நான் இவ்வூருக்கு இதற்கு முன் இரண்டு தடவை வந்திருக்கின்றேன். இது மூன்றாம் தடவை. தலைவர் சொல்லியபடி நான் இச்சுயமரியாதை இயக்கத்தைக் குறித்து பல இடங்களில் பேசி வருகிறேன். நாம் உண்மையில் விடுதலை பெற்று வாழ விரும்புவோமானால் சுயமரியாதை உணர்ச்சி நமக்கு வேண்டும். மற்ற நாடுகளில் விடுதலைப் பெற்று வாழும் மக்களிடம் சுயமரியாதை உணர்ச்சியே மிகுந்திருக்கிறதென்பதைச் சரித்திர வாயிலாகக் காணலாம். மற்ற நாடுகள் 300 அல்லது 400 வருஷங்களுக்கு மேல் அடிமைப்பட்டு சுயமரியாதை கெட்டு வாழ்ந்து வந்ததாகத் தெரியவில்லை. ஆனால் நாம் பல ஆயிரம் வருஷங்களாக விடுதலையின்றி அடிமைகளாகத்தான் இருந்து வந்திருக்கிறோம் என்பது நன்கு விளங்கும். முன்னர் சுமார் 500 வருஷங்களுக்கு முன் வெள்ளையர்கள் இருந்த நிலைமையையும், இப்போது அவர்கள் இருக்கும் நிலைமையையும் கவனிக்கையில் அவர்கள் எங்ஙனம் மாறுதலடைந்து வந்திருக்கிறார்கள் என்பது விளங்கும். இவர்கள் அக்காலத்தில் நம்மைவிட பக்தி, மூடக் கொள்கை முதலிய படுகுழிகளில் ஆழ்ந்து கிடந்தார்கள். நாம் நம் நாட்டில் நாகரிகம் படைத்திருந்த காலத்தில் அவர்கள் காட்டுமிராண்டிகளாக, மீன், நண்டு, புழு, பூச்சி முதலியவைகளைப் புசித்துக் கொண்டு அநாகரீகர்களாகத் திரிந்து கொண்டிருந்தார்கள். அத்தகைய ஜாதியார்கள்தான் நம்மை அநாகரீகமுள்ளவர்கள், மிலேச்சர்கள் என்று பலவகை மொழிகளை நம்மீது சாற்றி இழிவுபடுத்தி, அடிமைகளாக்கி ஆண்டு வருகிறார்கள்.

periyar 350பல நூற்றாண்டுகளாக நாம் அடிமைக் குழியிலேயே இருந்தும், நாம் விழித்தெழுந்து நமது குறைகளை தீர்த்துக் கொள்ள முன்வரவில்லை. சுயராஜ்யம், விடுதலை என்றுதான் கத்திக் கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் நாளுக்கு நாள் பலமாகக் கிளர்ச்சி செய்து கொண்டும் கூக்குரல் செய்து கொண்டு வந்தும் நாளுக்கு நாள் நாம் பின்னோக்கியே செல்கின்றோம். இத்தகைய கூக்குரல்களைக் கேட்டுக் கேட்டு எதிரிகள் விழித்துக் கொண்டு விட்டார்கள்.

இதற்கெல்லாம் காரணம் நமது மதந்தான். மத சம்மந்தமான மூடக் கொள்கைகள், அசட்டுத்தன்மை, குருட்டுத்தனம் முதலியவைகளால் நாம் இவ்வளவு கேவல ஸ்திதிக்கு வந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு மதஸ்தர்களையும் எடுத்துக் கொண்டால், அந்தந்த மதஸ்தர்களுக்கு தங்களுக்கென ஆள தேசமிருப்பதல்லாமல், சில மதஸ்தர்கள் பிற நாட்டையும் ஆண்டு வருகிறார்கள். நாம் நம்முடைய நாட்டையாவது ஆள சக்தி இல்லாவிட்டாலும் அடிமைகளாகவாவது இல்லாமல் இருக்கின்றோமா என்று பாருங்கள்! நேற்று தோன்றிய மதங்களெல்லாம், தங்களுடைய மதஸ்தர்களை ஆண்டு வரும் பொழுது நம்முடைய மதஸ்தர்கள்தான் நம்மை ஆண்டு கொள்ள முடியாமல் அடிமைகளாயிருக்கின்றனர்.

நமது மதம் எத்தனையோ கோடி வருஷங்களுக்கு முன் கடவுளால் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. நம்முடைய மதத்திலுள்ள கொள்கைகளும், குருட்டுத்தனங்களும், நாம் அக்கொள்கைகளைப் படிக்கக் கூடாது என்பன போன்ற நிபந்தனைகளும்தான் நம்மை இக்கதிக்கு கொண்டு வந்து விட்டு விட்டன என்று சொல்வேன். நம் ‘ஹிந்து மதம்’ என்று சொல்லும் மதத்தை சற்று ஆராய்வோம். முதலில் ‘ஹிந்து’ என்கிற வார்த்தையே நம்முடைய வார்த்தையல்ல. அவ்வார்த்தை நம்முடைய புராண ஆகமம் முதலியவைகளில் எங்கேனும் சொல்லப்பட்டிருக்கின்றதா என்று பார்த்தால் இல்லவே இல்லை. எங்கிருந்தோ அந்த ஹிந்து என்ற வார்த்தை நம்முடைய மதத்துக்கு பெயராக புகுந்துவிட்டது. நம் நாட்டு மதத்துக்கும் பழக்க வழக்கங்களுக்கும் பெயர் நம்முடைய பாஷையில் அன்றோ இருக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் ‘ஹிந்து’ என்னும் வார்த்தையே நம்முடைய பாஷையில் கிடையாது. ‘ஹிந்து’ என்னும் பதத்துக்கு என்ன பொருள் என்று கேட்டால் ஒருவருக்குமே தெரியாது. இப்படிப்பட்ட மதத்தை கடவுளால் ஏற்படுத்தப்பட்ட மதம், பெருகைளையும் அற்புதங்களையும் உடையது என்று நம்மவர்கள் பெருமை பேசிக் கொள்கின்றனர்.

நேற்றைக்குப் போய் மற்றொரு மதத்தில் சேர்ந்த ஒருவனைக் கேட்டால் தன்னுடைய மதம், கொள்கை, தத்துவம் முதலியவைகள் இன்னின்னவென்பதை உடனே கூறிவிடுவான். அவன் தீண்டாதவனாயிருந்தாலும் அம்மதத்தில் மற்றவர்களுக்குரிய சமத்துவம் சகோதரத்துவம் முதலிய சகல உரிமைகளும் தாராளமாய் வழங்கப்படுகின்றன. அவர்களுடைய வேத புஸ்தகங்கள் பல பாஷைகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு இலவசமாய் மக்களுக்கு மூலை முடுக்குகளிலும் கொண்டுவந்து கொடுக்கப்படுகின்றன. ஆனால் நம்முடைய மதத்துக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா வென்று ஒருவரைக் கேட்டால் அவருக்கு ஒரு ஆதாரமே கிடையாது என்று தான் சொல்வார். ஏனென்றால் ஹிந்து மதத்திற்கு ஆதாரம் என்று சொல்லப்படும் ஆகமம், புராணம், வேதம் முதலியவைகளை ஒரு சாரார் தவிர மற்றவர்கள் படிக்கக் கூடாது, கேட்கக்கூடாது, மீறிச் செய்தால் நாக்கை அறுத்து விடவேண்டும், காதில் ஈயத்தை காய்ச்சிவிட வேண்டுமென்று பல நிபந்தனைகளை நம் மதத்தில் ஏற்படுத்தி இருக்கின்றனர். இம்மாதிரியான மதத்தை ஒப்புக் கொள்கிறவன் அனுஷ்டிக்கிறவனை அறிவாளி என்றாவது, யோக்கியன் என்றாவது சொல்லக் கூடுமா? இனி வேதங்களை ஒப்புக் கொள்ளுகிறவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். அப்படியானால் எத்தனையோ கொள்கைகளையும், பெருமைகளையுமுடைய ஒரு மதம் மக்களுக்கு எவ்வளவு தூரம் கல்வி, அறிவு முதலிய துறைகளில் எவ்வளவு நன்மை செய்திருக்கிற தென்பதைப் பாருங்கள். இவ்வளவு காலமாக இருந்து வந்த ஒரு மதத்திலுள்ள மக்களில் 100 -க்கு 5 பேருக்குக்கூட கையெழுத்துப் போடத் தெரியாது.

இன்னும் மற்ற மதஸ்தர்கள் தங்களுடைய மதத்தைப் பற்றி எவ்வளவு தூரம் பிரசாரம் செய்து வந்திருக்கிறார்கள். நாம் எவ்வளவு தூரம் பிரசாரம் செய்து வந்திருக்கிறோமென்றும் கவனியுங்கள்! மற்ற மதஸ்தர்கள் தங்களுடைய மதத்தின் பேரால் எவ்வளவு செலவு செய்து வருகிறார்களென்று பார்த்தால் நாம் செலவு செய்வதில் 20 -ல் ஒரு பங்கு கூட அவர்கள் செய்வதில்லை. நம்முடைய ஹிந்து கோவில்களுக்கு வருஷத்தில் எவ்வளவு வருமானம் வருகிறதென்று பார்த்தால் அக்கோவில்களின் கணக்குகளிலிருந்தே விளங்கும். லக்ஷம் லக்ஷமாக வந்து குவிகின்றன. நமது சென்னை மாகாணத்தில் மட்டும் கோவில்களின் வருமானம் இரண்டு கோடி ரூபாய் என்று சர்க்கார் கணக்கு வைத்திருக்கிறார்கள். இன்னும் ஸ்தல யாத்திரைக்காரர்களின் செலவுதான் என்ன! கோவில் கணக்குகளைப் பார்த்தால் அரிசி, உப்பு, புளி, பாதாம்பருப்பு, திராக்ஷை முதலியவைகள்தான் இவ்வளவு இவ்வளவு என்று எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் சமையல் பண்ணி சாப்பிடுகிறவர்கள் யார் என்று பாருங்கள். இவ்விதம் ஒரு வழியில் வீண் செலவு நடந்து கொண்டிருக்கையில் நம் நாட்டில் விவசாயம் கைத் தொழில் முதலியவைகளை விருத்தி செய்வதற்கு பணமில்லையென்று அழுது கொண்டிருக்கிறோம். இவ்விதம் கோவில்களில் செலவாகும் செலவுகளை யாராவது கவனித்தார்களா? இதை கவனிக்கத்தான் இந்து மத பரிபாலன போர்டார் சட்டம் செய்தார்கள். மற்ற மதஸ்தர்கள் இங்ஙனம் கோவில்களில் வீண் செலவு செய்யாமல் மக்களின் கஷ்ட நிவர்த்திக்கும் அறிவை விருத்தி செய்யப் பள்ளிக் கூடங்களும் ஏற்படுத்தி மக்களை மேன்மேலும் அபிவிருத்தியடைய செய்கின்றார்கள்.

இனி நம் மதத்தின் பெயரால் நம்மை அடிமைப்படுத்துவதும் விடுதலையடையத் தடையாயிருப்பதுமான நமது மதச்சடங்குகளை கவனிப்போம். கருத்தரித்த நாள் முதல் கொண்டு கட்டையில் வைத்ததற்குப் பின்னும் கற்பகோடி வருஷங்கள் வரை சடங்குகள் தோன்றி விடுகின்றன. அர்த்தமற்ற, நிபந்தனையற்ற சடங்குகளின் பேரால் புரோகிதப் பார்ப்பானும், பஞ்சாங்கப் பார்ப்பானும் பொய்யும் சூதுகளையும் சொல்லி பணம் பறித்துச் செல்கின்றார்கள். கலியாண காலங்களிலும், கருமாதி காலங்களிலும் புரோகித பார்ப்பானும் அரிசி, பருப்பு, இலை முதலியவைகள் மூட்டை மூட்டைகளாக பறித்துக் கொண்டு செல்கின்றார்கள், ஒருவனுடைய மரணத்திற்கு பின்னும், அவனை மோட்ச லோகத்துக்கு தான் அனுப்பி விடுவதாக அவனுடைய குடும்பத்தார்களிடம் பொய் வார்த்தைகள் கூறி வருஷா வருஷம் பணம் பறித்துக் கொண்டு செல்கின்றனர். இதெல்லாம் நமது மூடக் கொள்கையும் மூடத் தன்மையுமன்றோ! ஆகையால் இப்புரோகித மதத்தை ஒழித்தாலன்றி நாம் ஒரு நாளும் முன்னேற முடியாது. மற்ற நாடுகளில் பிற மதஸ்தர்களும் தங்களுடைய புரோகித மதத்தை ஒழித்த பின்புதான் அந்நாட்டு மக்கள் விடுதலை அடைந்திருக்கின்றனர்.

இனி மதாச்சாரியர்கள், குருமார்கள் முதலியவர்களைக் கவனிப்போம், இவர்கள் குதிரைப் பல்லக்கு முதலியவைகளைப் போட்டுக் கொண்டு கொள்ளைக்காரர்களைப் போல ஊர் ஊராய் வந்திறங்கி, அங்குள்ள உத்தி யோகஸ்தர்கள், மிராசுதார்களின் செல்வாக்கை அனுகூலமாகக் கொண்டு மூட்டை மூட்டையாக பணத்தைப் பலரிடமிருந்து பறித்துக்கொண்டு செல்கின்றனர். இவர்கள் சொல்லிவாங்கும் வகைகளுக்காவது அப்பணத்தை செலவு செய்கின்றார்களா பாருங்கள். இல்லையே. அத்தகைய மடாதிபதிகள், குருமார்கள் பணத்தைக் கொண்டு போய் என்ன செய்கிறார்கள்? அவர்கள் யோக்கியதை என்ன? அவர்கள் நமக்கு என்ன உபதேசம் செய்கின்றார்கள்? என்பதையே நாம் கவனிப்பதில்லை. இவர்களெல்லாம் குலகுருக்களென ஆடம்பரத்துடன் எவ்வித யோக்கியதையும் இலட்சணங்களுமின்றி ஊர் ஊராய் கம்பீரமாய் வருகின்றனர். இவர்களிடம் அயோக்கியத்தனமே நிறைந்திருக்கிறது.

இனி, நாம் வணங்கும் தெய்வங்களைப் பற்றிச் சிறிது ஆராய்வோம். சில்லரைத் தேவதைகளெனப் பெயர் பெற்ற மாடன், கருப்பன் முதலிய சாமிகளுக்கு கள், சாராயம் முதலியவைகளை வைத்து ஆராதனை செய்து வருகிறோம். இனி பெரிய தெய்வங்களையுடைய கோவில்களுக்குப் போய்ப் பார்த்தால் அங்கு தாசிகளை நடனமாடச் செய்திருப்பது முதலிய ஆபாசமான பழக்கங்களை உண்டு பண்ணி ஆடம்பரமான வகைகளில் வீணாக விரையம் செய்யப்படுகிறது.

இனி நம் ஹிந்து மதஸ்தர்கள் அணிந்து கொள்ளும் சின்னங்களின் அர்த்தமென்ன என்று கேட்டால் ஒருவருக்கும் ஒன்றுமே தெரியாது. இதையெல்லாம் பொது ஜனங்களுக்கு உணர்த்த எவரேனுமிருக்கின்றனரா? இம் மாதிரியான அர்த்தமற்ற சடங்குகள் மூடக் கொள்கைகள் முதலிய ஊழல்களால் எத்தனை ஆயிரம் ஜனங்களை நாம் பிற மதங்களுக்கு பலி கொடுத்திருக்கின்றோம் என்று கவனியுங்கள். ஒரு ஹிந்து அரசரால் ஆளப்படும் திருவாங்கூர் ராஜ்ஜியத்தில் சுமார் 35 வருஷங்களுக்கு முன் இருந்த மூன்று லக்ஷம் கிறிஸ்தவர்கள் இப்போது 15 லக்ஷமாகப் பெருகிவிட்டனர். இப்படி நாம் நமது மதத்தின் பேரால் பலரை அன்னிய மதங்களுக்கு அனுப்புவதல்லாமல் ஆயிரக்கணக்கான நமது சகோதரர்களை உயிருடனேயே “சனீஸ்வரர்களாகிய பிராமண எமன்களுக்கு” ஆளாகும்படி செய்து வருகிறோம்.

இனி மதத்தின் பெயரால் சிறு பெண்களைக் கோவில்களில் பொட்டுக் கட்டி விபசாரத்துக்கு விட்டு வைப்பதை தடுக்கும் பொருட்டு சென்னை சட்டசபையிலும் வெளியிலும் பலத்த கிளர்ச்சி செய்யப்பட்டது. இதைப் பெரும்பாலோரான பிராமணரல்லாதார் ஆதரித்தும் சத்தியமூர்த்தி போன்ற பிராமண அரசியல் தலைவர்கள் தேவதாசிகளைக் கோவில்களில் பொட்டுக் கட்டி வைப்பது மத சம்மந்தம் என்று அதை எதிர்த்து பிரசங்கங்கள் செய்தனர். இவர்களெல்லாம் போலிகளென்றும், வயிற்றுப் பிழைப்பின் பொருட்டு பணம் பறித்துத் தின்று திரிபவர்கள் என்றுந்தான் சொல்லுவேன். இதனால்தான் ஸ்ரீமேயோ போன்ற பிற நாட்டார்கள் நம்மை இழிவுபடுத்தி புஸ்தகம் எழுத இடமேற்படுகிறது. அதனால் நாம் இப்போது அனுஷ்டித்து வரும் மதம், மூடக் கொள்கை ஆகியவைகள் ஒழிந்தால்தான் நாம் nக்ஷமமடைவோம். இத்தகைய சடங்குகளும், கிரியைகளும் செய்து பணத்தைச் செலவிட்டும் நம் மதஸ்தர்களுக்குள் ஒருவருக்கொருவர் கட்டுப்பாடு சிறிதேனும் உண்டா? இல்லையே கட்டுப்பாடு இல்லாமற் போய்விட்டதுடன் ஒருவருக்கொருவர் உயர்வு, தாழ்வும் நமது மதம் கற்பிக்கிறது. உண்மையான ஒற்றுமையும், கட்டுப்பாடும் இல்லாமல் மக்களை ஏமாற்ற நம் நாட்டில் போலி ஒற்றுமைப் பிரசங்கங்கள் காங்கிரஸ் பெயராலும் மற்றும் ஸ்தாபனங்கள் பெயராலும் எங்கு பார்த்தாலும் ஆகாயம் அளாவும்படி ஒலிக்கின்றன.

இனி போலி பிராமணர்கள் ஊளையிடும் சுயராஜ்யத்தைப் பற்றி சிறிது ஆராய்வோம். சுயராஜ்யம் என்றால் என்ன? அதை நாம் அடைய யோக்கியதை உள்ளவர்களா? நமக்குள் ஒருவருக்கொருவர் ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் முதலிய சகல உரிமைகளையும் அன்னியோன்யமாய் அனுபவிக்கிறோமா என்று பார்த்தால் நம்மை ஆளும் வெள்ளைக்காரர்கள் இந் நாட்டில் இருந்தால் போதும் என்றுதான் சொல்ல வேண்டிவரும். இத்தகைய நிலையில் நாம் இருக்கும்போது இதற்கு முன் இரண்டு சுயராஜ்யம் வந்து விட்டு போய்விட்டது. மூன்றாவது சுயராஜ்யமும் 3 மாதக் கர்பமாக இருக்கிறது. இதற்கு முன் வந்த சுயராஜ்யத்தால் 3 மந்திரிகளும் 3 நிர்வாக உத்தியோகஸ்தர்களும் 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றனர். இவர்களுடைய சம்பளச் செலவுகளுக்கெல்லாம் குடியானவர்கள், மிராசுதார்கள், ஜமீன்தார்களின் தலைகள்தான் மொட்டையடிக்கப்படுகின்றன. நமக்குக் கிடைத்த இரண்டு சுயராஜ்யத்திற்குப் பிறகு ஹைகோர்ட் ஜட்ஜ்களும் உத்தியோகஸ்தர்களும்தான் அதிகப்பட்டன. இவ்விதம் சிப்பந்திகள் அதிகப்பட்டும் நிர்வாகமும் ஒழுங்காக நடைபெறுவதாகக் காணோம். ஆகையால் சுயராஜ்யம் சுயராஜ்யம் என்று கத்துவதெல்லாம் வெள்ளைக்காரர்களும், பணக்காரர்களும், படித்தவர்களும் லாபம் பெறவேயொழிய நாட்டுக்கு எத்தகைய நன்மையும் ஏற்படப் போவதில்லை. ஆகையால் நாம் சுயமரியாதையடைந்து ஒருவருக்கொருவர் ஒன்றுபட்டு உண்மையான சுயராஜ்யம் பெற வேண்டுமானால் நம் மதத்தின் பேரால் ஏற்பட்டுள்ள மூடக் கொள்கைகளையும், புரட்டுகளையும் அறவே ஒழிக்க வேண்டியது அவசியமாகும்.

(குறிப்பு : 7.11.27-ல் பட்டுக்கோட்டையில் சுயமரியாதைப் பிரசார சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 20.11.1927)