பார்வதி:- பிராணனாதா !

பரமசிவன்:- என்ன பிராணனாயகி.

பா-தி:- சில முனிசிபாலிட்டிகளில் சேர்மெனும், வைஸ்சேர்மெனும் சண்டைபிடித்துக் கொள்ளுகிறார்களே அது எதற்காக?

ப-சி:- என் கண்ணே! இது உனக்குத் தெரியாதா? திருடர்கள் இரண்டுபேர் தங்களுக்குள்ளாகவே சண்டைப்போட்டுக்கொண்டால் அது எதற்காக?

பா-தி:- நாதா! இது எனக்குத் தெரியாதா? திருட்டு சொத்தை இருவரும் பங்கிட்டுக் கொள்வதில் வித்தியாசம் ஏற்பட்டால் இருவரும் சண்டை போட்டுக்கொள்ள வேண்டியதுதான். முனிசிபாலிட்டிகளில் எப்படி சண்டை வரும்?

ப-சி:- அதே மாதிரிதான் முனிசிபாலிட்டியிலும் பொதுஜனங்களிடம் இருந்து வாங்கும் லஞ்சத்திலும் உத்தியோகம் கொடுப்பதற்கு ஆக வாங்கும் தரகிலும் காண்டிராக்டர்களிடமிருந்து வாங்கும் வீதாச்சாரத்திலும் இருவரும் பிரித்துக் கொள்வதில் வித்தியாசம் ஏற்பட்டால் சண்டை வரவேண்டியதுதானே?

பா-தி:- இதெல்லாம் சேர்மெனுக்கும் முனிசிபல் சிப்பந்திகளுக்கும் தானே சேரவேண்டியது. வைஸ்சேர்மெனுக்கு இதிலென்ன பாத்தியமிருக்கிறது?

ப-சி :- நீ என்ன திரேதாயுகத்து சங்கதி பேசுகிறாய்? அந்த மாதிரி இருவருக்குள்ளும் ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தால்? அல்லாமலும் அதெல்லாம் பழைய காலம்.

திரேதாயுகத்தில் சிப்பந்திகள் மாத்திரம்தான் மேற்படி ஆதாயங்களை அனுபவித்து வந்தார்கள். திரேதாயுகத்தில் சிப்பந்திகளும் சேர்மெனுமாய் சாப்பிட்டு வந்தார்கள்.

துவாபரயுகத்திலேயே சிப்பந்திகளும் சேர்மெனும் வைஸ்சேர்மெனும் சாப்பிடவேண்டியது. இந்தக் கலியுகத்திலோ சிப்பந்தி, சேர்மென், வைஸ்சேர்மென், கவுன்சிலர்கள் ஆக நான்குபேரும் சாப்பிடவேண்டியது. இந்தப்படி மனுதர்ம சாஸ்திரத்தில் இருந்தபோதிலும் இன்னும் இது பூராவும் அமுலுக்கு வரவில்லை.

பா-தி:- அப்படியானால் எனது கேள்விகளுக்கு பொறுமையோடு பதில்சொல்லவேண்டும். முதலில் இருந்து வருகிறேன். முனிசிபல் சிப்பந்திகள் லஞ்சமும் தரகும் மாமூலும் வாங்க காரணம் என்ன? அது யாருடைய குற்றம்?

ப-சி:- சர்க்கார் வழக்கமும் சேர்மெனுடைய குற்றமும்தான் காரணம்.

பா-தி:- சேர்மெனும் வைஸ்சேர்மெனும் லஞ்சமும் தரகும் மாமூலும் வாங்கவும் பங்கு பிரித்துக்கொள்வதில் சண்டை போட்டுக் கொள்ளவும் யார் காரணம்?

ப-சி:- அப்படிப்பட்ட சேர்மெனையும் வைஸ்சேர்மெனையும் நியமித்த கவுன்சிலர்கள்தான் பொறுப்பாளிகளாவார்கள்.

பா-தி:- இப்படிப்பட்ட சேர்மென் வைஸ்சேர்மென்களை நியமித்த கவுன்சிலர்களின் நடவடிக்கைக்கு யார் பொறுப்பாளி?

ப-சி:- இவர்களுக்கு ஓட்டு செய்த ஓட்டர்கள்தான் பொறுப்பாளிகளாவார்கள்.

பா-தி:- இம்மாதிரி கவுன்சிலர்களுக்கு ஓட்டு செய்த ஓட்டர்களின் நடவடிக்கைக்கு யார் பொறுப்பாளி?

ப-சி:- அனேகமாய் இந்த காரியத்திற்கு ரூபாய்கள்தான் பொறுப்பாளி என்று சொல்லவேண்டும்.

பா-தி:- கேவலம் ரூபாய்க்கு இவ்வளவு பெரிய யோக்கியதை ஏற்பட்டு போய்விட்டது என்கிறீர்களே, ரூபாய்கள் இப்படிச்செய்யுமானால் இதற்கு யார் பொறுப்பாளி?

ப-சி:- ரூபாய்க்கு நாட்டில் இவ்வளவு ஆதிக்கம் ஏற்பட மனிதர்களின் ஒழுக்கக்குறைவும் வயிற்றுக்கொடுமையும்தான் பொறுப்பாளி.

பா-தி:- ஒரு நாட்டில் இம்மாதிரி ஒழுக்கக்குறைவும், வயிற்றுக்கொடுமையும் ஏற்பட யார் பொறுப்பாளி?

ப-சி:- சர்க்கார்தான் பொறுப்பாளி.

பா-தி:- இம்மாதிரி சர்க்கார் ஏற்பட யார் ஜவாப்தாரி?

ப-சி:- ஜனங்களின் ஒற்றுமைக்குறைவுதான்.

பா-தி:- ஜனங்களின் ஒற்றுமைக்குறைவிற்கு யார் பொறுப்பாளி?

ப-சி:- அவர்களுக்குள்ளிருக்கும் ஜாதி வித்தியாசமும் உயர்வு தாழ்வு என்று சொல்லிக்கொள்வதும் மக்களை ஒன்று சேர்வதற்கில்லாமல் செய்து கொண்டு வருகிறது.

பா-தி:- அப்படியானால் இதற்கு என்னதான் செய்வது?

ப-சி:- செய்வதென்ன இருக்கிறது? நாட்டிற்கு நல்லகாலம் வரும் போது இவையெல்லாம் தானாக ஓடிப்போகும். அதுவரை நிர்மாண திட்டத்தை நிறைவேற்றிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

(குடி அரசு - உரையாடல் - 27.09.1925)