இயற்கையை நேசிப்பவர்கள் எல்லாம், இயற்கையை ஆழமாக புரிந்தவர்கள் அல்ல-இயற்கைவாதி.

அதிகாலை 5 மணிக்கு எழுந்து கோடநாடு மலை உச்சியில் இருந்து காட்டு வழியாக தெங்குமராடா செல்லும் நடை பயணத்தின் மகிழ்ச்சியில் அனைவரும் உற்சாகத்தோடு புறப்பட்டோம்.நீலகிரி மலை அடிவாரம் வந்தபோது உற்சாகம் அதிகமானது. நடை பயணத்திற்கான தேவையான பொருள்கள் மற்றும் மதிய உணவுக்கான தாயரிப்போடு தயாராக இருந்தோம்.

நாங்கள் காட்டுக்குள் செல்லும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்.யானை அல்லது விலங்குகளின் இருப்பிடத்தில் நாங்கள் நடந்து செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறை ஆலோசனைகளை காட்டுயிர் ஆசிரியர் விளக்கி கூறினார்.

நாங்கள் செல்லும் காட்டுவழி நடை பயணத்தில் எந்த விலங்கை சந்திக்க போகிறோம் என்று மனதில் கற்பனையோடும்,ஆவலோடும் காட்டுயிர் ஆசிரியர் உடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது. அரவேணு வந்தவுடன், நாங்கள் செல்லும் பயணத்திற்கான அனுமதி கடிதத்துடன் நண்பர் பூபதி காத்திருந்தார். காலை 8.30 மணிக்கு கர்சன் எஸ்டேட் தாண்டி அய்யன் எஸ்டேட் பாதையின் தொடக்கத்தில் வண்டியை நிறுத்தி அனைவரும் இறங்கினோம். காட்டுயிர் ஆசிரியர் அனைவருக்கும் வாழ்த்து கூறி சில ஆலோசனைகளை வழங்கி, நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.காட்டுயிர் ஆசிரியரிடம் விடைப்பெற்று எங்கள் வழிகாட்டியை அழைத்து கொண்டு நடை பயணத்தை தொடங்கினோம்.

சுமார் 3 அல்லது 4 கிலோமீட்டர் நடந்து மலைகளை கடந்து காட்டுக்குள் சென்று அய்யன் எஸ்டேட் முடிவில் ஒரு காட்டு மரத்தின் அடியில் அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாறினோம். சுமார் 6000 அடி உயரத்தில் சரிவை நோக்கி எங்கள் நடைபயணம் தொடர்ந்தது. திடீரென்று எங்களது வழிகாட்டி “எல்லோரும் நில்லுங்கள், யாரும் பேசாதீர்கள்”-என சைகையால் எச்சரித்தார்.அப்பொழுது காட்டு யானையின் சப்தம் நாங்கள் நடந்து செல்லும் பாதையின் வலது புறம் இருந்து கேட்டது. ஒரு நிமிடம் அமைதியாக நின்றோம். யானை கிளைகளை உடைக்கும் சப்தம் கேட்டது.10 அடி உயரத்திற்கு மரம்,செடி,புதர்களால் இரு புறமும் சூழப்பட்ட ஒற்றையடி பாதையில் எல்லோரும் அமைதியாக, வரிசையாக, ஒன்றன்பின் ஒன்றாக நகர்ந்தோம். முன்னே செல்லும் வழிகாட்டி ஒரு திருப்பத்தில் திரும்பும் போது, சற்று நின்று,எதோ சொல்லி சப்தம் போட்டார். அவரது சொல் ஊர்ப்புறத்தில் நாயை விரட்டுவது போல் இருந்தது, கையில் வைத்திருக்கும் தடியை தரையில் ஓங்கி அடித்தவாறு வித விதமாக சப்தம் போட்டார்.

நண்பர்கள் அனைவரும் அமைதி, அனைவரின் முகத்திலும் அச்சம் கலந்த பதட்டத்துடன் மெல்ல வழிக்காட்டியின் பின் நடந்து சென்றனர். ஒரு வேளை நாங்கள் நடந்து செல்லும் ஒற்றையடி பாதையின் குறுக்கே யானை வந்து விட்டால்,மேல் நோக்கி ஓடுவதை தவிர வேறு வழியில்லை என்ற எண்ணம் எல்லாருடைய மனதிலும் தோன்றி அச்சத்தை உண்டாகியது. யாரும் ஒருவருக்கொருவர் இடைவெளி விடாமல் நடந்து செல்லுங்கள் என்றபடி நானும் அவர்களுடன் பின்தொடர்ந்து, வழிகாட்டியின் அருகில் சென்று “சப்தம் போட வேண்டாம், விரைவாக இந்த இடத்தை கடந்து விடலாம்” என கூறி நடையை விரைவுபடுதினோம். அந்த பதட்டம் சுமார் 30 நிமிடம் நீடித்தது.

ஒரு வழியாக குறுகிய,அடர்ந்த காட்டை கடந்து ஒரு திருப்பத்தில் மலை முகட்டில் திரும்பி, அல்லிமாயாறு பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதிக்கு வந்தோம்.மறுபக்கத்தில் பக்கவாட்டில் உயரமான மலை, அதன் நடுவில் பெரும் பிளவு, நாங்கள் பக்கவாட்டு மலையின் சரிவில் ஒற்றையடி பாதையில் நின்றவாறு, பிளவை பார்த்து வியந்து,ரசித்தபடி சிறிது நேரம் ஆசுவாசப்படுத்தி ஒய்வெடுத்தோம்.

கடந்து வந்த பாதையை பற்றியும் யானையை பற்றியும் பேச்சு எழுந்தது நண்பர் அபிசேக் யானையின் சத்தத்தை அருகில் கேட்டதாக கூறினார். பள்ளத்தாக்கின் ஒரு புறத்தில் இருந்து இதமாக காற்று வீசியது உடலுக்கு உற்சாகமாக இருந்தது.மலை சரிவில் நடை பயணம் தொடர்ந்தது. சுமார் ஒரு மணி நேரம் நடைப்பயணத்திற்கு பிறகு இன்னொரு மலையின் பள்ளத்தாக்கில் இறங்கினோம். அங்கே ஒரு சிற்றோடையில் அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாறி பயணத்தை தொடர்ந்தவுடன், திடீரென்று எங்கள் முன்னால் இருந்த மலை சரிவின் பாதை துண்டிக்கப்பட்டு இருந்தது. வழிகாட்டி அங்கும் இங்கும் சுற்றிப்பார்த்தார். எந்த பக்கம் பார்த்தாலும் பெரிய பாறாங்கல் தான் தென்பட்டது.அதில் எட்டிப்பார்த்தால் பெரிய சரிவு தான் கண்களுக்கு தெரிந்தது. ஒருவழியாக ஒரு பாறையின் சரிவில் கைகளால் தவழ்ந்து,சறுக்கி கொண்டு அடுத்த பாறைக்கு சென்று விடலாம் எனக்கூறி அவர் முன்னே சறுக்கி செல்ல, யாருமே சறுக்கி செல்ல முடியாமல் தடுமாறினோம்.

வேறுவழியில்லாமல் வழிகாட்டி பாறையின் நடுவில் நின்று கொண்டு தன் தோல்துண்டை எடுத்து விரித்து, கயிறு போல் திரித்து அதை மேல் புறம் வீசி அதை பிடித்து கொண்டு ஒவ்வொருவராக பாறையின் கீழ் சறுக்கி கீழே இறங்கினோம்.எல்லோரும் கீழே இறங்குவதற்கு சுமார் ஒரு மணி நேரம் ஆயிற்று.வழிகாட்டியின் பக்கம் நகர்ந்து சென்று கீழ்நோக்கி பார்த்தால் சுமார் 1000 அடியில் பள்ளத்தாக்கு, தவறி விழுந்தால் அதோகதி தான் – அந்த இடத்தில் நண்பர்கள் கால்கள் நடுங்கியது. மனம் தளர்ந்து போனார்கள். ஒரு வழியாக அனைவரும் பாறையை கடந்து மறுபுறம் சென்றதும் சோதனை தொடர்ந்தது. கீழே இறங்கிய சரிவில் பாதை இல்லை, அனைவரும் தவழ்ந்து, தவழ்ந்து அந்த மலையை விட்டு இறங்கினோம். சரியான பாதைக்கு வந்த பின்னர் எல்லோரும் உற்சாகம் அடைந்தார்கள். கீழே இருந்து அந்த மலையை பார்த்தோம் பிரமிப்பாக இருந்தது.கடந்த முறை நீலகிரியில் பெய்த கன மழையால் நிலசரிவு ஏற்பட்டு இருக்கிறது என பிறகு அறிந்து கொண்டோம். ஒரு வழியாக துண்டிக்கப்பட்ட பாதையின் மறுமுனையை அடைய சுமார் இரண்டு மணி நேரம் ஆனது.

மீண்டும் மலை சரிவில் எங்கள் காட்டுவழி பயணம் தொடர்ந்தது. நண்பர் ஒருவருக்கு கால்வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டார், பிறகு அவருக்காக அனைவரும் மெல்ல நடக்க துவங்கினோம்.

அல்லிமாயாறு பள்ளத்தாக்கின் அடிவாரம் அடைவதற்கு சற்று மேலே ஒரு நீரோடையில் மதிய உணவை, மாலை நேரத்தில் சாப்பிட்டோம். நீரோடையில் அனைவரும் களைப்பு தீர குளித்து, உடலை உற்சாகப்படுத்தி கொண்டு, வெளிச்சம் மறைவதற்குள் அல்லிமாயாறு செல்ல வேண்டும்,என அனைவரும் அவசரமாக கிளம்பினோம்.நீரோடையை தாண்டி சிறிது தூரத்தில் வழி எங்கும் சில இடங்களில் சிறுத்தையின் எச்சங்களை பார்த்தோம். மாலை 6 மணிக்கு அல்லிமாயாறு வந்தடைதோம்.அனைவரும் சோர்வாக இருந்தனர்.

வழிகாட்டியை அழைத்து ஏதாவது வண்டி கிடைக்குமா? என விசாரிக்க சொன்னோம். ஊருக்குள் சுற்றி யாரிடமோ பேசி பால்வண்டி ‘வேனை’ கூட்டி வந்தார் வழிகாட்டி, களைப்பாக இருந்த நண்பர்கள் வேனுக்குள் வேகமாக ஏறினார்கள், அரை மணி நேரத்தில் தெங்குமராட தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தது வேன். எங்கள் நடை பயணம் முடிந்தது. ஓய்வெடுக்கும் விடுதியின் முன் அமர்ந்து நாங்கள் வந்த சுமார் 6000 அடி உயரமுள்ள மலையை நோக்கினோம். மலைப்பாகவும்,மகிழ்ச்சியாகவும் இருந்தது. 6000 அடி உயரத்தில் இருந்து இறங்கி வந்தது, மனதிற்கு மகிழ்ச்சியையும், புது நம்பிக்கையும்,எங்களுக்குள் ஏற்பட்டது. அதே சமயம் எந்த வன விலங்கும் எங்கள் கண்ணில் படாதது வருத்தத்தையும், வன விலங்குகள் அழிந்து வரும் ஆபத்தையும் எங்களுக்கு உணர்த்தியது.

புலி வாழும் காடு என்று புகழப்பட்ட,கூறப்பட்ட,இந்த காட்டினுள் புலி வாழ்வதற்கான எந்த தடயத்தையும்,அடையாளத்தையும் காண முடியவில்லை.மலை உச்சியில் தேயிலை தோட்டங்களால் சூழப் பட்டிருக்கிறது.மலை அடிவாரத்தில் அல்லிமாயாறு என்ற கிராமத்தால் விவசாய நிலங்களாக சூழப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து வரும் இரண்டு, மூன்று ஊராக, விவசாயத்தாலும்,மனிதர்களாலும் சுற்றி வளைக்கப் பட்டிருக்கிறது. வன விலங்குகள் வாழிடம் மக்கள் வாழிடமாக மாறி, மக்கள் பெருக்கமும், வாகனங்களின் எண்ணிக்கையும் காட்டுக்குள் அதிகமாகி இருக்கும் ஆபத்தையும் அறிந்து கொள்ள முடிந்தது.

மேலேயும், கீழேயும் மனிதர்கள் ஆக்கரமிப்பு செய்து, காட்டை கழுத்தை நெறிப்பது போல் நெறித்தால் வன செல்வங்களை எப்படி காக்க முடியும்? என்ற கேள்வி நியாயமானதாக இருந்தாலும், எதிர் கேள்விகளால் சிக்கல்கள் அதிகமாகி கொண்டே இருப்பதை நினைத்தால் வருத்தம் அதிகரிக்கின்றது.

இந்த நாடும், இந்த நாட்டு மக்களும்,இந்த காடும், இந்த காட்டு உயிரினங்களும் நன்றாய் வாழ முடியுமா? இயற்கையை ஆழமாக புரிந்தவர்கள் மட்டும் தான் காட்டையையும், இந்த நாட்டையையும் காப்பாற்ற முடியும். நம் சமூகத்தை நினைத்தோம், கனத்த இதயத்தோடு படுக்கைக்கு சென்றோம்.