சிறந்த சிந்தனையாளராகவும், நிர்வாகத் திறன் வாய்ந்த அரசு அதிகாரியாகவும், சமூகவியல், வரலாறு, மொழியியல் ஆய்வாளராகவும், பத்திரிகை ஆசிரியராகவும், பல்துறை அறிஞராகவும் விளங்கியவர் சைமன் காசிக் செட்டி!

               கி.பி.45-இல் ஏதென்சு நகரைச் சேர்ந்த புளுராக் என்ற அறிஞர் கிரேக்க நாட்டுப் புலவர்களைப் பற்றி எழுதிய வரலாற்று நூல் தான் உலகில் தோன்றிய முதல் இலக்கிய வரலாறாகக் கருதப்படுகின்றது. பிற்காலத்தில் ஐரோப்பிய மொழிகளின் இலக்கிய வரலாறுகளுக்கெல்லாம் இந்நூல் மூலமாக அமைந்தது.

             CassieChetty  பழந்தமிழ் நூல்களைப் பற்றியும் அதன் ஆசிரியர்கள் குறித்தும் அறிவியல் பூர்வமான தகவல்களைத் தர வேண்டும் என்பதே தமது விருப்பம் என்று ‘தமிழ் புளுராக்’ (தமிழ்ப் புலவர் வரலாறு) (Tamil Pultarch) என்னும் ஆங்கில நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

               ஈழவளநாட்டில் புத்தளம் அருகில் துறைமுக நகரமாக விளங்கிய கற்பிட்டியில் 21.03.1807 அன்று காபிரியேல் - மேரி றோசைறோ வாழ்விணையருக்கு புதல்வராகப் பிறந்தார்.

               கற்பிட்டி, புத்தளம், கொழும்பு ஆகிய இடங்களில் கல்வி பயின்றார். தமது பதினேழாவது வயதிற்குள் தாய்மொழியாகிய தமிழுடன், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார். மேலும் சமஸ்கிருதம், ஒல்லாந்தம், போர்த்துக்கீசியம், இலத்தீன், டச்சு, கிரேக்கம், எபிரேயம், அரபி, பாளி ஆகிய மொழிகளையும் தாமே சுயமாகக் கற்றுத் தேர்ந்து பன்மொழிப் புலமை மிக்கவராகத் திகழ்ந்தார்.

               புத்தளம் நீதிமன்றத்தில் 1824-ஆம் ஆண்டு மொழி பெயர்ப்பாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் 1828-ஆம் ஆண்டு முதல் புத்தளம் மணியக்காரராகவும் (ஊர்த்தலைமகன்) (Chief Headman) மாவட்ட முதலியராகவும் பணிபுரிந்தார். இலங்கை சட்ட நிரூபண சபை அங்கத்தினராக 1838 முதல் 1845 வரை செயல்பட்டார். 1845 ஆண்டு இலங்கை ஆட்சிப் பணியில் (Ceylon Civil Service) சேர்ந்தார். 1848-ஆம் ஆண்டு முதல் தற்காலிக நீதிபதியாகவும், 1852-ஆம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாகவும் பணியாற்றினார்.

               அரசுப் பணிபுரிந்த போதும், தமது மொழிக்கும், நாட்டிற்கும் தன்னுடைய எழுத்துக்கள் மூலம் சிறப்பைத் தேடித் தந்தார். அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரது தமிழ்த் தொண்டை தமிழறிஞர்களும், ஆங்கில அறிஞர்களும் போற்றிப் புகழ்ந்துரைத்துள்ளனர்.

               அமிழ்தினும் இனிய தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களையும், அவற்றைப் படைத்தோரையும் பற்றிய வரலாறு முறையாகப் பேணப்படாமையால் தமிழிலக்கிய வரலாற்றை பிற நாட்டவர்கள் மட்டுமின்றி நம்மவரும் அறிந்து கொள்ள முடியாத அவல நிலை தொடர்ந்து நீடித்தது. தமிழர் தம் பாரம்பரியத்தையும், தம் இலக்கிய வளத்தையும் பிறருக்கு எடுத்துக் காட்ட வேண்டுமென்னும் உந்துதலால், சிலர் தமிழ் இலக்கிய வரலாறு என்னும் புதிய துறையில் கவனம் செலுத்த தொடங்கினர். அவர்களது முயற்சியின் விளைவாகவே இன்று கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் தமிழிலக்கிய வரலாறு தமிழ்பாடத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

               தமிழிலக்கிய வரலாற்றை எழுத முதன் முதல் முயற்சியில் ஈடுபட்டவர் சைமன் காசிக் செட்டி. அவர் எழுதியளித்துள்ள நூல்கள்

               தமிழர் சாதிப்பகுப்பு முறை, புத்தளப் பகுதியிலுள்ள முக்குவரின் உற்பத்தியும் வரலாறும், தமிழர் சடங்கு முறைகள், இலங்கை சோனகரின் பழக்க வழக்கங்கள், மலையகராதி, இலங்கைச் சரித்திர சூசனம் (தமிழ் மொழி பெயர்ப்பு), யோசேப்பு வாஸ்முனிவர் சரித்திரம், இலங்கையில் கத்தோலிக்க சமய அபிவிருத்தி, பழைய ஏற்பாட்டின் ஆதியாகமம் (இந்து முகமதிய மதச்சான்றுகளுடன் விளக்கவுரை), குதர்க்கதிக்கரம் (மஸ்தான சாயபு என்றும் முஸ்லிம் கிறிஸ்து மத கண்டன வச்சிரதண்டம் நூலுக்கு மறுப்பு) சிலோன் கெஜட்டியர் (The Ceylon Gazetteer) Tamil Plutarch (தமிழ்ப் புலவர் வரலாறு), கத்தோலிக்க கோயிலின் தோற்றமும் வளர்ச்சியும், கற்பிட்டியில் கண்டெடுத்த நாணயங்கள், பண்டைக்காலம் தொட்டு ஒல்லாந்தர் காலம் வரையிலுள்ள வரலாறு, ரேணர் எழுதிய (Turour) Epitome of the History of Ceylon என்னும் இலங்கை வரலாறு பற்றிய நூலின் மொழி பெயர்ப்பு நூல் முதலியவைகளாகும்.

               தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களின் முன்னோடியாக விளங்குவது, சைமன் காசிச் செட்டி எழுதிய ‘தமிழ் புளுராக்’ என்னும் ஆங்கில நூலாகும். The Tamil Plutarch Containing a summary Account of the Lives of the Poets and Poetesses Southern India and Ceylon. The Earliest to the present times, with select specimens of their compositions’ என்னும் ஆங்கில நூல் 1859-ஆம் ஆண்டு வெளிவந்தது.

               மேற்கத்திய நாடுகளில் செல்வாக்குப் பெற்ற ‘வாழ்க்கைச் சரிதம்’ என்னும் வடிவத்தைக் கையாண்ட சைமன் காசிச் செட்டி தமிழ்ப் புலவர்களின் சரிதங்களை எழுதியுள்ளார். தமிழ்ப் புலவர்களுடைய சரிதங்களை ஒரே நூலில் முதலில் அச்சேற்றிய பெருமை, சைமன் காசிக் செட்டியவர்களையே சாரும்.

               ஈழத்தவரான சைமன் காசிச் செட்டி படைத்த தமிழ் புளுராக் ‘தமிழ்ப் புலவர் சரிதம்’ என்னும் ஆங்கில நூல் முன்னோடி நூலாகும். இந்நூல் 1859ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த நூலில் 189 தமிழ்நாட்டுப் புலவர்கள் பற்றியும், 13 இலங்கைப் புலவர்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் வெளியிடப்;பட்டிருந்த நூல்களின் பட்டியலை அந்நூல்களின் பெயர், நூலாசிரியர் பெயர், நூல்கள் கூறும் பொருள், வெளிவந்த ஆண்டு போன்ற விளக்கங்களுடன் வெளியிடப்பட்டது.

               தமிழ் புளுராக் நூலில் அரசகேசரி, நல்லூர் வி. சின்னத் தம்பிப் புலவர், சுன்னாகம் அவரது பண்டிதர், மாதோட்டம் லோரெஞ்சுப் புலவர், ஞானப்பிரகாச முனிவர், கூழங்கைத் தம்பிரான், பிலிப்பு தெ. மெல்லோ, கணபதி ஐயர், நெ. சேனாதிராய முதலியார், வட்டுக்கோட்டை கணபதி ஐயர், நெ. சேனாதிராய முதலியார், நல்லூர் ம. சரவண முத்துப்புலவர், அராலி விசுவநாத சாஸ்திரியார் ஆகிய பன்னிரெண்டு ஈழப்புலவர்களின் சரித்திரமும் இடம் பெற்றுள்ளது.

               சைமன் காசிச் செட்டி 1840 ஆம் ஆண்டில் ‘கொழும்பு அப்சர்வர்’ (The Colombo Observer) என்ற பத்திரிகையிலும், ‘சிலோன் மேகசின்’ (The Ceylon Magazine) என்ற இதழிலும் தமிழர்களின் பழக்க வழக்கங்கள் பற்றியும், தமிழ் இலக்கியங்கள் பற்றியும் கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘சிலோன் மேகசின்’ இதழில் அகத்தியர், தேரையர், திருமூலர், கொங்கணர், மச்சமுனி, அப்பர், சம்பந்தர், சுந்தரர், நக்கீரர், ஒளவையார், திருவள்ளுவர், கபிலர், மாணிக்கவாசகர், அதிவீரராம பாண்டியன், வில்லிபுத்தூரார், தொல்காப்பியர், பவணந்தி முனிவர், அமிர்தசாகர், கச்சியப்பர், சேந்தன் (திவாகரர்), கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, மண்டலபுருடர், பரஞ்சோதி முனிவர், சிவவாக்கியார், அருணகிரி நாதர், பட்டணத்துப்பிள்ளையார், பத்திரகிரியார், குமரகுருபரர், தாயுமானசுவாமிகள், சீர்காழி அருணாசலக் கவிராயர் என்னும் முப்பத்திரண்டு தமிழறிஞர்கள் குறித்துக் கூறியுள்ளார்.

               கற்பிட்டிப் பகுதியில் கரையோரத்திலுள்ள ‘குதிரைமலை’ என்னும் இடத்தின் தொன்மைச் சிறப்புகளை ஆராய்ந்து எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தின் வரலாற்றைத் தொல் பழங்காலத்திலிருந்து ஒல்லாந்தர் கைப்பற்றிய 1658 ஆம் ஆண்டு வரையில் அவர் எழுதிய நூல், பிற்கால வரலாற்று ஆசிரியர்களுக்குக் கைவிளக்காக உதவியது.

               பரதவர் குல வரலாற்று நூலையும் இவர் எழுதியுள்ளார். பல்வேறு நூல்களை ஆராய்ந்து எழுதிய ‘இலங்கை வரலாற்றுக் குறிப்பு’ (சரித்திர சூதனம்) என்னும் நூலின் மூலம் சிறந்த வரலாற்று ஆசிரியராகவும் போற்றப்படுகின்றார்.

               தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களைக் கண்டறிந்து, அவற்றை வரிசைப்படுத்தி எழுதியுள்ளார். தமிழ்-வடமொழி-அகராதி, ஆங்கில-தமிழ் அகராதி, தமிழ்த தாவரவியல் அகராதி ஆகிய நூல்களையும் படைத்;துள்ளார். மாலத்தீவு மொழிக்கும், சிங்கள மொழிக்கும் இடையேயுள்ள ஒற்றுமையைக் காட்டும் சொற்பட்டியல், ஜாவா மொழிக்கும், வடமொழிக்கும் இடையேயுள்ள ஒற்றுமை முதலிய மொழியியல் நூல்களையும் எழுதியுள்ளார்.

               சைமன் காசிச் செட்டி எழுதிய ‘தமிழ் புலவர் வரலாறு’ என்ற நூல் தொ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, விபுலாநந்த அடிகளார் ஆகியோரின் அணிந்துரையுடன் 1946 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டது.

               இவர் எழுதிய தமிழலின் சாதிப்பாகுபாடு, பழக்க வழக்கங்கள், குணவியல்புகள், இலக்கிய இலக்கண நூல்கள் முதலியவை இவருக்கு புகழை ஈட்டித் தந்தன. இந்நூல்கள் தமிழ்நாட்டின் தொன்மை, தமிழ் மொழியின் பழமை, தமிழரின் உடைகள், அணிகலன்கள், நாகரிகச் சிறப்பு, உணவு வகைகள், மூத்தோரை மதிக்கும் பண்பு, பெண்கள் உயர்வாகப் போற்றப்படுதல், தமிழலின் திருமணச் சடங்கு முறைகள் பற்றிய விளக்கங்களைக் கூறுகிறது. இந்நூலுக்கு டாக்டர் எசு சிபோல் பாராட்டுரை எழுதியுள்ளார். இந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 1934 ஆம் ஆண்டு வெளிவந்தது.

               இவர் 1841 ஆம் ஆண்டு ‘உதயாதித்தன்’ என்ற பெயரில் மாத இதழ் ஒன்றைத் தொடங்கி ஓராண்டு காலம்வரை நடத்தினார்.

               இஸ்ஸாமியர்களின் காப்பியமான சீறாப்புராணத்தை முழுமையாக ஆய்வு செய்து, சீறாப் புராணத்தின் சிறப்பு என்னும் நூலை எழுதியுள்ளார். ஜோசப் பிலிப்-டி-மெல்லோ, வாசு ஆகியோரின் வரலாறுகளையும் படைத்துள்ளார்.

               திருக்கோணேச்சுரம் பற்றிக் கூறும் கவி ராஜவரோசுயரின் புராணப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1831 ஆம் ஆண்டு வெளியிட்டார். திருவாதவூரர் புராணத்தின் ஆறாவது சருக்கத்தினையும், காசிக் காண்டத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.

               மக்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டி நூலாக்கி வெளியிட்ட சைமன் காசிச் செட்டியின் முயற்சிகளைப் பாராட்டி, சர். இராபர்ட் ஹோட்டன் என்பவர் பதிப்புச் செலவிற்கு 100 கினி பணத்தை அன்பளிப்பாக வழங்கினார். (கினி என்பது பிரிட்டிஷாரின் அன்றைய தங்க நாணயமாகும்)

               ‘சிலோன் கெஜட்டியார்’ (Ceylon Gazatteer) இலங்கைத் தீவுக்கும், இலங்கைத் தமிழ் மக்களுக்கும் மிகுந்த பயனளிக்கும் சிறந்த படைப்பாகும். இந்நூலுக்கு அந்நாளைய ஆங்கிலேய பிரதம நீதிபதியாக பதவி வகித்த சர்.சார்லஸ் மார்ஷல், பிரதம படைத் தளபதியாக இருந்த சர்.யோன்வில்சன் ஆகியோர் மதிப்புரை வழங்கியுள்ளனர். இந்நூல் 1934-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூலின் பிரதி ஒன்று கொழும்பிலுள்ள இராயல் ஏசியாடிக் சங்கத்தில் இன்றும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டை இலங்கையில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் இலண்டனில் உள்ள ஆங்கிலேயர்களும் பாராட்டியுள்ளனர்.

               உலக உருண்டையில் இலங்கைத் தீவு அமைந்துள்ள அகலம், நீளம், குறித்த அளவுகள் பற்றி, அக்கால புவியியலாளர்கள் வியக்கும் வகையில் எடுத்துக் கூறியவர். புதுமை அளவைக் கருவிகள் ஏதுமின்றி, மேலைநாட்டு அறிஞர்கள் வியக்கும் வகையில் இலங்கையின் நீளம், அகலம், சுற்றளவு, பரப்பு போன்றவற்றை துல்லியமாக முதன் முதலில் கூறியவர் இவரே.

               தமது சொந்த ஊராகிய கற்பிட்டியில் ஐம்பது மாணவர்கள் படிக்கக் கூடிய பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டிக் கொடுத்து, அப்பள்ளியில் ஏழை மாணவர்கள் இலவசமாகக் கற்பிக்க ஏற்பாடும் செய்தார்.

               சைமன் காசிச் செட்டியின் இலக்கியப் பணிகளைப் பாராட்டி டி.பீ.ஏ. ஹென்றி என்ற அறிஞர் ஆசிய சங்க இதழில் 1927-ஆம் ஆண்டு ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். ‘தமிழ்த்தூதர்’ தனிநாயகம் அடிகள் நடத்திய ‘Tamil Culture’ (தமிழ்ப் பண்பாடு) இதழ்களில் வித்துவான் எப்.எக்ஸ்.சி. நடராசு இவரின் தமிழ்ப் பணியை சிறப்பித்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

               அந்நாட்களில் ஆங்கிலேய ஆளுநராகப் பணியாற்றிய, மக்கந்சி, சிலோன் கெஜட்டியரின் வெளியீட்டினால் பெரிதும் மகிழ்ந்ததுடன் ஆங்கிலேயர் அல்லாத மக்களுள் சைமன் காசிச் செட்டி அபூர்வ ஆற்றல் வாய்ந்த விவேகியாவார் என இலங்கை சட்டசபைக் கூட்டத்தில் இவருக்கு புகழாரம் சூட்டினார்.

               ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எழுதிய டாக்டர் கால்டுவெல், சைமன் காசிச் செட்டி எழுதிய ‘தமிழ் புளுராக்’ நூலின் சிறப்பினையும் பதிவு செய்துள்ளார். சைமன் காசிச் செட்டி வரலாறு, சமூகவியல், மானிடவியல், மொழியியல் ஆகிய துறைகளிலும் புலமை மிக்கவராக விளங்கினார்.

               பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த புகழ் பெற்ற தமிழறிஞர்களில் சைமன் காசிச் செட்டி முக்கியமானவராகக் கருதப்பட்டார்.

               “தங்கம் புடத்திலழியாது நிற்கின்ற தன்மையைப் போல்

 அங்கம் பொருந்திய வாத்திமநாளு மழிவதில்லை

 சங்கத்து கரைகளிலோர் துரையாகத் தனித்தாசாள்

 சிங்கத்தை யொத்த சீமான் சைமன் காசிச் செட்டி சிரோமணியே”

 எனப் புலவர் வேதகிரி முதலியார் இவரை போற்றிப் பாடியுள்ளார்.

               சைமன் காசிச் செட்டி தமது ஐம்பத்து மூன்றாவது வயதில் 05.11.1860 அன்று காலமானார்.

               கற்பிட்டியில் சைமன் காசிச் செட்டி வாழ்ந்த வீடு இருந்த தெரு, அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் ‘செட்டித் தெரு’ என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றது.

               அவர் பிறந்த கற்பிட்டியால், அவ்வூர் மக்கள் நன்றியுணர்வுடன் அவருக்கு முழு உருவச் சிலை எழுப்பியுள்ளதோடு, ஆண்டுதோறும் அவருக்கு விழா எடுத்து சிறப்பித்து வருகின்றனர். சைமன் காசிச் செட்டியின் புகழ் கூறும் பாராட்டு வாசகம் புத்தளம் நகரமன்றத்தில் 1983 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு சைமன் காசிச் செட்டியின் பணிகளைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில், அவரது உருவம் பொறித்த அஞ்சல் தலையை 1987 ஆம் ஆண்டு வெளியிட்டு அவருக்கு பெருமை சேர்த்துள்ளது.

- பி.தயாளன்