kolathurmaniதி.மு.க. அணியை ஆதரிப்பீர்!

தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் வேண்டுகோள்!

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டை கொள்கை எதிரி பா.ஜ.க.விட மிருந்தும் அதற்கு துணை நின்று துரோகம் இழைக்கும் அ.இ.அ.தி.மு.க.விடமிருந்தும் தமிழ்நாட்டை மீட்டெடுக்க தி.மு.க. அணியையே ஆதரிக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழக செயலவை முடிவு செய்துள்ளது.

06.03.2021 சனிக்கிழமை, திருச்சி மாநகர் இரவி மினி அரங்கில் காலை 10 மணியளவில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழக செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

• தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் வழமையாக வந்து போகும் தேர்தலாக இல்லை !

ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டின் திராவிட அடையாளத்தையும் அழித்து மதவெறி - மனுவாத மண்ணாக மாற்றுவதற்கு தனது சகல அதிகாரங்களையும் - சூழ்ச்சிகளையும் பயன் படுத்தி ஒன்றிய பாஜக அரசு படை யெடுப்பையே நடத்தி வருகிறது.

நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் தொடங்கி படிப்படியாக வளர்த்தெடுத்த சுயமரியாதை, சமூகநீதி, பகுத்தறிவுக் கொள்கைகளை அழிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன; தமிழ் நாட்டையும் வடமாநிலங்களைப் போல் ஆக்கி விட்டால், இந்துத்துவம் என்ற மனுவாத மண்ணாக தமிழ்நாட்டை மாற்றி விட முடியும் என்பதே அவர்களின் திட்டம்;

இந்த ஆபத்தான படை எடுப்புக்கு, ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளத் துடிக்கும் அ.இ.அ. தி.மு.க ஆட்சி தமிழினத்திற்கு துரோகம் இழைக்கும் வகையில் துணை நின்று வருகிறது. தங்கள் கட்சியின் தலைவர்களாக இவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பின்பற்றிய மாநில உரிமைக் கொள்கைகளுக்குக் கூட இது மகத்தான துரோகம் ஆகும்.

இந்த ஆபத்திலிருந்த தமிழ்நாட்டையும் தமிழர்களையும் மீட்பதற்கு தற்போதைய சூழலில் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக திமுகவும் அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மட்டுமே என்று, தேர்தல் அரசியலில் ஈடுபடாத, சமுதாய மாற்றத்திற்கு தன்னை அர்பணித்து வரும் திராவிடர் விடுதலைக் கழகம் உறுதியாகக் கருதுகிறது.

சூழ்ந்து நிற்கும் ஆபத்துகளிலிருந்து தமிழ் நாட்டை விடுவித்துக் கொள்ளவும் எதிர்காலத்தில் மதவெறி மனுவாத சக்திகளின் தமிழர் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடவும், மக்களிடையே கருத்துருவாக்கம் செய்யவும், ஒரு பொது வெளி தேவைப்படுகிறது!

சமூக மாற்றத்துக்கான பெரியார் சிந்தனைகளை பேசுவதும், எழுதுவதும், பரப்புவதும் கூட தேசத் துரோகம் என்று மதவாத சக்திகள் மிரட்டி அதற்கு அஇஅதிமுக ஆட்சியைப் பணிய வைத்து வருகின்றன. கருத்துரிமை முற்றாக பறிக்கப்பட்டு வருகிறது. இந்த அடக்கு முறைகளைத் தகர்க்க வேண்டியது தற்போதைய சூழலில் முதன்மையான பணி என்று திராவிடர் விடுதலைக் கழகம் கருதுகிறது.

இந்தப் பார்வையோடு பாஜகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் தோற்கடித்து திமுக தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் குவிக்குமாறு தமிழ்நாட்டு மக்களை திராவிடர் விடுதலைக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

• அண்மைக்காலமாக பெரியாரியலை நோக்கி இளைஞர்கள் ஏராளமாக வந்து கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயல் பாடுகளை உன்னிப்பாக கவனித்து தாங்களாகவே பல இளைஞர்கள் இயக்கத் தில் ஆர்வத்துடன் இணைந்து செயலாற்ற வந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பெரியாரியலை முழுமையாகப் புரிந்து உள்வாங்கிக் கொள்வதற்கும், பெரியார் இயக்கத்துக்கு எதிராக அதன் கொள்கை எதிரிகள் புதிது புதிதாக திசை திருப்பும் வாதங்களை முறியடிப்பதற்கும் கழகத் தோழர்கள் புதிய வெளிச்சத்தில் பெரியாரியலை அறியவும், புரிந்துகொள்ளவும், அவசியமும் தேவையும் உருவாகி இருக்கிறது.

இந்தப் பார்வையில் பெரியாரியல் மற்றும் சமூகவியல் பற்றிய பயிலரங்கம் மற்றும் வாசிப்பு இயக்கங்களை தொடர்ந்து நடத்தி - நம்மை செழுமைபடுத்திக் கொள்வோம் என்று இந்த செயலவை விழைகிறது.

- திராவிடர் விடுதலைக் கழகம்