சாதித்த முஸ்லிம் பெண் ஐ.பி.எஸ்!

தமிழகத்திலிருந்து, ஐ.பி.எஸ்., பணிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் பெண் அஜிதா பேகம்.

"என் சொந்த ஊர் கோவை. என் அப்பா, அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவராக உள்ளார். நான் 10ம் வகுப்பில், 78 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றேன். பிளஸ் 2வில், 94 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றேன். பட்டப் படிப்பை முடித்தபின், எம்.பி.ஏ., படித்தேன். பல்கலைக்கழக அளவில் இரண்டாம் இடம் பிடித்தேன்.

அப்போதெல்லாம், ஐ.ஏ.எஸ்., பற்றி எந்த கனவும் இல்லை. அப்பாவின் நண்பர், பேராசிரியர் முத்துகுமார், என்னை ஐ.ஏ.எஸ்., படிக்க ஆலோசனை கூறினார். அதையடுத்து, ஐ. ஏ.எஸ்., பயிற்சி அளிக்கும் கனகராஜ் என்பவரிடம் சேர்ந்து படித்தேன்.

என் அம்மாவின் எண்ணம், எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதுதான். என் அப்பா, என்னை ஐ.ஏ.எஸ்., படிக்க வைப்பதில் குறியாக இருந்தார். நானும் விடா முயற்சியுடன் படித்தேன்.

டில்லி சென்று படித்தால், தேர்வில் எளி தாக ஜெயிக்கலாம் என்று யோசனை கூறி னர். இதையடுத்து, நானும், என் தோழிகள் சிலரும், டில்லி சென்று படித்தோம். ஆனால், அந்த சூழ்நிலை எனக்கு பிடிக்காததால், சென்னை வந்து, படிப்பில் கவனம் செலுத்தி னேன்.

தினமும், 13 மணி நேரம் படிப்பேன். சீனியர்கள் உதவியதால், ""பிரிலிமனரி' தேர்ச்சி பெற்றேன். விடாமுயற்சியுடன், மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று, 169வது இடத்தைப் பிடித்து, ஐ.பி.எஸ்., ஆகி விட்டேன்.

ஜம்மு - காஷ்மீரில் போஸ்டிங் போட்டு விட்டனர். பிரச்னை நிறைந்த பகுதியில் பணி புரிகிறேன் என்ற கவலை, என் குடும்பத்திற்கு உள்ளது. எனவே, மீண்டும் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதியுள்ளேன். இதில், வெற்றி பெற்றால், ஊர் பக்கம் வந்து விடுவேன்...'' என்கிறார் அஜிதா.

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்கள், நம்பிக்கை, விடாமுயற்சி, பொறுமையை கடைபிடித்தால், நிச்சயம் ஐ.ஏ.எஸ்.,தான்.

- நன்றி : தினமலர்

Pin It