வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (14)

‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மை யில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு.

1926 தேர்தலில் நீதிக்கட்சி தோற்று விட்டவுடன் 1927 இல் கோவையில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சியில் பார்ப்பனர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்யப்பட்டது. அதற்கு இரண்டு நாள் கழித்து தான் இந்த நெல்லூர் பார்ப்பனரல் லாதார் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் தலைவர் சித்தூர் முனிசாமி நாயுடுவும், ஏ.பி.பாத்ரோவும் நீதிக் கட்சியில் பார்ப்பனர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தை மாற்றுவதற்காவே, கட்சியில் பார்ப் பனர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டாம்; தேர்தல் களிலும் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டாம்; தாங்களாகவே வெற்றி பெரும் பார்ப்பனர் களில் நாம் கொள்கைக்கு ஒத்து வருபவர்களை அமைச்சராக வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம் என்ற நீதிக்கட்சியினரின் தீர்மானத்தை பெரியார் வழி மொழிந்தார். தெலுங்கரான மனத்தட்டை சேது ரத்தினத்தை விழுந்து விழுந்து வழிமொழிந்தார் பெரியார் என்பது உண்மையல்ல. சேதுரத்தினம் அய்யர் பதவி ஏற்றுக் கொண்டது 16-3-1928இல். நெல்லூர் மாநாடு நடைபெற்றது 5, 6-10-1929. சேதுரத்தினம் அய்யர் பதவி ஏற்று ஒன்றரை ஆண்டுகள் கழித்துத் தான் நெல்லூர் மாநாடு நடைபெற்றது.

பெரியார் பார்ப்பனர்களைத் திட்டிக் கொண்டே வாசன் போன்ற பார்ப்பனர்களிடம் பணம் வாங்கினார் என்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார். வாசன் தொடக்கக் காலத்தில் பத்திரிக்கை முதல்வராக இருந்தார். பெரியாரின் ‘குடி அரசு’ ஏட்டுக்கு ஏஜெண்டாகவும் இருந்து பணம் சம்பாதித்து பெரிய ஆளாக வளர்ந்தார். அந்த நன்றிக் கடனுக்காக ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்த நாளில் அவரே நேரில் வந்து அய்யாவை வணங்கிவிட்டு இயக்க வளர்ச்சிக்கு பணம் கொடுத்துவிட்டுப் போவார். பெரியார் வாங்கிய பணத்தையெல்லாம் பொது மக்களுக்கு பயன்படும்படி செய்து விட்டுபோனார். ஆனால் உங்கள் தலைவர் ம.பொ.சிக்கு கொடுத்தப் பணத்தையெல்லாம் தன் வீட்டுக்கு கொண்டு போனார். ஆனால் நான் யாரிடமும் பணமே வாங்கவில்லை என்று ‘நிதிவாங்க மறுத்தேன்’ என்ற தலைப்பில் எனது போராட்டத்தில் பொய்யாக எழுதியுள்ளார். திராவிட இயக்க கலைஞர் என்.எஸ்.கிருஷ்ணன் தான் திரைக்கலைஞர்களிடம் பணம் வசூலித்து பியட் கார் ஒன்றை பரிசாக அளித்தார். என்.எஸ்.கே. மேடையில் பேசும்போது “நான் வாங்கி வந்த காரை தூக்கி காட்டமுடியாதல்லவா அதனால் அந்த காரின் சாவியை காட்டுகிறேன்” என்று கூறியுவுடன் அவையில் பலத்த கைத்தட்டலுக்கிடையே காரின் சாவியை ம.பொ.சி.யிடம் வழங்கினார். ரூ.30,000 பணமுடிப்பு வழங்கப்பட்டது. “இந்த பணம் எனக்கல்ல கஷ்டத்தில் வாடும் என் மக்களுக்கு பிள்ளைகளுக்கு” என்று வீட்டுக்கு கொண்டு சென்றுவிட்டார்.

சி.பா.ஆதித்தனார் பதவிக்காக தி.மு.க.வுக்கு போக வில்லை. மாறாக, ஆதித்தனாரின் மணிவிழாவிற்குக் கருணாநிதி நேரில் வந்து “சுதந்திர தமிழ்நாடு” வரைப்படம் போட்ட கேடயம் ஒன்றைக் கொடுத்து, “இன்று வரைப்படம் நாளை தனிநாடு இலக்கு ஒன்றே நாம் சேர்ந்து செயல்படுவோம்” என்று ஏமாற்று உரையாற்றினார். அதனை தொடர்ந்து அண்ணா, ஆதித்தனாரை அவருடைய வீட்டில் சந்தித்து “நமது கருத்து ஒத்திருப்பதால் இணைந்து செயல்படுவோம்! என்று கூறியதால் தான் ‘நாம் தமிழர்’ அமைப்பு இணைந்தது” என்கிறார் (பா.குப்பன் பக்111)

பா.குப்பன் இதே நூலில் பக் 43 இல், “அண்ணாதுரை இந்திய சீன எல்லைப் போரைக் காரணம் காட்டி 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் நாளன்று திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையை கைவிடுவதாக அறிவித்தார்” என்று எழுதியுள்ளார்.

1963இல் நாட்டு பிரிவினையை கைவிட்ட தி.மு.க. வினர் 1965இல் எப்படி ஆதித்தனாருக்கு ‘தமிழ்நாடு’ வரைபடம் போட்ட கேடயத்தை கருணாநிதி வழங்கி இருக்க முடியும்? கருணாநிதிக்கு மட்டும் தனிக் கொள்கை இருந்ததா? ஆதித்தனாரை காப்பாற்ற பா.குப்பன் மூளையில் உதித்த கற்பனை தான் இது.

1944இல் ‘தமிழரசுக் கட்சி’ என்று அமைப்பை தொடங்கிய ஆதித்தனார் ‘தமிழ்க் கொடி’ என்ற ஏட்டையும் அப்போது தொடங்கினார். ‘தனித் தமிழ்நாடு தான் தன்னுடைய கோரிக்கை’ என்றார்.

1945இல் ‘தமிழரசுக் கட்சியை’ கலைத்துவிட்டு இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தது ஏன்? மேலவை உறுப்பினர் ஆ.டு.ஊ பதவிக்குத்தானே? வேறு என்ன காரணம்? 1950இல் காங்கிரசு அரசு பனைமரத்துக்கு வரி விதித்தது. தன்னுடைய நாடார் சாதியினருக்கு தொல்லையாக அது ஓட்டு விழாது என்ற காரணத்தினால் காங்கிரசை விட்டு வெளியே வந்த ஆதித்தனார், 1952இல் வட இந்தியத் தலைவரான ஆச்சாரியா கிருபாளினையைத் தலைவராகக் கொண்ட அகில இந்திய கட்சியான Kissan Mustur Prja Party) K.M.P.P. யில் ஏன் சேர்ந்தார்? M.L.A. பதவிக்குத்தானே, வேறு என்ன காரணம்? இத்தனைக்கும் கிருபாளணி மொழி வழி மாநில கோரிக்கைக்கு எதிரானவர். இந்தி வெறியர். ஆதித்தனர் தமிழ்நாட்டில் ‘கிஸான்’ போராட்டம் என்றே நடத்தினார் விவசாயிகள் போராட்டம் என்று சொல்லவில்லை.

நாம் தமிழர் இயக்கத்தை கலைத்து விட்டு 1967இல் தி.மு.க. வில் சேர்ந்து சபாநாயகரான ஆதித்தனர், 1971இல் அமைச்சராகவும் 1980 தேர்தலில் தி.மு.கவில் MLA சீட்டு கொடுக்கவில்லை என்றவுடன் 1980 இல் நீங்கள் மலையாளி என்று கூறும் எம்.ஜி.ஆரிடம் ஓடி அண்ணா தி.மு.க.வில் ஏன் சேர்ந்தார்? பா.குப்பன் அவர்களே தனித் தமிழ்நாடு கேட்டுப் போராடவா? உங்கள் தலைவர் ம.பொ.சியும். 1976இல் ‘தமிழ்நாட்டில் பிறமொழியினர்’ என்ற நூலை எழுதிவிட்டு, 1977 தேர்தலில் தி.மு.க தோற்றுப்போய் அ.தி.மு.க அதிக இடங்களைப் கைப்பற்றியவுடன் மேலவை துணைத் தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக இராமாவரம் தோட்டத் திற்கு சென்று உங்களால் மலையாளி எனக் கூறப்படும் எம்.ஜி.ஆரின் வீட்டுக் கதவை தட்டினாரே, அப்போது எம்.ஜி.ஆர் பிறமொழியினர் என்று ம.பொ.சி.க்கு தெரிய வில்லையா? எம்.ஜி.ஆர்., ஆதித்தனாருக்கும் ம.பொ.சி.க்கும் தனித் தமிழ்நாடு பெற்றுத் தருவேன் என்று வாக்குறுதி அளித்தாரா? பொய்க்கால் குதிரை களின் மீது அமர்ந்து கொண்டு பெரியாரை மண் குதிரை என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது பா.குப்பன் அவர்களே!

பகுத்தறிவாளர் என்றும் சிந்தனையாளர் என்றும் பாராட்டப் பெற்ற ஈ.வெ.ரா. சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியது முதல் தாமே அதற்குத் தலைவராயிருந்தார். நீதிக் கட்சியில் இணைந்த போதும் அந்த நீதிக்கட்சியின் தலைவராகவே இணைந்தார். நீதிக்கட்சியின் பெயர் ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதும் அதற்கும் தலைவரானார். தாம் இறக்கும் வரையில் அவர் அந்தத் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கவில்லை. ஈ.வெ.ரா. பதவி வெறியர் இல்லையா? என்கிறார் பா.குப்பன் (பக் 112). சுயமரியாதை இயக்கத்தின் தலைவராக 11.5.1930 அன்று ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் ஊ.பு.அ. சௌந்தர பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊ.பு.அ. சௌந்தர பாண்டியன் அவர்கள் இராமநாதபுரம் ஜில்லா போர்டுத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தபோது பெரியார் கீழ்க்கண்டவாறு எழுதினார். “உயர்திருவாளர் ஊ.பு.அ சௌந்த பாண்டியர் அவர்களின் இராஜினமா, மானம் பெரிதொழிய ஸ்தானம் பெரிதல்ல. சுயமரியாதை வீரரின் சுயமரியாதைச் செயல்! சுயமரியாதைத் தலைவர், சுயமரியாதைச் சங்கத்தின் தலைவர், உயர்திரு ஊ.பு.அ. சௌந்தர பாண்டியனார் அவர்கள் இராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் பதவியை சிறிது நேரத்தில் இராஜினமா செய்து உண்மைச் சுயமரியாதைக்கு உதாரணமாய் விளங்கி விட்டார்” என்று பெரியாரே எழுதியுள்ளார். செங்கல்பட்டு முதல் சுயமரி யாதை மாநாட்டுக்கும் தலைவர் சௌந்தர பாண்டியன் தான். சுயமரியாதை இயக்கத்தின் தலைவராகவும் சௌந்தர பாண்டியன்தான் இருந்தார். பா.குப்பன் சொல்வது போல் பெரியாரே சுயமரியாதை இயக்கத்தின் நிரந்தர தலைவரல்ல. கி.ஆ.பெ.விசுவநாதன் 1920 முதலே நீதிக்கட்சியில் இருந்தவர் பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறிய 1925 ஆம் ஆண்டிலிருந்து பெரியாருடன் இணைந்து செயல்பட்டார்.                     

(தொடரும்)

Pin It