கோவை கழகத் தோழர் அ.ப.சிவாவின் ‘துளிப்பாக்கள்’, ‘கருப்புக் காத்து’ எனும் தலைப்பில் நூலாக நீலாம்பூர் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நூலின் அறிமுக விழா 20.3.2006 அன்று மாலை கோவை - இருகூர் சுங்கம் திடலில் ஆ.சிவராசு தலைமையில் நடைபெற்றது. இயக்குனர் சீமான், கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நூலில் இடம் பெற்றுள்ள சில துளிப்பாக்கள்:

ஆறு மாதத்துக்குப் பாலும்
சீராய் ஓடியிருந்தது
சேரி இரத்தம்

கருப்பண்ண சாமிக்கு
ஆடு கோழி!
இராமர் சாமிக்கு
குசராத்.

படைத்தல் -
இச்சை மயமாக்கல்
அழித்தல் -
உலகமயமாக்கல்
காத்தல் -
பெரியார் மயமாக்கல்

கலப்பின
பழம்
இனிக்கும்
பார்ப்பான்
வீட்டிலும்

சலவைக் கல்லில்
சாமி கோவில்
அரச மரத்தடி
ஆரம்பப் பள்ளி

திருவிழாக் கூட்டம்
திருடு போயிற்று
இராசிக்கல் மோதிரம்

இனியில்லை
தடாகங்கள்
தமிழ்நாட்டில்
தாமரை பூக்க

திருநீறு
நெத்தியில!
குல்லா
தலையில!
சிலுவை
கழுத்தில!
திங்கறது மட்டும்
வாயில!