ராயல் கமிஷனை பகிஷ்காரம் செய்ய வேண்டும் என்கின்ற கூச்சல் பத்திரிகைகளில் வரவர பெரிய எழுத்துக்களால் எழுதப்படுகின்றதே தவிர காரியத்தில் குறைந்து கொண்டே போகின்றது. பொதுவாக கூறுமிடத்து மகமதிய பொது ஜனங்கள் சற்றேறக்குறைய யாவரும் பகிஷ்காரத்திற்கு விரோதமாகவே இருக்கின்றார்கள்.

periyar 327உத்தியோகப் பேய் பிடித்தவர்களும் அரசியல் வாழ்வுக்காரர்களுமான ஒரு கை விரலுக்குள் அடங்கின சில பேர்கள் மாத்திரம் தான் பகிஷ்காரப் புரட்டில் சேர்ந்திருக்கிறார்கள். மற்ற மகமதிய தலைவர்கள் எல்லோரும் பகிஷ்காரத்தை வெறுக்கிறார்கள். அதுபோலவே கிறிஸ்தவர்களிலும் மேல் கண்ட கூட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ ஜார்ஜ் ஜோசப்பு தவிர வேறு பெயர்கள் பகிஷ்கரிக்க காணப்படுவதாய் சொல்வதற்கில்லை.

இவ்விரு சமூக பொதுக் கூட்டங்களும் எல்லா பத்திரிகைகளும் பகிஷ்காரத்தை பலமாய் கண்டிக்கின்றன. இது தவிர இந்தியா முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்ட வகுப்பார்களாகிய ஆதிதிராவிடர்கள் ஆதி இந்துக்கள் முதலிய சமூகம் அடியோடு பகிஷ்காரத்தை வெறுக்கின்றது.தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் பார்த்தாலும் எத்தனை பேர்கள் பகிஷ்காரத்தை ஆதரிக்கிறார்கள் என்பதும் எத்தனைபேர் அதில் சேரவில்லை என்பதும் தெரியவரும்.

இப்படியிருக்க அரசியலின் பேரால் பிழைக்கும் தலைவர்கள் என்போரும் பத்திரிகைகளும் உலகமே பகிஷ்காரத்தை ஆதரிக்கின்றது என்று மனதறிந்த பொய்யை பரப்புகின்றார்கள். இவர்களில் பார்ப்பனர்களைப் பற்றியும் பார்ப்பனப் பத்திரிகைகளைப் பற்றியும் நமக்கு கவலையில்லை. பார்ப்பனரல்லாத பத்திரிகைகளிலும் சில இக்கூட்டத்தில் கோவிந்தாப் போட்டு வருவது மிகவும் பரிகசிக்கத் தகுந்த காரியமாகும். உதாரணமாக ‘தமிழ்நாடு’ பத்திரிகை முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறது.

காங்கிரஸ் என்பது பார்ப்பனர்களின் சூழ்ச்சி இயக்கம் என்றும் அவர்கள் அதை வசப்படுத்திக் கொண்டு தங்கள் இஷ்டப்படி மக்களை ஆட்டி வருகின்றார்கள் என்றும் ஒப்புக் கொண்டவர்கள். காங்கிரஸ் அபிப்பிராயத்தைப் பொதுஜன அபிப்பிராயம் என்று சொல்ல முன்வர மாட்டார்கள் என்றே நினைக்கின்றோம். தவிர மிதவாதிகள் என்போர்கள் நமது நாட்டில் மூன்றே முக்கால் பேர்வழிகள்தான். அவர்களும் தேசத்தைக் காட்டிக் கொடுத்த விபீஷணாழ்வானுக்குச் சமானமானவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள். மிதவாதிகள் அபிப்பிராயத்தை பொது ஜன அபிப்பிராயமென்று சொல்ல முன்வர மாட்டார்கள் என்று நினைக்கின்றோம். மற்றபடி வேறு யார் யார் பகிஷ்காரத்தை ஆதரிக்கின்றார்கள் என்று பார்த்தால் “மூன்றில் ஒருவர் மாத்திரம் ஆதரிக்கவில்லை பாக்கி இரண்டுபேர் ஒப்புக் கொள்ளவில்லை” என்று சொல்லும் பழமொழி போல்தான் இருக்கின்றது. இந்த நிலையில் இந்தியா ஒட்டுக்கும் பகிஷ்காரப் பிரசாரம் செய்ய கமிட்டி நியமிக்கப்பட்டிருக்கின்றது என்று சில ஆசாமிகள் பெயர் விளம்பரமாயிருக்கின்றது. அதில் மொத்தம் ஆசாமிகள் 10; இதில் 6 பேர்கள் சென்னைவாசிகள்; அதில் மூன்று பேர் பார்ப்பனர்கள்; அதிலும் ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார், ஏ.ரங்கசாமி அய்யங்கார், இவர்கள் யோக்கியதை வெளியாக்கவும் அவர்கள் எவ்வளவு நாணயமும் தேசபக்தியும் பார்ப்பனரல்லாதார் விஷயத்தில் எப்படிப்பட்டவர்கள் என்று அறிய காகிதத்தையும் இங்கியையும் சிலவழிக்காமலே ஜனங்களுக்குத் தெரியக்கூடும் என்று நினைக்கின்றோம்.

மற்றொரு பார்ப்பனரான ஸ்ரீ சிவராவோ ஸ்ரீமதி பெசண்டம்மையாருடைய சிஷ்ய கோஷ்டியில் சேர்ந்தவர். அவருக்கு எவ்வளவு சுவாதீன புத்தி இருந்து வந்திருக்கின்றது என்பதை விளக்க வேண்டியதில்லை. மற்ற மூன்று பேர் என்பவர்கள் ஸ்ரீமதி பெசண்டம்மையார், ஸ்ரீமதி ஜீனராஜதாச, ஸ்ரீமதி கசின்ஸ் ஆகிய பெண்மணிகள். இவர்கள் மூவரும் சரீரம் மூன்றாயிருந்தாலும் பிரம்மஞான சங்க வைபவத்தில் மனம் ஒன்று என்றே சொல்ல வேண்டும். ஆக கமிட்டி மெம்பர் 10 பேரில் சென்னைக்காரர்களே மெஜாரிட்டியான ஆறுபேர் ஆவார்கள். அம் மெஜாரிட்டியும் ஐயங்கார் பிரதிநிதியும் ஐயர் பிரதிநிதியுமான பெசண்ட்டம்மையும் ஆகிய இருவர் அபிப்பிராயமே இந்தியா ஒட்டுக்கும் ஏற்படுத்தின கமிட்டிக்கு மெஜாரிட்டி ஆகி விட்டது. மீதி நால்வர்களில் நால்வர்களும் வெளிநாட்டு மகமதியர்கள் அந் நால்வர்களும் மகமதிய சமூக இயக்கங்களுக்கும் மகமதிய சமூக பத்திரிகைகளுக்கும் விரோதமான கொள்கைக்காரர்கள். இதில் சிலர் அவரவர்களுக்கு அவரவர்கள் பிரதிநிதிகள் என்று கூட சொல்ல முடியாது.

மகமதிய சமூகம் இவர்களை எவ்வளவு தூரம் பின்பற்றுகின்றது என்பதும் இவர்களது அபிப்பிராயத்திற்கு எவ்வளவு தூரம் மகமதிய சமூகம் மதிப்பு கொடுத்து வந்திருக்கின்றது என்பதும் அவரவர்களுக்கே தெரியும்.

எனவே இந்த கமிட்டி முன்னே பகிஷ்கரிக்க வேண்டும் என விடுத்த சுற்றறிக்கையில் கையெழுத்து போட்ட கனவான்களுக்கு எந்த விதத்திலும் வித்தியாசப்பட்டவர்களே அல்ல. இவர்கள் போடும் சத்தத்தை நம்பி இந்தியாவே பகிஷ்காரத்திற்கு ஆதரவளிப்பதாக நினைப்பது எவ்வளவு பயித்தியகாரத்தனமாகும் என்பது நாம் சொல்லாமலே விளங்கிவிடும்.

இப்படியிருக்க சென்னையில் நடைபெறும் ‘லோகோபகாரி’ என்னும் ஒரு வாரப்பத்திரிகை இந்த புரட்டுக் கூட்டத்தில் தன்னையும் சேர்த்து கொண்டதின் கருத்து நமக்கு விளங்கவில்லை. இவ்வளவு மோசமான நிலைமைக்கு அப்பத்திரிகை இதுவரை வந்ததாக நமக்கு ஞாபகமில்லை. அது சோதனை என்ற தலைப்பின் கீழ் எழுதுவதாவது:-

“மிதவாதிகளும் அமிதவாதிகளும், இந்துக்களும், முஸ்லீம்களும் பகிஷ்காரத்தில் ஒன்றுபட்டு வருகிறார்கள். ஒரு சில சுயநலவாதிகளும் உத்தியோக வேட்டைக்காரர்களும் மட்டும் இதில் வேறுபட்டிருக்கின்றார்கள்” என்று எழுதியிருக்கின்றது.

இது யார் யாரை மிதவாதி, அமிதவாதி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றதென்றும் யார் யாரை சுயநலவாதி உத்தியோக வேட்டைவாதி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றதென்றும் நமக்கு விளங்கவில்லை.

லோகோபகாரிக்கு ஸ்ரீசீனிவாச அய்யங்கார், ரங்கசாமி அய்யங்கார், சிவசாமி அய்யர், சிந்தாமணி அய்யர் முதலானவர்கள் சுயநலமற்றவர்களாகவும் உத்தியோக வேட்டைக்காரர்கள் அல்லாதவர்களாகவும் ஆகி விட்டதோடு பகிஷ்கரிக்கக்கூடாது என்று சொல்லுபவர்கள் ஒரு சிலராகவும் சுயநலவாதிகளாகவும், உத்தியோக வேட்டைக்காரர்களாகவும் ஆகிவிடும்படியான அவ்வளவு பெரிய மாறுதல் ஏற்பட்ட ரகசியம் நமக்கு தெரியவில்லை. ‘லோகோபகாரி’ யோக்கியப் பொறுப்புள்ள பத்திரிகையாயிருக்குமானால் பகிஷ்கரிக்கக் கூடாது என்கின்றவர்களை உத்தியோக வேட்டையும் சுயநலமும் உள்ள ஒரு சிலரின் பெயரைக் குறிக்குமென்று எதிர்பார்க்கின்றோம்.

இந்த நிலைக்கு ‘லோகோபகாரி’ வர நேர்த்ததற்கு நாம் மிகுதியும் இரங்குகின்றோம். ‘லோகோபகாரி’யின் தற்கால நிலை ‘தமிழ்நாடு’ பத்திரிகையை எவ்வளவு நல்லதாக்கி விட்டது.

‘தமிழ்நாடு’ பத்திரிகைக்கும் ஒரு சகோதரன் இருக்கின்றது என்பதை காட்டிவிட்டது. பெசண்டம்மையார் ஆதிக்கம் வலுக்க வலுக்க இன்னமும் யார் யார் நிலைமை எப்படி ஆகும் என்பது முடிவுகட்ட முடியாததுதான்.

நமது நாடு எவ்வளவு பைத்தியகாரத்தனத்தில் இருக்கின்றது என்பதும், யார் வேண்டுமானாலும் பாமர மக்களை ஏமாற்றக்கூடும் என்ற நிலையில் இருக்கின்றது என்பதையும் அறிய இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டுமென்று கேட்கின்றோம்.

ஒத்துழையாமையை வஞ்சித்த ஆள்களிடம், அதை ஒழித்த ஆள்களிடம், நல்ல சமயத்தில் மோசம் செய்த ஆள்களிடம், ஒரு சமூகத்தாரின் ஆதிக்கத்தை அழித்து அடிமைப்படுத்துவது தான் எங்கள் கொள்கை என்று சொல்லுகின்ற ஆள்களிடம், அதையே காங்கிரஸ் கொள்கை என்கின்ற ஆள்களிடம் அபிமானம் ஏற்பட்டு அவர்களை பின்பற்ற வேண்டிய அவசியம் சிலருக்கு வருமானால் அவர்களைப் பின்பற்றி நாடு வர வேண்டுமா என்று கேட்கின்றோம்.

ஒரே ஒரு விஷயத்தை மாத்திரம் சொல்லி இதை இப்போது முடிக்கின்றோம்.

இப்போதைய பகிஷ்கார இயக்கம் மகமதியர்களுக்கும் தென்னாட்டு பார்ப்பனரல்லாதார்க்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் விரோதமான பலனை தரத்தக்கது என்று அந்த கருத்தைக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டது என்றும் உறுதியாய்ச் சொல்லுவோம். இந்த கமிஷனால் மேல்கண்ட கூட்டத்தாரின் சுயமரியாதைக்கு ஏதாவது அனுகூலம் ஏற்படுமானால் அந்த சந்தர்ப்பத்தை யாரும் இழந்து விடக்கூடாது. அரசியல் சம்பந்தமான உரிமைகள் என்பது நமக்கு வருவதைவிட வராதொழிவதே மேலானதாகும். ஏனெனில் எது வந்தாலும் அது உத்தியோகமாகத்தான் இருக்கும். பார்ப்பனர்களுக்கும் ஆங்கிலம் படித்த கூட்டத்தார் என்கின்ற சிலரின் சுயநலத்திற்குந்தான் உதவும். பாமர மக்களுக்கு யாதொரு பலனும் கண்டிப்பாய் உண்டாகாது என்பது உறுதி. நரகம் வரினும் சரி, தேசத்துரோக பாவம் சுற்றினாலும் சரி, சுயநலப்பழி வரினும் சரி ஒன்றுக்கும் அஞ்சாமல் சுயமரியாதை அடைய முயல்வதே முக்கிய கடமையாகும்.

(குடி அரசு - தலையங்கம் - 04.12.1927)