ஐம்பதுகளில், தமிழ்நாட்டில் சின்ன ஊர்களில் இருந்து பெரிய நகரங்கள் வரை... அங்கிருந்த உணவகங் களுக்கு சாதிப் பெயர் வைக்கப்பட்டிருந்தன. சாதிப் பெயர் என்றால்... செட்டியார் ஓட்டல், முதலியார் கபே, நாடார் மெஸ், என்று பெயர்கள் சூட்டப்பட வில்லை. அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் தமிழகத்தில் “பிராமணாள் ஓட்டல்” என்கிற சாதிப் பெயரில் உணவு விடுதிகள் இயங்கின. ‘பிராமணாள் ஓட்டல்’ என்கிற பெயர்ப் பலகை வைத்திருப்பதைப் பெரியார் எதிர்த்தார். தெருக்களில் ‘பார்ப்பன ஜாதியம்’ தலைவிரித்தாடுகிறது. நம்மவர்களுக்கு இது கண்டு ஆத்திரம் வரவில்லையே... என்று பெரியார் வருத்தப்பட்டார். பெயர்தானே... இதில் என்ன இருக்கிறது... இப்படி விட்டுவிடத் தயாரில்லை பெரியார்.

அரசாங்கத்திற்கும் ஆளுநருக்கும் பெரியார் கடிதம் எழுதினார். ஓட்டல் நடத்த அரசு அனுமதி வழங்குகிற போது “சாதிப் பெயர் ஓட்டல் பெயர்ப் பலகையில் எழுதக்கூடாது” என்று நிபந்தனை விதிக்க வேண்டினார். அரசாங்கம் செவி சாய்க்க வில்லை. பெரியாரும் சும்மா இருக்கவில்லை. உணவகங்களில் பெயர்ப் பலகையில் உள்ள ‘பிராமணாள்’ எழுத்தழிப்புப் போராட்டத்திற்கு நாள் குறித்தார். போராட்டத்தில் கலந்துகொள்ள திராவிட கழகத் தோழர்களுக்கு அழைப்பு விடுத்தார். போராட்டத்தை ஒட்டிப் பெரியார் விடுதலை இதழில் எழுதிய அறிக்கையில்...

“அழிப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் அருள்கூர்ந்து எந்தவிதமான கலவரத்திற்கும் இடமில்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பது எனது பணிவான வேண்டு கோள். அது போலவே ஓட்டல் உரிமையாளர்களோடு வாக்குவாதத்திற்கும் கைகலப்பிற்கும் கண்டிப்பாக

இடம் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதை வணக்கத் துடன் தெரிவித்துக் கொள்கிறேன். போலீசு அதிகாரிகள் கைது செய்ய வந்தால் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் கைதாக இணங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்” என்று கேட்டுக் கொண்டார்.

பெரியாரின் இந்த நியாயமான போராட்டத்தை மறுக்க இயலாத வைதீகர்கள் வித்யாசமான விளக்கம் சொன்னார்கள். “பிராமணாள்” என்கிற வார்த்தை சாதியைக் குறிக்க எழுதவில்லை எனவும்... மரக்கறி உணவு அதாவது சைவ உணவு மட்டுமே இங்கே உண்டு என்பதைத் தெரிவிக்கப் போடப்பட்டது... என்றார்கள்.

பெரியார் இதனைக் கண்டித்து மறுப்பு அறிக்கை விடுத்தார்.

“அவர்கள் சொல்வது உண்மையாய் இருக்கும் பட்சத்தில் மரக்கறி பதார்த்தங்கள் ஓட்டல்” என்று போட்டுக் கொள்ளட்டும்” என்றார்.

இந்த விசயத்தில் ஒரு விசித்திரமான சங்கதி என்னவென்றால்... “பிராமணாள்” அழிப்பு வேண்டு கோளை ராஜாஜி எதிர்த்திருக்கின்றார். அதாவது அவரது எதிர்ப்புக்குரலும் மரக்கறி உணவு பற்றிய மையக் கருத்தாக இருந்திருக்கிறது. இதனை மீண்டும் எடுத்துக் காட்டிய பெரியார், “பிராமணாள் என்றால் மரக்கறி உணவை நன்றாகச் சமைக்கிறவன், நல்ல ருசியாக தயாரிப்பவன் என்று அர்த்தம் என்பதாக நொண்டிச் சமாதானம் சொல்கிறார் நமது ஆச்சாரியார். சரி நன்றாகச் சமைக்கிறான் சைவ உணவு இங்குக் கிடைக்கும் என்று போட்டுக் கொள். சாதிப் பெயரை சாக்குப் போக்குச் சொல்லிப் போடாதே. அது தவறு.” என்று பெரியார் விடுதலையில் எழுதினார்.

இந்திய நாட்டின் கவர்னர் ஜெனரல் பதவி வகித்தவர்... சென்னை மாநில பிரதமராக இருந்தவர்... சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்... காந்திஜியின் சம்பந்தி... இவ்வளவு சிறப்பிற்குரியவரின் மனோநிலை இந்த விசயத்தில் பிற்போக்குத்தனமாகவே இருந்திருக் கிறது.

தமிழ்நாடு முழுவதும் இந்தப் போராட்ட விளக்கக் கூட்டம் நடத்த முடிவானது. பெரியார் சேலத்தில் பேசு வதற்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அதனைப் பெரியார் விடுதலையில் இப்படி எழுதினார்...

“இரண்டு நாட்களுக்கு முன்பு நான் ஏற்காட்டு மலையில் இருந்தபோது சேலத்து ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினர் கடிதம் ஒன்றைத் தந்தார்கள். அதைப் படித்துப் பார்த்தேன். என்னுடைய வேண்டுகோளைப் பத்திரிகைகளில் பார்த்தவுடன் உடனடியாக அவசரக் கூட்டம்போட்டு சேலத்தில் இருக்கிற எல்லா ஓட்டல் காரர்களும் ‘பிராமணாள்’ வார்த்தையை அழிப்பதற்கு முனைந்து விட்டார்கள். எனவே சேலத்தில் ஓட்டலில் அழிப்புபற்றிப் பேச வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது.”

பெரியாரின் முயற்சிக்குக் கைமேல் பலன் கிடைத்தது. ஆனால் சென்னை ஓட்டல்காரர்கள் அழிக்க முன்வராமல் முரண்டு பிடித்தார்கள். பெரியார் மீண்டும் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தார். இந்த விசயத்தை அவர் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வில்லை. இந்தப் போராட்டத்திற்காகத் தஞ்சையில் இருந்து “சாதி ஒழிப்புப் பிரச்சாரப் படை” என்று உருவாகி சென்னை நோக்கி வந்தது. பெரியார் இந்தப் படையைத் திண்டிவனத்தில் வரவேற்றுப் பேசினார்.

சென்னையில் ‘பிராமணாள்’ பெயர்ப் பலகைகள் உள்ள ஓட்டல்களில் மறியல் நடைபெற்றது. எல்லா ஓட்டல் உரிமையாளர்களும் ‘பிராமணாளை’ அழித் தார்கள். திருவல்லிக்கேணி முரளி பிராமணாள் கபே உரிமையாளர் மட்டும் வீம்போடு மறுத்தார். பெரி யாரின் தொண்டர்கள் இந்தக் கடையை இடைவிடாது மறியல் நடத்திக் கைதானார்கள். ஒரு கட்டத்தில் ஓட்டல் உரிமையாளர் ஓட்டல் பெயரை ஓசையின்றி மாற்றிவிட்டார். முரளி பிராமணாள் கபே என்பது முரளீஸ் அய்டியல் காபி சாப்பாடு ஓட்டல் என்றானது.

இன்று தமிழகத்தில் எங்கும் ஓட்டல் பெயர்ப் பலகைகளில் பிராமணாள் பெயர் இல்லை. ஆனால் ஊர் ஊருக்கு “அய்யங்கார் பேக்கரி” என்கிற பெயரில் பேக்கரி கடை சத்தமில்லாமல் நுழைந்திருப்பதைக் காணலாம்.

அதுமட்டுமல்ல... சாதிப் பெயரை ஒட்ட வைத்துக் கொள்ளாதவர்கள் பெண்கள் என்கிற பெருமை இருந்தது. இன்றைய தினம் தமிழ்த் திரையுலகில் சாதிப் பெயரைச் சேர்த்துக் கொள்ளும் பெண்களைப் பரவலாகப் பார்க்க முடிகிறது. நவ்யா நாயர், மேகா நாயர், லட்சுமி மேனன், பார்வதி ஓமன குட்டன், ஜனனி அய்யர், அபர்ணா பிள்ளை, மேக்னா நாயுடு, ஸ்வேதா மேனன், ஸ்வாதிசர்மா, இப்படிப் பட்டியல் நீள்கிறது.

நல்ல வேளை... இவர்களில் யாரும் தமிழ் நாட்டவர் இல்லை என்று திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்...!

(உங்கள் நூலகம் ‍ - ஜனவரி 2014 இதழில் வெளியானது)