(மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி II, 1945, மார்ச் 12, 1945, பக்கங்கள் 1383-85)

            திரு.கே.சி.நியோகி: ஐயா, பின்கண்டவாறு முன்மொழிகிறேன்:

            “மண்ணியல் ஆய்வு” என்ற தலைப்பில் முன்வைக்கப்பட்டிருக்கும் மானியக் கோரிக்கை 100 ரூபாயாகக் குறைக்கப்பட வேண்டும்.”

           ambedkar 292 எனது வெட்டுத் தீர்மானத்தில் சுட்டிக்காட்டியுள்ளபடி, இந்தியாவின் கனிம வளங்கள் சம்பந்தமான அரசாங்கத்தின் கொள்கை பற்றி விவாதிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். எனினும் நேரத்தைப் பொறுத்தவரையில், என்னுடைய மாண்புமிகு நண்பர் இது சம்பந்தமாக போதிய விவரங்கள் அளிப்பதற்கு கூடிய மட்டும் அதிகப்பட்ச நேரத்தை எடுத்துக் கொள்ளலாம்; இந்த விவரங்களைத் தான் நாங்கள் எல்லோரும் எதிர்பார்க்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்தில் நான் உரையாற்றியிருந்தால் பல்வேறு விஷயங்களைச் சுட்டிக் காட்டியிருப்பேன். ஆனால் என் உரையை விடவும் அவரது அறிக்கையைத் தான் நாங்கள் முக்கியமானதாக கருதுவதால், என்னுடைய மாண்புமிகு நண்பர் முக்கிய தகவல்களும் விவரங்களும் பொருட் செறிவும் நிறைந்த அறிக்கையை தருவாரேயானால் நான் பெரிதும் பாராட்டுவேன்.

            திரு.துணைத்தலைவர் (திரு.அகில் சந்திர தத்தா): பின்கண்ட வெட்டுத் தீர்மானம் முன்மொழியப்படுகிறது:

            “மண்ணியல் ஆய்வு என்ற தலைப்பில் முன்வைக்கப்பட்டிருக்கும் மானியக் கோரிக்கை 100 ரூபாயாகக் குறைக்கப்பட வேண்டும்.”

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): திரு.துணைத் தலைவர் அவர்களே, இத்தகைய ஒரு வெட்டுத் தீர்மானத்தை திரு.நியோகி கொண்டு வந்தமைக்காக உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் அரசாங்கத்தின் கனிமவளக் கொள்கை போதிய அளவு மக்களுக்குத் தெரியாத நிலையில், அரசாங்கம் தனது கனிமவளக் கொள்கையை விளக்கிக் கூறுவதற்கு இந்த வெட்டுத் தீர்மானம் வாய்ப்பளிக்கிறது. இந்த விஷயம் குறித்துப் பெருமளவுக்கு அறியாமை நிலவுகிறது; அது பெரிதும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில், அரசாங்கத்தின் கனிமவளக் கொள்கை போன்ற ஒரு முக்கியமான விஷயத்தை இந்த அவையில் முழு அளவுக்கு விளக்கிக் கூறுவது அனைவருக்கும் பயனுள்ளதாகவும் உகந்ததாகவும் இருக்கும். போதிய அவகாசம் இல்லாத காரணத்தால் தாம் சொல்ல விரும்பிய விஷயங்களை எடுத்துரைப்பதற்கு திரு.நியாகிக்கு வாய்ப்பு இல்லாது போனதற்காக வருந்துகிறேன்; அவையின் ஏனைய உறுப்பினர்களும் எனது இந்த உணர்வைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். அவர் தமது உரையைச் சுருக்கிக் கொண்டு, நான் விரிவாகப் பேசுவதற்காக தமது நேரத்தையும் எனக்கு ஒதுக்கித் தந்தமையைப் பாராட்டுகிறேன்; இதற்காக அவருக்கு நான் பெரிதும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.

            ஐயா, எதையும் மூடி மறைக்காமல் பட்டவர்த்தனமாகப் பேச வேண்டிய விஷயம் இது: உண்மையில் கனிமவளக் கொள்கை என்ற ஒரு கொள்கை இதுவரை இந்திய அரசாங்கத்துக்கு இருந்ததில்லை என்றே கூறுவேன். இது விஷயத்தில் குறைகூறுவதற்கு போதிய ஆதாரம் இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. கனிமவளக் கொள்கை வகுக்கப்படாமல் போனதற்கு இந்திய மண்ணியல் ஆய்வுத் துறையினர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று சில வட்டாரங்களில் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் இது தவறான குற்றச்சாட்டு என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. இத்தகைய தவறான கருத்து களையப்பட வேண்டும் என்று முதலில் விரும்புகிறேன். இதன் பொருட்டு என் உரையில் ஒரு சில நிமிடங்களை இதற்காக ஒதுக்குகிறேன்.

            எந்த ஓர் அரசாங்கத்தின் கனிமவளக் கொள்கையும் அந்த அரசாங்கத்தின் தொழில் கொள்கையையே அடிப்படையில் சார்ந்திருக்கும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சியில் கனிம வளங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன; இந்நிலையில் அந்நாட்டுக்குத் தொழில் கொள்கை என்று ஒன்று இல்லை என்றால் கனிமவளக் கொள்கையும் இருக்க முடியாது என்பது தெள்ளத் தெளிவு. யுத்தப் பிற்காலத்தில் இந்த நாட்டின் பொருளாதார மற்றும் தொழில்துறை வாழ்க்கையை மறுசீரமைக்கும் பணியை தனது குறிக்கோளாக இலட்சியமாகக் கொள்வதென இந்திய அரசாங்கம் தீர்மானிக்கும் வரை இந்த நாட்டு அரசாங்கம் நாட்டின் தொழில் வளர்ச்சியில் மிகச் சிறிய பங்கையே ஆற்றி வந்திருக்கிறது என்பதை அவை நன்கறியும்.

          டாக்டர் பி.என்.பானர்ஜி: எவ்வளவு பரிதாபகரமானது!

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இந்த விஷயம் பரிதாபத்துக்குரியதானாலும் சீற்றத்துக்குரியதானாலும் இப்போது அது எனக்கு முக்கியமானதல்ல. இதுவரை ஒரு கனிமவளக் கொள்கை இல்லாதிருக்கிறது என்றால் அது இந்திய மண்ணியல் ஆய்வுத் துறையின் தவறல்ல என்பதை எடுத்துக்காட்ட இங்கு விரும்புகிறேன். இந்தத் தவறு அன்றைய அரசாங்கத்தின் தவறாகும்; சட்டமன்றத்திற்கும், நாட்டின் பொருளாதார மற்றும் தொழில்துறை வாழ்க்கையில் அக்கறை கொண்ட ஏனைய அமைப்புகளுக்கும் இதில் பங்குண்டு.

உலகின் இதர பகுதிகளில் மண்ணியல் ஆய்வுத்துறையினர் ஆற்றிவரும் பங்கை இங்கு மண்ணியல் ஆய்வுத்துறை ஆற்றாததற்கு எப்போதுமே போதிய எண்ணிக்கையில் ஊழியர்கள் இல்லாத இலாகாக்களில் ஒன்றாக இது இருந்து வருவதே பிரதானமாக இரண்டாவது காரணமாகும். இந்திய மண்ணியல் ஆய்வுத்துறையின் அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் சம்பந்தமான ஒரு வரலாற்றை இங்கு கூறுவது உசிதமாக இருக்கும். மண்ணியல் ஆய்வுத்துறையின் உயர் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு 1920 ஆம் ஆண்டில் அனுமதி பெறப்பட்டது ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்தது; இதனால் தேவையான ஊழியர்களின் எண்ணிக்கையை நிரப்புவதற்கு ஏறத்தாழ ஒன்பது ஆண்டுக் காலம் பிடித்தது. இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த எண்ணிக்கை நிரப்பப்பட்டதும் 1931ல் சட்டமன்றம் பொருளாதாரத்தில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றிற்று. பயிற்சி பெற்ற இந்த ஊழியர்கள் அனைவரையும் இதன் காரணமாக வீட்டிற்கு அனுப்ப வேண்டியதாயிற்று. எனவே, இந்திய அரசாங்கத்தின் கனிமவளக் கொள்கையில் மண்ணியல் ஆய்வுத்துறை தனக்குரிய பங்கை ஆற்றவில்லை என்றால் இதில் சட்டமன்றத்திற்கும் ஓரளவு பொறுப்பு உண்டு என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இந்தக் குறுகிய அவகாசத்தில் கடந்த காலத்தைப் பற்றி மேலும் விவரித்துக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை. எதிர்காலத்தைப் பற்றி பேச விரும்புகிறேன். ஒரு திட்டவட்டமான கனிமவளக் கொள்கை இருக்க வேண்டிய அவசியத்தை இந்திய அரசாங்கம் இப்போது ஏற்றுக்கொண்டுள்ளது என்பதைக் கூற மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு தீவிரமாக முயற்சிக்க வேண்டும் என இந்திய அரசாங்கம் முடிவு செய்திருப்பதே இதற்கு பிரதான காரணம். இந்திய அரசாங்கத்தின் கனிமவளக் கொள்கை மறுசீரமைப்பு மற்றும் திட்டமிடுதல் குறித்த இரண்டாவது அறிக்கையின் 14 ஆவது பிரிவில் வகுத்துரைக்கப்பட்டிருக்கிறது. அந்த 14அவது பிரிவை இங்கு வாசித்து காட்டுவதற்கோ அல்லது பத்தியின் சுருக்கத்தையேனும் இங்கு தருவதற்கோ கூட எனக்கு நேரமில்லை. இந்த விஷயத்தில் ஆர்வமும் அக்கறையும் கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த 14ஆவது பிரிவைப் படித்து, அரசாங்கத்தின் கனிமவளக் கொள்கை என்ன என்பதைத் துல்லியமாக, தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இரத்தின சுருக்கமாகக் கூறுவதானால், இந்திய அரசாங்கத்தின் கனிமவளக் கொள்கையும், அந்தக் கொள்கையைச் செயல்படுத்த அது மேற்கொள்ள உத்தேசித்துள்ள நடவடிக்கையும் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதலாவதாக அரசாங்கத்தின் கொள்கையைச் செயல்படுத்துவதற்காக இந்திய மண்ணியல் ஆய்வுத் துறையை முன்னிலும் ஆற்றல்மிக்க சாதனமாக மாற்றுவதற்கு அதனை மறுசீரமைக்க உத்தேசித்துள்ளோம். இதன்படி, ஆய்வை விரிவுபடுத்த பரந்த அளவிலான ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டு, நிர்வாக ரீதியில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது நாங்கள் அமைக்க உத்தேசித்திருக்கும் மண்ணியல் ஆய்வின் புதிய கிளைகள் பொறியியல் சார்ந்த மண்ணியல், கனிம வளங்களைத் தொழில் துறைகளுக்குப் பயன்படுத்துதல், மத்திய கனிமவள வளர்ச்சி, இயற்பியல் பணி, எண்ணெய் அபிவிருத்தி போன்றவற்றில் கவனம் செலுத்தும். இவ்வகையில் என்ன செய்யப்படுகிறது என்பதைப் பொதுமக்கள் அறியும் பொருட்டு ஓர் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தையும், தகவல் நிறுவனத்தையும் அமைப்பதும் இதில் அடங்கும்.

எங்கள் கனிமவளக் கொள்கையின் இரண்டாவது பகுதியில் கனிம வளங்கள் மீது கட்டுப்பாடு செலுத்தும் நோக்கத்தோடு இந்திய அரசாங்கம் இயற்ற உத்தேசித்திருக்கும் சட்டங்கள் இடம் பெறும். கனிமவளங்கள் மீது சட்டரீதியான கட்டுப்பாட்டின் வரையறைகளை நிர்ணயிப்பதில் பின்கண்ட அம்சங்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படும்: ஒன்று, அகில இந்திய கனிமவளத்தின் முக்கியத்துவம்; இரண்டு, கனிமவளத்தின் தொழில்நுட்ப இயல்பு; மூன்று, கனிமவளம் பயன்படுத்தப்படும் நோக்கம்; நான்கு, கனிமவளத்தின் அல்லது கனிம வளத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருள்களின் மதிப்பு. எங்கள் சட்ட விதிகள் இரண்டு பிரிவுகளில் அடங்கும் அல்லது கனிமவளங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படும்; இவற்றில் ஒரு வகை கனிமவளங்கள் பொதுக்கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்படும்; இந்தப் பொதுக்கட்டுப்பாட்டின்படி, கனிம வளங்களைக் கண்டுபிடித்தலும், அவற்றைத் தோண்டியெடுத்தலும் சில விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டுக் குத்தகைக்கு விடப்படும். மற்றவகை கனிமவளங்கள் விரிவான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். இவ்வாறு விரிவான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள கனிமவளங்களின் எண்ணிக்கை சுமார் 28 ஆகும். இவற்றின் முழுப்பட்டியலையும் இங்கு வெளியிடும் உத்தேசம் ஏதும் எனக்கு இல்லை. விரிவான கட்டுப்பாடு என்பதில் உரிமங்கள் வழங்கும் அதிகாரம், கனிம வளங்களை ஆய்வு செய்தல், வெட்டியெடுத்தல், வகை பிரித்தல், தரப்படுத்துதல் போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படும் முறையைக் கண்காணிக்கும் அதிகாரம், இத்தகைய முறையை மேம்படுத்தும் படி வலியுறுத்தும் அதிகாரம், கனிம வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கு மேலும் ஆராய்ச்சி மேற்கொள்ளும் படிக் கூறும் அதிகாரம் முதலியனவும் அடங்கும்.

கனிம வளங்கள் சம்பந்தமாக இந்திய அரசாங்கம் கடைப்பிடிக்கவிருக்கும் கொள்கை குறித்து எனக்குத் தரப்பட்டிருக்கும் அவகாசத்திற்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுருக்கமாக கூறியுள்ளேன்.

திரு.நியோகி எழுப்பியிருக்கும் சில குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு இப்போது வருகிறேன். அவர் குறிப்பிட்டிருக்கும் முதல் விஷயம் கனிமப் பொருள்கள் ஏற்றுமதி பற்றியதாகும். நாங்கள் இயற்ற உத்தேசித்திருக்கும் சட்டங்களில் இந்தியாவுக்கு வெளியே கனிமப் பொருள்கள் ஏற்றுமதி சம்பந்தமான விதிகள் நிச்சயம் இடம் பெற்றிருக்கும் என்று அவைக்கு உறுதிகூற விரும்புகிறேன். உண்மையில், நமது கனிமப் பொருள்களின் ஏற்றுமதியை நம்மால் முற்றிலுமாக நிறுத்த முடியுமா என்பதே இங்கு எழும் கேள்வி. இந்தக் கேள்விக்கான பதில் மற்றொரு கேள்வியைப் பொறுத்தே அமைந்துள்ளது. அந்தக் கேள்வி இதுதான்: நமது சொந்த கனிமப் பொருள்களின் ஏற்றுமதியை அறவே நிறுத்தினால், நமக்குப் பற்றாக்குறையாக உள்ள கனிமங்களை நம்மால் இறக்குமதி செய்வது சாத்தியமா? எண்ணெய், தாமிரம், ஈயம், துத்தநாகம், வெள்ளீயம், கந்தகம் போன்ற முக்கிய கனிமங்களில் இந்தியா பற்றாக்குறை நாடாகவே இருந்து வருகிறது. எனவே, நமது தாதுப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் விஷயத்தை நமக்குப் பற்றாக்குறையாக இருக்கும் தாதுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு நமக்குள்ள வாய்ப்பு வசதிகளைக் கருத்திற் கொண்டுதான் பரிசீலிக்க வேண்டும்.

இந்த நிலைமையில், முதலாவதாக, நமக்குப் பற்றாக்குறை நிலவுகின்ற, நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்ற கனிமப் பொருள்களின் ஏற்றுமதியை நாம் முறைப்படுத்த வேண்டும். இரண்டாவதாக, நமது கனிமங்கள் மூலப் பொருள்களாக ஏற்றுமதி செய்யப்படாதபடியும், பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன்னர் அவை நமது தொழிற்சாலைகளில் பதனம் செய்யப்படும்படியாகவும் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுவே இந்திய அரசாங்கத்துக்குப் பாதுகாப்பான மார்க்கமாக இருக்குமெனத் தோன்றுகிறது. திரு.நியோகி என் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கும் மற்றொரு விஷயம் எண்ணெய்ச் சலுகைகள் சம்பந்தப்பட்டது. எண்ணெய்ச் சலுகைகள் விஷயத்தில் தற்போது ஓர் இடைக்காலத் தடை இருந்து வருவது திரு.நியோகிக்குத் தெரியும்; அவையின் மற்ற உறுப்பினர்களுக்கும் இது தெரியும் என்று நம்புகிறேன். எண்ணெய்க் கிணறுகள் துறப்பணமிடப்படுவதற்கும் எண்ணெய் உற்பத்திக்கும் உரிமைகள் வழங்கும் விஷயத்தில் இந்த இடைக்கால தடை இருந்து வருகிறது. இந்த நாட்டில் தொழில்நுட்ப நிபுணர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்து வருகிறார்கள்; அப்படியிருக்கும்போது பல்வேறு எண்ணெய் நிறுவனங்கள் இவர்களது உழைப்பை வீணடிக்கவும் அல்லது தமது சொந்த கனிமவள ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் முயன்று வருகின்றனர்; இதனைத் தடுப்பதற்காகவே இந்திய அரசாங்கம் இந்த இடைக்காலத் தடையை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. யுத்தம் முடியும் வரையிலும் அதற்குப் பின்னர் சிறிது காலம் வரையிலும் இந்தத் தடை நீடிக்கும்.

உரிமங்கள் வழங்கும் பிரச்சினையைப் பொறுத்தவரையில், இந்திய அரசாங்கச் சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து, இந்த விஷயம் மாகாண அரசாங்கங்களின் பொறுப்பில் இருந்து வருகிறது; எனினும் 1919 ஆம் வருடச் சட்டத்தின்படி இந்திய அரசாங்கம் வகுத்துத் தந்த விதிமுறைகளையே மாகாண அரசாங்கங்கள் இன்றுவரை பின்பற்றி வருகின்றன; பிரிட்டிஷ் குடிமக்கள் அல்லாதவர்களுக்கு எதிராகக் “கதவை மூடும்” கொள்கையை இந்த விதிமுறைகள் வலியுறுத்துகின்றன. எந்த ஒரு நிறுவனமும் எண்ணெய் உற்பத்திக்கு உரிமம் பெறுவதற்கு முன்னர் அந்த நிறுவனம் இந்திய ஊழியர்களைக் கொண்டிருப்பதாகவோ அல்லது அதன் குழுமத்திலுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் பிரிட்டிஷ் குடிமக்கள் என்றோ நிரூபித்தாக வேண்டும் என்று இவ்விதிமுறைகள் கூறுகின்றன. இந்தியக் குடிமக்களுக்கும் பிரிட்டிஷ் குடிமக்களுக்குமுள்ள வேறுபாட்டுப் பிரச்சினையை திரு.நியோகி தம் மனதில் கொண்டிருக்கிறாரோ என்னவோ நான் அறியேன். இதைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு எனக்கு நேரம் இல்லை. இப்போது நான் சொல்லக்கூடியதெல்லாம் இந்த விஷயம் மற்றொரு முக்கிய விஷயத்துடன் அதாவது இந்திய அரசாங்கச் சட்டம் 118-ன் III ஆவது பிரிவில் அடங்கியுள்ள விதிமுறைகளுடன் நெருங்கிய சம்பந்தமுடையது என்பதேயாகும்; ஒரு தனித் தீர்மானத்தின் பேரில் இதுபற்றி அவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. நிலக்கரியைப் பொறுத்தவரையில் எங்களது புதிய சட்டத்தில் அதுவும் இடம் பெற்றிருக்கும். இது ஒரு கடினமான பிரச்சினை என்பதை என் நண்பர் புரிந்து கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். நிலக்கரியை வெட்டியெடுத்தல், தரம் பிரித்தல், விற்பனை செய்தல், தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன. நமது சட்டம் பயனளிக்க வேண்டுமென்றால் நிலக்கரிச் சுரங்கங்களின் உரிமையாளர்களுக்கும் நிலக்கரி வாணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இடையே பெருமளவுக்கு ஒத்துழைப்பு நிலவுவது அவசியம். இந்த விஷயத்தை எங்களது யுத்தப் பிற்காலக் கொள்கையின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ள நாங்கள் எண்ணியுள்ளோம் என்பதை அவைக்கு உறுதி கூற விரும்புகிறேன்.

இந்திய அரசாங்கத்தின் கொள்கை என்னவென்பதை பேசுவதற்கு எனக்குக் கிடைத்த குறுகிய காலத்தில் பொதுப்படையான முறையில் எடுத்துரைத்தேன். முடிவாக நான் கூறக்கூடியதெல்லாம் இதுதான்: அனைத்தையும் உள்ளடக்கியதும் இயக்காற்றல் மிக்கதுமான கனிமவள கொள்கை மூன்று சூழ்நிலைகளைச் சார்ந்திருக்கும். நாட்டின் தொழில் வளர்ச்சியை அது சார்ந்திருக்கும். தொழில்கள் வளர்ச்சியுற வேண்டுமானால், கடந்த காலத்தைவிட அதிக உத்வேகமிக்க கனிம வளக் கொள்கையை இந்த நாடு பின்பற்ற வேண்டும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. நமது கனிமவளக் கொள்கை வெற்றிபெறுமா, மிகப் பலரின் நலனுக்காக, நன்மைக்காக அது பயன்படுத்தப்படுமா என்பது இரண்டு அம்சங்களை அதாவது அரசியல் சட்ட நிலையையும், மாகாணங்களும் மத்திய அரசும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதையும், இது விஷயத்தில் அரசு ஆற்ற அனுமதிக்கப்படும் பங்கையும் பொறுத்திருக்கும். இந்த நாட்டின் கனிம வளக் கொள்கை சம்பந்தமாக இந்திய அரசு என்ன செய்ய உத்தேசித்துள்ளது என்பதை அவைக்குப் போதிய அளவு விளக்கிவிட்டதாகக் கருதுகிறேன்.

மதிப்பிற்குரிய ஓர் உறுப்பினர்: தீர்மானத்தை அவையின் முடிவுக்கு முன்வைக்கலாம் என்று முன்மொழிகிறேன்.

திரு.துணைத் தலைவர் (திரு.அகில் சந்திர தத்தா): தீர்மானம் இப்போது அவையின் முடிவுக்கு முன்வைக்கப்படுகிறது.

(பல உறுப்பினர்கள்: இல்லை, வேண்டாம், வேண்டாம்)

இந்த தீர்மானத்தை அவையின் முடிவுக்கு முன்வைக்கக் கூடாது என்பது அவையின் பொதுவான கருத்தாக இருப்பதாக எடுத்துக் கொள்கிறேன்.

திரு.எச்..சத்தார் எச்.எஸ்ஸாக் சேட் (மேற்குக் கடற்கரை மற்றும் நீலகிரி: முகமதியர்): ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவின்படி தேசியக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது. இது ஒரு கண்டிப்பான நடைமுறையாகும். இப்போது, அடுத்த கட்சி தனது அபிப்பிராயத்தைக் கூற முன்வரலாம். இது குறித்து அவை தனது முடிவை தற்போது தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

திரு.துணைத் தலைவர் (திரு.அகில் சந்திர தத்தா): இந்த வெட்டுத் தீர்மானத்தை அவையின் முன்வைக்க முடியாது என்பதே இப்போதுள்ள நிலை.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)