நாலு பேரு நாலு விதமா பேசியது….10

செல்லாது செல்லாது

நவம்பர் எட்டாம் தேதி இரவு வந்த அந்த அறிவிப்புதான் இந்த ஆண்டின் பரபரப்பான அறிவிப்பு. அறிவுத் தளத்திலிருந்து அடித்தட்டு மக்கள் வரையும், தொலைக் காட்சி முதல் சமூக வலை தளங்கள் வரை பிரித்து மேய்ந்து அலசி ஆராய்ந்து விட்டாகிவிட்டது.

ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறுவது பற்றியும் கருப்புப்பணம் பற்றியும் பேசிக் களைத்தாகி விட்டது. இனி நாம் சொல்ல ஒன்றுமில்லை என்ற நிலையில் பேசித் தீர்த்த செய்தி அது. ஆனால் அறிவிப்பு வெளியான அடுத்தடுத்த நாளில் காலை வீட்டில் இருந்து கிளம்பும் போது பாப்பாவின் வேண்டுகோள் மட்டுமே நான் சொல்லவேண்டியது.…

“அப்பா, இந்த நோட்டு சொல்லதாம் பேங்க் போய் மாத்திட்டு வா” என்றபடி தன்னிடம் இருந்த இரண்டு நாப்பது பக்க நோட்டை கொடுத்தாள்.

மலிவு விலை மாடல்

உள்ளாட்சி தேர்தல் வரும் எப்படியோ எல்லா வேட்பாளர்களும் விளம்பரம் பன்னுவாங்க. சமூக வலைத்தளங்ளில் பகிரும் வரையில் விளம்பரம் செய்யாலம் என்ற நினைப்பில், நண்பர் ஒருவர் தன் ஸ்டுடியோவின் தொடர்ச்சியாக விளம்பர நிறுவனம் ஒன்று தொடங்கினார்.…

இப்பவோ, எப்பவோன்னு தேர்தல் இழுக்க, சரி உள்ளூரில் உள்ள கடைகளில் விளம்பரம் பிடித்து வியாபாரத்தைத் தொடராலாம் அப்படின்னு, ஒரு வாராமாக கடை கடையா ஏறி இறங்கி எப்படியோ நாலு விளம்பரங்களை பிடித்து விட்டார். அதில் இரண்டு விளம்பரங்கள் பொருளாதார மேதை மோடியின் தயவால் திரும்ப பெறப்பட்டபின் புலம்பித் திரிந்தார் நண்பர்.…

திடீரென அவரிடமிருந்து அழைப்பு. அவசரமாகப் போனால் அவருக்கு விளம்பரம் கொடுத்த துணி கடைக்கார் ஒருவர் போன வாரம் லோக்கல் சேனலில் ஆல் இன் ஆல் அழகு ராஜா படம் பார்த்து விட்டு கரீனா சோப்ரா மாதிரி ஒரு மாடல் வேணும் என சொல்லிட்டார் என்றார் வருத்தமாக.…

அந்தாளு என்ன கிண்டல் செய்யுறாரா? என்றால், அதெல்லாம் ஒன்னுமில்லை நோட்டுப் பிரச்சனையில் விளம்பரம் எடுப்பதைத் தள்ளிப் போடுவதற்குப் பதிலாக, ஏதோ சாக்கு சொல்கிறார் என்றார். சரி ஒரு விஜபி மாடல் பிடித்து விட வேண்டியாதுதானே என்றேன்.…

அட, கடுப்பேத்தாம போங்க அந்தாளு கொடுக்கிற பட்ஜெட் க்கு எங்கே போய் விஜபி மாடல் பிடிக்கிறது என்றார் சலிப்பாக. எவ்வளவு பட்ஜெட் என்றதுக்கு, அது வந்து மொத்த செலவே ஜம்பதாயிரம் என்றார். இதில போய் எங்க விஜபி மாடல் பிடிக்கறது?…

அட, என்னங்க உலகம் புரியாத ஆளா இருக்கறீங்க, நம்ம நாட்டுல தான் உலகத்திலேயே குறைவான விலையில் வி.வி.ஜ.பி மாடல் கிடைக்கிறாரே?… அப்படியா என அவர் ஆச்சரியப்பட, அந்த மாடல் வேற யாருமில்லை. இந்தியப் பிரதமர் மோடியேதான். சம்பளம் வெறும் ரூபாய் ஜநூறு மட்டுமே. முடிக்கும் முன் காளியப்பன் துணிக் கடை தாங்க என போனில் கேட்டுக் கொண்டிருந்தார் நண்பர்.

ஒரே ஓப்பனிங் சாங்……

வெள்ளிக்கிழமை தவறாமல் தியேட்டர் பக்கம் போகும் நண்பர்கள் டீம் சார்பில் அன்னிக்கு அரட்டை நடந்து கொண்டிருந்தது. “ரஜினியின் ஓப்பனிங் சாங் தான் எப்பவுமோ சூப்பர் அண்ணமலை முதல் கபாலி வரை” அப்படி ஒருத்தன் சொல்ல, “என்ன இருந்தாலும் மக்கள் திலகம் தான் பெஸ்ட். பாடல்களின் மூலமே ஆட்சிய பிடித்தவர்” இது இன்னொருவன். அட என்னப்பா இது தல தளபதி காலம் என சொல்லிக் கொண்டிருக்கும் போதே இது தலைவலி காலம் என்றபடி உள்ளே வந்தார் கலைக்குழு நாராயணன்.…

டிக்கெட் புக் பண்ணியாச்சா இல்லையா என்ற எங்கள் கேள்விக்குப் பதில் சொல்லாமல் கொடுமை கொடுமையின்னு கோவிலுக்கு போனா அங்கொரு கொடுமை தலையை விரிச்சு ஆடுச்சாமே என புலம்பியடி வந்தார். தெளிவாகச் சொல்லுங்க கேட்டது தான் பாக்கி.…

நீங்க நிம்மதியாத் தூங்க யாருங்க காரணம்? என்றார் நாராயணன். வீட்டுக்குள்ளா? தியேட்டரிலா? என்றதுக்கு, “இந்த நக்கல் தானே வேண்டாங்கறது வீட்டுக்குள்ளதான்”, அதானே பாலச்சந்தர் ஆவியா வந்து படமெடுக்கிறேருன்னு நினச்சேன். என்றபடி வீட்டில் அப்படின்னா கொசுவத்தி சுருள் என்றேன். “அடச்சே உங்களுக்கு நாட்டுப் பற்றே இல்லை. எல்லையில் இராணுவ வீரர்கள் தயவால் தான் நாம் நிம்மதியாத் தூங்குறோம்”…

“அந்த நாட்டுப் பற்றை உங்களுக்கு உணர்த்த தியேட்டரில் காட்சி தொடங்கறதுக்கு முன் தேசிய கீதம் ஒலிக்க விடப்போறாங்க. அப்ப திரையில் தேசியக் கொடியும் காண்பிப்பாங்க...” என்றார். கெட்டது போங்க 80 களில் நடைமுறையில் இருந்து பின்நாளில் திரும்பப் பெறப்பட்ட நடவடிக்கை இது. சரி இதனால் என்ன நடக்கப் போகிறது? என்றேன். உடனே பொங்கி எழுந்தார் நாராயணன், “நாத்துப் பத்து வளராதுங்களா?”

எப்படித் திங்கறதுன்னு சொல்லியாச்சு ( கைகழுவி), எங்கே போறதுன்னும் சொல்லியாச்சு( கழிவறை கட்டி) இந்தியா ஒரு வரலாற்றுச் சிறப்புக்குத் தயாராகி விட்டது. வரலாற்று சிறப்புக்குத் தயாரான இந்தியா வல்லரசாக என்ன செய்யலாம்? அப்படின்னு யோசிச்ச மத்திய பா.ஜ.க அரசு ஒரு புரட்சிகரமான திட்டத்தைக் கொண்டு வந்திருக்கு போல.…ஏ.டி.எம் வாசலிலும், வங்கிவாசலிலும் நிற்பவர்களுக்கு இராணுவ வீரர்களை நினைவுபடுத்தியாச்சு. இனி பாக்கி திரையரங்களில் தான்.…

‘புகை பிடித்தல் உடலுக்கு கேடு விளைவிக்கும்’ என்ற சிலைடு போட்ட உடன் அவசர அவசரமாகக் கையில் இருக்கிற முக்கால் வாசி முடிந்த தம்மை வீசிட்டு உள்ள வருகிற இடத்தில் வளருமா நாத்து பத்து? பேசிக்கொண்டிருக்கும் போதே அறைக்குள் இருக்கும் கழிவறை கதவைத் திறந்து கொண்டு வேகமாய் வந்தவன் சொன்னான் 23 ம் புலிகேசி ஸ்டைலில் கழிவறையில் இருக்கும் போது கண நேரத்தில் வந்த யோசனை இனி எல்லா நடிகர் படத்துக்கும் ஒரே ஓப்பனிங் சாங் தான்.

ஜெயகே..ஜெய,ஜெய,ஜெயகே…..

சோகோ (CHO…GO…)

ஏற்கனவே அம்மா போன சோகம் வேற. நோட்டுப் பிரச்சனையில் வேலையும் இல்லை. கடை வேற மூணு நாளைக்கு லீவு. போதாக்குறைக்கு இன்னிக்கு சோவும் போயிட்டாரே? இங்க அஞ்சலி செலுத்தப் போன எந்தப் பெரிய மனுசனுக்காவது பொறுப்பு இருக்கா? எங்க மனசை புரிஞ்சுக் கறாங்களா? பொங்கித் தீர்த்தான் குடிமகன் பார்த்தசாரதி..

டேய்.. பார்த்தா.. என்னடா பிரச்சனை.. யார் அப்படிப் பேசுனாங்க இந்தக் கருப்புச்சட்டை பசங்களா? என்றேன் இல்லை என மறுத்தான் குடிமகன்.

ஓ...சோ.... எனக்கு பெரியப்பான்னு சொல்றதா இல்லை, அப்பான்னு சொல்றதா அப்படின்னு ஒய்.ஜி. மகேந்திரன் சொல்லிட்டரே அதுவா? இல்லை, இல்லை. அந்தாளுக்கு பிலால் மாலிக் கூட அப்பாவா இருந்துட்டு போறாரு அது அவங்க குடும்ப பிரச்சனை...

சோவின் மறைவு தேசியப் பேரிழப்பு அப்படின்னு ஆடிட்டர் குருமூர்த்தி சொன்னாரே அதுவா? அது மயிலாப்பூர் தேசியத்துக்கு. நமக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் என்றான் குடிமகன் தெளிவாக.

‘சோ’வை, தமிழக முதல்வராகப் பதவியேற்கச் சொல்லி மொராஜியும், இந்திராவும் வலியுறுத்திய தாக சிவக்குமார் சொன்னாரே அதுவா? அட போங்கய்யா வாஜ்பாய் மந்திரி சபையில் நியமண எம்.பி யாக இருந்த ‘சோ’ வை, எந்த அரசியல் பதவியும் வகிக்காதவருன்னு கூட சிவக்குமார் சொன்னார். அவரு மகாபாரதம் யுத்த காண்டத்துல மூழ்கிப் படிச்சுட்டு இருந்தப்ப சூர்யா ‘சிங்கம் 3’ படத்தைப் போட்டுக் காமிச்சுட்டாரு அதுல இருந்து இப்படித்தான்.

சோ... பொய்யே சொல்ல மாட்டரு... அப்படின்னு ரஜினி சொன்னது தானே?… “க்கும் எதை எதை யாரு சொல்லறதுனே இல்லாம போச்சு அதில்ல” என்றான் குடிமகன் பார்த்தசாரதி.

நம்ம ராஜகுருன்னு மோடி சொன்னதாக சென்சார் போர்டு சேகர் சொன்னதுதானே.. அட அதெல்லாம் இல்லை மோடி சரியாத்தான் சொல்லியிருக்காரு. மோடி டீ போடுகிற போது ‘சோ’ தான் பால் சப்ளை, சேகர் பொய் சொல்ல மாட்டார்.…

இப்பப் புரிஞ்சு போச்சு. ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் போராடுகிற எங்களை ஊக்குவிப்பார் என திருமா சொன்னதுதானே? அவுரு ஊக்கு வித்தப்ப இவரு வாங்கிருக்காரு இதுக்கு எனக்கென்ன வருத்தம்.

அட, போடா பார்த்தா... எது சொன்னலும் இல்லை அப்படீங்கற… ஆ…... நான் கடைசியாக் கண்டுபிடிச்சுட்டேன். அது வைகோ சொன்னது தானே?…

ஏற்கனவே கடுப்பில் இருக்கிற என்னை மறுபடியும் கடுப்பேத்தாதே. இவரு பெரிய உலக இலக்கியத்தைக் கரைத்து குடித்தவரு தமிழில் சிறந்த பகடிக்காரர் ‘சோ’ வாம், அவுரு இடத்த நிரப்பவே முடியாதாம். சொல்றாரு புரட்சி புழுதி. அடச்சே புயல். வைகோவுக்கு குத்தூசி குருசாமி, எம்.ஆர்.ராதா பத்தியெல்லாம் நேத்திக்கு திராவிட இயக்கங்களுக்கு வந்த சின்ன பசங்க யாராவது பாடமெடுத்தாப் பரவாயில்லை.

என்னால் முடியலைடா பார்த்தா....நீயே சொல்லிவிடு என சரண்டர் ஆகிவிட்டேன். நீயே சொல்லு. ‘சோ’ பன்முகத்தன்மை வாய்ந்தவர் தானே… என்றான். அட ஆமாம் மாற்றுக் கருத்து இருந்தவர் ஆயினும் அவர் நடிகர், பத்திரிக்கையாளர், வழக்கறிஞர், அரசியல் விமர்சகர் என பன்முகத்தன்மை வாய்ந்தவர்.

“பார்த்தியா.. நீயும் எல்லார் மாதிரி ‘சோ’வின் பன்முகத்தில் முக்கியமான முகத்தை மறந்து விட்டுப் பேசற”… என்றபடி அழுதுவிட்டான் பார்த்தா.

முடியலை என்னாலே… நீயே சொல்லிவிடு. சரி சொல்றேன் ‘மச்சி ஒரு குவாட்டர் சொல்லு நாளானைக்கு வாங்கித்தரனும்” என்ற கண்டிசனுடன் சொன்னான்...

எல்லோரும் மறந்த சோவின் அந்த முகம் தமிழக மக்களுக்கு வாரி வாரி வழங்கிய ‘மிடாஸ் ஆலை’யின் முன்னால் இயக்குநர் என்ற முகம் தான்.

உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கிறவன் நான். என்றபடி ஊறுகாய் பாக்கெட்டை தேடிக்கொண்டிருந்தான் பார்த்தசாரதி.