அரசியல் விஷயத்தில் நாம் பார்ப்பனர்களை நம்பக்கூடாது என்றும், அவர்களது அரசியல் நோக்கம் என்பதெல்லாம் பார்ப்பனரல்லாதாரை மிதித்து பார்ப்பனர்கள் எப்படியாவது அதிகாரத்திற்கும் பதவிக்கும் உத்தியோகத்திற்கும் வர வேண்டும் என்பதைத்தவிர வேறில்லை என்றும், பார்ப்பனர்கள் தங்களுக்கு உத்தியோகம் பதவி முதலியவைகள் கிடைக்கக்கூடும் என்று எண்ணுகிற விஷயங்களில் அதற்கு விலையாக தேசத்தையோ மானத்தையோ நாணயத்தையோ கூட விடப் பின்வாங்க மாட்டார்கள் என்றும், இந்தப்படி செய்தே நமது நாட்டை ஆயிரக்கணக்கான வருஷங்களாய் அன்னிய ஆக்ஷிக்கு அதாவது மனிதத்தன்மை அற்ற ஆக்ஷிக்கு அடிமைப்படுத்தி நமது நாட்டிற்கு அடியோடு சுயமரியாதை இல்லாமற் செய்து விட்டார்களென்றும், இக்குணங்களான பார்ப்பனீயம் நமது நாட்டை விட்டு ஒழிந்தாலல்லது நமக்கு என்றென்றைக்கும் விடுதலையோ சுயமரியாதையோ ஏற்படாதென்றும் அனேக தடவைகளில் எழுதியும் பேசியும் வந்திருப்பதுடன் அதே வேலையிலேயே நமது வாழ்நாளைக் கடத்தியும் வருகிறோம்.

periyar nagammaiyarஆனால் நம்மில் ஒரு சாராருக்கே, அதாவது பார்ப்பனர்களை பின்பற்றினாலொழிய வாழ முடியாது என்கிற கூட்டத்தாருக்கு இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்திருந்தாலும் அவைகளை வெளியிடுவது அவர்கள் வாழ்க்கைக்கு அசவுகரியமாய்த் தோன்றுவதோடு அதற்கு எதிர்ப்பிரசாரமும் செய்ய வேண்டிய அவசியமும் ஏற்படலாம். அந்தப்படி செய்து நாம் செய்து வருவதையும் அழித்துக் கொண்டும் வரலாம். ஆனாலும் நமது நாட்டிற்கு இப்படி உண்மைகளை வெளிப்படுத்துவதைவிட வேறு முன்னேற்ற மார்க்கம் இல்லை என்பதே நமது முடிவு என்பதோடு இந்தப்படி நாம் சொல்லுவதற்கும் சில உதாரணங்கள் காட்டுவோம்.

நமது நாட்டுக்கு புதிய சீர்திருத்தம் என்பதாக ஒன்று அரசாங்கத்தாரால் வழங்கப்பட்டவுடன் அதை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்கிற விஷயத்தில் காங்கிரசுக்காரர்கள் என்பவர்களுக்கே அபிப்பிராய பேதம் ஏற்பட்டதானது சாதாரண மனிதர்களுக்குள் ஏற்பட்டதாகவும் சொல்ல முடியாது. லோகமான்யர் என்கிற திலகருக்கும், மகாத்மா என்கிற காந்திக்கும், லோக நாயகி என்கிற பெசண்டம்மாளுக்கும், மகாக்கனம் என்கிற சீனிவாச சாஸ்திரிக்கும் மற்றும் இது போன்ற தலைமையும், பெருமையும், பிரக்யாதியும், செல்வாக்கும் உள்ளவர்கள் என்று சொல்லுபவருக்குமே அபிப்பிராய பேதம் ஏற்பட்டது. இவற்றுள் ஒரு கூட்டத்தார் சீர்திருத்தத்தை நிராகரித்து விட வேண்டுமென்றார்கள். ஒரு கூட்டத்தார் நடத்திக் காட்டி அதிலுள்ள குற்றத்தை எடுத்துச் சொல்லி திருத்தப்பாடு செய்து மேல் கொண்டு சீர்திருத்தம் கேழ்க்கலாம் என்றார்கள். இதில் ஒப்புக் கொண்டு நடத்திக் காட்டலாம் என்று அப்போது சொன்ன கூட்டத்தில் சேர்ந்தவர்கள் தான் சென்னைவாசிகளில் மைலாப்பூர் அய்யங்கார் கோஷ்டியான ஸ்ரீமான் ரங்கசாமி அய்யங்கார், சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, கஸ்தூரி ரங்கய்யங்கார் முதலியவர்களும், அய்யர் கோஷ்டியை சேர்ந்தவர்களும் மிதவாதக் கட்சியாருமான ஸ்ரீமான் சிவசாமி அய்யர், சி.பி.ராமசாமி அய்யர், சீனிவாச சாஸ்திரி, பி.என்.சர்மா முதலியவர்களும், பார்ப்பனரல்லாதார் கோஷ்டியாரான ஸ்ரீமான் தியாகராய செட்டியார், டி.எம்.நாயர், பனகால் ராஜா முதலியவர்களுமே ஆவார்கள்.

இவர்களில் அய்யங்கார் கோஷ்டியாரை, அய்யர் கோஷ்டியார்கள் கட்டி சேர்க்காமல் விரட்டிவிட்டதால் அவர்களுக்கு தனி இடம் இல்லாமல் போனதும் “சீ இந்தப் பழம் புளிக்கும்” என்று சொல்லிக் கொண்டு ஒத்துழையாமையில் வந்து சேர்ந்தார்கள். மற்ற இரு கூட்டத்தாரும் சீர்திருத்தத்தை நடத்திக் கொடுக்க முயற்சித்ததில், பார்ப்பனரல்லாதார் கட்சியார் ஜனங்களிடை செல்வாக்குப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றார்கள். தோல்வியுற்ற அய்யர் கட்சி சர்க்காரிடம் செல்வாக்குப் பெற்று உத்தியோக வெற்றி பெற்றார்கள். அதன் பலன்தான் இப்போது ஸ்ரீமான்கள் சீனிவாச சாஸ்திரி மாதம் 4000ரூ. சம்பாதிக்கும் தென்னாப்பிரிக்கா கமிஷனரானதும், சி.பி. ராமசாமி அய்யர் மாதம் 5500ரூ. சம்பாதிக்கும் சட்ட மெம்பர் ஆனதும், பி.என். சர்மா மாதம் 6500 சம்பாதிக்கும் இம்பீரியல் கவுன்சில் மெம்பர் ஆனதும், டி.ரங்காச்சாரி மாதம் 3000 சம்பாதிக்கும் பையாஸ்கோப் கமிஷனரானதும், இவர்கள் பிள்ளைக்குட்டி அண்ணன் தம்பி, மாமன், மைத்துனன் முதலானவர்கள் உத்தியோகங்களில் இருப்பதுமாய் ஏற்பட்டது. அதுபோலவேதான் ஸ்ரீமான் பனகால் ராஜா, பாத்ரோ, சிவஞ்ஞானம் பிள்ளை முதலியவர்களும் மாதம் 4000 சம்பாதிக்கும் மந்திரிகளானதும் என்றும் சொல்லலாம். இப்படி இருந்தாலும் ஒத்துழையாமைப் பார்ப்பன பத்திரிகைகளும் காங்கிரஸ் தலைவர்களும் இவர்களைப் பின்பற்றும் பார்ப்பனரல்லாத சில கூலி பத்திரிகைகளும், போலித் தலைவர்களும் வயிற்றுச் சோற்று தேச பக்தர்களும், பார்ப்பனரல்லாதார் கட்சியை வைது அவர்களை அந்த ஸ்தானத்திலிருந்து விரட்டி, பார்ப்பனர்களையாவது அவர்களது அடிமைகளையாவது அந்த ஸ்தானத்தில் வைக்க அநுகூலமாயிருக்கும்படி பாடுபட்டார்களே ஒழிய உண்மையான ஒத்துழையாமையையாவது உண்மையான காங்கிரஸ் கட்டளையையாவது பிரசாரம் செய்தவர்களே அல்ல.

அன்றியும் சட்டசபையும், சட்ட மெம்பரும், சர்க்காரும் நடத்திவரும் நடவடிக்கையை அறிய முடியாத அவ்வளவு அறிவிலிகள் அரசியலிலாவது, பொது நலவாழ்விலாவது இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அப்படி இருந்தாலும் இப்பொழுது இவர்களை ஆதரிப்பதுதான் அக்கூட்டத்தாருக்கு தேசீய வேலையாக நடந்து வருகிறதே அல்லாமல் வேறில்லை. எனவே இவற்றை பார்ப்பனரல்லாத பாமர மக்கள் உணர முடியாமல் போனதினால் பாமர மக்களுக்கு இந்தப் பார்ப்பனர்களின் அரசியல் புரட்டை வெளிக்காட்டுவதற்காக பார்ப்பனரல்லாதார் கட்சியார் தங்களுக்கு உத்தியோகம் வேண்டியதில்லை என்றும், கவர்ன்மெண்ட்டாரை நாங்களும் திட்ட தயாராயிருக்கிறோமென்றும் சொல்லி இரட்டை ஆட்சி ஒழியுமட்டும் மந்திரி உத்தியோகமேற்பதில்லை என்றும், கவர்னரிடம் நம்பிக்கையில்லை என்றும் தீர்மானம் செய்து, சர்க்காரையும் பலமாகத் தாக்கி பேசியும் எழுதியும் வருகிறார்கள். இதன் பலன் என்ன ஆச்சுது என்று பார்த்தால் இங்குதான் பார்ப்பனப் புரட்டை அறியும் இடம் இருக்கிறது. உடனே பார்ப்பன அரசியல் தலைவர்களில் மிக்க பிரக்தியாதி பெற்ற ஸ்ரீ சத்தியமூர்த்தி கவர்னரையும், கவர்னர் ஜனரலையும் பேட்டி கண்டு பார்ப்பனரல்லாதார் உங்களைத் தாங்காவிட்டால் அக்கரையில்லை. நாங்கள் உங்கள் சர்க்காரை தாங்குகிறோம் என்று வாக்களித்தார்.

மற்றொரு காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் காரியதரிசியுமான ஸ்ரீமான் ஏ.ரங்கசாமி அய்யங்கார் காங்கிரஸ் முதலிய அரசியல் சங்க உத்தியோகங்களை ராஜீநாமா செய்து விட்டு சர்க்காரை தாங்கி உத்தியோகம் பெறுவதில் வெகு பரபரப்பாயிருக்கிறார். சீக்கிரத்தில் ஒரு உயர்ந்த பதவிக்கு வந்து விடவும் கூடும். தேசீயப் பத்திரிகைகள் சர்க்காரையும் மந்திரிகளையும் தாங்கி எழுதி வருகின்றன. காங்கிரஸ் சங்க தலைவரான ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரோ அடக்குமுறை சட்டத்திற்கு ஆதரவாய் பேசி காங்கிரஸ் கட்சியை ஓட்டுக் கொடுக்கச் செய்து நிறைவேற்றி வைத்தார். இவ்வளவும் போதாக்குறைக்கு காங்கிரசுக்கும், கவர்னருக்கும் சினேகம் செய்து வைத்து சர்க்காருக்கு காங்கிரசிடம் “அன்பு” உண்டாக்கி கவர்னரிடமே காங்கிரசுக்கு செலவுக்காக 500 ரூபாய் சன்மானமும் வாங்கி வந்து விட்டார். இவ்வளவும் செய்ததல்லாமல் ராமநாதபுரம் மகா நாட்டில் தலைமை வகிக்கிற ஸ்ரீமான் சத்தியமூர்த்தி மெஜாரிட்டி இருந்தால் மந்திரி வேலையை ஒப்புக் கொண்டு நடத்திக் காண்பிக்கலாம் என்றும் பேசி விட்டார். இதை ‘சுதேசமித்திரனும்’ ஜனங்களுக்கு நன்றாய் ஆசை ஏற்படும்படி தலையங்கம் எழுதி ஜாடையாய் ஆதரித்து விட்டது. இவைகள் எல்லாம் தாராளமாய் தேசத்தின் பேரால் விடுதலையின் பேரால் சுயராஜ்யத்தின் பேரால் வெளிப்படையாய் நடைபெறுகிறதேயொழிய ரகசியமாய் அல்ல.

இவைகள் இப்படி இருக்க இந்த கொள்கைகளுடனிருந்த அய்யர் கூட்டமான மிதவாத கோஷ்டியைப் பற்றி இந்த தேசீயவாதிகள் ஒரு வார்த்தையாவது கண்டித்து பேசினவர்கள் அல்லவென்பதும் சட்டசபையில் மிதவாதத்தால் பதவி பெற்ற அய்யர்களைப் பற்றி ஒரு வார்த்தையாவது கண்டித்துப் பேசினவர்களும் அல்லவென்பதும் கவனித்து வந்தவர்களுக்குத் தெரியும். ஆனால் பார்ப்பனரல்லாத கட்சியைப் பற்றியோவென்றால், பேசின வார்த்தைகளும் எழுதின எழுத்துக்களும் அளவில. ‘குலாம் கட்சி’, ‘நக்கிப் பொறுக்கி’, ‘அடிமை மக்கள்’, ‘சர்க்கார் பூசாரி’, ‘சர்க்கார் தத்துப்பிள்ளை’, ‘பனகால் ஆட்சி ஒழிக’, ‘பனகாலை வெட்டிப் புதைக்க’, ‘ராட்சசக் கட்சி’, ‘தியாகராயர் ஒரு சென்னை டையர்’ என்பதாகவும் இன்னமும் எத்தனையோ விதம் அதாவது பார்ப்பனரல்லாதார் தலைவர்கள் பேரில் தொழிலாளர்களை ஏவிவிட்டு அடிக்கவும் உதைக்கவும் செய்வது முதலான காரியங்களும் செய்தார்கள்.

இப்படியெல்லாம் செய்ததினுடையவும், எழுதினதினுடையவும் கருத்துக்கள் இன்னதென்று இப்பொழுதாவது நமது மக்களுக்கு விளங்கியிருக்கிறதா என்று கேட்கத்தான் இதை எழுதுகிறோம்.

எனவே பார்ப்பனர்களின் அரசியல் என்பதெல்லாம் பார்ப்பனரல்லாதாரை அடக்கி மிதித்து பார்ப்பனர் ஆக்ஷி பெற வேண்டுமென்பது தவிர வேறில்லை என்பதும், பார்ப்பனரல்லாதாரில் சிலர் அவர்களைப் பின்பற்றுவது என்பதையும் அப்பார்ப்பனர் சாப்பிட்டுக் கழித்த எச்சிலுக் காசைப்பட்டு திரிவது தவிர வேறில்லை என்பதையும் மக்கள் உணர்வார்களாக. இந்த ரகசியத்தை அறியாமல் பாமர மக்கள் காங்கிரசு, தேசீயம் என்று கண்ணை மூடிக் கொண்டு பார்ப்பன அரசியலைப் பின்பற்றுவதும், பணங்காசுகளை அள்ளிக் கொடுப்பதும் நமது சுயமரியாதை உதயத்தை மறைப்பதே அல்லாமல் வேறல்ல என்று சொல்லி இதை முடிக்கின்றோம்.

(குடி அரசு - கட்டுரை - 02.10.1927)