• ஜனதா ஆட்சி காலத்தில் மொரார்ஜி பிரதமராக இருந்தபோது, பிற்படுத்தப்பட்டோருக்காக நியமிக்கப்பட்ட மண்டல் குழு பரிந்துரையை நாடாளுமன்றத்திலே வைக்க மறுத்த கட்சி - காங்கிரஸ்.

• கடும் போராட்டத்துக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் அறிக்கையை மட்டும் சமர்ப்பித்துவிட்டு, 10 ஆண்டுகாலம் அமுல்படுத்தாமல் அலமாரியில் தூசி படிய விட்ட கட்சி - காங்கிரஸ்.

• 1990 இல் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, அதில் ஒரு பகுதியை (பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் ஆணை) அமுலாக்கியபோது அதற்காக பாரதிய ஜனதாவோடு சேர்ந்து கொண்டு வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்த கட்சி - காங்கிரஸ்.

• மண்டல் பரிந்துரையை எதிர்த்து, அன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ராஜீவ் காந்தி 10 மணி நேரம் தண்ணீர் குடித்துக் கொண்டே பேசினார்; பார்ப்பன சக்திகள் மகிழ்ச்சிக் கூத்தாடின.

• வி.பி.சிங் ஆட்சியை வீழ்த்திவிட்டு, ஆட்சிக்கு வந்த நரசிம்மராவ் காங்கிரஸ் பார்ப்பன - முன்னேறிய சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்கி, பார்ப்பன சக்திகளையே திருப்தி செய்ய துடித்தது. (உச்சநீதிமன்றம் தான் அந்த உத்தரவை செல்லாது என்று அறிவித்தது)

• சோனியாவின் தலைமையில் உருவான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி குறைந்தபட்ச வேலைத் திட்டத்தில் தனியார் துறையில் இடஒதுக்கீட்டைக் கொண்டு வருவதாக கூறியது; செய்தார்களா? பெரும் தொழில் நிறுவனங்கள் - பன்னாட்டு நிறுவனங்கள் - பார்ப்பன பனியா சக்திகளின் மிரட்டலுக்கு பணிந்து தனியார் துறை இடஒதுக்கீட்டு முயற்சிகளை கிடப்பில் போட்ட கட்சி - காங்கிரஸ்!

• அரசு - பொதுத் துறை நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் - பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செய்வோம் - என்று குறைந்தபட்ச வேலைத் திட்டத்தில் உறுதி கூறினார்கள். நடைமுறைப்படுத்தினார்களா? இல்லை. கண்துடைப்புக்காக 2005 இல் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார்கள். அது சட்டச் சிக்கலில் மாட்டியது. அவ்வளவுதான், விட்டால் போதும் ஆளை விடு என்று ஒதுங்கிக் கொண்டது. சட்டச் சிக்கலிலிருந்து மீட்டு சமூகநீதி வழங்கிட எந்த முயற்சியும் எடுக்காத கட்சி - காங்கிரஸ்.

• தலித் மற்றும் பழங்குடியினரின் பாரம்பரிய உடைமைகளைப் பாதுகாக்கப் போவதாக குறைந்தபட்ச திட்டம் கூறியது; நடந்தது என்ன? 2006 இல் பரம்பரை வன வாழ் மக்கள் சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. சட்டம் வந்ததே தவிர, அதை நிறைவேற்றாமல், கிடப்பில் போட்ட கட்சி - காங்கிரஸ்!

• மெட்ரிக் படிப்பு முடித்த தலித் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டைக்கூட - கடந்த வரவு செலவு திட்டத்தில் கணிசமாகக் குறைந்தார் ப. சிதம்பரம்! நிதியைக் குறைத்துவிட்டு, கூடுதலாக 3 லட்சம் தலித் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப் போவதாகவும் அறிவித்த கட்சி - காங்கிரஸ்!

• ராஜீவ் காந்தி பெயரில் கொண்டு வரப்பட்ட கல்வி உதவித் தொகையையும் 87 கோடியிலிருந்து 79 கோடியாகக் குறைத்த கட்சி - காங்கிரஸ்!

• சாக்கடை எடுத்தல்; மலம் அள்ளுதல் போன்ற சுகாதாரத்துக்கு கேடு விளை விக்கும் இழிவு வேலைகளை செய்வோர் குடும்பத்தின் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட கல்வி உதவித் தொகையைக் கூட முழுமையாக செலவிடாத கட்சி - காங்கிரஸ்! (ஒதுக்கப்பட்ட நிதியில் செலவிடப்பட்டதே 4.38 சதவீதம் தான்! மத்திய தணிக்கைத் துறையே தனது அறிக்கையில் இந்த அவலத்தை சுட்டிக் காட்டியது.)

• பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை உயர் கல்வி நிறுவனங்களில் அமுல்படுத்துவதை பார்ப்பன சக்திகள் எதிர்த்தபோது, மிரட்டலுக்கு பணிந்தது. 27 சதவீதத்தை கூறுபோட்டு படிப்படியாக அமுல்படுத்தவும், அந்த எண்ணிகைக்கேற்ப திறந்த போட்டிக்கான இடங்களை உயர்த்தி, பார்ப்பன சக்திகளை மகிழ்விக்கவும் முன் வந்த கட்சி - காங்கிரஸ்!

• இதற்காக வீரப்ப மொய்லி தலைமையில் குழு ஒன்றையும் அமைத்தார்கள். இந்தக் குழு திட்டத்தை தந்து - அதை படிப்படியாக நிறைவேற்ற தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரைத்தது. பரிந்துரைத்தும், நிதி ஒதுக்கீடு செய்யாத கட்சி - காங்கிரஸ்!

• தலித் மக்கள் மீது இந்தியா முழுதும் நிகழும் சாதி வெறியாட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்கும் 18 நிமிடங்களுக்கு ஒரு முறை தலித் தாக்கப்படுகிறார். மூன்று நாளுக்கு ஒரு முறை தலித் பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார். 3 நாளுக்கு ஒரு முறை 11 தலித்துகள் தாக்கப்படுகிறார்கள். வாரந்தோறும் 13 தலித்துகள் கொல்லப்படுகிறார்கள்; 5 தலித் வீடுகள் எரிக்கப்படுகின்றன.

• பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெரும் தொழில் நிறுவனங்களுக்கும் சலுகைகளை வாரி வாரி வழங்கிக் கொண்டு தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியையும் ஒதுக்க மறுக்கும் கட்சி - காங்கிரஸ்!

• நடப்பு அய்ந்தாண்டு திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 2,12,431 கோடி. இதில் தலித் மக்களுக்கு சட்டப்படியாக ஒதுக்கப்பட வேண்டியது ரூ. 34,413.82 கோடி. ஆனால், ஒதுக்கியிருப்பதோ ரூ. 15,280.18 கோடி மட்டுமே! சுமார் ரூ. 20000 கோடி தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட வேண்டியதை பறித்துவிட்ட கட்சி - காங்கிரஸ்!

• எல்லாவற்றுக்கும் மேலாக உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனங்களில் அட்டவணை சாதியினருக்கு இருந்த இட ஒதுக்கீட்டை பறித்து விட்ட கட்சி - காங்கிரஸ்!

அய்.அய்.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் - பார்ப்பனர்களின் கோட்டையாகவே இருக்கின்றன. இதில் - குறைந்த எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்டோர் ஆசிரியர்களாக இருப்பதைக்கூட சகிக்க முடியாத இந்நிறுவனங்களின் பார்ப்பன இயக்குனர்களின் கோரிக்கையை ஏற்று, மன்மோகன்சிங் 47 உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனங்களில் தாழ்த்தப்பட்டோருக்குள்ள இடஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டார். இதற்கான மசோதா கடந்த கடைசி நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளில் எவ்வித விவாதங்களும் இல்லாமலே அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டு விட்டது. (நாடாளுமன்றத்தின் முன் மீண்டும் வைக்கப்பட வில்லை; ஒரு வேளை விபத்தின் காரணமாக மன்மோகன்சிங் - பிரதமரானால், நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றிவிடுவார்கள்)

• உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் நியமனங்களில் ஏற்கனவே இருந்த தலித் இடஒதுக்கீட்டையும் பறித்த கட்சி - காங்கிரஸ்!

மத்திய அரசின் இந்த “சாதனைகளைத்தான்” மக்களிடம் பட்டியலிட்டுப் பிரச்சாரம் செய்யப் போகிறதா, தி.மு.க.? ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு துணைப் போகும் - சோனியாவின் மத்திய காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை - “தமிழர் தலைவர்” கி.வீரமணியும், பிரச்சாரம் செய்யப் போகிறாராம்! - வெட்கக்கேடு!

தமிழர்களே!

ஈழத் தமிழர் இனப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தாமல் - அதற்கு அனைத்து உதவிகளையும் வாரி வழங்கிக் கொண்டு - தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக நீதியையும் நிறைவேற்றிடாமல் - சிங்களத்துக்கும், பார்ப்பனருக்கும் துணைப் போகும் காங்கிரஸ் கட்சியையும் அதனுடன் கை கோர்த்து வரும் தி.மு.க.வையும், தேர்தலில் தோற்கடித்து பாடம் புகட்டுவீர்!

Pin It