தேனி மாவட்டத்தின் சின்னக்குற்றாலம் என அழைக்கப்படுவது கும்பக்கரை அருவி. பெரியகுளத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேற்குமலைத் தொடர்ச்சியில் அமைந்துள்ள கும்பக்கரை அருவி ஒரு இயற்கையான அருவி. மூலையார் பகுதியில் தோன்றி பல இடங்களைக் கடந்து கும்பக்கரை அருவியாக வருகிறது. இந்த அருவியில் பாண்டி மன்னர்களின் தலவிருட்சமான மருதமரங்கள் அதிகம் நிறைந்துள்ளது. மருதமரங்களின் வேர்களின் இடையே இந்த அருவியில் குளித்தால் வாதநோய் உண்டாகாது என்பது நம்பிக்கை.
இந்த அருவியின் அருகே வனதெய்வக் கோயில்கள் உள்ளன. பூம்பறையாண்டி வைரன், கிண்டன், கிடாயன் உள்ளிட்ட வனதெய்வங்கள் இந்த அருவியில் இரவு நேரங்களில் நடமாடுவதாக நம்பப்படுகிறது. இந்த அருவியில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு கஜம் என அழைக்கப்படும் இடங்கள் அதிக உள்ளன. அந்த கஜங்கள் அதனுடைய வடிவமைப்பிற்கு ஏற்றவாறு உள்ளது. அண்டா கஜம், யானை கஜம், குதிரை கஜம் என பல கஜங்கள் உள்ளன. இதில் யானை கஜம் பகுதி மிகவும் ஆபத்தான பகுதியாகும்.
ஆண்டுதோறும் நீர் வற்றாமல் இந்த அருவியில் தண்ணீர் வருவது சிறப்பான ஒன்றாகும். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவியில் குளிக்க காண காலை 9.00 மணிக்குமேல் மாலை 5.00 மணிவரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இங்கு தங்கும் விடுதிகளோ, உணவகங்களோ இல்லை. சுற்றுலா செல்லும் பயணிகள் தங்களுக்குத் தேவையான பொருட்களை பெரியகுளத்தில் வாங்கிச் செல்வது நல்லது. பேருந்து வசதி, ஆட்டோ வசதி உள்ளது.
- வைகை அனிஷ், தொலைபேசி:9715-795795