தமிழ் வேதம் எனப் போற்றப்படும் திருக்குறளை இலத்தீன் மொழியில் பெயர்த்தவர்; தமிழ் அகராதித் துறைக்கு மூலவர்; தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் கொண்டு வந்தவர்; தமிழின் மரபினையொட்டி `தேம்பாவணி' என்ற சிறந்த காப்பியம் படைத்தவர்; தமிழ் இலக்கண மரபுப்படி கவிதைகள் புனைந்தவர்; தமிழ் மொழியில் பிரபந்தம், கலம்பகம், அம்மானை, கலிப்பா எனப் பதிகம் தொடங்கி, 'பா' வகைகள் பலவற்றில், செய்யுள் இயற்றியவர்; தமிழில் உரைநடை படைத்தவர்; தமிழ் இலக்கியங்களை மேலை நாட்டு மொழிகளில் மொழிபெயர்த்தவர்; “தாமே தமிழானார்; தமிழே தாமானார்!” என்று தமிழ் இலக்கியவாணர்கள் போற்றும் வண்ணம், தமிழுக்காக வாழ்ந்தவர். அவர்தான் இத்தாலி நாட்டில் பிறந்து, தமிழகம் வந்து தமிழ்த் தொண்டாற்றிய `கான்ஸ்டண்டைன் ஜோசப் பெசுகி' `வீரமாமுனிவர்'!

இத்தாலி நாட்டில் வெனிஸ் மாநிலத்தில் மாந்துவா என்னும் மாவட்டத்திலுள்ள காஸ்திகிளியோனே என்ற சிற்றூரில் 08.11.1680 ஆம் நாள் பிறந்தார். தந்தையார் கொண்டோல்போ பெசுகி. தமிழகத்திற்குக் கிறித்துவ மதத்தைப் பரப்பிட, 1711 ஆம் ஆண்டு வருகை புரிந்தார். தமிழகத்தில் கோவை, தூத்துக்குடி, மணப்பாடு முதலிய ஊர்களில் வாழ்ந்து தமிழ் பயின்றதுடன், தெலுங்கு, கன்னடம், வடமொழி முதலியவைகளையும் கற்றுத் தேர்ந்தார்.

இத்தாலி நாட்டில் தமது இளமைப் பருவத்திலேயே இத்தாலி, இலத்தீன், பிரெஞ்சு, கிரேக்கம் முதலிய மொழிகளில் தேர்ச்சி பெற்று விளங்கினார். தத்துவமும், இறையியலும் பயின்றார்.

திருக்குறள், கம்ப இராமாயணம், சீவக சிந்தாமணி முதலிய தமிழிலக்கிய நூல்களைக் கற்றார். தமிழ் மொழியை நன்கு பயின்று கவிதை இயற்றும் ஆற்றலும் பெற்றார்.

'ஜைன' மத நூலான 'சீவக சிந்தாமணி'யைப் போன்ற, கிறித்துவ மதத்துக்காகவே சிறந்த காவியம் ஒன்றைப் படைக்க விருப்பம் கொண்டார். 'தேம்பாவணி' என்னும் காப்பியத்தை எழுதினார். இக்காப்பியம் தமிழில் தோன்றிய முதல் கிறித்துவக் காப்பியம் என்று போற்றப்படுகிறது. வேற்று நாட்டைச் சேர்ந்த ஒருவர், தமிழகம் வந்து, தமிழ் பயின்று, சிறந்த காப்பியம் ஒன்றைத் தமிழில் படைத்த பெருமைக்குரியர் வீரமாமுனிவர்!

தமிழ் இலக்கணத்தை விரிவாக ஆராய்ந்து 'தொன்னூல் இலக்கணம்' என்ற இலக்கண நூல் இயற்றியுள்ளார். அந்நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து கூறுகளையும் அழகிய முறையில் விளக்கியுள்ளார்.

பல பெயர்களைக் கண்ட பொருட்களின் பெயர்ச் சொற்களைத் தொகுத்துப் 'பெயரகராதி' எனவும், பொருள்களின் பெயர்களைத் தொகுத்து 'பொருளகராதி' எனவும் சொற்கள் பலவாகக் கூடிநின்று ஒரு சொல்லாக வழங்குவதைத் தொகுத்துத் 'தொகையராதி' எனவும், எதுகை மற்றும் ஓசை ஒன்றாக வரும் சொற்களை வரிசைப்படுத்தித் 'தொடையகராதி' எனவும் அமைத்துத் தமிழுக்குச் செழுமை சேர்த்தவர்! 'சதுரகராதி' கண்ட பெருமையும் வீரமாமுனிவரையே சாரும். தமிழ் மொழியில் தோன்றிய நிகண்டுகளில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது இந்தச் 'சதுரகராதி'.

திருக்காவலூர்த் திருத்தலத்தையும், ஏலாக்குறிச்சியில் உள்ள அடைக்கலமாதாவையும் போற்றும் வண்ணம் 'திருக்காவலூர் கலம்பகம்' பாடியுள்ளார்.

ஒரு மொழி அகராதி சதுரகராதி, இரு மொழி அகராதி-தமிழ்-இலத்தீன்-அகராதி. மூன்று மொழி அகராதி போர்த்துக்கீஸ்-இலத்தீன்-தமிழ்-அகராதி உருவாக்கியதால், 'தமிழ் அகராதியின் தந்தை' எனப் போற்றப்பட்டார்.

'பரமார்த்த குரு கதை'யைத் தமிழில் எழுதி உரைநடை வளர்ச்சிக்கு வித்திட்டார். அந்நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்தார். அந்நூல் 'எள்ளல் சுவை' மிகுந்த இலக்கிய உரைநடை என்பதால், இவர், 'உரைநடைச் செம்மல்' எனவும் அழைக்கப்பட்டார்.

தமிழில் வரலாற்று நூல்கள் வருவதற்கு அடித்தளமிட்டவர் வீரமாமுனிவர்! அவர் எழுதிய 'வாமன் சரித்திரம்' அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!

'தொன்னூல் இலக்கணம்', `செந்தமிழ் இலக்கணம்' , `கொடுந்தமிழ் இலக்கணம்', 'இலக்கணத் திறவுகோல்' ஆகிய இலக்கண நூல்களையும், 'திருக்காவலூர் கலம்பகம், 'கித்தேரியம்மாள் அம்மானை', 'அடைக்கல மாலை', 'அடைக்கலநாயகி மேல் வெண் கலிப்பா' முதலிய சிற்றிலக்கியச் செய்யுள்களையும், `வேதவிளக்கம்', `வேதியர் ஒழுக்கம்', `பேதகம் மறுத்தல்' போன்ற உரைநடை நூல்களையும் படைத்துள்ளார்!

`தேம்பாவணி'க் காப்பியத்தில், காலப்போக்கில் இடைச்செருகல் அமைந்துவிடாமல் இருக்க எச்சரிக்கையாக, பாடல்கள், படலங்களின் எண்ணிக்கைகள் குறிப்பாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, பாடல்களில் சில மேல் நாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட சிறப்புப் பெற்றது. தமிழில் முதன் முதல், முழுமையாக அச்சில் வந்த சிறப்புடையது. கீர்த்தனை, சிந்து, வசன காவியம், விருத்தியுரை, உரைநடை, சுருக்கம் ஆகிய பல்வேறு வடிவங்களைக் கொண்ட பெருமையுடையது. `அன்பை விதைப் போருக்கு அன்பே கிட்டும்' என்ற உயர்ந்த சிந்தனையை ஊட்டுவது. 'தேம்பாவணி'க் காப்பியம், தமிழ்நாட்டு மரபோடு ஒன்றிய, தீந்தமிழ்க் காப்பியம் எனக் கிறித்துவ மக்களால் போற்றப்படும் புனித நூலாகும்!

'தேம்பாவணி' காப்பியத்தை இயற்றியதற்காக வீரமாமுனிவருக்கு, `செந்தமிழ்த் தேசிகர்' என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

திருக்காவலூரில் ஒரு கல்லூரியை ஆரம்பித்து அதில் தாமே தமிழாசிரியராக இருந்து இலக்கணம் கற்பித்தார்.

தமிழகத்தில் வாழ்ந்த புலவர்களுள் பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர் வீரமாமுனிவரே! இலக்கண அறிவு, இலக்கியப் புலமை, மொழியியல் உணர்வு, பக்தி இலக்கிய ஆற்றல், ஆய்வியற் சிந்தனை, பண்பாட்டில் தோய்வு எனப் பல்வகையிலும் சிறந்தவர்! அவர்தம் திறமையைப் பயன்படுத்தித் தமிழுக்கு வீரமாமுனிவர் ஆற்றியுள்ள பணிகள் தமிழக வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும். தமிழுக்காகவே வாழ்ந்து தொண்டு செய்து புகழ் எய்திய வீரமாமுனிவர் 04.02.1747ஆம் நாள் அம்பலக்காட்டு குருமடத்தில் இயற்கை எய்தினார்.

- பி.தயாளன்