சங்கமித்ரா 65 என்ற தலைப்பில் சங்கமித்ராவாக அடையாளப்படும் பெரியாரியவாதியான நண்பர் பா. இராமமூர்த்தியின் 65 ஆண்டுகால வாழ்வியல் சித்தரிப்புகள் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. கட்டுக்கடங்காமல் பீறிட்டுப் பொங்கும் பாதாள ஊற்றுப் போன்ற இவரின் விடாப்பிடியான வினையூக்கங்களும் அடித்துப் பேசுவதான எழுத்தாக்கங்களும் ஒரு சராசரி நபரை வியர்க்கவைக்கக் கூடியவை என்பதற்கு இத்தொகுப்பில் உள்ள விவரங்கள் அழுத்தமான சான்றாதாரங்களாகின்றன. இத்தனைக்கும் இத்தொகுப்பு எவ்வித நெறிப்படுத்தலோ தணிக்கை முறையோ இன்றி, கைக்குக் கிடைத்தவற்றைப் பொறுக்கிப் பிணைத்ததாகவே தோற்றமளிக்கிறது. உண்மையில் இந்த எளிமையே தொகுப்பின் நம்பகத்தன்மையை அழுத்தமாக மேம்படுகிறது.

அசுரப் பனைமரத்தை ஒரு மின்னணுச் சித்திரமாக்கினாற் போல - மின்னணு சித்திரத்திற்கு ஒரு அபூர்வத்தன்மை உண்டு. சித்திரம் நுணுங்க நுணுங்க அதன் துல்லியம் தூக்கலாய் வெளிப்படும் - சங்கமித்ராவின் சலிப்பற்ற எழுத்துகளும் செயல்பாடுகளும் தொகுப்பின் நெசவிழைகளாகிக் கனம் சேர்க்கின்றன.

இந்த நண்பரைக் கடந்த 14 ஆண்டுகளாக என் நினைவில் தங்கிய பெயராகவும் நபராகவும் எனக்குத் தெரியும். ஆயினும் இந்த நூல் மூலமாகவே இவரது பரந்துபட்ட அறிவியக்கச் செயல்பாடுகளை முழுமையாகவும் முதன்மையாகவும் அறிந்துகொள்ள நேர்ந்திருக்கிறது. இவரைக் கவனப்படுத்தத் தொடங்கியதிலிருந்து எனக்கொரு காட்சி விரிவதுண்டு. தண்டி யாத்திரை பற்றிய பழைய செய்திப் படச்சுருளில் வேகுவேகென்று நடந்து செல்லும் காந்தியாரைத் தொடர்ந்து அவரது தொண்டர்கள் அரக்கப்பரக்க ஓடுவார்களே - அதுபோல இவரும் தன் வாசகர்களை ஓடவிட்டு உவக்கிறவர் என்பதாக. தவளைப் பாய்ச்சலாய் எம்பித்தாவும் இவரது மொழிக்குள் பூக்கும் உருவெளிக் காட்சி அது.

இவரது "ஒரு எருதும் சில ஓநாய்களும்” என்னும் தன்வரலாற்று நாவல்தான் இவரைப் பற்றி நான் படித்த முதல் நூல். அதைப் படித்தபோது என்னில் முகிழ்த்த இரண்டு படிம உணர்வுகளை இங்கே இப்போது பதிவு செய்வது தவறாகாது என்று கருதுகிறேன். அலகு குத்திக் கொண்டவனைப் பார்த்த மாத்திரத்தில் சிலீர் என்று என் மயிர்க்கால்கள் பொடித்துக் கொள்ளும். இவரது செயல் தீவிரம் அப்படியோர் அலகு குத்தலாக என்னைச் சிலுப்பியது முதல் உணர்வு. மற்றொன்று நான் சென்னைக்கு வந்த புதிதில் கண்ட ஒரு காட்சியோடு தொடர்புடையது. நட்டநடுப் பகலில் சாலையின் நடுவே நின்றுகொண்டிருந்த ஒரு பெண் கணத்தில் தன்னை அம்மணமாக்கிக் கொண்டு, "ஐயோ என்னைப் பாருடா, என் துணியை எடுத்துத் தாடா” என்று கத்தினாள். நான் அப்போது எதிர்ப்புறத்தில் பேருந்துக்காக நின்றிருந்தேன். மனம் திக்கென்றதற்கு மேல் ஒன்றும் தோன்றவில்லை. குப்பென்று தீப்பற்றிக்கொள்ளும்முன் மனப்புலம் சுருண்டொடுங்கும் கண நேர மரத்தனம் அது.

ஜிவ்வென்று கவனங்கள் குவியத் தொடங்கும்போதே சட்டென்று ஒரு போலீஸ்காரர் குறுக்கே பாய்ந்து, அவள் மேல் துணியை அள்ளிப்போட்டு, தரதரவென்று இழுத்து வந்து சாலையோரத்தில் தள்ளிவிட்டு, காலைத் தூக்கி மிதிக்கப் போகிறவரைப்போலப் போக்குகாட்டி "அடி ஞொம்மாள” என்று அச்சுறுத்திவிட்டுப் போனார். அவர் தலை மறைந்ததும் "போடா தூம. ராத்திரி வா” என்றாள் அந்தப் பெண். சங்கமித்ரா ஒளிவு மறைவின்றி வெகு அம்மணமாக உண்மைகளைப் போட்டு உடைக்கிறார் என்பதால் இந்தக் காட்சி அப்போது என் நினைவுக்கு வந்ததா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாய்ப் புரிந்தது. நாகரிகம் என்னும் பெயரில் நான் பேணிய பூஞ்சைத்தனமும் நியாயம் என்னும் பெயரில் அவர் நிகழ்த்திய அதிரவெடியும் இதைவிடச் சிறப்பாய் உருவகப்பட்டிருக்க முடியாது. இந்தக் கணம் வரை அப்படிம உணர்வுகள் என்னைவிட்டுக் கலைந்துவிட்டதாகச் சொல்வதற்கில்லை. மாறாக அது என்பக்கத்து நியாயமாய் ஒரு கோட்பாட்டுக் கவசம் பூண்டு கொண்டுவிட்டது.

நட்பற்ற சூழலை எதிர்கொள்ளும் ஒரு நிராதரவானவன் தன் எதிராளிக்கு மனிதார்த்தத்தைத் தொட்டுக் காட்டுவதன் மூலம் தனது இருத்தலை எதார்த்த தளத்தில் உறுதிசெய்துகொள்ள முடியும் என்பதான கோட்பாடு அது. அடங்க மறுப்பதும் திருப்பியடிப்பதுமான எதிர்த்தாக்குதலின்றி சமத்துவமே சாத்தியமில்லை என்னும் நடைமுறை புலப்பாட்டுக்குப் பின்னும் பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்பதைக் காட்டுமிராண்டித்தனமாகவே பாவித்தொதுக்கும் மீட்சியற்ற கோழைத்தனமாகக்கூட இதைக் கொள்ளலாம். ஆனால் மனித மனத்தின் ஞாபக மடிப்புகள் இப்படியாகத்தான் அர்த்தங்களைச் சேமிக்கின்றன, மனிதர்களைத் தகவமைக்கின்றன என்பது என் சிக்கலுக்கு சிறப்பு சேர்க்கும் சாட்சியங்களாகின்றன.

இவரது எழுத்துகள் ஒன்றைத் தெளிவாகச் சொல்வன: வெகு நாசுக்காக நவீன இலக்கியம் படைப்பதாகப் பாசாங்கு செய்யும் பம்மாத்து வேலையெல்லாம் இவருக்கு வேண்டாத பொழுதுபோக்குகள். எதிராளியை மட்டை யடியாகச் சாத்தும் எழுத்து வல்லாண்மையே இவருடைய ஒற்றைத் திரள் வெளிப்பாடு. "என் இலக்கு சரியாக இருக்கும்போது சுட்டுத்தள்ள வேண்டியதுதானே. இடையே பேச்செதற்கு?” என்பது இவரது கறார்த்தனம். இக்கவனங்களூடாக, இவரது எழுத்துகளின் அபூர்வ இலக்கியப் போதவிழ்ப்புகள் சரியாகவம் நிறைவாகவும் உள்வாங்கிக் கொள்ளப் படுகினறனவா என்பது அதிர்ச்சி தரக்கூடிய கேள்வியாகிவிடுகிறது. இவரிடம் உள்ள கதைகள் இவரது வங்கிப் பணி நாட்களை விடவும் அதிகமாக இருக்கக் கூடும். அந்தக் கதைகளும் "நிசத்தைப் போலொரு கற்பனை உண்டுமா!” என்னும்படியாகத் துடிக்கத் துடிக்க வாழ்வைப் பேசுபவை. மொழியின் சாகசக் கலையாக மனதை நெகிழ்விப்பவை.

கணிக்கவும் மதிக்கவும் தெரியும்போது மட்டுமே வைரப் பொடிகள் அரியவையாகின்றன. அல்லாதுபோனால் அவை விடியல் முற்றத்தில் மிதிபட்டழியும் கோலத்துகள்தான் அல்லவா. இவருக்கும் இவரைப் போன்ற சீற்றம் பயிலும் சூத்திர முத்திரையாளர் பலருக்கும் இதுபோன்றதொரு மலிப்படுத்தல்தான் நேர்ந்துகொண்டிருக்கிறது.

இவரைப் பொறுத்தவரை எதிர் அரசியலுக்கான எந்தச் சந்தர்ப்பத்திலும் தன் மொழிக்காகவும் தர்க்க ஒருங்கிணைவுக்காகவும் சுணங்கி நிற்பவரல்லர். இதில் கவனத்துக்குரிய ஓர் அம்சம், இவரது மொழியில் பெரியார் காலத்தில் நேர்த்தி செய்யப்பட்ட தர்க்க ஒருங்கிணைவு வெகு இயல்பாகப் பொருந்திக் கொள்கிறது என்பதுதான். இந்தப் பின்புலத்தில் இவர் தன்னைத் தனித்துவமாக நிறுவிக் கொள்ளவேனும் எதிராளியுடன் ஓர் உரையாடலை பேணக் கூடியவராக இருக்கிறாரா என்றால் இல்லை. இடம் பொருள் ஏவல் தாக்கங்களுக்கேற்ப மொழிப்படவும் செயல்படவும் அவரவர்க்கும் ஒரு வழி துலங்கும். இது அவருக்குத் துலங்கும் வழி என்பதில் எனக்குக் கொஞ்சம் ஆதங்கம் உண்டு - அதுதான் அந்தப் பழைய நாகரிகப் பூஞ்சைத்தனத்தில் நுரைத்த ஆதங்கம். நம்மைக் காதுகொடுத்துக் கேட்க வைப்பதில் எதிராளியுடன் நமக்கு இணக்கம் வேண்டாம் எனில், ஒன்று நாம் அவனைப் பொருட்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும், மற்றொன்று அவனை நம் கட்டைவிரலுக்குக் கீழே அழுத்தி வைக்க வேண்டும். இரண்டுமே காலச்சுழற்சியில் நம்மைத் திருப்பித் தாக்கும் பழி தீர்க்கும் ஆயுதங்கள். ஆகவே, வெல்வதற்காகவேனும் எதிராளியை நாம் அரவணைத்தாக வேண்டும். இல்லையெனில் காற்றில்லாமலும் உயிர் வாழக் கற்றிருக்கும் பார்ப்பனக் கற்றாழைக் குணத்தால் நாம் முழங்கும் நியாயங்கள் யாவும் சூழலை மாசுபடுத்தும் சத்தங்களாகவே மலினப்பட்டுப்போகும். இவரை வாசிக்கும்போது தன்னூற்றாக ஏற்படும் பதற்றத்தில் எனக்கு இந்த எண்ணம் தீவிரப்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. வெள்ளம் எவ்வளவு வேகமாயிருந்தாலும் மீன்கள் எதிர்நீச்சலைத் தவிர்ப்பதில்லை.

பொது வாழ்வில் பங்கேற்கிற பலருக்கு சங்கமித்ரா ஒரு விஷயத்தில் முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார் என்பதை நாம் மறக்காமல் நினைவு கூரவேண்டும். இவர் எதை நம்புகிறாரோ அதுவாகவே இருக்கிறார், அல்லது இருக்க முயல்கிறார். ஒப்புக்காகவும் மெப்புக்காகவும் வாழும் இன்றைய தமிழ்ச் சமூகத்தில் இது ஓர் அரிய அம்சம். சில மாதங்களுக்கு முன் ஒரு பேராசிரியர் வீட்டுத் திருமணத்துக்குப் போயிருந்தேன். பேராசிரியர் இலட்சியப் பிடிப்புள்ள இயக்கவாதி. அங்கே வந்திருந்தவர்களில் பெரும்பாலோர் தமிழ்த்துறை சார்ந்த பேராசிரியர்களும் பள்ளி ஆசிரியர்களுமாக இருந்தனர். அவர்களுள் நான் அறிந்தவர்களும் என்னைத் தெரிந்தவர்களும் வெகு சிலரே. ஆனால் அவர்களில் மிகப் பலரும் தமிழ்க் காவலர்களாகத் தங்களை பொதுக்களத்தில் முன்னிறுத்திக் கொள்கிறவர்கள். அவர்களூடாக நான் தொட்டுச் சென்ற ஒரு முக்கால் மணி நேரத்தில் ஒரு விஷயம் வெகு தூக்கலாக என்னை அந்நியப்படுத்தியது. அதாவது அவர்களில் 80 சதவீதம்பேர்களின் பிள்ளைகள் அமெரிக்காவில் வாழ்கிறார்கள் - பலர் பச்சை அட்டைக்காரர்களாக அல்லது அதற்காகக் காத்திருப்பவர்களாக. பிள்ளைகளை மட்டுமல்லாமல் தங்கள் பெண்களையும்கூட அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கே பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள் பலர். இது ஒன்றும் தற்செயலாய் நேர்ந்துவிடக்கூடியதில்லை.

தங்கள் மக்களை மொழி ரீதியாகவும் குழந்தைப்பருவத்திலிருந்தே அதற்காக நேர்த்தி செய்தவர்கள் அவர்கள். இம்மை அறங்களில் தங்கள் இலட்சியங்களையெல்லாம் ஊறப்போட்டுக் கொண்டிராத விளாம்பழங்களாயிருந்து வென்றெடுத்திருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல, மதவாத தேசபக்தர்கள், மார்க்சியவாதக் கட்சிக்காரர்களென்று யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. எல்லாருமே ஒருவகையில் அமெரிக்காவுக்காக இங்கே வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். அ. மார்க்ஸ் ஒருமுறை எனக்கெழுதிய கடிதத்தில் "கல்வி விஷயத்தில் என் குழந்தைகள் என்னைக் குற்றம் சொல்லக்கூடும்” என்று எழுதியிருந்தபோது அவர் தன்னளவில் உண்மையாக நடந்து கொண்டிருக்கிறார் என்பது மட்டுமே அப்போது எனக்கு முக்கியமாகப்பட்டது. ஆனால் நடைமுறையில் பொய்யர்களோடுதான் லட்சியவாதிகள் குற்றவாளிகளாய் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது என்பதை அந்தத் திருமண விழாப்போதில் கண்டு நசுங்கும்படியாயிருந்தது.

நான் ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கும்போது இன்னொருவர் குறுக்கிட்டால் அவர்கள் இருவரும் பிரித்துவைத்த உதடுகளோடு தங்கள் அமெரிக்கப் பிள்ளைகளைப் பற்றிப் பேசத் தொடங்குவதும், மேலும் மேலும் அது போன்ற குறுக்கீடுகள் தொடர்வதுமாக அந்த இடத்தில் என் இருப்பு வெகு அற்பமாகவும் அந்நியமாகவும் விலக்கப்படுவதாயிருந்தது. இந்த அமெரிக்கப் பிள்ளைகளின் தந்தையர்களுக்குத் தமிழ்தான் மூச்சு. ஓய்வுகால மூச்சு. பென்ஷனர்கள் எந்த இசமும் பேசக்கூடாது. எந்த இயக்கத்திலும் பங்கேற்கக்கூடாது. மீறினால் பென்ஷனை இழக்க நேரிடும் என்று ஒரு விதி போட்டால் இவங்கள் தங்கள் தமிழ்ப் பாதுகாப்புணர்வைக் கழிவறைக் கருவூலமாக்கிக் கொள்வார்களாயிருக்கும். சொல்ல மறந்துவிட்டேன் - அவர்களில் பெரும்பாலோர் ஓய்வூதியக்காரர்கள் - என்னைப்போல.

இத்தகைய பின்புலங்களில்தான் சங்கமித்ரா போன்றவர்கள் கண்கூசும்படி வெயிலாடிக் கொண்டிருக்கிறார்கள். நாமோ நிழல்களைப் போல நிச்சயமற்றவர்களாயிருக்கிறோம். வெட்கப்படுவதுகூட நமக்கு வேண்டாத வியர்க்குறு போலாகிக் கொண்டிருக்கிறது. சங்கமித்ராவின் எழுத்துகளையெல்லாம் தொகுத்தால் பெரியார் பேசியதற்கும் எழுதியதற்கும் சமமாகக்கூட வரலாம். ஆனாலும் பெரியார் என்னும் குருவுக்கு சங்கமித்ரா ஒரு மெய்யான சீடர் மட்டும்தான். இந்த சீடத்தனம்தான் பெரியாருக்கு இணையாக வினையாற்றிய குத்தூசி குருசாமி போன்றவர்களையெல்லாம் காணாமல் போக்கிவிட்டது. சீடனுக்குள்ள உறவு குருவின் கருத்துகளோடுதான் என்றாலும் குருவின் மரணமே சீடன் நிற்பதற்கான ஆதார இடம்; அதாவது விளையாட்டுக் களம். மனிதர்கள் சமூகமாகத் திரண்டதன்பின் பல்கும் குறைகளினூடாக, வழிகாட்ட வந்தவர்களை அவர்களது பௌதிக மரணத்தோடு முற்றுப்பெற்றவர்களாகத் தீர்த்துக் கட்டுவதிலிருந்துதான் அவர்கள் மதங்களாக வடிவமைக்கப்படுவதும் சீடர்கள் போதகர்களாகப் பரிணாமம் கொள்வதும் நேர்கிறது.

அந்த நிலையில் குருவின் கருத்துகளும் கருத்தேற்புகளும் பின்தள்ளப்பட்டு குருவின் முற்றுப்பெற்ற பௌதிக பிம்பமே போற்றுதலுக்குரியதாகிவிடுகிறது. இந்த பிம்பம் குருவின் பௌதிகச் சொந்தங்களோடு வரலாற்றுறவு பேசுகிறது. குரு விமர்சிக்கப்படும்போது, அவர் கருத்தின் மேல் அக்கறைகொள்ளாத - ஆனால் பௌதிகச் சொந்தங் கொண்டாடும் சீடனுக்கு விமர்சகன்மேல் ஆத்திரம் வருகிறது. குருவின் கருத்தைப் புறக்கணித்ததற் காகத் தன்மேல் கழிவிரக்கம்கூடத் தோன்றுவதில்லை. அண்மைக்காலங்களில் பெரியார் விமர்சிக்கப்பட்டபோது பெரியாரியவாதிகள் வெளிப்படுத்திய நியாயமான கோபத்தினூடே பெரியார் மதமாகச் சுருங்கும் ஆபத்தான கூறுகளும் பின்புலத்தில் வெளிப்பட்டன. இன்றைய பெரியாரியர்களில் பெரும்பாலோர் அமெரிக்கப் பிள்ளைகளின் தமிழ்ப் பெற்றோர்களைவிடத் தரத்திலும் குணத்திலும் பெரிதாக வேறுபட்டவர்களல்லர். தன்னளவில் சரியாய் இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் ஒப்புக்கு வாழ்கிறவர்கள். தங்கள் பிள்ளைகளுக்காகக்கூட பொறுப்பேற்க விரும்பாதவர்கள்.

பெரியார் போன்றவர்களுக்கு நாம் ஏன் சீடர்களாயிருக்க வேண்டும்? ஏன் நாம் அவர்களின் தொடர்ச்சியாய் இருக்கக்கூடாது? பெரியார்களின் பௌதிக எல்லை அறுவடை செய்யப்பட்ட கருப்பங்கழிகள்போல. இதில் எளிமைப்பட்டுப்போகும் சீடத்தனம் என்பது காடு கொள்ளாமல் கழிக்கப்பட்டுக் கிடக்கும் தோகைகள்போல. ஒரு தீப்பொறியில் பொசுங்கி அடங்குபவை. அங்கே மிகுந்திருப்பவை அடித்தூர்கள். சரசரவென்று முளைப்பெடுத்து கருப்பங்காட்டை இன்னொரு மகசூலுக்கான பச்சைவனமாகப் போர்த்துக்கொள்ளும் கருத்துத் தூர்கள். நாம் ஏன் அந்த மறு மகசூலாய் இருக்கக்கூடாது? இந்த மறு மகசூல்கள் ஒவ்வொரு விளைச்சலிலும் நிலம் நீர் காற்று வெளிகளால் புதுப்பரிமாணங்களைப் பொதிந்து கொள்ளக்கூடியவை. இந்தச் சுழற்சி சாகுபடி எங்கேயும் முற்றுப் பெறுவதில்லை. இதில் பெரியார்கள் புத்துயிர்க்கப்படுகிறார்கள். காலத்தால் நேர்த்தி செய்யப்படுகிறார்கள். தொடர் உரையாடலாய் செழுமைப்படுத்தப்படுகிறார்கள். சங்கமித்ராக்கள் அந்த நேர்த்தியின் பரிமாணங்களாக வேண்டியவர்கள்.

Pin It