திருநெல்வேலி மாவட்டம், தென்காசியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது குற்றலாம். தென் பொதிகை மலையில் அருவிகளின் நகரம், சிற்றாறு பாயும் மலைப் பகுதிகளே குற்றாலம்.

தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்த உடன் கேரளாவில் மழை பொழியும். குற்றாலத்தில் சீசன் துவங்கும். கேரளாவையும், தமிழகத்தையும் மலையுனுள் இணைக்கும் அருவிகளின் பிறப்பிடம் தென் பொதிகை மலை. தென்னகத்தின் ஸ்பா என்றழைக்கப்படுகிறது. (சிற்றாறு, மணிமுத்தாறு, தாமிரபரணி ஆறுகளின் பிறப்பிடம்)ஆண்டுதோறும் ஜூன் துவங்கி ஆகஸ்ட் இறுதிவரை சீசன் காலம். இங்கு ஒன்பது அருவிகள் உள்ளன. அருவிகளில் தண்ணீர் கொட்டுவது மட்டுமல்ல, எப்போதும் பூப்போல பெய்து கொண்டிருக்கும் சாறலே குற்றாலத்தின் சிறப்பம்சமாகும்.

பேரருவி: இது தான் பிரதான குற்றால அருவியாகும். மெயின் பால்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இது குற்றாலம் பஸ் நிலையத்தின் அருகில் உள்ளது. 288 அடி உயரத்திலிருந்து பொங்குமாக் கடலில் விழுந்துபின் எழுந்து விரிந்து பரவி விழும் அருவி.

சிற்றருவி: பேரருவியின் மேலாக நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது. பேரருவியில் பிரிந்து செல்லும் கிளை அருவியே சிற்றருவி. ஆண், பெண் தனியாக குளிப்பதற்கான வசதியுள்ளது.

செண்பகா தேவி அருவி: பேரருவியில் இருந்து உயரத்தில் மலைப்பாதையில் 2 கி.மீ தூரத்தில் உள்ளது. 30 அடி உயர மலையில் விழும் அருவி இது. மலையழகிற்கு நடுவில் விழும் அருவி என்பது கூடுதல் அழகாகும்.

தேனருவி: செண்பகா தேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. அந்த அருவியின் அருகில் மரங்களில் தேன் கூடுகள் தொங்கும் அபாயகரமானது. குளிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

ஐந்தருவி: குற்றாலத்திலிருந்து ஐந்து கி.மீ தூரத்தில் உள்ளது. திரிகூட மலையின் உச்சியிலிருந்து 40 அடி உயரத்தில் உருவாகி சிற்றருவியின் வழியாக வந்து 5 கிளையாக பிரிந்து விழுகிறது.

பழத்தோட்ட அருவி: இது ஐந்தருவியிலிருந்து மலைப்பாதையில் 3 கி.மீ தூரத்தில் உள்ளது. விஐபிக் களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட இவ்வருவியில் தற்போது யாருக்கும் அனுமதி இல்லை.

புலியருவி: குற்றாலத்தில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது. குழந்தைகள் குளிப்பதற்கு ஏற்றது.

பழைய குற்றால அருவி: அழகனாற்று நதியில் அமைந்துள்ளது. குற்றாலத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது.

பாலருவி: இது தேனருவிக்கு அருகில் உள்ளது. ஒவ்வொரு அருவிக்கும் தனிச் சிறப்பு உள்ளதாக கூறப்படுகிறது. திரிகூட ராசப்ப கவிராயர் குற்றால குறவஞ்சியில் அருவிகளின் தனிச் சிறப்பை பதிவு செய்துள்ளார்.

ஆலயங்கள்: சோழ, பாண்டிய மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்ட குற்றால அருவியின் அருகில் குற்றால நாதர் ஆலயம் உள்ளது. அருவிக்கு ஒரு கோயிலும் உள்ளது. ஐந்தருவியில் சபரிமலை சாஸ்தா, முருகன் கோயிலும், செண்பகா தேவியில் செண்பகா தேவி அம்மன் கோயில், சித்ரா பௌர்ணமி தினத்தில் விழா கொண்டாடப்படும் காலங்களில் கூட்டம் அதிகமிருக்கும்.

குற்றால மலைகளில் மூலிகைச் செடிகளுக்கு இடையே நீர் வருவதால் நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளதாக கூறப்படுகிறது. மன நோயில் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று மாதங்கள் குளித்தால் போதும் சித்த பிரம்மை நீங்கிவிடும் என நம்பிக்கை கொண்டவர்களும் உண்டு. தீரா சரும நோய்கள் தீர்ந்து விடும் வாய்ப்புள்ளது.

(இளைஞர் முழக்கம் ஆகஸ்ட் 2011 இதழில் வெளியானது)