periyar 391“மனித வர்க்கத்திற்கு யந்திரங்கள் விரோதி” என்று நாம் கருதியிருந்த காலமும் அந்தப்படியே யந்திரங்களை எல்லாம் “பிசாசு” என்று பிரசாரம் செய்த காலமும் உண்டு.

மனிதனின் இயற்கை முற்போக்கினுடையவும், அறிவு ஆராய்ச்சி வளர்ச்சியினுடையவும், தத்துவத்தை அறிந்த பிறகும் அவ்வளர்ச்சியை மேலும் மேலும் விரும்புகின்ற நிலையிலும் மக்களின் சரீர கஷ்டத்தை உணர்ந்து அதை குறைக்க வேண்டும் என்கின்ற ஆசையில் முயற்சி கொண்ட போதும் எந்த மனிதனும் யந்திரத்தை வெறுக்க முடியவே முடியாது. அன்றியும் வரவேற்றே ஆக வேண்டும்.

ஏன் என்றால் மனித அறிவின் சுபாவ அனுபவத்தைக் கொண்டும் ஆராய்ச்சியைக் கொண்டும் நாளுக்கு நாள் சுருக்க வழியை கண்டு பிடிப்பதே இயற்கையாகும். அது மாத்திரமல்லாமல் சரீரப் பிரயாசையை குறைத்துக் கொள்ள ஆசைப்படுவதும் இயற்கையாகும்.

இந்த இரண்டு சுபாவ குணங்களும் யந்திரங்களைக் கண்டு பிடித்து கையாடித்தான் தீரும். ஆகவே அறிவும், ஆராய்ச்சியும் இல்லாத இடங்களில் தான் யந்திரங்கள் அருமையாய் இருப்பதும் அலட்சியமாய் கருதுவதுமாய் இருக்குமே தவிர மற்ற இடங்களில் அதாவது அறிவு ஆராய்ச்சி முன்னேற்றமுள்ள இடங்களில் யந்திரத் தாண்டவமே அதிகமாயிருக்கும்.

வியாச ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டதாகிய “மனித வர்க்கத்திற்கு யந்திரங்கள் விறோதி, யந்திரங்கள் “பிசாசு” என்று நாம் கருதியதாக குறிப்பிட்டதானது அறிவும் ஆராய்ச்சியும் கூடாது என்கின்ற எண்ணத்தின் மீதோ இயற்கையோடு போராட வேண்டுமென்றோ அல்லது மனிதன் சரீரத் தால் கஷ்டப்பட்டு, இம்சைப்பட்டுதான் ஆகவேண்டும் என்றோ கருதியல்ல.

ஆனால் மற்றெதைக் கருதி அவ்வபிப்பிராயம் கொண்டோம் என்றால் “யந்திரங்கள் பலபேர், பலநாள் செய்யும் காரியத்தை வெகு சிலபேர் சில நாளில் செய்து விட்டால் மற்ற ஆள்களுக்கும் மற்ற நாள்களுக்கும் ஜீவனத் திற்கு - கூலிக்கு மார்க்கம் எங்கே? அதன் மூலமாய் ஏற்படும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு என்ன சமாதானம்?” என்று சொன்னவர்களின் வார்த்தைகளை நம்பினதாலேயே தவிர வேறில்லை.

இந்தப்படியே இன்றும் இன்னும் அநேகர் நினைத்துக் கொண்டும், நம்பிக் கொண்டும் யந்திரங்களை ஆட்சேபித்து வெறுத்துப் பேசிக் கொண்டுமிருக்கின்றார்கள். ஆனால் இந்தப்படி எண்ணிக் கொண்டிருந்த நாம் அந்தக் காலத்திலும், இந்தப்படி இப்பொழுது எண்ணிக் கொண்டிருக்கின்ற அநேகர் இப்போதும் தங்கள் தங்களைப் பொருத்தவரை தங்கள் தங்கள் காரியத்திற்கு மனித சரீர வேலையைவிட யந்திர வேலையையே விரும்பி அதை உபயோகித்தே தான் வந்தோம், வந்தார்கள், வருகிறார்கள்.

உதாரணமாக கால்கள் இருக்க கட்டை வண்டிகள் இருக்க (கட்டை வண்டியும் இயந்திரம்தான் இருந்தாலும்) யந்திரத்தின் மூலமாய்த் தான் அதாவது ரயிலில் பிரயாணம் செய்தோம். யந்திர மூலமாய்தான் மோட்டா ரில் பிரயாணம் செய்தோம். யந்திர மூலமாய்த் தான் கப்பலிலும் பிரயாணம் செய்தோம். யந்திர மூலமாகவே ஆகாயக் கப்பலிலும் பிரயாணம் செய்தோம்.

அதையே எல்லா மக்களுடைய போக்குவரத்து சாதனமாக ஆக்கவும் ஆசைப்படுகின்றோம். மற்றவர்களும் ஆசைப்படு கின்றார்கள். ஆகவே இதை மனிதத் தன்மையுடன் கூடிய குற்றமற்ற இயற்கை உணர்ச்சி என்றுதான் சொல்லவேண்டுமே தவிர இது எவ்வித குற்றமுள்ளதும் அநியாயமானதும் என்று சொல்லி இதற்காக யாரையும் கண்டிக்கவும் முடியாது. ஜீவ சுபாவமே ஆசையின் உருவமாகும்.

ஆகவே யந்திரம் வேண்டாம் என்பது இயற்கையோடும் முற்போக் கோடும் போராடும் ஒரு அறிவீனமான - பிற்போக்கான வேலையாகுமே தவிர மற்றபடி பயனுள்ள வேலையாகாது. உதாரணமாக 10 மூட்டைகளை ஒரு வண்டியில் ஏற்றி முன்னே நான்கு பேர் இழுத்துக் கொண்டும் பின்னே நான்கு பேர் தள்ளிக் கொண்டும் உடல் வேர்க்க நெஞ்சொடிய மணிக்கு மூன்று மைல் தள்ளாடித் தள்ளாடி இழுத்துக் கொண்டு போவதும், அதே மாதிரியான 25 மூட்டைகளை ஒரு மோட்டார் லாரியில் ஏற்றி ஒரு மனிதன் நோகாமல் நாற்காலியில் உட்கார்ந்து இருப்பதுபோல் உட்கார்ந்து கொண்டு சுக்கானை மாத்திரம் பிடித்துத் திருப்பிக் கொண்டு மணிக்கு 25 மைல் போவதுமான இரண்டு வேலைகளையும் எடுத்துக் கொண்டால் இவற்றுள் சுயமரியாதைக்கு - ஜீவகாருண்யத்திற்கு - மனித சமூகத்திற்கு - முற்போக்கிற்கு மற்ற ஜீவன்களை விட மனிதனுக்கு பகுத்தறிவு என்பதாக ஒரு குணம் அதிகமாக உண்டு என்கின்ற “உயர்” குணத்திற்கு எது ஏற்றது என்று கேட்கின்றோம்.

மற்றும் பாஷைகள் ஆதியில் எழுத்துகள் கூட இல்லாமல் சப்த ரூபமாய் இருந்ததும், பிறகு எழுத்துக்கள் ஏற்படுத்தப்பட்டதும், அவை கூரிய ஆணிகளால் ஏடுகளில் எழுதப்பட்டதும், பிறகு காகிதம் ஏற்பட் டதும், அதில் நாணலில் எழுதினதும், உருக்குத் தகடுகளில் எழுதினதும், பிறகு பௌண்டன் பேனாவில் எழுதினதும், டைப்பில் அடிப்பதும், அச்சடிப்பதும் அந்த அச்சும் மணிக்கு 100 பிரதிகளாக இருந்து இப்போது 10000 பிரதிகள் வீதம் அச்சடிக்கும் படியானதும்.

அதுவும் 12 ஓ 8க்குமாயிருந்த அகல காகிதத்தில் மாத்திரமிருந்து இப்போது 60 ஓ 40க்குமாக அச்சடிக்கக் கூடியதானதுமான காரியங்கள் படிப்படியாய் விருத்தி ஆகியிருக்கின்றதை பார்த்துக் கொண்டும் அதன் பலன்களை அனுபவித்துக் கொண்டும் ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொருவரும் அதை செய்து கொண்டும் இருக்கின்றோம். இவையெல்லாம் யந்திர பலன்கள் அல்லவா? என்றும் இவற்றில் எது தள்ளுவதற்குரியது? என்றும் கேட்கின்றோம்.

இது தவிர மற்றொரு உதாரணத்தைக் கவனிப்போம். சங்கராச்சாரி மடாதிபதி என்று சொல்லப்படும் ஆட்கள் ரயிலில் ஏறுவது நீச்சத்தனம் என்றும், மாட்டுவண்டி, குதிரைவண்டி ஆகியவைகளில் ஏறுவது ஜீவ இம்சை என்றும் கருதிக் கொண்டும் மரக்கட்டையில் பல்லக்கு செய்து அதற்குத் தந்தம், வெள்ளி, தங்கம் முதலிய தகடுகள் போட்டு அதன்மீது தான் ஏறி உட்கார்ந்து கொண்டு தண்டு 1க்கு 4பேர் வீதம் 4தண்டுக்கு 16பேர் ம்கு ம்கு என்று முக்கிக் கொண்டு மணிக்கு 4மைல் வீதம் தூக்கி ஓடுவதை பார்க்கின்றோம். இது யந்திர சம்மந்தமில்லாதது என்று வைத்துக் கொண்டாலும் (கண்டிப்பாய் பார்த்தோமானால் பல்லாக்கு என்பதும் ஒரு யந்திரமே யாகும்) இந்த வாழ்வு காட்டு மிராண்டி உலக வாழ்வா? அல்லது நாகரீக உலக வாழ்வா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

மனிதன் தூக்கு வதை விட்டு மாடோ, கழுதையோ, குதிரையோ, ஒட்டகமோ, யானையோ சுமப்ப தாக வைத்துக் கொண்டாலும், அதுவும் அதற்கு சற்று அடுத்த காட்டு மிராண்டி வாழ்வா அல்லது நாகரீக - ஜீவகாருண்ய வாழ்வா என்றும் கேட் கின்றோம்.

ஆகவே இவைகளிலிருந்து யந்திரம் மனிதனுக்கு அவசியமென்றும் சௌகரியமானதென்றும், ஜீவகாருண்யமுடையதென்றும் முற்போக்குக் கும் நாகரீகத்திற்கும் ஏற்றதென்றும் இயற்கை உணர்ச்சியில் பட்டதென்றும் அறிவு ஆராய்ச்சியின் பயனென்றும் ஒப்புக் கொண்டுதானாக வேண்டும்.

ஆனால் முன்சொல்லப்பட்ட அதாவது “யந்திரங்கள் பெருகுவதால் தொழிலாளிகளுக்கு வேலையில்லாமல் போய் ஜீவனத்திற்கு கஷ்டப்பட வேண்டியதாகுமே” என்பதற்கு சமாதானம் சொல்லியாக வேண்டும்.

இதற்கு பதிலாக நாம் அவர்களைக் கேழ்ப்பதென்ன வென்றால் “தொழிலாளி என்று ஒரு கூட்டம் ஏன் இருக்க வேண்டும்? முதலாளி என்று ஒரு கூட்டம் ஏன் இருக்க வேண்டும்? இது யாருடையக் கட்டளை? என்ன அவசியத்தைப் பொறுத்தது?” என்று அவர்களை நாம் முதலில் கேட்கிறோம்.

பிறகு பாடுபடுபவன், சோம்பேறி, கஷ்டப்படுபவன், சுகப்படுபவன், வேலைசெய்பவன், வேலையின் பயனை அனுபவிப்பவன், ஏமாறுகிறவன் ஏமாற்றுகிறவன் என்பன போன்ற பிரிவுகள் மனித வாழ்க்கையில் இருக்கும் படியாகவே வாழ்க்கைத் திட்டத்தை வகுக்க வேண்டும் என்பதற்கு ஏதாவது அவசியமும் ஆதாரமுமுண்டா என்பது நமது இரண்டாவது கேள்வியாகும்.

மனிதன் தொழில் செய்வது என்பது மனித வாழ்க்கையின் சௌக ரியம் அல்லது தேவையின் அவசியம் என்பதிற்காகவா? அல்லது முத லாளி, மிராசுதாரன் ஆகியவர்கள் வேலை செய்யாமல் சம்பாதிக்கவோ பணம் சேர்க்கவோ வேண்டிய அவசியத்திற்காகவா என்பது மூன்றாவது கேள்வியாகும்.

இம்மூன்று கேள்விகளுக்கும் பதில் அறிந்தோமானால் வேலை என்பதும், வேலையில்லாத் திண்டாட்டம் என்பதும் ஒருவனை ஒருவன் கொடுமைப் படுத்துவதுதான் இந்த முறைகள் என்பதும் விளங்கிவிடும்.
இவை ஒருபுறமிருக்க வேலைகளின் கூலிகளை உயர்த்தி, வேலை நேரத்தைக் குறைத்து, முதலாளிகளின் லாபத்தையும் குறைத்து, ஒரு வரையரை ஏற்படுத்தி, உள்ள நேரத்தையும் கூலியையும் எல்லா வேலைக்காரர் களுக்கும் பங்கு வரும்படியான ஒரு திட்டம் போடுவோமேயானால் அதாவது மோட்டார் பஸ்காரர்கள் யூனியன் வைத்து வருகின்ற பிரயாணிகள் சத்தத்தை உயர்த்தி கிடைத்த வாடகையை எல்லோரும் பங்கிட்டுக் கொள்வதுபோல் செய்தால் வேலையில்லாத் திண்டாட்டம் தானாகவே ஒருவாறு ஒழிக்கப்பட்டு விடுமா இல்லையா என்று கேட்கின்றோம்.

நிற்க, இன்றைய வாழ்க்கை நிலைமையைப் பார்த்தால் மனிதன் வேலை செய்வதற்காகவே பிறருக்கு அடிமையாய் உழைப்பதற்காகவே மனிதன் பிறந்திருக்கிறானேயொழிய சுகப்படுவதற்கில்லையென்றும் ஆதலால் அவன் வேலைசெய்வதற்காக ஒரு தொழில் கண்டு பிடித்துக் கொடுக்க வேண்டுமென்று தான் ஏற்படுகின்றது. இதுவும் தான் வயிற்றுக்கு வேண்டிய அளவு கூட கிடைக்க முடியாத கூலிக்கு முழுநேரத்தையும் செலவு செய்து பாடுபட வேண்டும் என்பதாகக் காணப்படுகின்றது.

இது பகுத்தறிவில்லாத மிருக வாழ்வைவிட மிக மோசமான வாழ்வேயாகும். எப்படி எனில் அவற்றிற்காவது (ஒரு காரண்டி) உத்திரவாதம் இருக்கின்றது. அதாவது அதன் எஜமான் வயிறு நிறைய அதற்கு வேண்டிய ஆகாரம் கொடுக்கக் கட்டுப்பட்டிருக்கின்றான். மனித வேலைக்காரனுக்கோ உத்தர வாதமே கிடையாது. இன்னும் பட்சிகள், காட்டு மிருகங்கள் ஆகியவை களில் எதற்கும் எவ்வித வேலையும் செய்யாமல் வாழும் சவுகரியமிருக்கின்றது.

இப்படி இருக்க பகுத்தறிவு இருக்கும் காரணத்திற்காக மனிதன் 100க்குத் 90பேர் ஆகாரத்திற்கே வேலை செய்ய வேண்டியது என்பதும் அதுவும் காரண்டி இல்லாத அடிமையாய் இருந்து வேலை செய்வது என்பதும், அதுவும் சரியாய் கிடைக்காமல் பட்டினியாய் கஷ்டப்படுவது என்பதும் இயர்க்கைக்கு மாறுபட்ட ஒரு பெரிய அக்கிரமமாகும்.

ஆகவே வேலையில்லாக் கஷ்டம் ஏற்பட்டு ஜனங்கள் பட்டினி கிடந்து பரதவிக்க ஆரம்பித்தால்தான் “தங்களுக்கு பகுத்தறிவும் வன்மையும் இருந்தும் தாங்கள் முட்டாள் தனமாய் பாடுபடுவதும் தங்களைப் போன்ற பிரரால் ஏய்க்கப்படுவதும் ஏன்?” என்கின்ற காரணத்தை உணர முடியும். உணர்ந்து சமநிலையை அடைய முயற்சிக்கவும் முடியும்.

அதை விட்டு விட்டு “முதலாளி தொழிலாளி நிலைமையும், மிராசுதாரர் உழவன் நிலைமையும் உலக வாழ்க்கையின் சௌகரியத்திற்கு அவசியம்” என்பதாகச் சொல்லி அதுவும் “கடவுள் செயலால் முன் ஜென்மத்தின் கர்ம பயனால் தலைவிதியால் ஏற்பட்டது” என்று சொல்லிக் கொண்டு அவற்றை நிலை நிறுத்திக் கொண்டே எவ்வளவு கூலி வாங்கிக் கொடுத்தாலும் மனித வர்க்கத்தினரில் பெரும் பான்மையானவர்களின் கவலையும், தொல்லையும், கொடுமையும் ஒழியவே ஒழியாது.

எப்படி யெனில் ஜாதி வித்தியாசத்தை வைத்துக் கொண்டு எவ்வளவு சமத்துவம் கொடுத்தாலும் அது எப்படி பயன்படாதோ அது போலவே முதலாளி தொழிலாளி முதலிய பாகுபாடுகளை வைத்துக் கொண்டு அவர்களுக்குக் கொடுக்கும் எவ்வித சுதந்திரமும் பயன்படாமலேயே போய்விடுவதோடு கீழ்நிலை மேல்நிலை என்பதும் மாற்ற முடியாததாகிவிடும். ஏனெனில் தொழிலாளி, முதலாளி, உழவன், ஜமீன், மிராசுதாரன் என்பவைகளும் ஒருவித வருணாச்சிரம தர்மமே தவிர வேரல்ல. ஆச்சிரமங்கள் என்றாலே படிகள் நிலைகள் என்பதுதான் கருத்தாகும்.

நமது நாட்டில் பிறவியிலேயே பல படிகள் இருப்பதாலும் அதனா லேயே நாம் சதா கஷ்டப்படுவதாலும் தொழில் வாழ்க்கையில் உள்ள படி களை நாம் கவனிக்கவே நேரமும் ஞாபகமும் இல்லாதவர்களாய் இருக்கின் றோம்.

மனிதன் உண்மையான சமத்துவமடைய வேண்டுமானால் பிறவிப் படிகளையும் தொழில் படிகளையும் கடந்தவனாகத் தான் இருக்க வேண்டும். அவ்விரண்டு படிகளையும் ஒழித்த - அவ்விரண்டு படிகளையும் ஒழிந்த நிலைதான் சமதர்ம நிலையென்று சொல்லப்படுவதாகும்.

நிற்க, இவற்றிற்கெல்லாம் முக்கியமாக இன்னொரு விஷயமுண்டு. அதை சரியாக உணர்ந்து கவனித்தோமானால் மேல்கண்ட கஷ்டங்களைப் பற்றிய கவலைகள் கூட நாம் அதிகம் பட வேண்டிய அவசியமிராது.

அதென்னவெனில், யோசனையில்லாமல் கண்ட கண்டபடி ஜனத்தொகை யை விர்த்தி செய்வதாகும்- பிள்ளைகளைப் பெருவதாகும். 2 ஏக்கரா பூமி உள்ளவன் 100 மாடுகளை வாங்கி வளர்ப்பானேயானால் எப்படி அவனால் அந்த மாடுகள் போதிய தீனி கிடைத்து ரக்ஷிக்கப்பட முடியாதோ அது போலவே மனித சமூகமும் தேவைக்கும் தன்னால் தாங்குவதற்கும் அதாவது காப்பாற்றக் கூடியதற்கும் அதிகமாகவும் தேசத்தின் கால நிலைமைக்கு மேலாகவும் பிள்ளைகளைப் பெற்று கஷ்டப்பட்டு தனது ஆகாரத்தில் பங்கு கொடுத்து கடைசியில் இருவருக்கும் போதுமான ஆகாரமில்லாமலும், போதுமான ஆதரிப்பு இல்லாமலும் கஷ்ட்டப்பட்டுக் கொண்டிருப்பதை ஒழிக்காமல் வீணாய் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் என்ன பயன் என்பது முக்கியமாய் கவனிக்கத் தக்கதாகும்.

இந்திய நாட்டு நிலைமை நமக்குத் தெரிய சுமார் 40, 50 வருஷ காலமாகவே மக்களுக்கு “வேலையில்லாமல்” வெளிநாடுகளுக்கு கூலியாகச் செல்வதே வழக்கமாக இருந்து வந்திருக்கின்றது. இது மாத்திரமல்லாமல் அடிக்கடி பஞ்சமும் கொள்ளை நோயும் வந்திருக்கிறது. இது இந்த நாட்டு சுயமரியாதைக்கே மிகவும் கேடானதாகும். அளவுக்கும், சக்திக்கும் மீறி பிள்ளைகளைப் பெருவதால் யாருக்கு என்ன லாபம்? என்று யோசிக்க வேண்டும்.

“உலகம் விர்த்தியாக வேண்டாமா” என்கின்ற சொல் சுத்த முட்டாள் தனமானதும் சிறிதும் பொருளற்றதுமான சொல்லே ஒழிய அது ஒரு கவனிக்கத்தகுந்த சொல் அல்ல வென்பதே நமது அபிப்பிராயம்.

சம்போக விஷயங்களில் கவலையற்றும், முரட்டுத்தனமாயும், அளவுக்கு மீறியும் நடந்து கொள்வதால் மனிதர்களுக்கு ஏற்படும் வியாதிகளைப் போலவே தான் குழந்தைகள் ஏற்படுவதும் என்பதே தவிர அதற்கும் இதற்கும் சிறிதும் வித்தியாசமே இல்லை.

சம்போக உணர்ச்சி இந்த உலகத்தில் உள்ள ஜீவ ஜந்துக்களில் மனிதனைத் தவிர வேறு எந்த ஜீவனுக்கும் குழந்தை பெறு வதற்காக என்கின்ற எண்ணத்தின் மீது தோன்றுவதே கிடையாது. மனிதன் பகுத்தறிவுக்காரன் என்கின்ற ஆணவத்தால் அவனுக்கு ஏற்படும் அநேக முட்டாள் தனமான செய்கைகளைப் போல் குழந்தை பெற வேண்டும் என்ற முட்டாள் தனமும் ஏற்பட்டு அது ஒரு ஆசையாகி பிறகு அது ஒரு சொத்தாகி பிறகு “மோக்ஷத்திற்கு” உதவும் காரியமாகவுமாகி கடைசியாய் வீண் கஷ்டமும் தொந்தரவும் பட்டு மற்றவர்களுக்கும் தொந்தரவு கொடுத்த தைக் கொடுப்பதைத் தவிர வேறு ஒரு பயனும் இல்லாததாய் முடிந்து விடுகிறது.

மேலும் பிள்ளை பெருவதினாலேயே மொத்த ஜன சங்கியையில் பகுதியான பெண்கள் சமூகம் அடிமையாகி அனேக ஆபத்துகளுக்கும் வியாதிக்கும் உள்ளாகி அற்ப ஆயுளுடன் கஷ்டமும் பட வேண்டியதாகி அவர்களது வாழ்வே மிக்க பரிதவிக்கத்தக்க வாழ்வாக முடிகின்றது.

பெண் அடிமைக்கு காரணம் அவர்கள் பிள்ளை பெறுவதும், அதிலும் அதிகமான பிள்ளைகளைப் பெருவதும் அதனால் உடல் நலிந்து பலவீனமுடையவர் களாவதும், பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டிய பொருப்பு தங்களுக்கே என்று கருதுவதால் சுதந்திரமும் வீரமும் இன்றி அடிமையாவதுமான காரியங்களுக்கு ஆளாக வேண்டியவர்களுமாகிறார்கள்.

பெண்கள் விஷயம் இப்படி இருப்பதோடு பொதுவில் வேலையில்லா கஷ்டத்தை நீக்க வும் மக்கள் கவலையும் தொல்லையும் கஷ்டமும் இல்லாமல் இருக்கவும் பிள்ளைப் பேற்றைக் குறைப்பது என்பது ஒரு தக்க வழியாகும்.

ஒரு சமயம் இவையெல்லாம் யாருக்காவது பிடித்தமற்றதாகுமேயானால் வேறு இன்னம் ஒரே ஒரு வழிதான் உண்டு என்று சொல்லுவோம். அதென்னவெனில் எவனொருவன் தன் தேவைக்குமேல் சொத்தும் ஸ்திதியும் வைத்திருக்கின்றானோ அவனை குற்றவாளியாக்கி திருடனுக் குண்டான தண்டனையைக் கொடுப்பது என்கின்ற ஆக்ஷியை ஏற்படுத்து வதுதான்.

இந்த ஆக்ஷி ஏற்பட்டுவிட்டால் பிறகு யாருக்கு வேலை இருந்தா லும் யாருக்கு வேலை இல்லாவிட்டாலும் ஜீவனம் சரியாகும். இதற்காக அதிக கவலையும் படவேண்டியதில்லை. இந்தப்படிக்கெல்லாம் இல்லாமல் நாட்டு செல்வத்தை எல்லாம் ஒருவன் தன்னிடமே வந்து சேரும்படியான முறையை மனித வாழ்க்கைக் கொள்கைகளாக வைத்துக் கொண்டு பல பேர்கள் பட்டினி இருந்து கொண்டு இருப்பதும், ஏன் பட்டினியாயிருக்கிறார்கள் என்று கேட்டால் வேலைகள் கிடைக்காததால் பட்டினியாய் இருக்கின்றார்கள்.

ஆதலால் யந்திரங்களை எல்லாம் ஒழித்து விட்டு கடப்பாரையும், சம்மட்டியும் வாங்கிக் கொடுத்து வேலை வாங்க வேண்டுமென்றும் சொல்வதானால் இது எவ்வளவு அக்கிரமமானதும் அயோக்கியத்தனமானதும் திருட்டுத்தனமானதுமான காரியம் என்பது யோசித்தால் விளங்காமல் போகாது.

ஆகையால் நாட்டுக்கும் முற்போக்குக்கும் மனித சமூக நாகரீக வளர்ச்சிக்கும் யந்திரங்கள் மிகவும் முக்கியமானது என்று சொல்வ தோடு அவற்றின் மூலம் மக்கள் சரீரப் பிரயாசையில் இருந்து விடுதலையாக நினைப்பதுவும் இயற்கையும், அவசியமும் ஆனதென்றும் சொல்லுவதோடு எஜமான், வேலைக்காரன், முதலாளி, தொழிலாளி, ஜமீன்தாரன், குடியானவன் என்பவைகளான படிகள் நிலைத்திருக்க வேண்டுமானால் மாத்திரம் தான் ஒரு நாட்டுக்கு யந்திரம் எதிரியே ஒழிய மற்றபடி சமதர்மம் விரும் பும் நாட்டுக்கு யந்திரமே சரியான அவிழ்தமாகும் என்றும் தைரியமாய்ச் சொல்லுவோம்.

(குடி அரசு - தலையங்கம் - 14.12.1930)