பட்டுக்கோட்டை அழகிரி சொன்ன நிகழ்வு!

periyar 221விருதுநகரில் பொதுக்கூட்டத்தில் பெரியார் ஆரியத்தை எதிர்த்து மிகக் கடுமையாகப் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரியும் அருகிலிருந்தார். பெரியாரின் பேச்சால் ஆத்திரமடைந்த ஒருவன், கோபம் கொப்பளிக்க கத்தியுடன் பெரியார் மீது பாய்ந்தான்.

ஆனால், பெரியார் எந்தப் பரபரப்பும் அடையாமல், கத்தியுடன் பாய்ந்தவன் கையைக் கெட்டியாகப் பிடித்து அப்படியே நாற்காலியில் அமரச் செய்தார். அவனைப் போலீசாரிடம் ஒப்படைக்கவில்லை. அவனைத் தனியே அனுப்பினால் கூட்டம் அவனை அடித்தே கொன்றுவிடும் என்பதால், கழகத் தோழர்களை அனுப்பி, பாதுகாப்பாக விட்டுவரச் செய்தார். - (ஆதாரம்: பெரியாரில் பெரியார் நூல்)

மெய்ப்பொருள் நாயனாரைவிட அய்யா சிறந்தவர்.

தன்னைக் கொல்ல வந்த முத்தநாதனை மெய்ப்பொருள் நாயனார் மன்னித்து, அவனை பாதுகாப்பாக விடச் செய்தார். காரணம் கொலைகாரன் பக்தி வேடத்தில் வந்ததால்.

அவர் மன்னித்தது பக்தியால். ஆனால் பெரியார், தன்னைக் கொல்ல வந்தவனை மனிதநேயத்தோடு மன்னித்தார் என்கின்றபோது மெய்ப்பொருள் நாயனாரைவிட பெரியார் உயர்ந்து நிற்கிறார்.

காரணம் பக்தியால் மன்னிப்பது சுயநலம் மனிதநேயத்தால் மன்னிப்பதே பொதுநலம்!

- மஞ்சை வசந்தன்