திராவிடர் விடுதலைக் கழகத்தின் இரண்டாம் நாள் பொது மாநாட்டில் (டிசம்பர் 24) தீர்மானங்களை முன்மொழிந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். மாநாட்டில் பலத்த கரவொலியுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மனு சாஸ்திரத்தை சட்டவிரோதமாக அறிவித்திடுக!

உலகிலேயே எங்குமில்லாத ‘வர்ணாஸ்ரம’ சமூக அமைப்பை மூவாயிரம் ஆண்டுகளாகத் திணித்து தொடர்ந்து உயிர்த் துடிப்போடு நீடிக்கச் செய்துக் கொண்டிருப்பது மனு சாஸ்திரம். இப்படி ஒரு சாஸ்திரம் இருப்பதை அறியாதவர்கள்கூட, வர்ணாஸ்ரம உளவியலில் கட்டுண்டு ஊறிப்போய் நிற்கின்றனர். இந்த வர்ணாஸ்ரமம் வழியாக காலம் காலமாக, சமூக, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள பார்ப்பனர்கள் - இந்த சமூக அமைப்பு உருக்குலையாமல், அரண் அமைத்து வருகிறார்கள். இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கே முரணானது இந்த மனு சாஸ்திரம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது அரசியல் சட்டம்; சட்டத்தின் முன் அனைவரும் சமமாக முடியாது என்கிறது மனு சாஸ்திரம். ‘பிராமணனுக்கு’ அடிமையான ‘சூத்திரரின்’ கல்விக்குத் தடை போடுகிறது மனு சாஸ்திரம். மாறாக, கட்டாய இலவச கல்வியை அனைவருக்கும் வலியுறுத்துகிறது அரசியல் சட்டம்.

குழந்தைகளுக்கு - இளம் வயதிலேயே திருமணம் செய்ய வலியுறுத்துகிறது மனு சாஸ்திரம்; அதைக் குற்றமாக்கி திருமண வயதை 18 ஆக நிர்ணயிக்கிறது அரசியல் சட்டம். பெண் ஆணுக்கு அடிமைப் பட்டவள் என்கிறது மனு சாஸ்திரம்; அதைக் குற்றமாக்கி திருமண வயதை 18 ஆக நிர்ணயிக்கிறது அரசியல் சட்டம். பெண் ஆணுக்கு அடிமைப் பட்டவள் என்கிறது மனு சாஸ்திரம்; இருபாலருக் கும் சமஉரிமை உண்டு என்கிறது அரசியல் சட்டம். ஆனால், சட்டம் வழங்கியுள்ள இந்த உரிமைகளை சமூகம் ஏற்கவிடாமல், தடைச்சுவராக நிற்கிறது மனு சாஸ்திரம். இப்படி சட்டத்துக்கு நேர் முரணான - மனு சாஸ்திரத்தை - பார்ப்பனர்கள் மீண்டும் மீண்டும் தடையின்றி அச்சிட்டுப் பரப்பி வருகிறார்கள். பழக்க வழக்கங்கள், சடங்குகள், வாழ்வியல் வழியாக சமூகத்திலும் தொடர்ந்து நீடிக்கச் செய்து வருகிறார்கள்.

சமூக மாற்றத்துக்கான எந்த திட்டங்களானாலும் சட்டங்களானாலும் அதன் நோக்கத்தை அடையவிடாது தடுப்பது, இந்த பாசிச பார்ப்பனிய மனு சாஸ்திர சிந்தனையும், அதன் வழி கட்டமைக்கப்பட்ட ஜாதிய சமூகமும்தான். இந்த எதார்த்தத்தையும் கடந்த காலங்களிலிருந்து பெற்று வரும் படிப்பினைகளையும் கருத்தில் கொண்டு - மக்கள் நலனில், விடுதலையில் உண்மை யாக கவலைக் கொண்ட கட்சிகள், இயக்கங்கள், பார்ப்பனிய மனு சாஸ்திர கட்டமைப்புகளுக்கு எதிரான இயக்கங்களை நடத்த முன் வரவேண்டும் என்று இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது. இதன் முதற்கட்டமாக, அரசியல் சட்டத்துக்கே எதிரான ‘மனு சாஸ்திரத்தை’ சட்ட விரோதமாக அறிவித்து அதை அச்சிட்டுப் பரப்புவதை குற்றமாக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

நவீன மனுவாதிகளை முறியடிப்போம்

மனு சாஸ்திரம் கட்டமைத்துள்ள வர்ணாஸ்ரம அமைப்பில் உழைக்கும் மக்களை ‘பஞ்சமர்’ என்று இழிவுபடுத்தி, சமூகத்திலிருந்து ஒதுக்கி, ஊருக்கு வெளியே சேரிகளில் தனிமைப்படுத்தியது; புத்தர், ஜோதிபாபுலே, பெரியார், அம்பேத்கர் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட - மனுசாஸ்திர பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்களால் விழிப்புற்று, ஓரளவு உரிமைப் பெற்று, சம உரிமைக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் போராடி வரும் நிலையில் மனு சாஸ்திரத்தை உயர்த்திப் பிடிக்கும் முயற்சிகளில் சாதிய சக்திகள் களமிறங்கியுள்ளன. மீண்டும் மனுசாஸ்திரம் காட்டும வழியில் ‘தீண்டப்படாத மக்களை - ஒதுக்கி வைக்கும் மிரட்டல்களை வெளிப்படையாகவே தொடங்கிவிட்டனர்; இந்த நவீன மனுவாத சக்திகளுக்கு எதிராக தமிழகம் தழுவிய அளவில் ஜாதி - பார்ப்பனிய மனுவாதிகள் எதிர்ப்பு கூட்டியக்கத்தை உருவாக்கி ஜாதி வெறி சக்திகளை முறியடிக்க இந்த மாநாடு உறுதியேற்கிறது.

குரலற்ற மக்கள்

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் பட்டியல் இனப் பிரிவில் அடங்கி யுள்ள எண்ணிக்கையில் சிறுபான்மையினரான புதிரை வண்ணார், காட்டு நாயக்கர், நரிக்குறவர், குயவர், வண்ணார், நாவிதர், போயர் போன்ற பல்வேறு சமுதாயப் பிரிவினர் ஒரு ஊராட்சி மன்ற உறுப்பினராகக்கூட வர முடியாத நிலையே உள்ளது. உயர்கல்வி, உயர் பதவிகளில் கற்பனையில்கூட எட்டிப்பிடிக்க முடியாத, ‘குரலற்றவர்களாக’ உள்ள இந்த சமூகத்தினருக்கு, சட்டம் வலியுறுத்தும் ‘போதுமான பிரதிநிதித்துவம்’ (யனநளூரயவந சுநயீசநளநவேயவiடிn) என்ற இலக்கை சென்றடைவதற்கு தற்போதுள்ள இடஒதுக்கீட்டு முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டிய அவசியத்தை - இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது. குரலற்ற இந்த மக்களின் நியாயமான உரிமைகளுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் வலிமையாக குரல் கொடுத்துப் போராடும் என்று அறிவிக்கிறது.

சிறப்பு திருமணச் சட்டத்தில் திருத்தம்

இரு வேறு மதங்களின் பிரிவைச் சார்ந்தவர்கள் திருமணத்தைப் பதிவு செய்வதற்கான சிறப்பு திருமண பதிவுச் சட்டம் - திருமணத்தைப் பதிவு செய்வதற்கு முன் ஒரு மாத முன்னறிவிப்பு தரப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.  திருமணம் செய்து கொள்ளப் போகும் இணையர்களின் விவரங்களும் முன்கூட்டியே அறிவிப்புப் பலகையில் அறிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக மதங் கடந்த காதல் திருமணத்தை தடுக்க விரும்பும் சாதி - மதவாத சக்திகள் இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி அவர்களை பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதற்கும், மிரட்டுவதற்கும் வாய்ப்புகள் தரப்படுகின்றன. எனவே ஒரே மதத்திற்குள் திருமணம் புரிவோர் உடனடியாக பதிவு செய்து கொள்வதற்குள்ள வாய்ப்புகளைப் போன்றே, மதம் கடந்து திருமணம் செய்வோருக்கும் அனுமதிக்கும் வகையில் சிறப்புத் திருமண சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

காதல் திருமணத்துக்கு தடை போடாதீர்!

காதலுக்கு ‘தெய்வீகம்’, ‘புனிதம்’ என்ற கற்பிதங்களை கட்டமைப்பதை பெரியார் எதிர்க் கிறார்; அதே நேரத்தில் ஒருவருக்கொருவர் சரியான புரிதலில் உருவாகும் காதலை வரவேற்கிறார். “ஒரு ஆணின் அல்லது பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ - மற்ற மூன்றாதவர்கள் யாராவதோ - பேசு வதற்கோ நிர்ணயிப்பதற்கோ நிர்ப்பந்திப்பதற்கோ சிறிதுகூட உரிமையே கிடையாது” என்று பெரியார் உறுதிப்படக் கூறுகிறார்; மாறி வரும் சமூகத்தில் ஜாதிகளைக் கடந்து காதல் திருமணம் புரிய விரும்பும் இளைய தலைமுறையின் வாழ்வியல் உரிமைகளைப் பறிக்க வேண்டாம் என்று பெற்றோர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.  மனு சாஸ்திரம் விதித்த குலத்தொழில் தடைகளை தகர்த்துவிட்டு மருத்துவர்களாகவும், வழக்கறிஞர் களாகவும், பொறியாளர்களாகவும், விஞ்ஞானி களாகவும் எந்த பிரிவினர்களும் வரலாம் என்பதை ஏற்றுக் கொண்ட நமது சமூகம்,  அதே ‘மனு சாஸ்திரம்’ கட்டளையிடும் ஒரே ஜாதிக்குள் மட்டுமே திருமணம் என்பதை விடாப்பிடியாக பற்றிக் கொண்டிருக்க வேண்டாம் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மருத்துவர் இராமதாசுக்கு தடை போட்டதை வரவேற்கிறோம்

தலித் மக்களை தனிமைப்படுத்திட சாதி வெறி கட்சிகளைத் தூண்டிவிடும் இயக்கத்தை முனைப்புடன் நடத்தி வரும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசுக்கு எதிராக, சமூக அமைதியைக் காக்கும் நோக்கத்தோடு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுரை மாவட்டத்தில் நுழைய தடை விதித்துள்ளதைப் பாராட்டி வரவேற்ப தோடு தமிழகத்தின் ஏனைய மாவட்ட ஆட்சித் தலைவர்களும் இந்த நல்ல முன்னுதாரணத்தைப் பின்பற்ற வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

சான்றிதழ்களில் ‘பிராமணர்’ பெயர் நீக்குக!

பள்ளிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு சான்றி தழ்களில் சாதியைக் குறிக்கும்போது பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடிப் பிரிவைச் சார்ந்தோரின் ஜாதி குறிப்பிடப் படுகிறது.  ஆனால், பார்ப் பனர்களை மட்டும் அவர்கள் ஜாதியைக் குறிப்பிடா மல், ‘பிராமணர்’ என்று வர்ணத்தின் பேரால் குறிக்கப்படும் வழக்கத்தை மாற்றி, மற்ற பிரிவினரைக் குறிப்பிடும் முறையிலேயே பதிய வேண்டும் என இம்மாநாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

Pin It