மேற்றிசையில் வானத்தில் பொன்னுருக்கு
வெள்ளத்தில் செம்பருதி மிதக்குநேரம்!
வேற்கண்ணி யாளொருத்தி சோலைதன்னில்
விளையாட நின்றிருந்தாள் மயிலைப்போலே!
காற்றடித்த சோலையிலே நேரம் பார்த்துக்
கனிய டித்துக் கொண்டு செலும் செல்வப்பிள்ளை
ஆற்றுவெள்ளம் போலாசை வெள்ளம் தூண்ட
அவளிடத்தே சில சொன்னான் பின்னுஞ் சொல்வான்;

விரிந்தஒரு வானத்தில் ஒளிவெள்ளத்தை
விரைந்துவந்து கருமேகம் விழுங்கக்கூடும்!
இருந்தவெயில் இருளாகும் ஒரு கணத்தில்
இது அதுவாய் மாறிவிடும் ஒரு கணத்தில்
தெரிந்ததுதான்; ஆனாலும் ஒன்றேயொன்று!
தெளிந்தஓர் உள்ளத்தில் எழுந்தகாதல்
பருந்துவந்து கொத்துமென்றும் தணிவதில்லை!
படைதிரண்டு வந்தாலும் சலிப்பதில்லை!

கன்னத்தில் ஒரு முத்தம் வைப்பாய் பெண்ணே,
கருதுவதிற் பயனில்லை தனியாய் நின்று.
மின்னிவிட்டாய் என்மனதில்! பொன்னாய்ப் பூவாய்.
விளைந்துவிட்டாய் கண்ணெதிரில்! என்று சொன்னாள்.
கன்னியொரு வார்த்தையென்றாள் என்னவென்றான்.
கல்வியற்ற மனிதனை நான் மதியேன் என்றாள்
பன்னூற் பண்டிதனென்று தன்னைச் சொன்னான்.
பழச்சுளையின் வாய்திறந்து சிரித்துச் சொல்வாள்.

பெருங்கல்விப் பண்டிதனே! உனக்கோர்கேள்வி;
பெண்களுக்குச் சுதந்தரந்தான் உண்டோ? என்றாள்.
தரும்போது கொள்வதுதான் தருமம் என்றான்.
தராவிடில்நான் மேற்கொண்டால் என்னவென்றாள்.
திருமணமா காதவள்தன் பெற்றோரின்றிச்
செயல்ஒன்று தான்செய்தல் அதர்மம் என்றான்.
மருவ அழைக் கின்றாயே, நானும் என்றன்
மாதா பிதாவின்றி விடைசொல்வேனோ?

என்றுரைத்தாள், இதுகேட்டுச் செல்வப்பிள்ளை
என்னேடி, இதுஉனக்குத் தெரியவில்லை.
மன்றல்செயும் விஷயத்தில் ஒன்றில்மட்டும்
மனம்போல நடக்கலாம் பெண்கள் என்றான்.
என்மனது வேறொருவன் இடத்திலென்றே
இவனிட்ட பீடிகையைப் பறக்கச் செய்தாள்.
உன்நலத்தை இழக்கின்றாய் வலியநானே
உனக்களிப்பேன் இன்பமென நெருங்கலானான்!

அருகவளும் நெருங்கி வந்தாள்; தன் மேல்வைத்த
ஆர்வந்தான் எனநினைத்தான்! இமைக்குமுன்னே
ஒருகையில் உடைவாளும் இடதுகையில்
ஓடிப்போ! என்னுமோரு குறிப்புமாகப்
புருவத்தை மேலேற்றி விழித்துச் சொல்வாள்;
புனிதத்தால் என்காதல் பிறன்மேலென்று
பரிந்துரைத்தேன்! மேற்சென்றாய்! தெளிந்த காதல்
படைதிரண்டு வந்தாலும் சலியாதென்றாள்.

ஓடினான் ஓடினான் செல்வப்பிள்ளை
ஓடிவந்து மூச்சுவிட்டான் என்னிடத்தில்
கூடிஇரு நூறுபுலி எதிர்த்ததுண்டோ?
கொலையாளி யிடமிருந்து மீண்டதுண்டோ?
ஓடிவந்த காரணத்தைக்கேட்டேன், அன்னோன்
உரைத்துவிட்டான்! நானவற்றைக் கேட்டுவிட்டேன்.
கோடிஉள்ளம் வேண்டுமிந்த மகிழ்ச்சிதாங்கக்
குலுங்கநகைத் தேயுரைத்தேன் அவனிடத்தில்;

செல்வப்பிள்ளாய் இன்றுபுவியின் பெண்கள்
சிறுநிலையில் இருக்கவில்லை; விழித்துக் கொண்டார்!
கொல்லவந்த வாளைநீ குறைசொல்லாதே!
கொடுவாள் போல் மற்றொருவாள் உன்மனைவி
மெல்லிடையில் நீகாணாக் காரணத்தால்,
விளையாட நினைத்துவிட்டாய் ஊர்ப் பெண்கள்மேல்!
பொல்லாத மானிடனே, மனச்சான்றுக்குள்
புகுந்துகொள்வாய்! நிற்காதே! என்றேன்; சென்றான்.

Pin It