எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் மகத்தான ஆளுமைகள் குறித்த நினைவுகள் பற்றிய கட்டுரைகளும், படைப்புகளும் அவர்கள் மறைந்த பின்புதான் வெளிக்கொணர வேண்டும் என்பதில்லை. அவர்கள் வாழும் காலத்திலேயே அவை பதிவு செய்யப்படுவது அந்தப் படைப்பாளிக்கு கவுரவம் தருவதாகும். அதுவும் இன்றைய புதிய தலைமுறையினர் பழைய தலைமுறை ஆளுமைகள் குறித்து அறிந்து கொள்ள இவ்வகை படைப்புகளும், ஆவணங்களும் முக்கியமாக இருக்கின்றன. அந்த வகையில் ஓர் ஆளுமை குறித்த ஆவணப் படம் ஒன்றை புதுவை யுகபாரதி இயக்கி இருக்கிறார்.

புதுச்சேரி தமிழ்க் காப்பியத் தாத்தா துரை.மாலிறையனார் அவரின் வயது 80. 50க்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருக்கிறார். அதில் மரபுக் கவிதை நூல்களும் காவியங்களும் காப்பியங்களும் முக்கியமானவை. இன்றைய இளைய தலைமுறையும் கல்வி சார்ந்த மக்களும் மரபுக் கவிதை எழுதுவதை குறைத்துக் கொண்டு விட்டார்கள். இந்த சூழலில் மரபுக் கவிதையின் ஓசைநயம் அவற்றைப் பாடுவதில் உள்ள மெய்மறந்த அனுபவம், அவற்றில் நவீன கவிதையை அம்சங்களையே கொண்டு வருவது மற்றும் நெடும் கவிதைகள், அதன் நீட்சியாக காப்பியங்கள், காவியங்கள் ஆகியவற்றை உருவாக்குவது இன்றைய இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாக இருக்கின்றன, அதற்காக புதுவையைச் சேர்ந்த கவிஞர் துரை. மாலிறையனார் அவர்களின் வாழ்க்கையை முன்வைத்து இந்த ஆவணப்படத்தை புதுவை யுகபாரதி உருவாக்கியிருக்கிறார். பெரும்பாலும் படைப்பாளிகளின் குடும்பச் சூழல் அவர்களுக்கு ஒத்துழைப்பு தராது. இன்னொரு பக்கம் அவர்களின் கேள்விக்கான சூழ்நிலையில் மாட்டிக் கொள்வார்கள். இந்த சூழலில் கவிஞரின் துரை. மாலிறையனாரின் கவிதை அனுபவம், வாழ்க்கை பற்றிய அவரின் குடும்பத்தினரும், அடுத்த தலைமுறையான பேரன் பேத்திகளும் கூட ஈடுபாட்டுடன் இந்த ஆவணப் படத்தில் பேசுவதை ஒரு முக்கிய அம்சமாகக் கொள்ளலாம்.

பல இடங்களில் வெளிப்படும் மரபுக் கவிதைகள் அவற்றின் ஓசை கருதியும் எடுத்தாழும் பிரச்சனைகள் குறித்தும் அக்கறைக்கு உள்ளான கவிஞர் என்ற அளவில் தம் படைப்புகளை மட்டும் வெளிப்படுத்தாமல் பிற படைப்புகளை வெளிக்கொணர்வதில் முன்னிட்டு பல படைப்பாளிகளை முன்னிறுத்துவது, உருவாக்குவது என்பதை புதுச்சேரி தமிழ்ச் சங்கம் அமைப்பிலும் இக்கவிஞர் தொடர்ந்து ஈடுபட்டு உழைத்திருக்கிறார் என்பது இன்னும் குறிப்பிட வேண்டிய செய்தியாக இருக்கிறது.

இதில் இடம்பெறும் பல தகவல்கள் ஆச்சரியத்துக்கும் கவனத்திற்கும் உரியன. ஒரு தகவல் உதாரணத்திற்கு... தமிழக அரசு இவரின் நூலொன்றை நூலக ஆணை திட்டத்தின் பிரகாரம் 12 ஆயிரம் பிரதிகள் பெற்றது என்பது. இது போல பல வியத்தகு தகவல்களை கூட இந்த ஆவணப்படம் கொண்டிருக்கிறது. இந்த ஆவணப் படத்தில் இந்த ஆளுமை குறித்த பல்வேறு நினைவுகளை அவர்களோடு பழகியவர்கள், அவருடைய பணி புரிந்தவர்கள், சக எழுத்தாளர்கள் என்ற வகையில் திருநாவுக்கரசு, சுந்தரம் முருகன், தமிழ்மணி, உசேன் உட்பட பலர் பதிவு செய்திருக்கிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் கவிஞர் பற்றிச் சொல்லி இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியமாக இருக்கிறது.

இந்த ஆவணப் படத்தின் ஆரம்பத்தில் திரையில் ஓடும் சில வரிகள் கவனத்திற்குரியவை. ஏதோ மரபுக் கவிஞர்கள்.. அவர்களுக்கு வேறு என்ன தெரியும் என்ற வகையில் இருக்கும் சாதாரண பொய்யான கற்பிதங்களை உடைக்கின்ற விதமாய் ஒரு கவி ஆளுமை என்பவர் எப்படி பன்முகத் தன்மை கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளமாக பலர் விளங்குகிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக இப்படம் இருப்பதை குறிப்பிடுகிறது. அந்தத் திரைவரிகள் இவை: “தமிழ் மொழி, தமிழ் இனம் குறித்து பாடி தமிழ் மரபையும் தமிழ்ப் பண்பாட்டையும் போற்றிக் காத்துவரும் தமிழ்ப் புலவர்களுக்கு கவிதை என்றால் என்ன என்றும் மிக நன்றாகத் தெரியும். அவர்களுக்குப் பெண்ணியம், தலித்தியம், பின் நவீனத்துவ இலக்கிய அரசியல் மற்றும் சமூக அரசியல் குறித்தான பார்வையும் சிந்தனையும் இருக்கிறது என மெய்ப்பிக்கும் சான்றாக வாழ்ந்து வருகின்ற தமிழ்மாமணி துரை. மாலிறையனாரின் வாழ்வியல் ஆவணமே இப்படைப்பு. திருக்குறள், பாரதி மற்றும் பாரதிதாசனின் சில பாடல்கள், சங்க இலக்கியத்தில் ஏதோ ஒன்றிரண்டுப் பாடல்கள் என மனப்பாடம் செய்து கொண்டு தமிழ்ப் புலவர்களும் மரபுப் பாவலர்களும் தமிழ்... தமிழ் என்று குதித்துக் கொண்டிருக்கிறார்கள். எதுகை, மோனை என்ற பெயரில் குட்டு, பட்டு, நட்டு, எட்டு என்று வீணுக்கு எழுதி புலவர்கள் என்று காட்டிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறார்கள். அவர்களுக்குப் பழம் பெருமை பேசுவதை விட்டால் வேறு என்ன தெரியும். நவீன இலக்கியம் தெரியுமா. பெண்ணியம், தலித்தியம், பின் நவீனத்துவம் என்றால் என்ன என்றாவது தெரியுமா என்று இன்றைய நவீன இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்வோர் பகடி செய்யும் நிலை இருக்கிறது”

இதை புதுவை யுகபாரதி தன்னுடைய தொகுப்பின் மூலம் நிரூபணப்படுத்தி இருக்கிறார். காப்பியங்களும், காவியங்களும் எழுதுவது சாதாரண விஷயம் இல்லை. அதற்கான உழைப்பு பெரும் நாவலுக்கான உழைப்பும் பயிற்சியும் கொண்டது போலதாகும். இப் படத்தில் பல இடங்களில் புதுவை பாரதி கவியுடன் உட்கார்ந்து உரையாடும் பின்புலம் கவனிக்கத் தக்கதாக இருக்கிறது.

கவிஞர் துரை. மாலிறையனார் மதர் தெரசா பங்கு பெற்றிருக்கிற கூட்டத்தில் பேசும் ஒரு காணொளி கோப்பு இதில் ஒரு முக்கிய ஆவணமாகக் கொள்ளலாம். மதர் தெரசா பற்றிய ஒரு காப்பியம் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புதுவை மண்ணின் எழுத்தாளர்கள் பற்றிய விவரங்களும் புகைப்படங்களும் அடங்கிய தொகுப்பு படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படுவது புதுவை எழுத்தாளர் உலகம் பற்றி தெரிந்து கொள்ள ஒரு நல்ல அறிமுகமாக இருக்கிறது. இதுபோன்ற ஆளுமைகள் பற்றிய பல்வேறு விஷயங்களை முன்வைத்து அந்தத் தரவுகளையும் பதிவுகளையும் ஆவணப்படுத்தி வெளிக் கொணர்வது என்பது மிக முக்கிய கடமையாக இருக்கிறது. தன்னுடைய சமூக வாழ்க்கையில் தனி மனிதனாக இல்லாமல், சமூக மனிதனாக சமூகத்தில் பல்வேறு போராட்டங்களிலும் கலந்து கொண்டு தன் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார் துரை. மாலிறையனார்

புதுவைக்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் பட்டியலில் இவரையும் சேர்த்து இருக்கிறார்கள். அவர்களின் உறவினர்கள், தொழில் முனைவோர், தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் போன்றோரும் இருக்கிறார்கள். தனிமனித எழுத்தாய் நின்று விடாமல் எழுத்தாளர்கள் சமூகத்தை உருவாக்க, கூட தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளின் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். 17 வயதில் ஆசிரியர் பணி கிடைத்து இருக்கிறது அந்தப் பணியை சரியாக நிறைவு செய்ததால் அரசின் நல்லாசிரியர் விருது என்ற வகையில் கவுரப்பட்டிருக்கிறார். பாரதிதாசன் தந்த மொழி, இனம் சார்ந்த உணர்வுகளில் அவரின் படைப்புகள் மையமாகக் கொண்டது. 

ஒரு பள்ளிக் கல்வி என்பது வெறுமனே இளம் வயதில் ஒரு பருவமாக மட்டும் இல்லாமல் தமிழ் உணர்வு தந்த இடமாகவும் படைப்பிலக்கியத்தின் வாயிலாகவும் இருப்பதை சொல்லி இருக்கிறார். கவிஞர் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். வாழ்க்கையில் சாதி கடந்த பல முயற்சிகளுக்குத் துணை நின்றவர். தலித்தியம், பெண்ணியம் சார்ந்து அவர் கூறுகின்ற கருத்துக்கள் வேறுவகை பார்வையைக் கூட தருகின்றன. உதாரணத்துக்கு தலித்தியம் பற்றி சொல்கையில் "அவர்களும் நாமே... பின் ஏன் பிரிந்து பேச வேண்டும்” என்ற கருத்தை முன்வைக்கிறார். பிரஞ்சுக் கல்வி, புலமை, பெண்ணியம், பிரஞ்சு வரலாறு என்று பல பொருள் பற்றிப் பேசும் போது இந்தக் கேள்விகளை யுகபாரதி முன்வைத்திருக்கிறார். கவிஞர் பதிலளிக்கும் போது அந்த உப தலைப்பு குறித்த எழுத்துக்கள் திரையில் மின்னி ஞாபகப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

தன் தனிப்பட்ட வாழ்க்கையில் சாதிமறுப்புத் திருமணம் போன்றவற்றை செய்திருப்பதும் பின்னால் இலக்கிய ரீதியான படைப்பாளிகளுக்கு ஆதரவாக இருப்பதும் சரியாக குறிப்பிடப் பட்டிருக்கின்றன. இதுபோன்ற ஆவணப் படத்தின் மூலம் தான் இக்கவிஞரை நான் அறிந்து கொள்ள முடிந்தது. இதுபோல எத்தனையோ படைப்பாளிகள் தமிழ்ச் சூழலில் இருக்கிறார்கள். அவர்களை வெளியே வர வேண்டியது சக படைப்பாளியின் கடமையாக இருக்கிறது. அந்தக் கடமையின் தொடக்கமாக பல செயல்களை பாண்டிச்சேரி நண்பர்கள் தோட்டம் கடந்த ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் திருப்பூரில் நடைபெற்ற ஒரு குறும்படப் பட்டறையில் புதுவை யுகபாரதி அவர்கள் பங்கு பெற்று பயிற்சி பெற்றிருக்கிறார். அவருடன் திருநாவுக்கரசு, சுந்தர முருகன் போன்றோரும் பங்கு பெற்றார்கள். அதன் தொடர் நிகழ்வாக அவர் எடுத்த குருவி தலையில் பனங்காய் போன்ற குறும்படங்களும் மற்றும் ஆவணப் படங்களும் நல்ல ஆவணப் பதிவுகளாக உள்ளன. அப்படி ஒரு பதிவை இந்த புதுவை கவிஞருடைய வாழ்க்கை மூலம் தந்ததற்கு யுகபாரதிக்கும், தயாரித்த புதுவை நண்பர்கள் தோட்டம் இலக்கிய நண்பர்களுக்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டும். புதுவை யுகபாரதி இது போன்ற இலக்கிய ஆளுமைகளை தொடர்ந்து ஆவணப்படுத்த வேண்டும்.

- சுப்ரபாரதிமணியன்