அனைத்து கல்வி நிறுவனங்களிலும், தனியார் கல்வி நிறுவனங்களிலும் அது, அரசு உதவி பெறாத நிறுவனமாக இருந்தாலும்கூட, தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதை உறுதி செய்து, கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இந்தப் புதிய சட்டம் 15(5). பார்ப்பனர்களின் மிரட்டலுக்கு பயந்துபோன மத்திய அரசு, இந்த சட்டத்தின் நோக்கத்தைக் குழி பறிக்க, மற்றொரு சட்டத்தை நிறைவேற்ற இருக்கிறது. சட்டம் இன்னும் நிறைவேறவில்லை. ஆனால், சட்டத்துக்கான மசோதா கடந்த ஆக. 25 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வீரப்ப மொய்லி அறிக்கை கூறுவதுபோல் - பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை, வரும் கல்வி ஆண்டிலிருந்தே, முழுமையாக அமுலாக்குவதை, சட்ட ரீதியாகவே தடுப்பதற்கு இந்தப் புதிய சட்டம் வரப் போகிறது. எனவே இப்போது - எரிக்கப்பட வேண்டியவைகள், வீரப்பமொய்லி குழு பரிந்துரை மட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் சட்டமாக்குவதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவும்தான் (மசோதா எண் 76/2006). இதன் ஆபத்துகளை தெளிவாக சுட்டிக்காட்டி, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் ‘சிந்தனையாளன்’ ஏட்டில் எழுதியுள்ள தலையங்கத்தின் ஒரு பகுதியை இங்கு வெளியிடுகிறோம்:-

இந்திய அரசு உயர்கல்வியில் 27 சதவீத இடஒதுக்கீடு தருவதற்கு - இந்திய அரசு அமைச்சரவையும், இந்திய அரசு உயர் நிர்வாகத் துறைகளும், இந்திய அரசை இன்று தலைமை தாங்கி நடத்தும் பார்ப்பனிய அடிமைகளும், புதியதாக ஒரு சட்டத்தை நிறைவேற்றிட வேண்டி, 25.8.2006 இல் மசோதா எண் 76/2006 என்பதை முன்மொழிந்து விட்டனர்.

எதற்காக இந்த மசோதா? பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்திய அரசு உயர் தொழில்நுட்பக் கல்வியில் இடஒதுக்கீடு தருவதற்காக! அப்படித் தருவதற்கு ஏற்கெனவே அரசமைப்புச் சட்டத்தில் உள்ள விதி 15(4) இல் உள்ள அனுமதி மட்டுமே போதும். எப்படி?

இந்திய அரசு வேலை, இந்திய அரசு பொதுத் துறை வேலை இவற்றில் பிற்படுத்தப்பட்டோருக்கு முதன் முதலாக 27 சதவீத இட ஒதுக்கீடு தர, வி.பி.சிங் அரசு, விதி 16(4) இல் உள்ள அதிகாரத்தை மட்டுமே பயன்படுத்தித்தான் 13.8.1990 இல் நிருவாக ஆணை பிறப்பித்தது.

டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் உள்ள இன்றைய அரசுக்கு இதில் நாணயம், உண்மை, நேர்மை ஏதேனும் இருந்தால், ஏற்கெனவே உள்ள விதி 15(4) இன் கீழ் உள்ள அதிகாரத்தைக் கொண்டும் அரசமைப்புச் சட்டத்தில் அண்மையில் சேர்க்கப்பட்ட விதி 15(5) இல் உள்ள அதிகாரத்தைக் கொண்டும் - “விதி 245 இன்படி மய்ய அரசு அதிகாரப் பட்டியலில் பதிவு எண் 62 முதல் 66 வரை உள்ளவற்றில் கண்ட எல்லா அரசு உயர்தொழில் நுட்பக் கல்வி நிலையங்களிலும் 2006 கல்வி ஆண்டு முதலே பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு தரப்படும் என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்து, 2006 சனவரியிலேயே துறைவாரியாக நிருவாக ஆணைகளைப் பிறப்பித்திருக்க வேண்டும் அல்லவா?

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலுள்ள கட்சிகளும், தலைவர்களும் இந்திய அரசுக்கு இதுபற்றி மனமார வேண்டுகோள் வைத்த பிறகும்கூட, அடாவடித்தனமாக - தீய நோக்கத்துடன், அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக ஒரு சட்டத்தை இப்போது நிறைவேற்ற அரசு முயற்சிப்பது எதற்காக?

எதற்காகவென்றால், பிற்படுத்தப்பட்டோருக்கு இந்திய அரசின் உயர் தொழில்நுட்பக் கல்வியில் 27 சதவீத இடஒதுக்கீடு தர, கொள்கை அளவில் இந்திய அரசு ஒப்புகிறது. ஆனால், அந்த 27 சதவீத என்கிற அளவை முழுவதுமாக - ஒரே தடவையில் 2007 கல்வி ஆண்டில் தர முடியாது என்று அடித்துக் கூறத்தான்.

அத்துடன், அதற்கு மாறாக, 2007 இல் சில விழுக்காடும், 2008 இல் சில விழுக்காடும், 2009 இல் சில விழுக்காடும் பிற்படுத்தப்பட்டோருக்குத் தருவோம். அப்படித் தரலாமா என்பதை ஒவ்வொரு தடவையும் ஆய்வுக்கு அரசு உட்படுத்தும்; அதன் பிறகே ஒதுக்கீடு தரும் என்கிற தீய எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளுவதே இந்தச் சட்டத்தின் முதலாவது நோக்கம் ஆகும்.

இன்று இந்திய ஆட்சிப் பொறுப்பிலுள்ள இந்தத் திருடர்களுக்கு இப்படிச் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரத்தை அரசமைப்புச் சட்டத்தின் எந்த விதி தருகிறது? இந்திய அரசு அமைச்சகம் இந்திய அரசு உயர் அதிகார மய்யத்தில் உச்ச அதிகாரப் பதவிகளைப் பிடித்துக் கொண்டிருக்கும் படித்த அறிவாளிப் பார்ப்பனர்களால் ஆட்டிப் படைக்கப்படுகிறது என்பதால்தானே, இப்படி ஒரு சட்டம்?

இதன் இரண்டாவது தீயநோக்கம் மிகவும் கொடூரமானது. இந்திய அரசு உயர்கல்வி மக்களின் வரிப்பணத்தில் தரப்படுவது. இதில் தற்போது 77.5 சதவீத அளவில் மேல் சாதியினர் பெற்றுவரும் இடங்களின் எண்ணிக்கை வரும் ஆண்டுகளிலும் குறையாமல் தொடர்ந்து பெற்றுக் கொள்ள வழி செய்வது இச் சட்டத்தின் இன்னொரு நோக்கம்.

இந்தத் தீய நோக்கங்கள்:

1) இந்தியாவிலுள்ள 60 கோடி பிற்படுத்தப்பட்டோரின் பிள்ளைகள்  அரசுச் செலவில் அளிக்கப்படும் தலை சிறந்த தொழில்நுட்பக் கல்விக்கான நிலையங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு பெறுவதற்கு முட்டுக்கட்டை போடுவது. இது வெகுமக்களுக்கு எதிரானது; வெகு மக்களின் உரிமையை உருக்குலைத்துப் பாழடிப்பது.

2) காலங்காலமாக 100 விழுக்காடு இடங்களில் 77.5 விழுக்காடு இடங்களை அபகரித்து உயர்கல்வி பெற்று வருகிற வெறும் 10 கோடி மக்களின் பிள்ளைகள் - இனிமேலும், தொடர்ந்து அதே எண்ணிக்கையில் இடங்களைப் பெற்றிட சட்டப்படி ஒருவழி அமைப்பது. இது மக்கள் நாயகத்துக்கு எதிரானது. அரசமைப்புச் சட்ட வரம்புக்கு அப்பாற்பட்டது.

இப்போது, உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை உடனே தரக்கூடாது என்றும்; 76/2006 மசோதாவைப் பற்றி ஆய்வு செய்வதற்காக அரசு அமர்த்தியுள்ள நிலைக் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வெளியிட்ட பிறகு உச்சநீதிமன்றத்திடம் தரவேண்டும் என்றும்; அதன் பிறகு அரசு ஒரு சட்டம் செய்துதான் 27 சதவீத இடஒதுக்கீடு தர வேண்டும் என்றும்; சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு இல்லாமல் இடஒதுக்கீட்டை அமுல்படுத்தக்கூடாது என்றும் 16.10.2006 இலும், 18.10.2006 இலும், உச்சநீதி மன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.

அத்துடன், இஸ்லாமியர்களுக்கு மத அடிப்படையில் இடஒதுக்கீடு தரக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இவை கண்டனத்துக்கு உரியவை. ஏன்?

அரசமைப்பு விதி 15(4) இல் இருக்கிற அதிகாரம் போதாது என்பதால்தான், புதிதாக விதி 15(5) என்பது ஏற்கெனவே அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு விட்டது. இவற்றை உச்சநீதிமன்றம் புறக்கணிப்பது அடாதது. (இந்த இரண்டு விதிகளுமே உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை உறுதி செய்கின்றன - ஆர்)

எனவே, வெகுமக்களின் கல்வி உரிமையை மறுக்கிற - மிகச் சிறுபான்மையாக உள்ள மேல்சாதியினரின் ஆதிக்கத்தை உயர்கல்வியில் காப்பாற்ற வழி வகுக்கிற இந்தத் தீய சட்டத்தைத் தீயிட்டு எரிப்போம், வாரீர்.

2006 நவம்பர் 22 புதன் காலை 11 மணிக்கு, வாய்ப்புள்ள எல்லா நகரங்களிலும், “பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான மசோதா எண் 76/2006 மற்றும் வீரப்ப மொய்லிகுழு பரிந்துரைகள்” என அச்சிடப்பட்ட துண்டுத் தாளை ஒவவொரு மாவட்டத்திலும், ஒரு நகரத்தில் தீயிட்டு எரிப்போம், வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

Pin It