மாவீரன் பகத்சிங், பிரிட்டிஷ் ஆட்சியாளரால் தூக்கிலிடப்பட்டபோது, அவரது இளைய சகோதரர் ரன்பீர்சிங்கின் வயது 6. ரன்பீர்சிங்கும், பகத்சிங்கை போலவே கொள்கை உறுதி கொண்டவர். ரன்பீர்சிங்கின் மகன் இயேனான் சிங் - இப்போது இந்திய ராணுவத்தில் உயர் அதிகாரி. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பணி புரிகிறார். பகத்சிங் தம்பி மகன் தான் இயோனன் சிங். பிரதமர் மன்மோகன்சிங் - ஜம்மு காஷ்மீர் சென்றபோது அவரது கவனத்துக்கு இது கொண்டுவரப்பட்டது.

உடனே பிரதமர் அவரை அழைத்துப் பேசினார். இந்த இயோனன் சிங் - ஈழத் தமிழர்களை அழித்தொழிக்கச் சென்ற, “இந்திய அமைதிப் படையில்” ஒருவராக ஈழம் சென்றவர். யாழ்ப்பாணத்தில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தவர். இதற்காக - இவருக்கு இந்திய அரசு ‘வீர சக்கரா’ விருது வழங்கியது. ஆனால் மகன் விருது பெறும் விழாவில் அவரது தந்தையும், பகத்சிங்கின் இளைய சகோதரருமான ரன்பீர்சிங் பங்கேற்க மறுத்து விட்டார். இதற்கான காரணத்தை விருது பெற்ற மகன் இப்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார்:

“என் தந்தை எனது பெரியப்பா பகத்சிங்கைப் போலவே சிறந்த லட்சியவாதி. சுதந்திரம் பெற்ற பிறகே திருமணம் செய்வேன்; அதுவும் ஒரு விதவைப் பெண்ணையே திருமணம் செய்வேன் என்று உறுதி எடுத்து, அதை நிறைவேற்றியவர். விடுதலைப்புலிகளின் உறுதியான போராட்டத்தையும், துணிவையும் எனது தந்தை மிகவும் மதிப்பவர்.

லட்சியத்துக்காக, உயிரையும் இழக்கும் இந்தப் போராளிகளின் தியாகம் மதிக்கப்பட வேண்டும் என்று கருதினார். அந்த தியாகமும், வீரமும், மதிக்கப்படாததைக் கண்டு வேதனையடைந்தார். அதனால் தான் ஈழத்தில் ‘அமைதி’ படையில் நான் பங்கேற்று நடத்திய “வீரச் செயலுக்கு” விருது வழங்கும் விழாவை அவர் புறக்கணித்தார்” என்று கூறியுள்ளார்.

பகத்சிங்கின் வாரிசு - அவரது வழியிலேயே சிந்திக்கிறார். தாய்நாட்டின் விடுதலைக்கு பகத்சிங் போராடி வீரமரணம் தழுவியதில் உள்ள நியாயத்தை தமிழ் ஈழத்துக்காகப் போராடும் விடுதலை புலிகளிடமும் அவர் பார்க்கிறார். எனவே விடுதலைப்புலிகளைக் கொன்றதற்காக மகனுக்கு விருது கிடைத்தாலும் - அதில் மகிழ்ந்து நிற்க அவர் தயாராக இல்லை.

அய்.அய்.டி.யின் பார்ப்பன பண்ணயம்

சென்னை கிண்டியில் - பார்ப்பன ‘அக்கிரகாரமாக’ திகழும் அய்.அய்.டி. நிறுவனம் உள்ள இடம் தமிழக அரசுக்கு உரிமையானது. 50 ஆண்டுகளுக்கு முன்பு - இந்த இடம் 99 ஆண்டு குத்தகைக்கு அய்.அய்.டி. தொடங்க தமிழக அரசால் வழங்கப்பட்டது. அய்.அய்.டி.யை சுற்றியுள்ள வனப்பகுதிக்கும், வன விலங்குகளுக்கும் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையோடுதான் இடம் குத்தகைக்கு விடப்பட்டது.

ஆனால் கடந்த 12 ஆண்டுகளில் 200 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டிடங்களை எழுப்பியுள்ள அய்.அய்.டி. நிர்வாகம் அதற்கான அனுமதி எதையும் சென்னை பெருநகர வளர்ச்சி நிறுவனத்திடம் பெறவில்லை. பேராசிரியர் முரளீதரன் - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டதற்கு பெருநகர வளர்ச்சி நிறுவனம், இந்தப் பதிலை தந்துள்ளது. ‘பார்ப்பன பண்ணயம் கேட்பாரில்லை’ என்ற தான்தோன்றித்தனத்தையே இது காட்டுகிறது.

அண்மையில் - உச்சநீதிமன்றம் 27 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்று தீர்ப்பளித்தவுடன், சென்னை அய்.அய்.டி. இயக்குனரான ஆனந்த் என்ற பார்ப்பனர், இதை உடனே சென்னையில் அமுல்படுத்த முடியாது என்றார். மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்படும்போது, கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும், அப்படி அதிகப்படுத்தினால் வளாகத்தின் வனப்பகுதி சுற்றுச் சூழல் பாதித்துவிடும் என்றும் கூறினார்.

இந்த யோக்கியர்கள் தான், கடந்த 12 ஆண்டுகாலமாக சுற்றுச் சூழல் வனப்பகுதியை பாதிக்குமளவுக்கு ரூ.200 கோடி செலவில் கட்டடங்களையும், ஓய்வு மாளிகைகளையும், நீச்சல் குளங்களையும் கட்டி எழுப்பி, உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கின்றனர். அதுவும், தமிழக அரசின் அனுமதி பெறாமலே!