தேவையான பொருட்கள்:

நண்டு – 10
காய்ந்த மிளகாய் - 2
பச்சைமிளகாய் - 2
வெங்காயம் - ஒரு கப்
இஞ்சி, பூண்டு விழுது - 5 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரைத்தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைத்தேக்கரண்டி
தக்காளி - 2 கப் (நறுக்கியது)
தேங்காய்த்துருவல் - ஒரு கப்
கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு - தேவையான அளவு 

செய்முறை:

நண்டின் பின்புற ஓடு மற்றும் தேவையற்ற பகுதிகளை நீக்கிவிட்டு தண்ணீரில் நன்கு அலசி, இரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் கழுவி சிறியத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலையையும், கொத்தமல்லியையும் கழுவி, கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயின் காம்புகளை நீக்கி, நறுக்கி, தேங்காய்த்துருவலுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். 

சற்று பெரிய வாணலியாக எடுத்துக் கொண்டு, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் காய்ந்த மிளகாயினைப் போட்டு ஐந்து விநாடிகள் வதக்கி அத்துடன் இஞ்சி, பூண்டு விழுதினையும் சேர்த்து நன்கு வதக்கவும். விழுதுகளின் நீர் ஆவியாகும் வரை வதக்கி, அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து அரை நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளியைப் போட்டு, அடிப் பிடிக்காமல் இருக்க சிறிது தண்ணீர் ஊற்றி, தீயின் அளவைக் கூட்டி நன்கு வதக்கவும். 

எண்ணெய் விடும் வரை வதக்கவும். அதன் பின் தீயின் அளவைக் குறைத்து தேங்காய் விழுதினைச் சேர்க்கவும். சுமார் இரண்டு நிமிடங்கள் புரட்டிய பின் நண்டுகளையும், கறிவேப்பிலையையும் போட்டு, ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தீயின் அளவைக் குறைத்துக் கொள்ளவும். அவ்வபோது கிளறிவிட்டு சுமார் 20 நிமிடங்கள் வேகவிடவும். நன்கு வெந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழையினைத் தூவி பரிமாறவும்.