ஒருநாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து, பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த அவரது நண்பரும்... முன்னாள் அமைச்சருமான என்.வி.நடராசன், ``என்னங்க... மதுரம் உங்களுக்கு டிபன் எதுவும் செய்து தரலையா..? பழைய சோறு சாப்பிடுறீங்க..!''

கலைவாணர் எதுவும் பேசாமால், வேலைக்காரரைக் கூப்பிட்டு, ``இந்தா... இந்த ஒரு ரூபாய்க்கு... பழைய சோறு வாங்கிட்டு வா...'' என்றார். ரொம்ப நேரம் கழித்து வந்த வேலைக்காரர், ``ஐயா... நானும் எங்கெங்கோ அலைஞ்சிட்டேன். ஒரு இடத்திலேயும் பழைய சோறு கிடைக்கல..'' என்றார்.

``கேட்டீங்களா நடராசன்... எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத அற்புதப் பொருள்... அதனால்தான் இதை சாப்பிட்டேன்!'' என்று கலைவாணர் சொன்னதைக் கேட்டு நடராசன் மட்டுமின்றி... மதுரமும் அசந்துவிட்டார்.

பெரியார் பக்தி

1947 - ஆகஸ்ட் 15 முதல் சுதந் திர நாள் என்பதற்காக கலை வாணரை சென்னை- வானொலி நிலையம் அழைத்திருந்தது. நிகழ்ச்சி சம்பந்தப்பட்டவற்றை வானொலிக்கு முன்னதாகவே எழுதிக் கொடுத்துவிட்டார் என்.எஸ்.கே. நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வரிசையில் தந்தை பெரியார் பெயரும் இடம்பெற்றிருந்தது. வானொலி நிலையத்தார் அதனை நீக்கி விட்டனர். (எல்லாம் `அவாள் ஆயிற்றே!).

கலைவாணருக்கோ வந்ததே சினம்! பெரியார் பெயர் இடம் பெறாவிட்டால், என் நிகழ்ச்சியும் இடம்பெறாது என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டார். இதனைச் சற்றும் எதிர்பாராத வானொலி நிறுவனத்தார் மறுபடியும் பெரியார் பெயரையும் இணைத்து நிகழ்ச் சியை நடத்திட ஏற்பாடு செய்தனர்.

கலைவாணர் சிலையைத் திறந்து வைத்து பேசுகையில் அண்ணா கூறியதாவது:_

கலைவாணர் அவர்கள் கலையுலகத்திற்கு மட்டுமல்லாமல், சமூகத்திற்குத் தம்முடைய தொண்டுகளைச் செய்யவேண்டும், அதற்கு இந்தக்கலை, ஒரு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்ற முறையில் கலைத்துறையைத் தேர்ந்தெடுத்தார்கள். அவருடைய சிறந்த உழைப்பு, அவருக்கு மட்டுமல்லாமல் கலைத்துறைக்கே நகைச்சுவைப் பாத்திரத்திற்கே ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. நகைச்சுவைப் பாத்திர மென்றால் ஒட்டப்பட்ட மீசை திடீரென்று கீழே விழும். அது நகைச்சுவை பாத்திரம். நடக்கின்றபொழுது இடறிக் கீழே விழுவார்கள்; அது நகைச்சுவைப் பாத்திரம். இப்படியிருந்ததை மாற்றி, நகைச்சுவை பாத்திரமென்பது, சிந்தித்துப் பார்த்து சிரித்து நற்பயனைப் பெறத்தக்க ஒரு பாத்திரம் என்று மாற்றி அமைத்துக் காட்டியவர் நகைச்சுவை மன்னர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்.

-  அனுப்பி உதவியவர்: மோகன் காந்தி