில் 1400-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார மையங்கள் செயல்படுகின்றன. குழந்தை இறப்பு விகிதம், தாய் இறப்பு விகிதம் குறைந்த மாநிலங்களில் இந்தியாவிலேயே இரண்டாமிடத்தில் இருக்கிறோம். ஆனால் இதையெல்லாம் நீட் நீர்த்துப் போகச் செய்துவிடும் என்கிறார்கள் மருத்துவ செயற்பாட்டாளர்கள்.

“தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், எம்.டி., எம்.எஸ் போன்ற மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கு 1585 இடங்கள் உள்ளன. எம்பிபிஎஸ் முடித்து, அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து பணியாற்றும் மருத்துவர்களுக்கு இந்த உயர் படிப்புகளில் 50 சதவிகிதம் ஒதுக்கீடு இருந்தது. கிராமப்புறப் பகுதிகள், மலைக்கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்று வோருக்கு சிறப்பு மதிப்பெண்கள் தரப்பட்டு முன்னுரிமையும் வழங்கப்படும். முன்னுரிமையில் சேர்பவர்கள், குறிப்பிட்ட ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணியாற்றியாக வேண்டும் என்று ஒப்பந்தமும் உண்டு. இந்த ஒதுக்கீட்டையும், முன்னுரிமையையும் விரும்பி ஏராளமான இளநிலை மருத்துவர்கள் அரசு மருத்துவமனை களுக்குப் பணிக்கு வந்தார்கள்.

இப்போது இந்த ஒதுக்கீட்டை எடுத்து விட்டார்கள். நீட் தேர்வு மூலம் தான் இந்த இடங்கள் நிரப்பப்படும். இனிமேல், எம்பிபிஎஸ் முடிக்கும் ஒரு மருத்துவர், அரசு மருத்துவமனைக்குப் பணிக்கு வர மாட்டார். ஏதேனும் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்துகொண்டே அவர் நீட் தேர்வுக்குத் தயாராவார்.

டி.எம், எம்.சிஹெச் போன்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் தமிழகத்தில் 192 இடங்கள் உள்ளன. முன்பு இந்த இடங்கள் தமிழக அரசு நடத்தும் நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்பட்டன. இதிலும் 50 சதவிகித இடங்கள் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்படும். பிற 50 சதவிகித இடங்கள் ’ஓபன் கோட்டா’ மூலம் நிரப்பப்படும். இதனால், சிறுநீரக சிகிச்சை, மூளை சிகிச்சை, இதய சிகிச்சை என சிறப்பு மருத்துவ நிபுணர்கள் நிறையபேர் அரசு மருத்துவமனைகளுக்கு வந்தார்கள். தஞ்சாவூர் போன்ற ஒரு நகரத்தில் இருக்கிற மருத்துவக் கல்லூரியில், இன்று ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை போல நுட்பமான சிகிச்சைகள் எல்லாம் செய்ய முடிகிறதென்றால் அதற்குக் காரணம், இந்த வாய்ப்புதான். இந்த உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டை நீக்கி விட்டார்கள். நீட் மூலமாகவே இந்த இடங்களும் நிரப்பப்படும்.

‘தமிழ்நாடு முழுவதும் டயாலிசிஸ் மையங்கள் திறக்க வேண்டும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையங்கள் திறக்க வேண்டும்’ என்றெல்லாம் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கிறது. ஆனால், தமிழகத்தில் இருக்கிற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகள் வெளி மாநிலத்தவர்களுக்குப் போகிறது. இதனால், அடுத்த 15 வருடத்தில் கடும் மருத்துவர் பற்றாக்குறை ஏற்படும். சுகாதாரக் கட்டமைப்பு சரிந்துபோகும்” என்று எச்சரிக்கிறார் சென்னை மருத்துவக் கல்லூரி ரத்தக்குழாய் அறுவைச் சிகிச்சைத்துறை முன்னாள் இயக்குனர் டாக்டர் அமலோற்பவநாதன்.

 தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்த 51 சதவீதம் மருத்துவர்கள், தமிழக சுகாதாரத்துறையில் பணியாற்றிக் கொண்டிருக் கிறார்கள் என்கிறது ஹைதரபாத் ஜவர்கஹால் நேரு பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஓர் ஆய்வு. நுழைவுத்தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்று எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்த 51 சதவீத மாணவர்கள் இந்தியாவில் இல்லை. வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அனிதா போல, பிரதிபா போல அடித்தட்டுக் குடும்பத்தில் பிறந்து வருபவர்கள்தான் தங்கள் மக்களுக்காக சிந்திப்பார்கள். அவர்களைப் போன்றவர்களால் தான் தமிழகம் சுகாதாரத்துறையில் முன்னிலையில் இருக்கிறது. அவர்களுக்கான வாய்ப்புகள் பறிக்கப்படும்போது தேசத்தின் மருத்துவக் கட்டமைப்பு பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் நியாயமிருக்கிறது.

இந்திய மருத்துவக் கவுன்சிலின் எதிர்ப்பால் இந்த தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. தற்போது நிலைக்குழு அறிக்கையை சமர்ப்பித்துவிட்டது. மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கிவிட்டது. இந்த மசோதாவை எதிர்க்காவிட்டால், நீட் தேர்வு நிரந்தரமாகிவிடும் என்கிறார்கள்.

தமிழக மசோதா காலாவதி...?

இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு மாற்றாக, தேசிய மருத்துவ ஆணையம் என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது மத்திய அரசு. இந்த ஆணையம் உருவாக்கப்பட்டால், நீட் தேர்வு சட்டபூர்வமாகிவிடும், மருத்துவப் படிப்பை முடித்தவர்கள், அகில இந்திய அளவில் நடக்கும் உரிமத்தேர்வு ஒன்றை எழுதித் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவராகப் பணியாற்ற முடியும். இது நடைமுறைக்கு வரும்வரை, எம்.பி.பி.எஸ். படிப்பின் இறுதியாண்டுத் தேர்வையே அகில இந்திய உரிமத் தேர்வாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். நீட் தேர்வில் இருந்து விலக்குகோரி தமிழக சட்டமன்றம் ஒருமனதாக உருவாக்கி அனுப்பிய இரண்டு சட்டமசோதாக்களை ஒரு ஆண்டுக்கும் மேலாக உள்துறை அமைச்சகம் கிடப்பில் போட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணைய சட்டம் நிறைவேற்றப்படுமானால் இந்த இரண்டு மசோதாக்களும் காலாவதியாகிவிடும். அதற்காகவே, உள்துறை அமைச்சகம் காலதாமதம் செய்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள் மருத்துவச் செயற்பாட்டாளர்கள்.

Pin It