ஆற்றங் கரைதனிலே - இருள்
அந்தியிலே குளிர் தந்த நிலாவினில்,
காற்றிலுட் கார்ந்திருந்தேன் - வெய்யிற்
காலத்தின் தீமை இலாததினால் அங்கு
வீற்றிருந்தார் பலபேர் - வந்து
மேல்விழும் தொல்லை மறந்திருந்தார்! பழச்
சாற்றுச் சுவைமொழியார் - சிலர்
தங்கள் மணாளரின் அண்டையிருந்தனர்; (ஆற்றங்கரைதனிலே)

நாட்டின் நிலைபேசிப் - பல
நண்பர்கள் கூடி இருந்தனர் ஓர் புறம்
ஓட்டம் பயின்றிடுவார் - நல்ல
ஒன்பது பத்துப் பிராயம் அடைந்தவர்;
கோட்டைப் பவுன் உருக்கிச் செய்த
குத்துவிளக்கினைப் போன்ற குழந்தைகள்
ஆட்டநடை நடந்தே - மண்ணை
அள்ளுவர் வீழுவர் அம்புலிவேண்டுவர்; (ஆற்றங்கரைதனிலே)

புனலும் நிலாவொளியும் - அங்குப்
புதுமை செய்தே நெளிந்தோடும்! மரங்களில்
இனிது பறந்து பறந் தங்கும்
இங்கும் அடங்கிடும் பாடிய பறவைகள் !
தனிஒரு வெள்ளிக்கலம் - சிந்தும்
தரளங்கள் போல்வன நிலவு நட்சத்திரம்!
புனையிருள் அந்திப் பெண்ணாள் - ஒளி
போர்த்ததுண்டோ எழில் பூத்ததுண்டோ அந்த (ஆற்றங்கரைதனிலே)

விந்தை உரைத்திடுவேன் - அந்த
வேளையில் அங்கொரு வாள்விழி கொண்டவள்
முந்த ஓர் பாட்டுரைத்தாள் - அது
முற்றுந் தெலுங்கில் முடிந்து தொலைந்தது!
பிந்தி வடக்கினிலே - மக்கள்
பேசிடும் பேச்சினில் பாட்டு நடத்தினள்
எந்தவிதம் சகிப்பேன்? - கண்ட
இன்பம் அனைத்திலும் ‏துன்பங்கள் சேர்ந்தன; (ஆற்றங்கரைதனிலே)

பொருளற்ற பாட்டுக்களை - அங்குப்
புத்தமுதென்றனர்; கைத்தாளமிட்டனர்;
இருளுக்குள் சித்திரத்தின் - திறன்
ஏற்படுமோ இன்பம் வாய்த்திடக்கூடுமோ?
உருவற்றுப் போனதுண்டோ - மிக்க
உயர்வுற்ற தமிழ்மக்கள் உணர்வுற்ற நல்வாழ்வு?
கருவுற்ற செந்தமிழ்ச் சொல் - ஒரு
கதியற்றுப் போனதுண்டோ அடடா அந்த (ஆற்றங்கரைதனிலே!)

சங்கீத விற்பனனாம் - ஒரு
சண்டாளன் ஆரம்பித்தான் இந்துஸ்தான் ஒன்றை;
அங்கந்தப் பாட்டினிலே - சுவை
அத்தனையும் கண்டுவிட்டது போலவே
நம்குள்ளர் வாய்திறந்தே - நன்று
நன்றென ஆர்ப்பரித்தார்; அந்த நேரத்தில்
எங்கிருந்தோ தமிழில் - ஓர்
இன்பநறுங்கவி கேட்டது காதினில் (ஆற்றங்கரைதனிலே)

'அஞ்சலை, உன் ஆசை - என்னை
அப்புறம் இப்புறம் போகவிடாதடி
கொஞ்சம் இறங்கிடுவாய் - நல்ல
கோவைப் பழத்தினைப் போன்ற உதட்டினை
வஞ்சி, எனக்களிப்பாய்!' - என்ற
வண்ணத் தமிழ்ப்பதம் பண்ணிற் கலந்தென்றன்
நெஞ்சையும் வானத்தையும் - குளிர்
நீரையும், நிலவையும் தமிழர் குலத்தையும் (ஆற்றங்கரைதனிலே)

ஒன்றெனச் செய்ததுவே! - நல்
உவகை பெறச்செய்ததே தமிழ்ப் போசனம்!
நன்று தமிழ் வளர்க! - தமிழ்
நாட்டினில் எங்கணும் பல்குக! பல்குக!
என்றும் தமிழ் வளர்க! - கலை
யாவும் தமிழ்மொழியால் விளைந்தோங்குக!
இன்பம் எனப்படுதல் - தமிழ்
இன்பம் எனத்தமிழ் நாட்டினர் எண்ணுக!