தேவையான பொருட்கள்:

கோழி - 1
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 4
உலர்ந்த மிளகாய் - 5
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி
அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணெய் பொரிப்பதற்கு

செய்முறை:

முழுக்கோழியை நன்கு சுத்தம் செய்து, இரண்டு சரி பாதியாக வெட்டிக் கொள்ள வேண்டும். மார்பு, தொடைப் பகுதி சதைகளில் இரண்டு மூன்று ஆழமான வெட்டுக்கள் உண்டாக்க வேண்டும். வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைத் தோலுரித்து நறுக்கிக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய், உலர்ந்த மிளகாய் ஆகியவற்றின் காம்புகளை நீக்கி நறுக்கின வெங்காயம், இஞ்சி, பூண்டுடன் சிறிது நீர் சேர்த்துக் கொண்டு, விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

கறிவேப்பிலையை கழுவி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அரைத்து வைத்துள்ள விழுதுடன் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, அரிசி மாவு, தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையினை இறைச்சியின் மீது நன்கு பூசி, பிறகு நறுக்கின கறிவேப்பிலையில் புரட்டி சுமார் 2 மணி நேரங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஊறவிட வேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடேறியதும் அதில் மசாலாத் தடவிய கோழி இறைச்சியை போட்டு எல்லா பக்கமும் வேக வைக்க வேண்டும். பிறகு தீயைச் சற்று குறைத்து, வாணலியை மூடி வைத்து சுமார் பதினைந்தில் இருந்து இருபது நிமிடங்கள் வேகவிட வேண்டும். அவ்வப்போது திறந்து இறைச்சியைத் திருப்பிப் போட்டு, மிதமுள்ள மசாலாவினையும் தடவி, தேவையெனில் சிறிது நீரினையும் தெளித்து வேகவிட வேண்டும். கறி பொன்னிறமானதும் எடுத்து, துண்டுகள் போட்டுப் பரிமாற வேண்டும்.