29.5.2016 அன்று காலை 10 மணிக்கு திருப்பூரில்வீரபாண்டி பிரிவு பெரியார் படிப்பகத்தில் தமிழ்நாடுமாணவர் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட கழகச் செயலாளர் முகில்ராசு வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில், இடஒதுக்கீடு, தனியார் துறையில் இடஒதுக்கீடு, பொது நுழைவுத் தேர்வு, அரசாணை 92, தனியார் பள்ளிகளில் 25ரூ மாணவர் சேர்க்கை, தனியார் கல்விக்கொள்ளை, தாய்மொழிக் கல்வி, கட்டாய கல்விஉரிமைச் சட்டம் ஆகியவை குறித்தும் இன்னும் பிறகல்வி உதவித் தொகை வழங்கும் அரசாணை குறித்தும் தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் பாரி.சிவக்குமார் தொடக்க உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு கழகப் பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் விளக்கம் அளித்தார். காலை நிகழ்வு மதியம் 1.30 மணி வரை நடைபெற்றது. மதிய உணவு மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது. மீண்டும் மதியம் 2 மணிக்கு தொடங்கிய கூட்டம் 6.30 வரை தொடர்ந்தது.

மதிய அமர்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு தோழர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பல்வேறுமாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். புதிய தோழர்களுக்கு கழகத்தலைவர் பெரியாரியல் புத்தகங்களை வழங்கினார். முடிவில் தோழர்கள் பேசும்போது, இந்த ஒரு நாள் நிகழ்வு பல்வேறு செய்திகளை தெரிந்துகொள்ளவும், நாம் இனி எப்படி செயல்பட வேண்டும் என்பதை உணர்த்துவதாகவும் இருந்ததாக கூறினர். ஆரம்பத்தில் பல்வேறு கேள்விகளை இடஒதுக்கிடு குறித்து கேட்டதிருப்பூர் தோழர் கோகுல், தோழர் பால்பிரபாகரன் விளக்கத்திக்கு பின் முடிவில் இடஒதுக்கீடு என்பதுபற்றிய தன்னுடைய தவறான பார்வை மாறியதாக நெகிழ்ச்சியாக கூறினார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர்கள் தூத்துக்குடி கண்ணதாசன், சேலம்வெற்றி முருகன், நாகராஜ், பல்லடம் மைதிலி, தேன்மொழி, கனல் மதி, காங்கேயம் மதிவாணன், திருப்பூர் கதிர் முகிலன், ஹரிஷ், கோவை மைலேஷ் மற்றும் மாணவர் கழகத் தோழர்கள், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர்செல்வம், விருதுநகர் கணேச மூர்த்தி, பரிமளராசன், திருப்பூர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக பாரி.சிவக்குமார் நன்றியுரை கூறினார்.

கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1) பெரும் பொருட்செலவில் தனியாரால் நடத்தப்படும் (ப்ராய்லர்) பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு சற்றும் குறையாமல் கிராமப்புற, உழைக்கும் ஏழை மக்களின் பிள்ளைகள் போதிய கட்டமைப்பு இல்லாத அரசு பள்ளிகளில்பயின்று மாநில, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றமைக்கு தமிழ்நாடு மாணவர் கழகம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

2) மத்திய அரசால் நடத்தப்படும் எய்ம்ஸ், ஜிப்மர், பிஜிஅய், போன்ற மருத்துவக் கல்லூரிகளில் இன்றுவரை பொது நுழைவுத் தேர்வு இல்லாதபோது. பொது நுழைவுத் தேர்வு சம்பந்தமான வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நிலையிலேயே அனுமதி அளித்திருப்பது ஆங்கிலம், இந்தி பேசாத, சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் பயிலாத முதல் தலைமுறையாய் பட்டம் பயிலும் கிராமப்புற ஏழை உழைக்கும் மக்களுக்கு எதிரானது. எனவே தமிழ்நாடு மாணவர் கழகம் பொது நுழைவுத் தேர்வை ஒருபோதும் நடைமுறைப்படுத்தக் கூடாது என அரசை வலியுறுத்துகிறது.

3) தரமான கட்டாய இலவசக் கல்வியை அனைவருக்கும் வழங்க தமிழ்நாடு மாணவர் கழகம் கேட்டுக்கொள்கிறது.

4) ஆரம்பக் கல்வியை தாய்மொழியிலேயே கற்பதுசாலச்சிறந்தது, இதுவே கல்வியாளர்கள் மற்றும்உளவியலாளர்கள் கருத்து. எனவே பெற்றோர்கள்தங்களின் பிள்ளைகளை தாய்மொழிக் கல்வியில்சேர்க்க தமிழ்நாடு மாணவர் கழகம் கேட்டுக்கொள்கிறது.

5) அரசாணை 92ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அதனை கண்காணிக்கவும் கல்லூரி, பல்கலைக்கழகம் அளவில் கண்காணிப்பு குழு அமைத்து கண்காணித்து, முழுமையாக நடைமுறைப்படுத்தாத கல்லூரிகள் மீதுநடவடிக்கை எடுக்கவும், ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிடவும் அரசை தமிழ்நாடு மாணவர் கழகம் வலியுறுத்துகிறது.

6) மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டிகிராமப்புற ஏழை உழைக்கும் மக்களின் பிள்ளைகள் பயிலும் அரசு பள்ளிகளைஆண்டுதோறும் அரசு மூடி வருவதை தமிழ்நாடு மாணவர் கழகம் வண்மையாக கண்டிக்கிறது.

7) பள்ளிகல்வி இயக்குனர் சமீபத்தில் வெளியிட்டபதினென்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைகுறித்த அறிவிப்பில் பொதுப்பட்டியலுக்கானமாணவர் சேர்க்கையை, முன்னேறிய வகுப்பினர்என குறிப்பிட்டுள்ளார் இடஒதுக்கீட்டுக்கெதிராக தெரிந்தே செயல்படும் இதுபோன்றஅதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடுமாணவர் கழகம் வலியுறுத்துகிறது.

8) இடஒதுக்கீடு குறித்த விரிவான தகவல்களை பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் சேர்க்க தமிழ்நாடு மாணவர் கழகம் அரசை வலியுறுத்துகிறது.

9) கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்குஇடஒதுக்கீடு வழங்க அரசை தமிழ்நாடு மாணவர்கழகம் கேட்டுக்கொள்கிறதுதீர்மானங்களின் அவசியத்தை வலியுறுத்தி பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்களிடம் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்வதென முடிவெடுக்கப்படுகிறது

கீழ்க்கண்ட அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்:திருப்பூர் மாவட்ட அமைப்பாளர்கள் கனல்மதி , குண.கோகுல் , ஹரிஸ் , கதிர் முகிலன், பல்லடம் மைதிலி, காங்கேயம் - மதிவாணன். சேலம் மாவட்ட அமைப்பாளர்கள் மேற்கு - நாகராஜ், கிழக்கு - வெற்றி முருகன், திருச்சி சந்துரு, கோவை - முருகேசன், தூத்துக்குடி - கண்ணதாசன், பிரபாகரன், கடலூர் -பாலாஜி, கரிகாலன். சென்னை -ஜெயப்பிரகாஷ். மற்றமாவட்டங்களில் ஏற்கனவே நியமிக்கப்பட்டபொறுப்பாளர்கள் தொடர்வார்கள்.

Pin It