நிலக்கரி, எண்ணெய் போன்ற படிம எரிபொருட்களில் இருந்து மனித குலம் விலகிப் போகும் நாள் வந்து கொண்டிருக்கிறது. மாற்று எரிசக்தியாக காற்றாலைகளை நம்பி நிற்கும் காலம் தொலைவில் இல்லை. வீசும் காற்றுக்கு காசு கொடுக்கவேண்டியதில்லைதான். ஆனால் காற்றாலைகளின் சுழலிகளினால் சுற்றுப்புற வானிலை பாதிக்கப்படுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

சங்கிலித் தொடராக அமைக்கப்பட்ட காற்றாலைகளின் சுழலும் விசிறிகள் சுற்றுப்புற காற்றை மேலும் கீழுமாக அதிர்வடையச் செய்கின்றன. இந்த அதிர்வுகள் பல மைல் தூரத்திற்கு இருக்கும். சுழலும் விசிறிகளில் இருந்து வீசும் காற்று பூமியின் மேற்பரப்பை உலரச் செய்துவிடுகிறது. பல மைல் தூரம் வரை இந்த விளைவு இருக்கும். அக்கம் பக்கத்து வீடுகளில் குளிர்சாதனப் பெட்டிகளுக்கு அதிக மின்சக்தி செலவாகும். அந்தப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்கு அதிகமான நீர் தேவைப்படும். காற்றாலைகளினால் ஏற்படும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு எளிமையானது. சுழலிகளையும், விசிறிகளையும் திறமையாக வடிவமைக்க வேண்டும். இதனால் காற்றாலைகளின் திறன் கூடும். மின் சக்தியின் விலையும் குறையும்.

காற்றாலைகளினால் ஏற்படும் வானிலை மாற்றங்கள் இரவு நேரங்களில்தான் அதிகமாக இருக்கிறதாம். காற்றுவீசும் வேகம் இரவு நேரத்தில் அதிகமாக இருப்பதுதான் காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். காற்றாலைகள் அதிகமாக தோன்றிக் கொண்டிருக்கின்றன. உள்ளூர் காலநிலையில் மாற்றம் ஏற்படவும் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.

காற்றாலையின் பாகங்கள் பிளாஸ்டிக் மற்றும் உலோகங்களால் ஆனவை. எனவே கதிரியக்க ஆபத்து காற்றாலைகளில் இல்லை. தேவையற்ற இரைச்சல் இல்லை. வாயுமண்டலம் அழுக்கடைவதில்லை. ஆனால் காற்றாலைகளில் மின்சக்தி தொடர்ச்சியாக கிடைப்பதில்லை. காற்று வீசாத காலத்தில் மின் உற்பத்தி இருப்பதில்லை. காற்றாலை மின் ஆற்றல் மற்ற வகையான மின் உற்பத்திகளுடன் இணைந்து பயன்படுத்த வேண்டியதாகும். காற்றாலைகளை மட்டுமே நம்பியிருந்தால் தமிழ்நாட்டில் இப்போதுள்ள மின்வெட்டு போன்று அரசாங்கங்கள் அவதிப்பட வேண்டியிருக்கும்.

- மு.குருமூர்த்தி