தந்தை பெரியார் பார்ப்பனர்களைத் தன் இயக்கத்தில் சேர்ப்பதற்குக் கடைசிவரை மறுத்து விட்டார். இது சரியா?

பெரியாரின் இச்செயலால் தீண்டாமை இருக்கிறது என்றும், பெரியாரிடம் ‘வேறுபாட்டுக் கொள்கை’ இருக்கிறது என்றும் கூறினால் இதுவும் சரியா?

தொடக்கத்தில் தந்தை பெரியார் ஒரு காங்கிரஸ்காரர், காந்தியவாதி, காந்தியின் சீடர். தாழ்த்தப்பட்ட மக்களைப்பற்றிப் பேசும்போது, காந்தியின் அரிஜன் சேவை, காங்கிரஸ் காரர்களுக்கு மகத்தானதாக இருந்தது. ஆனால் உண்மை வேறுவிதமாக இருந்ததைப் பெரியார் உணர்ந்தார்.

டாக்டர் நடேசன், தியாகராயர், பொப்பிலி அரசர் போன்ற பெருமக்கள்; பார்ப்பனர்களால், பார்ப்பனர் அல்லாதவர்கள் சமூக அளவில் பெரிதும் வஞ்சிக்கப்படுகிறார்கள், பார்ப்பனர் அல்லாதவர் களின் ஆதிக்கமே இதற்குக் காரணம் என்பதை அறிந்து பார்ப்பனர் அல்லாதவர்களின் உரிமைகளை மீட்க இயக்கம் கண்டார்கள். இதில் அவர்கள் கையில் எடுத்த முக்கிய பிரச்சனை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம். இன்று இதை இடஓதுக்கீடு என்கிறோம்.

காங்கிரஸ் கட்சியில் இருந்த தந்தை பெரியாரும் இதே வகுப்புவாரிப் பிரச்சினையைக் கையில் எடுத்தார். இதை ஒரு தீர்மானமாக இயற்றவேண்டும் என்று அக்கட்சியில் பெரியார் வாதாடினார் - போராடினார்.

ஆனால், ராஜாஜி, சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனத் தலைவர்கள், இவ்வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் காங்கிரஸ்கட்சி மாநாட்டில் தீர்மானமாக நிறைவேறுவதற்குத் தடையாக இருந்தார்கள். 1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாநாட்டில், இத்தீர்மானத்தைக் கொண்டு வரப் பெரியார் முயன்றபோது, பார்ப்பனர் அல்லாதவரான திரு.வி.கல்யாணசுந்தரத்தை வைத்தே தீர்மானம் நிறைவேறாமல் செய்த ராஜாஜியால் வெகுண்டெ ழுந்த பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார்.

அதற்கு முன்னர், சேரன்மாதேவி குருகுலம் நடத்திய வ.வே.சு. ஐயர், அந்தக் குருகுலத்தில் படித்த பார்ப்பனக் குழந்தைகளுக்கு ஓர் இடத்திலும், பார்ப்பனர் அல்லாத குழந்தைகளுக்கு வேறோர் இடத்திலும் பிரித்து வைத்து உணவு கொடுக்கப் பட்டதைப் பார்த்த பெரியார் பார்ப்பனியத் தீண்டா மையை அங்கே கண்டார்.

சுயசிந்தனையாளரான தந்தை பெரியார், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வந்தேறிப் பார்ப்பனர்களின் கடவுள், புரோகிதம் ஜாதகம், சாதி, மதம் போன்ற மூடநம்பிக்கைகளால் திராவிடர்கள் வீழ்ச்சிய டைந்ததை உணர்ந்தார். கல்வி, பொருளாதார, சமூக ஆதிக்கம் பார்ப்பனர்களிடத்தில் இருந்ததையும், பெண்ணடிமைத்தனம் சமத்துவமற்ற சமூக அமைப்புமுறை பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டு அது நிலைநிறுத்தப்பட்டிருந்த நிலைமையையும் தெளிவாகப் புரிந்து கொண்ட பெரியார், ஆரியர்களி னால் வீழ்த்தப்பட்ட திராவிடர்களின் எழுச்சிக்காக இயக்கம் கண்டார். அவரது இயக்கம் ஆரியர்களுக்கு, பார்ப்பனர்களுக்கு, பார்ப்பனியத்திற்கு எதிராக அமையப்பெற்றது. எனவே, அவர் திராவிடர்களைத் தம் இயக்கத்தில் சேரச் செய்தார், அணிதிரட்டினார். எந்தப் பார்ப்பனர்களுக்கு எதிராகப் பெரியார் இயக்கம் கண்டாரோ, அதே பார்ப்பனர்களை அவர் எப்படி தன் இயக்கத்திற்குள் அனுமதிப்பார்? பாம்பை நடுவீட்டில் வைக்கக்கூடாது என்பது பெரியாரின் கொள்கை.

பார்ப்பனர்களில் முற்போக்காளர்கள் இல்லையா? சாதி, மதச் சடங்குகளைத் தூக்கி எறிந்த வர்கள் இல்லையா? ஏன், தாழ்த்தப்பட்ட பெண்களைக் கூடத் திருமணம் செய்து கொண்ட பார்ப் பனர்கள் இருக்கிறார்களே! அவர்களை ஏன் பெரியார் தன் இயக்கத்தில் சேர்க்கக் கூடாது ? -இப்படியும் கேள்விகளை எழுப்பலாம்.

உண்மைதான்! மறுக்கவில்லை. இதற்குப் பெரியாரின் விடை, புத்தத்தை ஒழிக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள், புத்தத்திற்கு மாறி அதை ஒழித்ததுபோல இங்கேயும் செய்வார்கள். பெரியாரின் இந்த விளக்கம் சிந்தனைக்குரிய தல்லவா?

இந்தியாவிற்குள் ஆரியப் பார்ப்பனர்கள் நுழைந்த பின்னர் ரிக், யசுர், சாம, அதர்வனம், ஸ்மிருதிகள், புராணங்கள் என்று பல கதைகளைச் சொல்லி சமத்துவமற்ற படிநிலைச் சமுதாய அமைப்பை அவர்கள் உருவாக்கினார்கள். சூழ்ச்சியினால் பார்ப்பனர்கள் பெற்ற அதிகாரம் திராவிடர்களை வீழ்த்தி அடிமையாக்கியது.

இதனைக் கண்ட புத்தர் ஆரியத்திற்கு எதிரான போராட்டத்தை உருவாக்கினார். சமூக எழுச்சியை உருவாக்கினார். புத்தரின் ஆரிய எதிர்ப்பையும், சமூக எழுச்சியைçயும் கண்ட பிம்பிசாரன், அஜாத சத்ரு, அசோகன் போன்ற பேரரசர்கள் பவுத்தத்தை ஏற்றார்கள். அதனால் ஆரியம் பின்தள்ளப்பட்டது. தம் ஆதிக்கத்தை மீண்டும் கைப்பற்ற, புத்தரை நேரடியாக வீழ்த்த முடியாத நிலையில், ஆரியப் பார்ப்பனர்கள் தாமும் பவுத்தர்களாக புத்தரின் சங்கத்தில் இணைந்தார்கள்.

முதன்முதலாக சாரிபுத்தனும், மவுத்கல்யா யனாரும் புத்தத்தில் சேர்ந்தார்கள். தொடர்ந்து பார்ப்பனர்கள் பவுத்தர்களாக மாறி புத்தருடன் சேர்ந்தார்கள். விளைவு...?

புத்தர் மறைந்தபின் கூடிய இரண்டாம் பவுத்தமகா சபையில் பவுத்தத்தை இரண்டாக உடைத்தார்கள் வஜ்ஜியர்கள் என்ற பார்ப்பன பவுத்தத் துறவிகள். படிப்படியாகப் புத்தரின் சமூகச் சிந்தனை, பகுத்தறிவு, சுய சிந்தனைக் கொள்கைகள், கடவுள் மறுப்பு, பூசை, சடங்குகள் புறக்கணிப்பு போன்ற அனைத்தும் மாற்றப்பட்டன.

புத்தரையே கடவுள் ஆக்கினார்கள். புத்தரின் சமூக எழுச்சிக்கான போர்க்குணத்தை மறைத்து, ஒழுக்கமாக இருப்பவனே பவுத்தன் என்று சீல உபதேசங்களை நுழைத்து விட்டார்கள்.

பின்வந்த காலங்களில் சங்கமித்திரர், ஆச்சாரிய புத்ததத்தர், கணதாசர், வேணுதாசர், போதி தருமர், தருமபாலர், ஆச்சாரிய திக்நாகர், ஆச்சாரிய தருமபாலர், தம்மபாலர் போன்ற பலப்பல பார்ப்பனர்கள் பவுத்தத் துறவிகளாக மாறி, புத்தரின் நேரடி பவுத்தத்தை மாற்றி அமைத்தார்கள். கி.பி.2 ஆம் நூற்றாண்டில் நாகார்ஜுனர் என்பவர், புத்தருக்கு நேர் எதிரான ஆரியவாதத்தைச் சூனியவாதமாகச் சொல்லி மகாயான பவுத்தம் என்றார். பவுத்தம் வீழ்ந்தது.

நேரடியாக எதிர்த்து வெல்லமுடியாத பவுத்தத்தை ஒழிக்கத் தாங்களே பவுத்தர்களாக மாறி, பவுத்தத்திற்குள் நுழைந்து பவுத்தத்தை ஒழித்தவர்கள் பார்ப்பனர்கள். இதை கருத்தில் வைத்துத்தான், புத்தத்தை ஒழிக்க வேண்டும் என்று, பார்ப்பனர்கள் புத்தத்திற்கு மாறி அதை ஒழித்தது போல இங்கேயும் செய்வார்கள் என்றார்.

‘திராவிடர் கழகம்’ என்றுதான் பெயர் வைத்தார், பெரியார். ‘தமிழர் கழகம்’ என்று வைக்கவில்லை. ஏனென்றால் நாங்களும் தமிழர்கள் தான் என்று பார்ப்பனர்கள் தமிழர் கழகத்தில் நுழைவார்கள். பின் அதை ஒழிப்பார்கள். திராவிடர் கழகம் என்று பெயர் வைத்தால் பார்ப்பனர்கள் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்லிக் கொண்டு அங்கே வரமாட்டார்கள். அவர்கள் ஆரியர்கள். அதனால் தான் பெரியார் திராவிடர் கழகம் என்று தன் இயக்கத்தை உருவாக்கினார்.

ஒரு இரசாயனப் பொருள் இன்னொரு இரசாயனத்துடன் சேர்ந்தால் வேதியலில் மாற்றம் ஏற்படும். ஒரு திரவம் இன்னொரு திரவத்துடன் சேர்ந்தால் அது கலவையாகும். ஒரு திடப்பொருள் இன்னொரு திடப்பொருளுடன் சேர்ந்தால் எதுவும் ஆகாது.

நெருப்பு மட்டும், தான் எந்தப் பொருளுடன் சேர்கிறதோ, அந்தப் பொருளை எரித்து அழித்துவிடும். சேர்ந்தாரைக் கொல்லும் குணம் நெருப்புக்கு இருப்பதனால் அதைச் “சேர்ந்தாரைக் கொல்லி” என்றார் வள்ளுவர்.

பார்ப்பனர்களின் குணமும் அதுதான் என்பதால்தான் தந்தை பெரியார் பார்ப்பனர்கள் எவ்வளவு முற்போக்கானவர்களாக இருந்தாலும், தன்னுடன் சேர்க்காமலே இறுதிவரை இருந்தார். இதில் தீண்டாமையும் இல்லை, வேறுபாட்டுக் கொள்கையும் இல்லை.!

- எழில்.இளங்கோவன்

Pin It