செய்வினை மிரட்டலுக்கு பதிலடி தந்து மக்களை சிந்திக்க வைத்தார் ககத் தோழர் திருப்பூர் சு. பிரசாத். இதுபற்றி அவர் விடுத்துள்ள செய்தி:

நான் வசித்து வருகின்ற திருப்பூர் திருவள்ளுவர் நகர், கல்லூரி சாலை பகுதி முற்றிலும் சோதிடர்கள் வசிக்கும் பகுதியாகும். மேலும் அனைத்து சோதிடர்களும் என் உறவினர்களும் ஆவர். நான் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண் டதனாலும், அக்கொள்கைகளை எனது பகுதி இளைஞர்களுக்கு பரப்பி வருவதனாலும் எனக்கு கடந்த சில வருடங்களாக பழமை வாதிகளிடமிருந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில் என்னை எப்படியாவது பெரியாரின் கொள்கைகளில் இருந்து  பிரிக்க வேண்டுமென்று பல முயற்சிகளை மேற்கொண்டனர். அவைகளில் ஒன்றாக என்னை அச்சுறுத்தலாம் என்று நினைத்து, என் வீட்டின் வாயிற்படி அடியில் செய்வினை வைப்பதாக பல பொருட்களை ஒரு புடவையில் கட்டி விபூதி, குங்குமம் போன்ற பொருட்களை மேலே பூசி, அதை புதைத்து வைத்தனர்; அதன் மேல் ஆணி ஒன்றை அடித்து அதற்குப் பொட்டு வைத்து பூசை போட்டு வைத்துவிட்டு சென்றுவிட்டனர். காலை என் தந்தை அதை பார்த்தவுடன் பயந்து, பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்துக் காட்டியுள்ளார். கூட்டம் சேர்ந்துவிட்டது. சத்தம் கேட்டதால் உறங்கிக் கொண்டிருந்த நான் வெளியில் சென்று பார்த்தேன். உடனே அந்த ஆணியை பிடுங்கி வீட்டின் சுவரில் அடித்து தந்தை பெரியார் நாள்காட்டியை மாட்டினேன்.  பயத்திலும் பதட்டத்திலும் இருந்த மக்கள் இயற்கையாக சிரிக்க ஆரம்பித்தனர். சில மணி நேரத்தில் ஒரு பதாகையை தயார் செய்து அதில், “செய்வினை வைப்போர் கவனத்திற்கு” என்று ஒரு அறிவிப்பை எழுதினேன்.

“இனிமேல் எங்கள் வீட்டில் செய்வினை வைப்போர், பணம் குறைந்தது 100 ரூபாயும், மற்றும் எலுமிச்சை, முந்திரி, திராட்சை போன்ற நல்ல சுவையான பொருட்களையும் சேர்த்து வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். முன்னரே அறிவித்தால் நாங்களே குழி தோண்டியும் வைக்கிறோம். குழி தோண்டுவதற்கு ரூ.50 கூடுதலாகும். செய்வினையை நேரடியாக கையிலும் கொடுக்கலாம். நீங்கள வைத்த ஆணியை காலண்டர் மாட்ட பயன்படுத்திக் கொண்டேன். மிக்க நன்றி. தொடர்புக்கு : பிரசாத் (9952565571)”  என்று எழுதி வீட்டின் முன் வைத்தேன். செய்வினை என்ற பயத்திலும், பதட்டத்திலும், கோபத்திலும் இருந்த மக்கள், இதனைப் படித்துவிட்டு, கேலியும் சிரிப்புமாக பேசினர். இதெல்லாம் பொய். செய்வினை வைப்பதாக இருந்தால் எத்தனை விஷயங்களை செய்யலாம் என்றும் அவர்களுக்குள்ளேயே பேசிக் கொண்டனர். பயம், பதட்டம் போய் சிரிப்பு வந்தது.

Pin It