பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளைக் காட்டத் தேவைப்படுகின்ற குறிகளை ‘நிறுத்தக்குறிகள்’ என அழைக்கிறோம். பின்வரும் நிறுத்தக்குறிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
1. கால்புள்ளி ( , )
2. அரைப்புள்ளி ( ; )
3. முக்கால்புள்ளி ( : )
4. முற்றுப்புள்ளி ( . )
5. கேள்விக்குறி ( ? )
6. உணர்ச்சிக்குறி ( ! )
7. இரட்டை மேற்கோள்குறி ( “ ” )
8. ஒற்றை மேற்கோள்குறி ( ‘ ’ )
9. மேற்படிக்குறி (”)
10. பிறை அடைப்பு ( )
11. சதுர அடைப்பு [ ]
12. இணைப்புக்கோடு (-)
13. சாய்கோடு (/)
14. அடிக்கோடு ( _ )
15. உடுக்குறி (*)
நிறுத்தக்குறிகளைப் பயன்படுத்த சில விதிமுறைகள் அவசியம்.
1. கால்புள்ளி ( , )
கால்புள்ளி இட வேண்டிய இடங்கள்:
1.1 ஒரே எழுவாயைக் கொண்டு அடுக்கி வரும் முற்றுவினைகளுக்கு இடையில் கால்புள்ளி இட வேண்டும்.
எ-டு
உங்கள் நூலைப் படித்தேன், ரசித்தேன், சிரித்தேன்.
1.2 ஒரே பெயரைத் தழுவும் சொற்களுக்கு இடையிலும் தொடர்களுக்கு இடையிலும் கால்புள்ளி இட வேண்டும்.
எ-டு
இங்குச் சாதி, மத, நிற வேறுபாடுகள் கிடையாது.
1.3 ஒரே வினையைத் தரும் சொற்களுக்கு இடையிலும் தொடர்களுக்கு இடையிலும் கால்புள்ளி இட வேண்டும்.
எ-டு
அந்தப் பாடல் இனிமையாக, சுகமாக, எளிமையாக, நயமாக இருந்தது.
1.4 தொடர்புபடுத்திக் கூறப்படும் சொற்களுக்கு இடையிலும் தொடர்புகளுக்கு இடையிலும் கால்புள்ளி இட வேண்டும்.
எ-டு
தாய், தந்தை இருவர் முகத்திலும் மகிழ்ச்சி.
1.5 ஒரே சொல் அல்லது தொடர் இருமுறை அடுக்கி வரும்போது அவற்றிற்கு இடையில் கால்புள்ளி இட வேண்டும்.
எ-டு
பகுத்தறிவு, பகுத்தறிவு என்று பேசாதீர்.
1.6 ஒரு வாக்கியத்தை அதன் முன் உள்ள வாக்கியத்துடன் தொடர்புபடுத்தும் சொற்களையும் தொடர்களையும் அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.
எ-டு
அவர் நல்லவர். ஆனால், வல்லவர் அல்ல.
அங்குச் சென்றனர். அடுத்து, ஓய்வு எடுத்தனர்.
1.7 வாக்கியத்தின் தொடக்கத்தில் வாக்கியத்திற்கே வினையடையாக வரும் சொற்களையும் தொடர்களையும் அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.
எ-டு
பொதுவாக, அவர் அரசியலில் ஈடுபாடு கொள்வதில்லை.
1.8 ‘குறிப்பாக’, ‘அதாவது’ என்னும் சொற்களைக் கொண்ட தொடருக்கு முன்னும் பின்னும் கால்புள்ளி இட வேண்டும்.
எ-டு
இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள், நல்ல உழைப்பாளிகள்.
1.9 அழுத்தத்திற்காக வரிசைமுறை மாற்றி எழுதப்படும் தொடர்களுக்கு இடையில் கால்புள்ளி இட வேண்டும்.
எ-டு
அறையில் மண்டிக்கிடந்தது, குப்பை.
1.10 ஒரு முழுமையான கூற்று வாக்கியத்தைத் தொடர்ந்து வரும் ‘இல்லையா’, ‘அல்லவா’ போன்ற சொற்களுக்கு முன் கால்புள்ளி இட வேண்டும்.
எ-டு
ஆசிரியர் கடுமையாகத் திட்டினார், இல்லையா?
1.11 ஒரே வாக்கியத்தில் அடுக்கி வரும் வினாத் தொடர்களுக்கு இடையில் கால்புள்ளி இட வேண்டும்.
எ-டு
அவன் வருவானோ, மாட்டானோ?
1.12 ஒரே வாக்கியத்தில் அடுத்தடுத்து வரும் ஏவல் வினைகளுக்கு இடையில் கால்புள்ளி இட வேண்டும்.
எ-டு
அவரைத் தடுக்காதே, செல்ல விடு.
1.13 எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையில் தொடர் வரும்போது எழுவாயை அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.
எ-டு
என் தங்கையின் திருமணம், வருகிற 30ஆம் தேதி நடைபெற உள்ளது.
1.14 உணர்ச்சிகளைத் தெரிவிக்கும் வாக்கியத்தில் இடம்பெறும் உணர்ச்சியைக் குறிப்பிடும் சொல்லை அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.
எ-டு
சே, என்ன வாழ்க்கை இது!
ஆ, என்ன அழகு!
1.15 வாக்கியத்தின் தொடக்கத்தில் வரும் ‘ஆமாம்’, ‘இல்லை’, ‘ஓ’, ‘ஓகோ’போன்ற சொற்களை அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.
எ-டு
ஆமாம், நான் ஏழைதான்.
இல்லை, நான் பள்ளிக்குச் செல்லவில்லை.
ஓ, நீங்கள் போகலாம்.
ஓகோ, நீங்கள்தான் மாணவர் தலைவரா?
1.16 இரு வினாக்களுக்கு இடையில் வரும் ‘இல்லை’ என்ற சொல்லை அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.
எ-டு
இது சரியா, இல்லை, தவறா?
1.17 விளிக்கும் சொற்களை அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.
எ-டு
“பாட்டி, சாப்பீட்டீர்களா?” என்றான் பேரன்.
1.18 கடிதத்தில் இடம்பெறும் விளிக்கும் சொல் அல்லது தொடர், முடிக்கும் சொல் அல்லது தொடர் ஆகியவற்றை அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.
எ-டு
ஐயா,
அன்புள்ள தங்கைக்கு,
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
1.19 முகவரியில் பெயர், பதவி, நிறுவனம் போன்ற விவரங்கள் ஒவ்வொன்றையும் அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.
எ-டு
முனைவர் கண்ணகி,
செயலாளர்,
41, இலக்குவனார் சாலை,
அண்ணா நகர்,
சென்னை.
1.20 தலைப்பு எழுத்தைப் பெயருக்குப் பின்னால் பயன்படுத்தும்போது பெயரை அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.
எ-டு
கோவலன், மா.
1.21 பட்டங்களைக் குறிக்கும் சுருக்கக் குறியீடுகளுக்கு இடையில் கால்புள்ளி இட வேண்டும்.
எ-டு
முனைவர் சு. செல்லப்பன் எம்.ஏ., பி.டி., பி.எல்., பிஎச்.டி.
1.22மாதத்தின் பெயரைத் தொடர்ந்து வரும் தேதிக்கும், ஆண்டுக்கும் இடையில் கால்புள்ளி இட வேண்டும்.
எ-டு
ஏப்ரல் 30, 2014
2. அரைப்புள்ளி ( ; )
அரைப்புள்ளி இட வேண்டிய இடங்கள்:
2.1 ஒரு குறிப்பிட்ட கருத்தை மையமாகக் கொண்ட முற்றுத்தொடர்களுக்கு இடையில் அரைப்புள்ளி இட வேண்டும்.
எ-டு
எல்லாப் பணிகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும்;
தமிழ்மொழி வளர வேண்டும்; தமிழ் சிறப்புப்பெற வேண்டும்.
2.2 ‘ஒப்புமைப்படுத்துதல்’, ‘மாறுபட்ட நிலைகளை இணைத்துக் காட்டுதல்’என்னும் பொருட்கூறுகளை அடிப்படையாகக் கொண்ட முற்றுத் தொடர்களுக்கு இடையில் அரைப்புள்ளி இட வேண்டும்.
எ-டு
அறிஞர் அடக்கமாக இருப்பர்; மூடர் ஆரவாரம் செய்வர்.
தாய், மகள் இருவரும் ஒரு பக்கம்; தந்தை மட்டும் இன்னொரு பக்கம்.
2.3 ஒரு தொகுப்பு ஒன்றுக்கு மேற்பட்ட விவரங்களைக் கொண்டிருக்கும்போது தொகுப்புகளுக்கு இடையில் அரைப்புள்ளி இட வேண்டும்.
எ-டு
வெற்றி பெற்றவர்கள்:
கண்ணகி, கோவை; மணிமேகலை, சேலம்; கௌதமி, திருச்சி;
வாசுகி தருமபுரி; இந்திரா, சென்னை.
3. முக்கால்புள்ளி ( : )
முக்கால்புள்ளி இட வேண்டிய இடங்கள்:
எ-டு
எல்லோரும் கேட்ட கேள்வி: அடுத்த சந்திப்பு எப்போது?
சொத்து வரி: முழுச் சொத்து மதிப்பின் மீதான வரி.
பட்டா : நிலம், வீட்டு மனை முதலியவை குறித்த ஆவணம்.
3.1 விவரங்களைப் பட்டியல் முறையில் ஒன்றன்பின் ஒன்றாகத் தரும்போது முக்கால்புள்ளி இட வேண்டும்.
எ-டு
பெயர் : கொ. அமுதினி
பிறந்த தேதி : 17 . 1 . 1 996
பிறந்த ஊர் : சென்னை
3.2 ஒருவரை அவருடைய செயல்பாட்டோடு அல்லது செயல்பாட்டுக்கு உரியதோடு தொடர்புபடுத்த முக்கால்புள்ளி இட வேண்டும்.
எ-டு
வசனம் : சோமு
இயக்கம் : யாழினி
பாட்டு : மணி
3.3 தலைப்புச் செய்திகளில் தலைப்புக்கும் அதனோடு தொடர்புடைய நபர், நிறுவனம் போன்றவற்றிற்கும் இடையில் முக்கால்புள்ளி இட வேண்டும்.
எ-டு
இடைத்தேர்தல் : சம்பத் ஆணை
சரக்கு வரி : மத்திய அரசு சட்டம் இயற்ற வலியுறுத்தல்
4. முற்றுப்புள்ளி ( . )
எ-டு
திருமணம் என்பது காலத்தின் கட்டாயம்.
“இந்த உலகில் மனிதன்தான் உயர்ந்தவன்.”
பின்வரும் இடங்களில் முற்றுப்புள்ளி தேவை இல்லை.
எ-டு
திருமதி விசாலாட்சி
சேலம் க. மாதவன்
அறிஞர் அண்ணா
முனைவர் இரா. மணிவேலன்
செந்தமிழ்ச்செல்வர் பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரை
5. கேள்விக்குறி ( ? )
5.1 வினா வாக்கியத்தின் முடிவில் கேள்விக்குறி இட வேண்டும்.
எ-டு
கணினியின் பயன்கள் எவை?
5.2 ஐயம், நம்பிக்கையின்மை ஆகியவை தொனிக்கும் வாக்கிய முடிவில் கேள்விக்குறி இட வேண்டும்.
எ-டு
சிபாரிசு இல்லாமல் வேலை கிடைக்கும்?
5.3 வினாக் குறிப்பு அடங்கிய, முற்றுப் பெறாத வாக்கியத்தின் முடிவில்.
எ-டு
அப்பெண்ணின் கதி....?
5.4 வியப்போடு ஒன்றை வினவும்போது கேள்விக்குறியையும் உணர்ச்சிக் குறியையும் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
எ-டு
அமெரிக்காவிற்கா போகிறீர்கள்?!
5.5 அடுக்கி வரும் வினாக்களுக்கு இடையில் தேவையில்லை. (இறுதி வினாவில் மட்டும் இடலாம்.)
எ-டு
இது வீடா, இல்லை, மாளிகையா?
6. உணர்ச்சிக்குறி ( ! )
6.1 உணர்ச்சியைக் குறிக்கும் சொல்லையடுத்து உணர்ச்சிக்குறி இட வேண்டும்.
எ-டு
ஆஹா! ஐயோ!
6.2 உணர்ச்சியைக் குறிக்கும் சொல் இரட்டித்து வரும்போது அதில் இரண்டாவதாக வருவதை அடுத்து உணர்ச்சிக்குறி வரும்.
எ-டு
ஆஹா ஆஹா! ஆ ஆ! ஐயோ ஐயோ!
6.3 கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரே சொல்லை இரு முறை கூறும்போது ஒவ்வொன்றின் பின்னும் உணர்ச்சிக்குறி வரும்.
எ-டு
பாம்பு! பாம்பு!
6.4 விளிச்சொற்களையும் விளித்தொடர்களையும் அடுத்து உணர்ச்சிக்குறி வரும்.
எ-டு
உடன்பிறப்புகளே!
7. இரட்டை மேற்கோள்குறி ( “ ” )
ஒருவரின் கூற்றைத் தனித்துக் காட்ட இரட்டை மேற்கோள் குறியை இட வேண்டும்.
எ-டு
“இது எப்படி இருக்கிறது?” என்றான் அவன்.
8. ஒற்றை மேற்கோள்குறி ( ‘ ’ )
ஒருவரின் கூற்றுக்குள் (இரட்டை மேற்கோள்குறிக்குள்) வரும் இன்னொருவரின் கூற்றைத் தனித்துக் காட்ட.
எ-டு
“களவியல் சங்க காலத்தைச் சார்ந்தது என்ற கருத்தையே இவர் ஏற்றுக்கொண்டு, ‘இதன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாகாது’ என்கிறார்.”
(முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் எழுதிய ‘தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்’ நூலிலிருந்து...)