apoplexy_1_370மூளைச் செய் கடமைகளில் குவிமையம் சார்ந்த அல்லது பரவலான கோளாற்று நிலை அமைவதைத் தாக்கதிர்ச்சி என்கிறோம். இதனைச் சன்னி என்றும் (apoplexy) பெருமூளை நாளஞ்சார்ந்த எதிர்பாரா விபத்து எனவும் கூறுவர். (cerebrovascular accident) இது நரம்புச் சார்பான கோளாறுகளால் பொதுவாகவும் பரவலாகவும் ஏற்படும்.

தாக்கதிர்ச்சி, கால அளவையொட்டி வகைப்படுத்தப் படும். (1) விரைவில் மாறத்தக்க குறைவான குருதி வழங்கு தாக்கம் (transient ischaemic attack) 24 மணிக்குள் நிகழ்வது; (2) முன்னுள்ள நிலைக்கு மீளும் குறைவான குருதி வழங்கும் நரம்பு சார்குறை (reversible inchaemic neurological defect=RIND) ஒருநாள் முதல் 3 நாள் வரை நிகழ்வது; (3) முழுமையான தாக்கதிர்ச்சி (completed stroke) என மூவகையாம். குருதி குறைவாக வழங்குதலால் ஏற்படும் மாறத்தக்க தாக்கத்திற்கு மீண்டும் மீண்டும் உட்பட்ட பிறகே முழுமைத் தாக்கதிர்ச்சி விளைவதுண்டு.

இதை நன்கு விளங்கிக்கொள்ள வேண்டுமானால் மூளையின் பாகங்களை ஓரளவு அறிந்திருத்தல் வேண்டும். மூளை வலது இடது பக்கங்களில் இரண்டு அரைக்கோளங்களாக உள்ளது. வலது அரைக்கோளப்பகுதி உடலின் இடது பக்கத்தைக் கட்டுப்படுத்தும். இடது அரைக்கோளப்பகுதி உடலின் வலது பக்கத்தைக் கட்டுப்படுத்தும். எந்தப் பகுதி தாக்கதிர்ச்சிக்குட்படுகிறதோ அதற்கு எதிர்ப்பக்கமுள்ள உடற்பாகத்தைத் தாக்கி பக்க வாதத்தை (paralysis) உண்டாக்கும்.

முக்கிய கழுத்துக் குருதி நாளத்திலிருந்து (carotid artery) பெருமூளையின் மத்திய நாளம் (middl cerebral artery) வழியாக மூளையின் அகன்ற பரப்புகளுக்குக் குருதி வழங்கப்படுகிறது. இந்தப் பாய்குழாய்ச் சுவர் கடினப்பட்டு, கனமடைந்து சிறிதாக்கப்படும்போது (atherosclerosis) குருதி உறைதல் உருவாகும். இந்தக் கட்டி சில சமயங்களில் உடைந்து நடுவணுள்ள பெருமூளைப் பகுதி இரத்த நாளத்தில் பாயும். மேலும் அதன் கிளைக்குழாய்களிலும் பரவும். தாக்கதிர்ச்சியால் பெரும்பாலும் நடுவண் பெருமூளைப் பகுதி இரத்தநாளமே ஆட்படுகிறது. அத்திரோஸ் கிளிரோசிஸ் (atherosclerosis) என்பது மூப்பினால் விளைவதானாலும், கழுத்துக் குருதிநாள அத்திரோஸ் கிளிரோசிஸ், நீரிழிவு நோயில்லாதவர் களைக் காட்டிலும் எட்டு மடங்கு நீரிழிவு நோயுடையவர்களைத் தாக்குகிறது. இவ்வாறு அதிக மாயுள்ளமைக்குக் காரணம், நீரிழிவால், பாய் குழாய் சிறிதாகி இரத்தம் கட்டிப்படல், முடுக்கி விடப்படுவதாலேயே ஆம். இந்த முடுக்கம் குருதியிலும் குருதி நாளச் சுவரிலும் மாற்றத்தை விளைவிக்கிறது.

பல மாற்றங்களுள் மிக முக்கியமானது குருதியின் சிவப்பு அணுக்களிலும், லிபோ புரோட்டீன்களிலும், நாளச் சுவர்களிலும் மிகுதியான குளுகோஸ் (glucose) கூடி இணைவதே ஆம். இந்தத் தொடர்வினை நிகழ்ச்சியைக் கிளைகோசிலேசன் தொடர் செயல்பாடு (Glycosylation process) என்பர். குருதியும் அதன் நாளச் சுவரும் அதனால் பசைத் தன்மை (sticky glucose) கொண்டு சுவரில் ஒட்டலாகிறது. அதன் விளைவாகக் குழாய் அல்லது நாளத்தின் புழையில் அடைப்பு ஏற்படுகிறது.

மூளையிலுள்ள குருதி நாளங்களில் குருதி ஒழுகல் ஏற்படின் இரத்தப்போக்குத் தாக்கதிர்ச்சி உண்டாகிறது. பல நேரங்களில் இந்நோயினர், உயர் இரத்த அழுத்தம் உடையவராய் உள்ளனர். நீரிழிவுடையார்க்கு மிகுதியாக ஏற்பட வாய்ப்புண்டு.

தாக்கதிர்ச்சி நிர்ணயிப்பு, மூளையின் தாக்கப்பட்ட பகுதியை ஒட்டியே கணிக்கப்படும். கையைத் திடீரென உயர்த்த முடியாமல் போதல், முகச்சவரம் செய்வதில் திடீர் இடையூறு, உணவு உண்ணும்போது வாய்க்கு கை போக இயலாமை, போன்றவை கண நேர ஆற்றல் இழப்புகளாகும். இவை கண நேரத்தில் மாறும் குறைவான குருதி வழங்கல் தாக்கம் ஆகும்.

திடீரெனக் கண்பார்வை இழத்தல், பேச்சிழத்தல், தசைகளின் கட்டுப்பாடின்மை. கடுமையான மயக்கம், தன்நினைவின்மை முதலியவற்றை முழுமையான தாக்கதிர்ச்சி விளைவிக்கும். ஒரு பக்கத்தில் பக்க வாதத்தைப் பொதுவாக ஏற்படுத்தும். இதனை எமிபிலிஜியா (hemiplegia) என்பர்.

மருத்துவரின் ஆழ் சோதனை நோயைத் தெரிவிப்பதினும், பகுதியை உறுதியாய் உணரக் கருவிச் சோதனைகள் செய்வர். கழுத்துக்குருதி நாளத்தில் வண்ணச்சாயம் செலுத்தி ஊடு கதிர்ப்படம் எடுக்கலாம். (Carotid angiogram) மேலும் Computrised Axial tomography (CAT) scan எடுக்கலாம். Magnetic Reasona imaging (MRI) செய்து கணிக்கலாம்.

தாக்கதிர்ச்சிப் பகுதியிலுள்ள மூளை உயிர்மங்கள் இறந்து விடுகின்றன. அவை மீள உயிர்ப்புப் பெறுவதில்லை. அந்த உயிர்மங்களின் பணியை நோயாளி இழக்கிறார். ஆனால் அந்த இழந்த செய் கடமைகளை, மூளை வளைந்து கொடுக்கும் ஆற்றலுடையதால். பயிற்சி தந்து செய்யுமாறு செய்யலாம். ஆனால் இப்பயிற்சி மிகக் காலம் எடுக்கும் தொடர்வினையாகும். மருத்துவர் மட்டும் இப்பயிற்சி தந்தால் போதாது. குடும்பத்தாரும் நண்பரும் ஒத்துழைத்து உதவியாதல் வேண்டும்.

மருத்துவரின் முதல் வேலை இந்த நோயாளி இன்னும் ஒரு தாக்கதிர்ச்சிக்குட் படாமல் பார்த்துக் கொள்வதாகும். இந்ததாக்கத்துக்குரிய காரணம் கண்டு அதற்கான சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கு அடுத்த பணி நோயாளிக்கு மறுவாழ்வு தருவதாகும். குறைந்த மூளை உயிர்மங்களே இழக்கப்பட்டிருந்தால் அவற்றின் செய்கடமைகளை அதன் அருகிலுள்ள நல்ல உயிர்மங்கள் கொண்டு செய்விப்பது அடுத்த பணியாம். நிறைய இழப்பிருந்தால் மறுவாழ்வுக்கு வர காலம் மிகும். சில நேரங்களில் முழுமையான நலம் பெறாமலும் போக வாய்ப்புண்டு.

தாக்கதிர்ச்சி மிகத் தளர்ச்சியைத் தரும். ஆகவே அது வராமல் தடுப்பதே நல்லது. குருதியிலுள்ள சர்க்கரையை உணவு, உடற்பயிற்சி, தேவையாயின் மாத்திரைகள் ஆகியவை கொண்டு குறைத்து நீரிழிவுத் தாக்கதிர்ச்சி வராமல் பாதுகாத்துக் கொள்ளுதல் சாலச்சிறந்தது. குருதி உறைதலை முடுக்கச் செய்யும் கொலஸ்ட்ராலை (cholesterol) அவை குறைக்கச் செய்யும். உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் கட்டுப்படுத்தி அமைதல் வேண்டும். புகைபிடித்தல் முழுநிலையில் அடியோடு விலக்கப்படுதல் இன்றியமையாததாகும்.