கலைஞர் வழங்கிய செம்மொழி மாநாடு கடந்து போய்விட்டது. அந்த சத்தம். அந்தக் கூட்டம். அந்த ஜால்ராக்களின் இரைச்சல். அத்தனை கோடி செலவு. அவ்வளவு சாப்பாடு. எல்லாம் கடந்து போய்விட்டது. கோவையை அலைக்கழித்த மீடியாக்களின் வழி தமிழகத்தை அலைக்கழித்த புயல் ஓய்ந்தபின்னான ஒரு அமைதியில் நின்று அம்மாநாடு பற்றி யோசித்துப்பார்க்கிறோம். இன்னும் பல செல்பேசிகளின் ரிங் டோன்களாக செம்மொழி மாநாட்டுத் தூவானம் அடித்துக்கொண்டிருக்கிறது. யாரும் எதிர்பாராத அளவுக்கு இம்மாநாட்டுப் பொது நிகழ்வுகளில் மக்கள் லட்சக்கணக்கில் திரண்டு பங்கேற்றது மிக முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று.

கோவை நகர மக்கள் 22 ஆம் தேதி பேரணி ஒத்திகையில் துவங்கி குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் எல்லாப் பொது நிகழ்வுகளிலும் பங்கேற்றனர். சில பத்திரிகைகள் குறிப்பிடுவது போல இது வெறும் வாண வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் என்று நம்மால் புறக்கணிக்க முடியாது. கல்வெட்டுகள் , செப்புப்பட்டயங்கள்,நம் பண்பாட்டு அடையாளச்சின்னங்கள் இவற்றின் தொகுப்பாக வைக்கப்பட்டிருந்த கண்காட்சியைப் பார்க்கத்தான் ஏராளமான கூட்டம் என்பது நமக்குச் சொல்லும் உண்மை என்ன? சமூக நிலைமைகளால்( தமிழ்வழியில் படித்தால் எதிர்காலம் இல்லை என்கிற சமூக நிலை) பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்து நமது பண்பாடு சிதைவதை மௌன சாட்சியாக நின்று பார்க்க வேண்டியிருப்பதான யதார்த்தம் தமிழ் மக்களின் சமூக உளவியலில் ஏற்படுத்தியுள்ள குற்ற உணர்வின் வெளிப்பாடாகவும் இந்த அபரிமிதமான கூட்டத்தை நாம் புரிந்து கொள்ளலாம் அல்லவா?

ஏதோ ஒருவிதமான தமிழ் உணர்வில்தான் மக்கள் திரண்டனர். அந்த அளவில் சமூக மனதில் தமிழ் சார்ந்த ஒரு எழுச்சியை ஏற்படுத்த இந்த ஆடம்பர மாநாடு உதவியது எனக் கூறலாம். ஆனால் பொங்கி எழுந்த இந்த மக்கள் உணர்வைக் கணக்கில் கொண்டு அல்லது பயன்படுத்தி மொழிக்கான அறைகூவலை விடுப்பதற்கோ மத்திய அரசின் மொழிக்கொள்கைக்கு எதிரான உணர்வாக இந்த எழுச்சியை மாற்றுவதற்கோ இம்மாநாடுகலைஞர் தலைமைதிமுக தவறிவிட்டது என்றே கூற வேண்டும். குறைந்த பட்சமாக பாராளுமன்றத்தில் தமிழில் பேசவும் உடனுக்குடன் மொழிபெயர்ப்புக்குமான ஏற்பாடு மற்றும் உயர்நீதிமன்றத்தில் பயன்பாட்டு மொழியாக தமிழை ஆக்குவது இவ்விரண்டுக்குமான ஒரு வாய்மொழி இசைவைக்கூட மத்திய அரசிடமிருந்து பெறவும் அதற்கான நியாயமான கோபத்தைக் கூட வெளிப்படுத்தவும் இம்மாநாடு தவறி விட்டது. இம்மாநாட்டை நடத்தியதன் நோக்கம் அதுவல்ல என்பது வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது.

வெளியில் நடந்த பட்டிமன்றம்,கவியரங்கம் போன்றவையெல்லாம் கலைஞர் நாமாவளியாகச் சவசவத்துப்போனது. ஆனால் மாநாட்டு ஏற்பாட்டில் இதற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் உள்ளே ஆய்வரங்கிற்கு அளிக்கப்படவில்லை என்றே கூற வேண்டும். நாம் பிப்ரவரி முதலே மீண்டும் மீண்டும் கூறியது போல தமிழின் பல்வேறு துறை சார்ந்த அறிஞர்களிடம் கட்டுரைகளைக் கோரிப்பெறாமல் யார் வேண்டுமானாலும் அனுப்பலாம் என்கிற ஏற்பாடுதான் ஆய்வரங்கம் நீர்த்துப்போகக் காரணமாயிற்று. விளம்பரத்தின் மூலம் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் வந்ததில் உள்ள சனநாயக உள்ளடக்கத்தை நாம் வரவேற்ற அதே நேரத்தில் துறைசார்ந்த அடுத்த கட்ட ஆய்வுகளுக்கு வழியும் திசையும் காட்ட வேண்டிய ஆய்வரங்கம் இப்படி வீணடிக்கப்பட்டதே என்கிற வேதனையைப் பதிவு செய்தாக வேண்டும்.

அரசியல் கட்சித்தலைவர்கள் பங்கேற்ற வெளி நிகழ்வு ஒவ்வொரு கட்சியும் தமிழ் மொழி குறித்த தங்கள் நிலைபாட்டைச் சொல்வதாக சிறப்பாகவே அமைந்தது. தோழர்கள் சீதாராம் யெச்சூரியும் து. ராஜாவும் நம்முடைய கோரிக்கைகள் பலவற்றைத் தொட்டுப்பேசியது குறிப்பிடத்தக்கது.

ஆய்வரங்கத் துவக்க விழாவில் உலகத்தமிழ்த் தலைவரே என்று கலைஞரை மார்க்சிய அறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பி மீண்டும் மீண்டும் குறிப்பிட்டது நமக்குப்போலவே பலருக்கும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளித்தது.

ஹெர்மன் டீக்கன், ஷெல்டன் பொல்லாக் போன்ற சமஸ்கிருத அறிஞர்கள் சங்க இலக்கியங்கள் சமஸ்கிருதத்தைப் பார்த்து எழுதப்பட்டவை என்று கூறிவருவதற்கு எதிரான வலுவான ஆதாரங்களைத் தம் உரைகளில் கலைஞர் விருது பெற்ற அஸ்கோ பர்போலா, பன்மொழி அறிஞர் ஜார்ஜ் ஹார்ட்,ஐராவதம் மகாதேவன் போன்றோர் முன் வைத்தது குறிப்பிடத்தக்கது. இவை காற்றோடு போய்விடாமல் நூல் வடிவில் கொண்டுவரப்பட வேண்டிய உரைகளாகும்.

அறிஞர் அஸ்கர் பர்போலாவுக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது. ராஜராஜசோழன் இப்படித்தான் எல்லோருக்கும் தன் பெயரிலேயே விருது வழங்குவானாம். ராஜராஜப் பெருந்தச்சன்,ராஜராஜப் பெரு நாவிசன் என்று. . . . அது போகட்டும். ஆனால் இந்த விருதை பர்போலாவுக்கு வழங்கியது மத்திய அரசின் செம்மொழித் தமிழ் உயராய்வு மையமாகும். அம்மையத்தின் இயக்குநரோ அதில் உள்ள ஆய்வாளர் எவருமோ இப்பரிசளிப்பின் போது மேடையில் கூட இல்லாமல் கவிஞர் கனிமொழியும் கலைஞரும் வழங்கியது ஆரோக்கியமாகப் படவில்லை.

1020 ஆய்வுக்கட்டுரைகளில் சுமார் 900 கட்டுரைகள் நான்கு நாட்களில் பல்வேறு அரங்குகளில் முன் வைக்கப்பட்டன. பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் மட்டுமே எல்லா ஆய்வாளர்களுக்கும் வழங்கப்பட்டது. விவாதத்துக்கெல்லாம் எந்த அரங்கிலும் வாய்ப்பே இருக்கவில்லை. யாராவது கருத்தாளர் வராமல் போயிருந்தால் அதில் கிடைத்த கூடுதல் நேரம் விவாதத்துக்குப் பயன்பட்டது. கட்டுரையாளர்கள் அனுப்பிய 2 அல்லது 3 பக்க ஆய்வுச்சுருக்கங்கள் மேலும் சுருக்கப்பட்டு(ஒரு புரிதலும் இல்லாமல்) ஆய்வரங்க மலரில் அச்சிடப்பட்டிருந்தது பல ஆய்வாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. வந்த கட்டுரைகளில் பொருட்படுத்தத் தக்கவையாக இருக்கும் கட்டுரைகள் மட்டுமேனும் முழுமையாக நூல் வடிவம் பெற்றால்தான் அந்த ஆய்வுகள் மக்களிடம் போய்ச்சேரும்.

கூடவே நடந்த இணையத்தமிழ் மாநாடு துதிகள் இல்லாமல் நடந்ததாக அறிகிறோம். இலவச மென்பொருள்,எழுத்துரு தகடுகள் வெளியிடப்பட்டுள்ளன. 138 ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டுள்ளன. அதிலும் இன்னும் ஒரே யுனிகோட் தமிழ் எழுத்துருவை எல்லோரும் பயன்படுத்துவது ,ஒரே மாதிரியான விசைப்பலகை பயன்படுத்த அரசின் கொள்கை முடிவு போன்றவை நடந்தால்தான் கணிணிக்கு ஏற்ற மொழியாக இயல்பிலேயே அமைந்துள்ள தமிழ் மொழி ஏற்றம் பெறும்.

நிறைவு விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம்,பிரணாப் முகர்ஜி இருவருமே இந்த மக்கள் உணர்வெழுச்சியோடு ஒட்டாமல் விலகி நின்றனர். உயர்நீதிமன்றத்தில் தமிழ் குறித்த தமிழ் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஆவண செய்கிறோம் என்று ஒப்புக்குக்கூட இரு மத்திய அமைச்சர்களும் பேசவில்லை. ஒரு தேசிய இனத்தை அதன் உணர்வுகளை அவமதித்த குற்றத்தை இருவரும் செய்தனர் என்றே கூற வேண்டும். ப. சிதம்பரம் . இன்னும் கூடுதலாக மக்கள் தமிழான வட்டார வழக்கை அவமதித்துப் பேசிய பேச்சு தமிழ் உணரவாளர் எவராலும் மன்னிக்க முடியாத பேச்சாகும்.

கவிஞர் வைரமுத்து,கவிஞர் வாலி,கவிஞர் அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்ற மூன்று கவியரங்கங்களில் கவிதை வாசித்த அத்தனை கவிஞர்களும் (உமா மகேஸ்வரி போல ஓரிருவர் தவிர) தமிழைப்புறக்கணித்து அதீதமான கலைஞர் துதி பாடியது கவிதை உலகுக்குப் பெரும் தலைக்குனிவான நிகழ்வாகும். ஆனால் கருத்தரங்குகளில் பேசிய பலரும் சிறப்பாகப் பேசினர். ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் பொறுப்பில் தயாரான இனியவை நாற்பது பேரணி ஊர்திகள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக அமைந்திருந்தன. ஆனாலும் பல ஊர்திகளில் வெறும் பிரம்மாண்டம் மட்டுமே இருந்தது.

கலைஞர் பேசிய பேச்சில் நாம் ஏற்றுக்கொள்ள முடியாத தவறான சில கருத்தாக்கங்கள் முன்வைக்கப்பட்டன. தமிழ் மொழிதான் உலகத்து மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி என்று அவர் கூறியது எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாத கருத்தாகும். தமிழுக்கு உண்டான பெருமை கிடைத்தாலே போதும். இல்லாத பெருமைகளை ஏன் ஏற்ற வேண்டும்? இரண்டாவதாக களப்பிரர் காலம் தமிழுக்கு இருண்ட காலம் என்று அவர் கூறியது ஒரு ஆரியப்பார்வையாகும். ஆரியச்சார்பு ஆய்வாளர்கள் முன்வைத்த அக்கருத்தை ஒரு திராவிட இயக்கத்தலைவர் விமர்சனமே இல்லாமல் அப்படியே ஏற்றுப்பேசியதை வரலாற்றின் நகைச்சுவை என்று நாம் கடந்து செல்ல முடியாது. தமிழுக்கு மிகப்பெரும் கொடைகளை நல்கியது களப்பிரர் காலம்தான். கலைஞர் கொண்டாடும் திருக்குறள் உள்ளிட்ட பதினென்கீழ்க்கணக்கு நூல்கள் ,ஐம்பெரும் காப்பியங்கள் எல்லாம் உருவானது களப்பிரர் காலத்தில்தான். இது குறித்த விரிவான ஆய்வுகளை தமுஎகச தலைவர் அருணன் உள்ளிட்ட சில ஆய்வாளர்கள் செய்துள்ளனர் என்பதை மாநிலக்குழு சுட்டிக்காட்டியது.

ஒரு இடத்தில் இம்மாநாட்டுக்கு எதிராகச் சதி செய்த சண்டாளர் யார் என்று தெரியும் என்று கலைஞர் அவர்கள் குறிப்பிட்டது அதிர்ச்சியளித்தது. சண்டாளர் என்பது ஒரு ஒடுக்கப்பட்ட சாதியின் பெயராகும். தாழ்த்தப்பட்ட சாதியார் அனைவரையும் ஒட்டுமொத்தமாகக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. அப்பெயரைச் சதிச்செயலுடன் இணைத்து மாநில முதல்வரே பேசியது மிகுந்த வேதனையளிக்கும் ஒன்றாகும். சண்டாளன் என்று சர்வசாதாரணமாக இயல்பாக எல்லோரும் பேசுவது பற்றி சமீப காலங்களில் இலக்கிய வட்டாரங்களிலும் தலித் அரசியல் அரங்குகளிலும் நடந்து வரும் தீவிரமான விவாதங்கள் எதுவும் முதல்வருக்குத் தெரியாதா ?.

நிறைவுரை ஆற்றிய கலைஞரின் பேச்சில் தமிழில் படித்தோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளித்திட சட்டமியற்றப்படும் என்றது நாம் வற்புறுத்தி வந்த நீண்ட காலக் கோரிக்கையாகும். தமிழ் வளர்ச்சிக்கென்று 100 கோடி ரூபாய் சிறப்பு நிதி, சிறந்த தமிழ் மென்பொருள் தயாரிப்போருக்கு ஆண்டுதோறும் கணியன் பூங்குன்றனார் விருது, செம்மொழி என்ற தலைப்பில் பள்ளியில் பாடங்கள் (இதை சட்டமன்றத்தில் முதன் முதலாகக் கோரிக்கையாக வைத்தவர் நம் தோழர் நன்மாறன் என்பது குறிப்பிடத்தக்கது),தொல்காப்பியர் உலகத்தமிழ் செம்மொழி சங்கத்தின் பொறுப்பில் குறித்த கால இடைவெளியில் செம்மொழி மாநாடு தொடரும் என்ற அறிவிப்பு போன்றவை வரவேற்கத்தக்க அதே சமயம் இவை மெய்யாகவே நடைமுறைக்கு வர நாம் தொடர்ந்து கவனித்து வற்புறுத்த வேண்டிய அம்சங்களாகும்.

ஆனாலும் தமுஎகச முன்வைத்த 30 கோரிக்கைகளில் பெரும்பாலானவை இன்னும் கண்டுகொள்ளப்படவே இல்லை. வட்டார வழக்குச் சொல்லகராதிகள் தயாரிப்பு, வேர்ச்சொல் அகராதி, கலைக்களஞ்சியம்,நாட்டுப்புறப் பல்கலைக்கழகம்,ஒரு பல்கலைக்கழகத்திலேனும் ஒரு நாடகப்பள்ளி, இசைத்தமிழியல் உருவாக்கம், சங்க இலக்கியங்களை மக்கள் பதிப்பாக வெளியிடுவது உள்ளிட்ட அடிப்படையான தமிழ் வளர்ச்சிக்கு ஆதாரமான பல விசயங்கள் பற்றி இம்மாநாடு அழுத்தமான மௌனமே சாதித்துள்ளது.

மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட செவ்வியல் கலைஞர்கள் குளிரூட்டப்பட்ட அறைகளில் தங்க வைக்கப்பட்டு கார்களில் அழைத்து வரப்பட நாட்டுப்புறக்கலைஞர்கள் மைல் கணக்கில் பேரணியில் நடந்து வந்தனர். தெருக்களில்தான் அக்கலைஞர்களுக்கு இடமளிக்கப்பட்டது. உழைக்கும் மக்களும் அவர்கள் தமிழான நாட்டுப்புற/ வட்டார வழக்கும் அவர்கள் கலைகளான நாட்டுப்புறக்கலைகளும் இழிசனர் வழக்கென்று அந்தக்காலத்திலிருந்து அரண்மனைகளால் புறக்கணிக்கப்பட்டது. சனநாயக யுகத்தில் நடைபெற்ற இம்மாநாடு வரை தொடர்கின்றது. இன்னும் கூடுதலாக மக்கள் தமிழை ப. சிதம்பரத்தின் மூலம் இம்மாநாடு அவமதித்துள்ளது.

உழைக்கும் மக்களின் தமிழும் கலைகளும் தெருவில்தான் இன்னும் நிற்கின்றன இத்தனை கோடியில் மாநாடு நடாத்திய பின்னரும் என்பதுதான் என்றுமுள்ள யதார்த்தம்.

- ச.தமிழ்ச்செல்வன்

Pin It