இதிகாசக் கதையில் ராமன் வனவாசம் சென்றதாக கூறப்படும் 210 கி.மீ. பாதையை உத்தரப்பிரதேச பாஜக அரசு அடையாளம் கண்டுள்ளது.

அயோத்தி முதல் சித்திரகூடம் வரையிலான அந்த 210 கி.மீ. காட்டுப் பாதையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் மூலம் ரூ. 137 கோடி செலவில் புதிய தார்ச் சாலை அமைக்கவும் முடிவு செய்துள்ளது. இராமாயண இதிகாசக் கதையின்படி, அயோத்தி அரசனாக வரவேண்டிய ராமன், தனது தந்தையின் வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக, தனது மனைவி சீதை, சகோதரர் லட்சுமணனுடன் 14 ஆண்டு வனவாசம் செல்வான்.

இந்த 14 ஆண்டுகளில் - தற்போதைய உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநில காடுகளில்தான் அவன் வாசம் செய்ததாக நம்பப்படுகிறது. மத்திய பாஜக அரசும், இந்த பகுதிகளை ‘ராமன் வனவாசப் பாதை’ (ராம் வன்காமன் மார்க்) என்ற பெயரில், ஆன்மீக சுற்றுலா பாதையாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

இதனொரு பகுதியாகவே, ராமன் அயோத்தியில் இருந்து புறப்பட்டு முதலில் சென்றடைந்த பகுதியாக கருதப்படும் சித்திரக் கூடத்தை இணைக்கும் ராமன் வனவாச வழித் தடங்களை உ.பி. பாஜக அரசு அடையாளம் கண்டுள்ளது.

அயோத்தியில் தொடங்கி, பைசாபாத், சுல்தான்பூர், பிரதாப்கர், ஜேத்வாரா, சிருங்கவேர்பூர் உள்ளிட்ட இடங்கள் வழியாக மத்தியப் பிரதேசத்தின் சித்திரக் கூடத்தை சென்றடையும் இந்த 210 கி.மீ. பாதையில், புதிய தார்ச்சாலை அமைக்கவும் முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் சார்பில் ரூ.137 கோடியே 45 லட்சம் செலவிடப் படவும் உள்ளது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It