அறுவைச் சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது, நான்கைந்து மருத்துவர்கள் பச்சை அங்கியில் முழுகவனத்துடன் நோயாளியின் திறந்த மார்புக்குழியில் முக்கிய இரத்த நாளத்தை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.திடீரென்று நோயாளி கண்களைத் திறக்கிறார். நான் எங்கிருக்கிறேன் என்ன நடக்கிறது என விழித்துக்கொண்டு பேசுகிறார். டாக்டர்களின் நிலைமை எப்படி இருக்கும் என்று பாருங்கள். நோயாளிக்கு வலி தெரியாவிட்டாலும், உடலை அசைக்க முடியாவிட்டாலும் நினைவுக்கு வந்துவிட்டால் சிகிச்சை மேற்கொள்வது சிக்கலாகிவிடுமல்லவா. ஆயிரம் ஆபரேசன்களில் இரண்டு இப்படி ஆகிவிடுவதுண்டு.

இன்று பயனில் உள்ள அரை டஜன் மயக்க மருந்துகள் அடிப்படையில் 1846 இல் வில்லியம் மார்ட்டன் (William Morton)என்பவர் பயன்படுத்திய மயக்க மருந்தாகிய ஈத்தர் என்ற எளிதில் ஆவியாகிவிடும் திரவப் பொருளையே ஒத்திருக்கின்றன. பாட்டிலைத் திறந்ததும் காற்றில் எளிதில் ஆவியாகிவிடக்கூடிய நிறமற்ற திரவம் ஈத்தர் மெல்லிய இனிப்பான சுவை கொண்டது. வில்லன் கைக்குட்டையில் ஈத்தரை நனைத்து கதாநாயகியின் முகத்தில் வைத்து அவளை மயக்கமடையச் செய்யும் தந்திரம் பழையது. பிஸ்கட்டில் மருந்தை நனைத்துக் கொடுப்பது புதிய தந்திரம். ஆண்டுதோறும். நூறுமில்லியன் நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. மார்ட்டனுக்குப் பிறகு மயக்க மருந்து சிகிச்சை முறைகள் எவ்வளவோ மாறிவிட்டன. மருந்து புகட்டுவது முதல் நோயாளியை கண்காணிப்பது மற்றும் அவரை எழுப்பது வரை பல நிலைகளில் ஏகப்பட்ட மாற்றங்கள் புகுத்தப்பட்டுவிட்டன.

நரம்புத்தடைகள், மயக்க மருந்துகள் யாவும் நரம்பு மண்டலத்தைத்தான் குறிவைத்துத் தாக்குகின்றன. நரம்புகள் உணர்வுகளை மூளைக்குக் கடத்தாத வண்ணம் பல இடங்களில் தகவலை வழிமறித்து குறுக்கிடுகின்றன. சுவாசம், இதயத்துடிப்பு முதலான உயிர்நாடிச் செயல்கள் மூளையின் வசம் இருப்பதால் மயக்க மருந்துகளின் குறுக்கீடு இதிலும் பாயலாம். பலவீனமான இதயத்துடிப்பு, சுவாசம் இருப்பவர்களை மயக்க மருந்து பாதிக்கலாம். விபத்தில் அடிபட்டவர்களுக்கு அவசர அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு இதயம், நுரையீரல் பலவீனமுள்ளதா என்றெல்லாம் தெரிந்துகொள்ள நேரமில்லாததால் வழக்கத்தைவிட கொஞ்சம் குறைவான டோஸ் மயக்கமருந்து கொடுப்பது வழக்கம்.

முன்பைவிட நல்ல மருந்துகள் பயன்படுத்துவதாலும், சிறந்த மானிட்டர்கள் உடலை நொடிக்கு நொடி கண்காணிப்பதாலும் மயக்க மருந்தினால் ஏற்படக்கூடிய விபரீதங்கள் கணிசமாகக் குறைந்து விட்டது. இதற்குமேலும் பாதுகாப்பான மயக்க மருந்து சிகிச்சையை உருவாக்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இருப்பினும் மயக்க மருந்திலிருந்து விழித்தவர்களுக்கு நினைவுசக்தி இழப்பு, மூச்சுத்திணறல், புலனறிவு குறைவு ஆகிய பக்க விளைவுகளை முழுவதுமாக விஞ்ஞானிகளால் நீக்கமுடியவில்லை.

செடே்ன் (Sedation) எனப்படும் தூக்கம், நினைவு இழப்பு (Unconsciounes), உடல் கட்டுநிலை (Immobility) மற்றும் வலி உணர்வு இழப்பு (analgia)ஆகிய விளைவுகளை ஏற்படுத்தும் மருந்துகள் கலந்ததுதான் மயக்க மருந்து. ஆபரேசனின்போது நடந்தது எதுவும் பிற்பாடு நினைவுக்கு வராமல் போவதும்கூட அந்த மருந்துகளின் செயலால்தான். ஒவ்வொரு மருந்தும் குறிப்பிட்ட நரம்புத் தொகுப்பு(குடும்பங்கள்)களை இடைமறிக்கின்றன. தெளிவாகவும், துல்லியமாகவும் அவற்றின் செய்முறை தெரிந்துவிட்டால் அவை ஏன்,எப்படி பக்கவிளைவுகளுக்குக் காரணமாகின்றன என்பது புரியும். பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத வகையில் மருந்துகளை வடிவமைக்க முடியலாம்.

மயக்க மருந்துகள் இரண்டு வழிகளில் புகட்டப்படுகின்றன. சுவாசம் வழியாக (Isoflurane) புகட்டுவது ஒரு வழி, மற்றது இரத்தம் வழியாக (Propofol) வழங்குவது. இரண்டும் தற்காலிக கோமாநிலையையே (Pharmacological coma)வழங்குகின்றன. மருந்து தண்டுவடத்தில் செயல்படும்போது கைகால் அசைவு முடக்கமடைகிறது. சுயநினைவு இழப்பு எப்படி ஏற்படுகின்றது என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. சுயநினைவு எதனால் ஏற்படுகின்றது என்பதே நமக்கு முதலில் தெரியாததால் இதைக் கண்டுபிடிப்பது அத்தனை சுலபமில்லை.

மூளையில் உள்ள தனித்தனி அங்கங்களின் செயல்களை ஒருங்கிணைக்கும் நரம்புப் பாதைதான் சுயநினைவுக்குக் காரணம் என்பது ஒரு கொள்கை. இந்த ஒருங்கிணைப்பைத் துண்டித்துவிட்டால் சுயநினைவு அறுந்துவிடும் என்பது இதிலிருந்து நாம் பெறும் முடிவு. இதனை காக்னிட்டிவ் அன்பைண்டிங் (Cognitive unbinding) என்கிறார்கள்.

இதுபோக மயக்க மருந்துகள் மூளையின் மோட்டார் கார்ட்டெக்ஸ் பகுதிகளையும் தடைசெய்வதால் உடல் அசைவு செயலிழப்பதுடன் தொடு உணர்வுகளும் வலியும் மரத்துப்போகிறது. இப்பண்புகள் யாவும் மருந்துக்கு இருக்க வேண்டியவைதான். ஆனால் இவற்றுடன் நின்றுவிடாமல் அவை நமது நினைவுகள் பதியும் இடமாகிய மூளையின் ஹிப்போகேம்ப்பஸ் பகுதியையும் தாக்குவதால் நடந்தவை யாவும் நினைவில் பதியாமல் போகிறது.

காமா அமைனோ புயூட்டாரிக் ஆசிட் Gama amino butyric acid- GABA) என்பது நரம்பு செல்களுக்கிடையே செயல்படும் நரம்புக்கடத்திப் பொருள். நரம்புக்கடத்திகளின் வேலை நரம்புக் கம்பிகளின் வழியே மின் துடிப்பு கடப்பதற்கு உறுதுணையாக இருப்பது, பலவித நரம்புக்கடத்திகள் மூளையில் வெவ்வேறு வகை நரம்புப் பாதைகளில் மின்துடிப்புகளைக் கடத்த உதவுகின்றன. நினைவு, உணர்வு, பேச்சு, பார்வை ஆகிய ஒவ்வொன்றும் தனித்தனி நரம்புக்கடத்திகளின் உதவியால் நிகழ்கின்றன. சில நரம்புக்கடத்திகள் வித்தியாசமானவை. அவை மயக்க மருந்துகளால் செல் மின்துடிப்பை இழந்துவிடும். பட்டாசுத் திரியில் ஈரம் செய்துவிட்டால் திரி தீயைக் கடத்த முடியாமல் போகிறதல்லவா அதுபோல. கம்யூட்டர் உதவியுடன் மருந்துகளை வடிவமைக்கும் நுட்பம் இப்போது வளர்ந்து கொண்டு வருவதால் வெகு விரைவிலேயே பக்கவிளைவில்லாத மருந்துகள் உருவாக்கப்படலாம்.

மயக்க மருந்துகளின் இயக்கங்கள்

செடேஷன் (Sedation) விழித்தெழ முடியாத அரைத் தூக்கநிலை

விழிப்புநிலை தடுமாறுதல், கை கால் அசைவுகள் மந்தமாகிப் போதல், வாய்குழறுதல், எழுந்திருக்க முடியாமல் கிடத்தல், மூளையில் கார்ட்டெக்ஸின் செயல்பாடுகள் முடங்குதல்.

நினைவிழத்தல் (Unconsciousness)

தட்டினால் கிள்ளினால் அல்லது கூப்பிட்டாலும் விழிக்க முடியாத நிலை. கார்ட்டெக்ஸ் இயக்கங்கள் குறைவதால் மூளையின் சகல பகுதிகளையும் ஒருங்கிணைக்கும் மையமாகிய தலாமஸில் செயல் குறைதல்.

உடல் மரக்கட்டையாதல் (Immobility)

என்ன செய்தாலும் உடலை அசைக்க முடியாது கிடத்தல். தண்டுவடம், செரபெல்லம் ஆகிய இரண்டிலும் செயல்குறைதல். இது தற்காலிக பராலிஸிஸ் போன்றது.

அம்னீசியா(Amnesia) மறதி

மயக்க நிலையில் நிகழ்ந்தவற்றை முற்றிலும் நினைவுபடுத்த இயலாமை. பிற விளைவுகளை உருவாக்கும் ஹிப்போகேம்பஸ், அமிக்டலா, ப்ரீஃப்ராண்டல் கார்டெக்ஸ் ஆகியவை செயலிழத்தல் 

தகவல்: முனைவர் க.மணி, பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர். இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.